Friday, June 7, 2019

மட்டக்களப்பிலுள்ள அரபு எழுத்துக்களை அகற்றக் கோருகின்றது மாநாகர சபை!

மட்டக்களப்பு மாநகர சபையில் இன்று இடம்பெற்ற 20 வது பொது அமர்வின்போது மாநகர எல்லைக்குட்பட்ட பதாதைகளில் தமிழ் மொழியினை முன்னுரிமைப்படுத்தல் மற்றும் காத்தான்குடி வரவேற்பு வளைவில் உள்ள அரபு மொழிச் சொற்களை அகற்றுதல் தொடர்பான பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்த அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றதுடன் இதில் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர உதவி ஆணையாளர் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, மாநகரசபை உறுப்பினர் தவராஜாவால் தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், மாநகரசபைக்குட்பட்ட பெயர் பலகைகளில் தமிழ்மொழி முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் அரசகரும மொழி தவிர்ந்த ஏனைய மொழிகள் அகற்றப்படல் வேண்டும் என்ற பிரேரணைகள் மாநகரசபை உறுப்பினர்களான வே.பூபாளராஜா, கு.காந்தராஜா ஆகியோரால் முன்வைக்கப்பட்டன.

இதன் பிரகாரம் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கில் அரச மொழியாக தமிழ் உபயோகிக்கப்பட வேண்டும் என்கின்ற விடயம் அரச அதிகாரிகளால் பின்பற்றப்படுவதில்லை என தவராஜா குறிப்பிட்டார். அத்துடன் இருப்பினும் மாநகரசபை ஊடாக எம்மால் பிரேரணை நிறைவேற்றப்பட்டு உரிய அதிகாரிகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் தமிழ்மொழி அமுலாக்கலை நடைமுறைப்படுத்த முடியும் என்று தெரிவித்தார்.

அதனடிப்படையில் வியாபார நிலையங்களில் பெயர் பலகைகளில் தமிழ் மொழி முன்னுரிமைப்படுத்தப்படாமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் அரச கரும மொழிகள் இல்லாத மொழிகள் பிரயோகிப்பது குறித்து மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச எல்லையில் காணப்படும் வரவேற்பு வளைவில் உள்ள அராபிய எழுத்துக்கள் அகற்றப்படல் வேண்டும் எனவும் வலியறுத்தப்பட்டது.

இதையடுத்து வியாபார நிலையங்களின் பதாதைகளில் தமிழ்மொழி பிரதானப்படுத்துவது தொடர்பாக வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதுடன், அரச அலுவலகங்களின் பிரதானிகளுக்கும் நிறைவேற்றப்படுகின்ற பிரேரணை குறித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து காத்தான்குடி மட்டக்களப்பு எல்லையில் அமைக்கப்பட்ட வரவேற்புத் வளைவில் உள்ள அரபு மொழி அகற்றப்படுவது குறித்து தமது அறிக்கையினை முன்வைப்பதுடன் பிரதமரின் சுற்றுநிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு காத்தான்குடி நகர சபைக்கு அறிக்கை அனுப்புவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அரபு எழுத்துக்கள் தொடர்பில் அரச கருமமொழி மற்றும் வடகிழக்கில் தமிழ் முதல்மொழி என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ள மாநகர சபை, அதே மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிபேசும் பாமர மக்களை சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் தொடர்பு கொள்ளும் அரச அதிகாரிகள் தொடர்பில் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை இலங்கைநெட் முன்வைக்கின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலகங்களிலுள்ள தமிழ் அதிகாரிகள் சிங்கள ஆங்கில மொழிகளில் பொதுமக்களை தொடர்பு கொண்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் மொழிபெயர்பினை கேட்டபோதும், அவ்வாறு வழங்கப்படாமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com