Saturday, March 11, 2023

பொருளாதார நெருக்கடி இலங்கையில் சிறார்களை பட்டினிக்கு தள்ளுகின்றதா? Save the Children

நாட்டிலேற்பட்டுள்ள பொருளாதார சிக்கல் சிறார்களை பட்டினி நிலைக்கு தள்ளுகின்றதானதோர் அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக சேவ் த சில்றன் தெரிக்கின்றது. அவ்வமைப்பு அனுராதபுரம், நுவரெலியா, மொணராகலை, பதுளை, இரத்தினபுரி, திருகோணமலை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் கொழும்பு ஆகிய ஒன்பது மாவட்டங்களில் உள்ள 2308 குடும்பங்களிடம் மேற்கொண்ட கலந்துரையாடல்களிலிருந்து தனது கணிப்பீட்டை வெளியிட்டுள்ளது.

தனது கணிப்பீட்டு அறிக்கையுடன் இப்படத்தினை வெளியிட்டுள்ளது. வடமாகாணத்திலுள்ள பெண் ஒருவர் தனது குழந்தைகளுக்கு தற்போது மரக்கறியை மாத்திரமே உணவுக்காக சமைக்க முடியுமான நிலையில் உள்ளதாக இப்படம் வெளிப்படுத்துகின்றது. . 


இது தொடர்பில் சேவ் த சில்ரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை:

இலங்கையில் பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சேவ் த சில்ரன் நடாத்திய கணக்கெடுப்பின் பிரகாரம், நாட்டின் பொருளாதார மந்தநிலையானது, அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், ஒரு வருடத்திற்குப் பிற்பாடு முழுப்பட்டினி நெருக்கடிக்கு தள்ளப்படும் நிலையில் உள்ளது.

நாட்டின் குழந்தைகள் தொலைந்து போன தலைமுறையாக மாறுவதைத் தடுக்க அரசாங்கமும் மற்றும் சர்வதேச சமூகமும் இப்போதே செயல்பட வேண்டும் என, சிறுவர்கள் உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கை அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதில் இருந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நிலையான வேலையின்மை ஆகியவை குடும்பங்களைச் நிர்வகிக்க முடியாமல் போய்விடும் நிலைக்கு தள்ளிவிட்டன. உலக வங்கியின் கூற்றின் பிரகாரம், நாடு தற்போது உலகில் ஏழாவது மிக உயர்ந்த பெயரளவிலான உணவுப் பணவீக்க விகிதத்தில் உள்ளது. நாட்டில் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு 50% ற்கும் அதிகமாக உள்ளது.

இலங்கையில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள 2,308 குடும்பங்களில் நடாத்திய சேவ் த சில்ரன் உடைய சமீபத்திய கணக்கெடுப்பு, இந்தப் பணவீக்கத்தின் காரணமாக, கடந்த ஆண்டு ஜுன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் சராசரி குடும்பச் செலவு 18% (சதவீதமாக) அதிகரித்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த நேரத்தில் குடும்பத் தேவைகளில் 23% (சதவீதமான) அதிகரிப்பு ஏற்பட்டதால் பெரும்பாலான அல்லது அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியவில்லை என சேவ் த சில்ரன் கூறியது.

இதன் காரணமாக, கடந்த ஆறு மாதங்களில், அதிகமான குடும்பங்கள் உயிர்வாழ்வதற்காக அவநம்பிக்கையான நடவடிக்கைகளை நாடவேண்டி இருந்தது. குடும்பங்களில் 24% (சதவீதமான) தேவை அதிகரிப்பினால், வீட்டுச் செலவுகளை ஈடுசெய்வதற்காக, தாம் கடன் வாங்குவதை நாடியதாகக் கூறினர். தாம் கடனுக்கு உணவு வாங்க வேண்டியிருந்தது என்று கூறும் குடும்பங்கள் 24% (சதவீதமாக) அதிகரித்துள்ளது மற்றும் தமது வீட்டு உபயோகப் பொருட்களைப் பணத்திற்கு விற்கும் குடும்பங்கள் 28% (சதவீதமாக) அதிகரித்துள்ளது.

பெண்கள்-தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்கள் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவை என்றும், கடத்தல் அல்லது சுரண்டல், அதிக நேர வேலை செய்தல் மற்றும் சில சந்தர்ப்பங்களில் வேலைக்காக இடம்பெயர வேண்டியிருத்தல் போன்றவற்றால் பெண்கள் அதிகளவில் ஆபத்தான நிலையில் உள்ளார்கள் என சேவ் த சில்ரன் நிறுவனம் கூறியது. இதனால் சிறுவர்கள் தனிமையில் விடப்படுவதால், அவர்களும் ஆபத்தான நிலையில் உள்ளார்கள் எனவும் சிறுவர் உரிமை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிக்குடும்பங்கள் தங்கள் சிறுவர்களின் உணவு உட்கொள்ளலைக் குறைப்பதாகக் கூறினாலும், 27% (சதவீதமான) வளர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதற்காக தமது உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர். பத்தில் ஒன்பது குடும்பங்கள் தங்கள் சிறுவர்களுக்கான சத்தான உணவுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறினர்.

கொழும்பைச் சேர்ந்த சுரேன்* மற்றும் பிரீத்திகா* ஆகியோர் தங்கள் மூன்று குழந்தைகளுக்கும் சரிவிகிதத்தில் உணவை வழங்கப் போராடுகிறார்கள். முட்டை மற்றும் தயிர் போன்ற, எளிய ஊட்டச்சத்து உணவுகளை கூட தங்கள் குடும்பம் வாங்க முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்டன, இதனால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு உணவளிக்கக் கூடிய பொருட்களைக் குறைத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான நாட்களில், அவர்கள் தங்கள் 2 வயதிற்குட்பட்ட பிள்ளையின் ஊட்டச்சத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். அவர்களின் 11 வயது மகள் திசுரி* கூறினார், தானும் அவளது 8 வயது சகோதரி அயாமாவும்*, இப்போது தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் தவிர்க்கிறார்கள், ஏனெனில் அவர்களின் ஒரு வயது சகோதரி ஹிருணிக்கு* மட்டுமே அவர்களின் பெற்றோரால் அதை வழங்க முடியும்.

திசுரி* கூறினார்: ' நாங்களும் உண்மையில் தயிர் (யோகர்ட்) சாப்பிட விரும்புகிறோம், ஆனால் பெரும்பாலான நேரங்களில் எனது இளைய சகோதரிக்கு மட்டுமே தயிர் (யோகர்ட்) வாங்குவதற்கு என் பெற்றோர்களால் முடியும். எப்பொழுதெல்லாம் கூடுதல் பணம் கிடைக்கும் போதெல்லாம், எங்கள் இருவருக்குமே தயிர் (யோகர்ட்) வாங்கித் தருகிறார்கள். ' 'இப்போது கடைகளில் பொருட்கள் மிகவும் விலை உயர்ந்துள்ளன. இதற்கு முன்பு இப்படி இருந்ததில்லை.'
கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 70% (சதவீதமான) குடும்பங்கள் தங்களது வருமான ஆதாரங்களில் அனைத்தையும் அல்லது பெரும்பாலானவற்றை இழந்துள்ளதாகவும், கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இவற்றிற்கு மத்தியில், பாதிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் (54%) இப்போது தங்கள் முக்கிய குடும்ப வருமானத்தைப் பருவகால மற்றும் ஒழுங்கற்ற வேலைகளில் இருந்து பெறுகின்றன. இந்த உறுதியற்ற தன்மையானது, பிள்ளைகளுக்கான அடுத்த உணவுஎங்கிருந்து வருகிறது என்று தெரியாத ஒரு ஆபத்தான நிலைக்கு தள்ளிவிடுகிறது என சேவ் த சில்ரன் கூறியது.

இலங்கை சேவ் த சில்ரன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா அவர்கள், ' இந்தப் புள்ளிவிபரங்கள், சிறீ லங்காவின் நெருக்கடி நிலையானது தொடர்ச்சியாக எவ்வாறுகட்டுப்பாட்டை மீறிச்செல்கிறது என்பதையும், எந்தவொரு நெருக்கடியையும் போலவே, சிறுவர்கள் உடல் மற்றும் மனஆரோக்கியம், மற்றும் எவ்வாறு அவர்கள் தங்கள் சுமைகளைத் தாங்கிக் கொள்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது எனக் கூறினார். போஷhக்கு மற்றும் கல்வி நிலை அனைத்தும் ஆபத்து நிலையில் இருக்கிறது. நாட்டின் போருக்குப் பின்னைய தலைமுறையாக இச்சிறார்கள் நம்பிக்கையுடன் பிறந்தனர் ஆனால் நாங்கள் மீண்டும் தோல்வி அடையும் அபாயத்தில் இருக்கின்றோம்.'

"தங்கள் குடும்பத்தில் யார் உணவு உண்ண வேண்டும் என்பதைப் பெற்றோர்கள் ஒருபோதும் தேர்வு செய்யக் கூடாது. இங்கு நாம் காணும் அனைத்தும் ஒரு முழுமையான பசி நெருக்கடியின் உண்மையான ஆபத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. இலங்கை அரசாங்கம் சில குடும்பங்களுக்கு நலன்புரித் திட்டங்கள் மூலம் மிகவும் - தேவையான ஆதரவை வழங்கி வருகிறது. ஆனால், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் சமூக பாதுகாப்பு முறைமைகளை விரைவாகக் கட்டியெழுப்ப வேண்டும். இது ஒரு அவசர நிலை, இதற்கு அவசர பதில் தேவைப்படுகின்றது."

தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்வதற்கு, அனைத்து மனிதாபிமான தலையீடுகளும், சமூகங்களின் ஆணாதிக்க பாலின இயக்கவியலில், ஒரு காரணியாக இருக்க வேண்டும் என சேவ் த சில்ரன் நிறுவனம் கூறியது.

முடிவடைகிறது.

Read more...

Saturday, February 25, 2023

ஓர் ஒல்லாந்தத் தளபதியின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு - மணி வேலுப்பிள்ளை

1667 ஜனவரி 26-ம் திகதி ரொட்டர்டாமில் பிறந்த ஹென்றிக் சுவார்தகுரூன் (Hendrick Zwaar- decroon) 1694 முதல் 1697 வரை யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்த தளபதியாக விளங்கியவர். மூன்றே மூன்று ஆண்டுகளுக்குள் அவர் வட - கீழ் இலங்கை முழுவதையும் கண் காணித்து, தனது பின்னவர்களுக்கு வழிகாட்டவென விட்டுச்சென்ற நினைவுத்திரட்டு அரியதொரு வரலாற்று ஆவணமாகும்.

தனது தாய்மொழியில் அவர் எழுதிய நினைவுத்திரட்டு பிரித்தானிய ஆட்சியாளரால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு, இலங்கை அரசாங்க அச்சகத்தில் அச்சிடப்பட்டு, 1911-ல் வெளியிடப்பட்டது. அதன் படப்பிரதி ஒன்று கலிபோர்ணியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து திரு. பத்மநாப ஐயர் ஊடாக அண்மையில் எமக்குக் கிடைத்தது. ஆங்கில மொழிபெயர்ப்பில் 95 பக்கங்கள் கொண்டது.

இலங்கையில் தாம் கட்டியாண்ட வட - கீழ்ப் புலத்தை யவ்னாபற்றம் (Jaffnapatam) என்று ஒல்லாந்தர் குறிப்பிட்டார்கள். இது யாழ்ப்பாணப் பட்டினம் என்பதன் ஒல்லாந்த உச்சரிப்பு. ஒல்லாந்தரின் சொல்லாட்சியில் இது யாழ்ப்பாண மாநகரத்தை மட்டும் குறிக்கவில்லை. ஓல்லாந்தரின் ஆளுகைக்கு உட்பட்ட வட-கீழ்ப் புலம் முழுவதையும் குறித்தது.

ஆள்புலம்: தீவகம், குடாநாடு, வன்னி, மன்னார், புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய தமது ஆள்புலத்தைக் கட்டியாள்வது, பொருள்வளம் பெருக்குவது, வணிகம் புரிவது, வரி வசூலிப்பது... பற்றி எல்லாம் தன் பின்னவர்களுக்கு அவர் மதியுரைகளும், அறிவுறுத்துரைகளும் விடுத்துள்ளார்.

தீவகம்: 'நாங்கள் காரைதீவை Amsterdam என்றும், வேலணைதீவை Ley-den என்றும், புங்குடுதீவை Middleburg என்றும், நெடுந்தீவை Delft என்றும், நைனாதீவை Haarlem என்றும், அனலைதீவை Rot-terdam என்றும், இரணைதீவை de Twee Gebroeders அல்லது Hoorn & Enkhuisen என்றும் குறிப்பிடுகிறோம்' என்று தெரிவித்து தமது தாயக வேட்கையை வெளிப்படுத்துகிறார்.

குடாநாடு: வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரிவுகளையும், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஆனைக்கோட்டை, நல்லூர், கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, வல்லை, வல்லிபுரம் ஆகிய ஊர்களையும் பற்றிய குறிப்புகள் இந்நினைவுத்திரட்டில் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன.

வன்னி: தமது ஆள்புலத்தில் மிகவும் பரந்து விரிந்தது வன்னியே என்று கூறும் ஒல்லாந்த தளபதி வன்னியரைப் பயன்படுத்தி புளியங்கு-ளம், மாங்குளம், வேப்பங்குளம், முள்ளியவளைப் பகுதிகளின் கானக வளங்களைக் கையகப்படுத்தும் விதத்தை அவர் எடுத்துரைக்கிறார். அதேவேளை 'வன்னியரின் கொட்டத்தை அடக்க வேண்டும்!' என்றும் அறிவுறுத்துகிறார்.

மன்னார்: முத்துக்குளிப்பு தொழிலையும், கற்பிட்டி-அரிப்பு - மாந்தோட்டை-முசலி - செட்டிகுளம் பகுதிகளின் இயற்கை வளங்களையும் குறிப்பிடுகிறார். காலி - மாத்தறைப் பகுதிகளிலிருந்து புத்தளம், மன்னார் வழியாக வடபுலச் சந்தைக்கு யானைகளைக் கொண்டு வருவதற்கு வசதியாக புத்தளம் - மன்னார் பாதையை அகட்டும் பணியை திறம்பட மேற்கொண்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறார்.

கிழக்கு: திருகோணமலை, தென்னைமரவாடி, கொட்டியாரம், பெரியதம்பனை, தம்பலகாமம், மட்டக்களப்பு பகுதிகளின் தெங்குவளம், பனைவளம், யானை வணிகம் என்பவற்றை விருத்திசெய்யும் விதங்களையும் அவர் விதந்துரைக்கிறார்.

திணைக்களங்கள்: அவரது நிரலின்படி கோட்டை, அரசியல் மன்றம், செயலகம், திறைசேரி, நீதிமன்று, குடிமை நீதிமன்று (காணிக் கந்தோர்), வேலைக்களம், பண்டசாலை என்பன யாழ்ப்பாணத் திணைக்களங்களாய் அமைந்தன.

படைத்துறை: தன்னையும் உள்ளடக்கி அவர் முன்வைக்கும் படைத்துறைப் பட்டியலில் தளபதி, துணைத்தளபதி, சிப்பாய்கள், மாலுமிகள், குடிப்படையினர், கூலிப்படையினர் அடங்கியிருந்தனர். படையினருக்கு வேண்டிய பீரங்கிகள், பீரங்கி ஊர்திகள், துவக்குகள், தோட்டாக்கள், வெடிமருந்து வகைகள், எரிகுண்டுகள், எறிகுண்டுகள் முதலியவை போதியளவு இருப்பில் இருந்தன. அவர்களுக்கு தானியமும், எண்ணெயும், மிளகும், சாராயமும் தாராளமாக வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்.

பணித்துறை: திசாவை, அதிகாரி, தலைமை எழுதுநர், பிசுக்கால், வரிவசூலிப்பவர், தோம்புக்காரர், கணக்கப்பிள்ளை, சம்பளக் கணக்குப்பிள்ளை, சிறாப்பர், உலாந்தா (அளவையாளர்), நடுத்தீர்ப்பாளர், ஆராய்ச்சி, உடையார், விதானையார், கையாள் (நீர்ப்பாசனத்துக்கு பொறுப்பானவர்), பட்டங்கட்டி (முத்துக்குளிப்புக்கு பொறுப்பானவர்), திருமண ஆணையாளர், தீயணைப்புப் படை கண்காணிப்பாளர், நகர பாலகர், மேற்பார்வையாளர்கள், பணிவிடையாளர்கள், கூலியாட்கள், நெசவாளர்கள், பண்டாரப்பிள்ளை, அடிமைகள் முதலியோர் பணித்துறையினுள் அடங்குவர்.

வருவாய்: யானை, கறுவா ஏகபோக வணிகம், தலைவரி, பதின்மை வரி, சோலை வரி, சுங்கத்தீர்வை, கடவுச்சீட்டுக் கட்டணம், உரிமக் கட்டணம் மூலம் வருவாய் ஈட்டப்பட்டது. தலைவரி என்பது ஒவ்வொருவரும் செலுத்தவேண்டிய ஒரேயளவு வரி. பதின்மை வரி என்பது ஒருவரின் வருமானத்தில் 10 விழுக்காடு. குடிமக்களின் வருமானமும் வாழ்க்கைத்தரமும் உயர்ந்துவருவதால், தலைவரியும், பதின்மைவரியும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

பொருளாதாரம்: இலாபம் மிகுந்த யானை, கறுவா வியாபாரம் ஒல்லாந்த ஆட்சியாளரின் ஏகபோகமாய் இருந்தது. பூநகரி, புளியங்குளம், பூவரசங்குளம், கரிக்கட்டுமூலை, முல்லைத்தீவு பகுதிகளை உள்ளடக்கிய வன்னிப்புலத்தில் யானைகளைப் பிடித்து வடபுலத்துக்கு கொண்டு வந்து விற்பது பற்றிய கணக்குவழக்கு மிகவும் நுணுக்கமாய் தரப் படுகிறது.

வணிகம்: வங்காள மரக்காயர்கள் அரிசி, சீனி, வெண்ணெய் முதலிய பொருட்களை இங்கு கொண்டுவந்து விற்று, அவற்றுக்குப் பதிலாக காசை விடுத்து யானைகளைக் கேட்டுவாங்கி, மரக்கலங்களில் ஏற்றிச்செல்வதாகத் தெரிவிக்கிறார். யானைகளின் பெறுமதி அத்தகையது!

'அக்கரையிலிருந்து' அடிமைகள் கொண்டுவரப்படுவதை 'இறக்குமதி செய்யப்படுவதாகக் கூறும் தளபதி, அவர்களை 'பிராணிகள்' என்று குறிப்பிடுகிறார். 1694 முதல் 1696 வரை 3,589 அடிமைகள் 'இறக்குமதி செய்யப்பட்டதாகவும்', ஒவ்வோர் அடிமையையும் ஒரு சிறங்கை அரிசிக்கு உள்ளூர்வாசிகள் வாங்கிச்செல்வதாகவும் தெரிவிக்கிறார்.

'இப்பிராணிகளை' வன்னியர்கள் வாங்கிச்சென்று வயல்வேலை செய்விப்பதாகவும், கண்டி அரசுக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதாகவும், போர்மூளும் வேளைகளில் படைவீரர்களாகப் பயன்படுத்துவதாகவும், அவர்கள் பொக்குளிப்பான் வாய்ப்பட்டு மடிவதாகவும், உள்ளூரில் பொக்குளிப்பான் பரவுவதாகவும், அவர்களின் 'இறக்குமதியால்' கிடைக்கும் தீர்வையை விஞ்சிய கேடு விளைவதாகவும் முறையிடுகிறார்.

உள்ளூரிலிருந்து தேங்காய், நெல்லு, புகையிலை, பாக்கு, வெற்றிலை, மிளகு, வாழைப்பழம், கொடிமுந்திரி, பனங்காய், ஊமல், வைக்கோல் என்பன சந்தைக்கு வருவதை தெரிவிக்கும் தளபதி ஆடு, மாடு, கோழி வளர்ப்பையும் எடுத்துரைக்கிறார். சிரட்டைக்கரி, சங்கு, சுண்ணாம்பு, ஆளி எண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், துவக்குமருந்து, துத்தநாகம், செப்பு, வெட்டுமரம், பவளக்கல், பாய், கயிறு, தீராந்தி, சிலாகை, ஓடு, சிப்பி, சோகி முதலியவை யாழ்ப்பாண பட்டினத்தின் உற்பத்திப்பொருட்கள். துவக்குச் சோங்கு, பீரங்கி ஊர்தி ஆக்குவதற்கு வேண்டிய மரவகைகள் வன்னிக் காட்டிலிருந்தும், யாழ்ப்பாணம் முதல் மன்னார் வரையான கரையோரத் தோப்புகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப் பட்டன.

பருத்தித்துறையில் பவளக்கல் அகழப்பட்டு, சூளையில் சுடப்பட்டு, சுண்ணாம்பு ஆக்கப்பட்டு, தோணிகளிலும் தெப்பங்களிலும் கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நாகபட்டினத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. காங்கேசன்துறையில் சுண்ணக்கல் சுடுவோருக்கும் பவளக்கல் வழங்கப்பட்டது.

'காரைதீவில் சிறந்த சாயவேர் கிடைக்கிறது. மன்னாரிலும் பெருமளவு கிடைக்கிறது. வன்னியிலும் ஊர்காவற்றுறையிலும் கிடைக்கும் சாயவேர் தரம் தாழ்ந்தது. அதை ஏனைய சாயவேர்களுடன் கலந்து சாயம் ஆக்கப்படுகிறது. சோழமண்டலத்திலிருந்து இறக்குமதியாகும் துணிமணிகளுக்கு சாயம்பூசி விற்கப்படுகிறது' என்பது ஒரு குறிப்பு.

'நெடுந்தீவிலிருந்து உடலுறுதிவாய்ந்த குதிரைகள் கொழும்புக்கும், நாகபட்டினத்துக்கும் ஏற்றுமதிசெய்யப்பட்டு, ஏலங்கூறி விற்கப்படுகின்றன. பருமன் குறைந்த, குறைகள் மிகுந்த குதிரைகள் சுட்டுக்கொல்லப்படுகின்றன. ஆதலால் உடலுறுதிவாய்ந்த குதிரைகள் பெருகி வருகின்றன. அராபிய, பாரசீக நாடுகளிலிருந்தும் சிறந்த குதிரைகள் தருவிக்கப்படுகின்றன' என்பது வேறொரு குறிப்பு.

குறிப்பு. 'பருத்தித்துறையிலும், ஊர்காவற்றுறையிலும் கடவுச்சீட்டுகள் வழங்கும் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. வெளியார் கடவுச்சீட்டு இல்லாமஒ; பயணம் செய்வதையும், உரிமம் இல்லாமல் சாமான் சண்டி ஏற்றி இறக்குவதையும், அடிமைகளின் திருட்டையும், யானைகளின் ஊடுருவலையும், வன்னியரும் - சிங்களவரும் அத்துமீறி நுழைவதையும் தடுக்கும் வண்ணம் பூநகரியிலிருந்து, குறிப்பாக ஆனையிறவு, பளை பாலங்களிலிருந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும்' என்று அறிவுறுத்துகிறார் தளபதி.

திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் தெங்குவளம், நெல் சாகுபடி பற்றிக் குறிப்பிடும்பொழுது, 'அங்கு யானைகளுக்கு ஓலை கொடுக்க அதிக தென்னைகள் தறிக்கப்படுவதால், தெங்குவளம் குன்றி வருகிறது. அதற்காக மாவட்டவாசிகளின் தலைவரியை மேலிடம் குறைத்திருக்கத் தேவையில்லை, அவர்களை சுதந்திர வர்த்தகம் புரிய அனுமதித்திருக்கத் தேவையில்லை. அவர்களின் தேங்காய் ஏற்றுமதி தடைசெய்யப்பட வேண்டும்' என்று கேட்டுக்கொள்கிறார்.

மக்கள்: தளபதியின் கணக்குப்படி யாழ்ப்பாணப் பட்டினத்தின் மக்கள் தொகை 1,69,299 பேர். அவர்களை மலபாரிகள் என்று குறிப்பிடும் தளபதி, ஒருசில தடவைகளே மக்கள் என்று குறிப்பிடுகிறார். ஆனால் சிங்களவர் என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவர் கணிப்பில் மலபாரிகள் (அதாவது யாழ்ப்பாணப் பட்டினத்து மக்கள்) 'தற்பெருமையும், செருக்கும், பிடிவாதமும், சோம்பலும்' மிகுந்தவர்கள்.

'பொய்சொல்லி ஏமாற்றும் தந்திரம் படைத்த இந்த இனத்துடன் மிகவும் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டும். தமக்கு நன்மை கிடைக்கும் என்றால், இவர்கள் பொய்ச்சத்தியம் செய்யவும், பொய்ச்சாட்சியம் சொல்லவும் தயங்கமாட்டார்கள். ஒருவர் மீது ஒருவர் வன்மம் கொண்டு, வல்லடி வழக்குத் தொடுத்து, வெல்லும்வரை வழக்காடி மகிழ்வார்கள். அதற்காக போர்த்துக் கேயர் காலத்தில் தீர்க்கப்பட்ட வழக்குகளையே புதுப்பிப்பார்கள்.'

'முன்னர் அஞ்ஞான மன்னரும், பின்னர் போர்த்துக்கேயரும் ஆண்ட காலங்களில் இவர்கள் சாதி, சாதியாகப் பிரிந்து வாழ்ந்து பழகியபடியால், சாதிப்பிரிவுகளில் நாம் தலையிடக் கூடாது' என்று தனது பின்னவர்களுக்கு புத்திமதி கூறும் தளபதி தனது ஆள்புலத்தில் 40 சாதிகளை எண்ணிக் கணக்கிட்டுள்ளார்.

எண்ணிக்கை மிகுந்தவர்களாய் வேளாண்மையில் ஈடுபட்ட வெள்ளாளரின் ஆதிக்கம் பற்றி கொழும்பு ஆளுநருக்கும், இந்திய தலைமை ஆளுநருக்கும், பற்றேவிய உச்சபீடத்துக்கும் முறைப்பாடு தெரிவிக்கிறார். 'வெள்ளாளரின் சாதித் திமிருக்கு இடங்கொடுத்தால் மாத்திரமே, மற்றெல்லா அலுவல்களிலும் அவர்கள் கூனிக் குறுகி, கெஞ்சிக் கூத்தாடி வேலை செய்வார்கள்' என்று வலியுறுத்துகிறார்.

'காசாளர்களின் உடந்தையுடன் செட்டிவியாபாரிகள் தரம் குறைந்த வராகன் நாணயங்களை சோழமண்டலத்திலிருந்து தருவித்து, நல்லது கெட்டது தெரியாத அப்பாவிக் குடிமக்களுக்கு, குறிப்பாக திருகோணமலைக்கு வரும் சிங்களவருக்கு கைமாற்றிக் கொடுத்து கொள்ளை இலாபம் சம்பாதித்ததை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பது அவரது வேண்டுகோள்களுள் ஒன்று.

'பண்டசாலைப் பணியாளர்கள் சிறுகச்சிறுக அரிசியைக் களவெடுத்து உள்ளூர்வாசிகள் ஊடாக சந்தையில் விற்றுக் காசாக்கி வருகிறார்கள். ஆகவே தேவைக்கதிகமாக அரிசியச் சேமித்து வைக்கக்கூடாது' என்று வேறு எச்சரிக்கிறார்.

'கொழும்பிலிருந்து தருவிக்கப்படும் பன்றி இறைச்சி இடைவழியில் பழுதடைந்துவிடும். கரையோரங்களில் கிடைக்கும் கருவாடு பழுதடையாது. ஆனால் அதன் நெடியை தாங்க முடியாது என்பது இன்னோர் எச்சரிக்கை.

'சாராயத்தை அளவாகக் குடித்தால் நலம் பயக்கும், அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து விளையும்' என்று அறிவுறுத்தும் அதே வேளை, சாராய வியாபாரிகளும், ஏற்றி இறக்குவோரும் கலப்படம் செய்வதாகக் கேள்வி' என்றும் குறிப்பிடுகிறார்.

குருமார்: 'ஆட்டிறைச்சியும், கோழி இறைச்சியும், வெண்ணெயும் கிடைக்கும் தேவாலயங்களுக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் மட்டுமே எமது குரு மார் சமயம் பரப்பச் செல்கிறார்கள். பச்சிலைப்பள்ளி, திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற வறிய பகுதிகளுக்குப் போகாமல் தலைமறவாகி விடுகிறார்கள். கட்டளையிட்டால் மாத்திரமே அங்கு போவார்கள். போகும்பொழுது மனைவிமாரையும் கூட்டிக்கொண்டு போகிறார்கள். இவர்களை விருந்தோம்புவது அந்த ஏழைகளுக்கு எவ்வளவு கடினம்!

அவர்களையும், சில தேவாலயங்கள் குதிரைக் கொட்டில்கள் போல் தென்படுவதையும் எண்ணி வருந்துகிறேன்' என்று கூறுகிறார்.

1697-ல் மேலிடத்து உத்தரவின்படி தளபதி ஹொன்றிக் சுவார்தகுரூன் தற்காலிகமாக ஆணையாளர் பதவியேற்று இந்தியாவுக்குப் புறப்படும் தறுவாயில் தனது பின்னவர்களுக்கு விட்டுச்சென்ற வழி காட்டியின் சுருக்கம் இது. அவர் யாழ்ப்பாணம் திரும்பும்வரை மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவில் தற்காலிக ஆணையாளராகப் பணியாற்றிய வேளையில், அதாவது 1714-ல் ஒல்லாந்தரின் இந்திய ஆள்புலத்து ஆளுநராகப் பதவியுயர்வு பெற்றபடியால், அவர் யாழ்ப்பாணம் திரும்ப வில்லை. 1724-ல் ஓய்வுபெற்று, தாயகம் திரும்பாமல், பற்றேவியா சென்று, அங்கேயே வாழ்ந்து, 1728- அவர் இயற்கை எய்தினார்.

Memoir of Hendrick Zwaardecroon Commandeur of Jaffnapatam (afterwards Governor-General of Nederlands India) 1697. FOB THE GUIDANCE OF THE COUNCIL OT JAFFNAPATAM DURING HIS ABSENCE AT THE COAST OF MALABAR

Translated by SOPHIA Dutch Translator with an Introduction and Notes by the Government Archivist. COLOMBO: H. C. COTTLE GOVERNMENT PRINTER CEYLON 1911.

தாய்வீடு இதழிலிருந்து
ஆக்கம் mani.v@thaiveedu.com


Read more...

Saturday, February 18, 2023

ரணில்-மொட்டு அரசு பலமிழந்துள்ளது என்பதை நிரூபிக்க மக்களின் வியர்வையிலிருந்து 30 பில்லியன் பணத்தை செலவிட வேண்டுமா?

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான முஸ்தீபுகள் அனைத்தும், நடப்பு அரசாங்கத்தை விடுத்து ஏனைய சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் சமூகம் சார் குழுக்களிடையில் மிகவும் முனைப்புடன் முன்னெடுக் கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இதற் கிடையில் அரசு தேர்தலை பிற்போட முயற்சிப்பதும் அதனை எதிர்கட்சியும், இன்னும் தமது அரசியல்சார் மக்கள் ஆதரவை பெருக்கிக்கொள்ள முயற்சிக்கிற சில அரசியல் குழுக்களும் மிகக் காட்டமாக விமர்சிப்பதும், அவர்களின் கயிறுழுத்தல்களிடேயே கூட்டத்தோடு ஓடுகின்ற மாடுகளைப் போலவே மக்களில் பலரும் தேர்தல் கட்டாயம் வேண்டுமென கூறிக்கொள்வதையும் காணக்கிடைக்கின்றது.

மேலும் குறித்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கும் அரசிற்கு எதிராக அமைந்த நிலையில், அதனை ஏதோ பாரிய வெற்றியாக கொண்டாட ஆரம்பித்தார்கள் இந்த அதிக முட்டாள் வாக்களர்களை கொண்ட மக்கள் கூட்டம், இவ்விடத்தில் கடந்த காலங்களில் இதே நீதித்துறை எடுத்த அநீதியான பல முடிவுகளையும் நினைவில் கொள்க,

விடயத்திற்கு வருகின்றேன், ஜனநாயகத்தின் பெயர் கொண்டு இந்த உள்ளூராட்சி தேர்தல் நிச்சயமாக வேண்டும் என்று கூறிகொள்கின்ற அனைவரிடமும் கேட்க வேண்டிய ஒரே வினா.. இந்த உள்ளூராட்சி என்கிற மண் கோட்டையை வைத்துக் கொண்டு எதனை கிழிக்க போகின்றீர்கள்? தேசிய ரீதியில் அதிக சபைகளை வைத்திருக்கின்ற மொட்டு மற்றும் ரணில் அணி நாட்டில் பலமிழந்துதுள்ளது என்பதை நிரூபணம் செய்வதைத் தவிற வேறு எதனை நீங்கள் சாதிக்கப் போகின்றீர்கள்?

சரிவடைந்திருக்கின்ற நாட்டின் பொருளாதாரதிற்கு யார் காரணம் என்பதை தாண்டி அதனை மீள கட்டி எழுப்ப வேண்டிய தேவை குடிமக்கள் அனைவருக்கும் இருக்கின்ற இக்காலப்பகுதியில் பல பில்லியன் ரூபாய்க்களை கொட்டி மந்தமான செயற்பாட்டு போக்கினை கொண்ட ஒரு உள்ளூராட்சி தேர்தலை நடாத்தித்தான் ஆக வேண்டுமா?

தேர்தலை நடாத்துவதற்காக மட்டுமே மக்களின் பணத்திலிருந்து 10 பில்லியன்களுக்கும் அதிகமான பணத்தை அரசு செலவிட உள்ளது.

அதுபோக தேர்தல் நடாத்தப்பட்டு உள்ளூராட்சி சபைகள் தேர்வு செய்யப்படுகின்ற வேளையில் நாடு முழுவதும் உள்ள 341 சபைகளில் இருந்து 8700 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவிருக்கின்றனர். இவர்களுக்கென மாதமொன்றிற்கு 174,000,000 ரூபாய்களும் அதே சபை நான்கு வருடங்கள் நீடிக்குமாயின் 8,352,000,000 ரூபாய்களும் மேலும் சபையின் ஆட்சிக் காலம் ஐந்து வருடங்களாக நீடிக்கப்பட்டால் அவர்களுக்கு ஐந்து வருடங்களும் வழங்கப்படும் சம்பளம் மட்டுமே 10,440,000,000.00 ரூபாய்க்களுமாக மக்கள் பணத்திலிருந்து செலவு செய்யப்படவுள்ளது.

மேற்படி தேர்தல் நடாத்தப்படாதவிடத்து, எதிர்வரும் மார்ச் மாதத்துடன் இருக்கின்ற சபைகள் கலைந்து விஷேட ஆணையாளர்கள் மற்றும் செயலாளர்களின் கைகளில் சபைகள் வருகின்ற போது இவர்களால் செய்யப்பட்ட வேலைகளையும் விட அதிக மக்கள் சேவைகளை செய்வதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகவே உள்ளது.

ஆக மொட்டு மற்றும் ரணில் தரப்புகள் நாடளாவிய ரீதியில் பலமற்றுப்போயுள்ளது என்பதை நிரூபிக்க மக்களின் வியர்வைகளிலிருந்து ஏறத்தாழ 30 பில்லியன் ரூபாய்க்களை இந்த தேர்தலுக்காக செலவிட தயாராகின்றீர்கள். இங்கு குறிப்பிடப்பட்ட செலவீன விபரங்களானது சபை உறுப்பினர்கள் எதிர்காலத்தில் செய்யப்போகின்ற ஊழல், திருட்டு மற்றும் மோசடிகளை தவிர்த்து என்பதை கவனத்தில் கொள்க, இதுவே பாராளுமன்ற தேர்தலாக இருந்தால் ஒரு மாற்று சக்திக்கான ஒரு களமாக அதனை வரவேற்றிருக்கலாம். ஆனாலும் ஒன்று மட்டும் உண்மை, இந்த தேர்தல் SJP மற்றும் NPP ஆகிய கட்சிகளுக்கு மட்டுமே அளப்பெரிய நன்மைகளை கொண்டுவந்து சேர்க்கப்போகின்றது அதற்கான மிகப்பெரிய பிரச்சாரங்களில் ஒன்றுதான் இந்த தேர்தல் நடத்தியே ஆக வேண்டும் என்கிற பிரச்சாரம். தேர்தல் முடிந்ததும் வரவிருக்கின்ற பொருட்களின் விலையேற்றத்திற்கு தயாராவோம் வாருங்கள்.

𝗛𝗮𝗯𝗹𝘂𝗹𝗹𝗮𝗵 𝗕𝘂𝗵𝗮𝗿𝘆

.

Read more...

Tuesday, December 13, 2022

பேச்சுவார்த்தை மேசையில் தனித்தரப்பாக அனுமதிக்கட்டாம். கேட்கிறது அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற வரவு செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின் பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அனுசரணையுடன் எதிர்வரும் சுதந்திர தினத்திற்கு முன்னர் நாட்டில் நிலவிவரும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார் . இதனைத்தொடர்ந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இணைந்த வடகிழக்கிற்குள் சமஸ்டி தீர்வினைபற்றி பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ஜனாதிபதியினால் தமிழ் தரப்பினை சந்தித்து பேசுவதற்கான அழைப்பும் விடுக்கப்பட்டிருகின்றது . ஆனால் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தில் முஸ்லிம் மக்களுக்கான தீர்வு தொடர்பில் பேசுவதற்கு முஸ்லிம் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமை எங்கள் மத்தியில் பலதரப்பட்ட சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது என அம்பாரை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கடந்தகாலங்களில் நடைபெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தம் முதல் ஒஸ்லோ மாநாடு வரையிலான இனத்தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பு புறக்கனிக்கப்பட்டிருந்தமையே இன்று வரையில் இனப்பிரச்சினை புரையோடிப்போவதற்கு காராணம் என்பதனையும் உரிய தரப்புக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு அம்பாரை மாவட்ட பள்ளிவாயல்களின் சம்மேளனம், சம்மேளன தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அசீஸ் அவர்களின் தலைமையில் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசலின் கேட்போர் கூடத்தில் கூடி கலந்துரையாடியதோடு தீர்மானங்களையும் மேற்கொண்டது.

அதில் எல்லோருக்கும் பொதுவான ஜனாதிபதி அவர்கள் நாட்டிலே நிலவுகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க முயற்சிக்கும் இவ்வேளையில் தொடர்ச்சியாக இனரீதியிலான நெருக்குதலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளையும் பேச்சுவார்த்தையின்போது தனித்தரப்பாக கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவேண்டும் என்பதோடு எல்லா சமூகங்களும் நிம்மதியாக வாழுகின்ற சூழலை உருவாக்கும் தீர்வு திட்டத்தினை முன்மொழிய வேண்டும் என்றும் முஸ்லிம் சமூகத்துக்கான தீர்வுத்திட்ட முன்மொழிவுகளை மேலும் ஆய்வு செய்திட நிபுணத்துவ ஆலோசனைக்குழு ஒன்றினை அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தின் ஏனைய மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் காணப்படும் பள்ளிவாசகளின் சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமா சபையோடும் இணைந்து அங்கு காணப்படும் பிரச்சினைகளை அடையாளம்கண்டு அவற்றுக்கான தீர்வினையும் பெற்றிட அனைத்து மாவட்டங்களையும் அடங்கிய ஓர் அமைப்பாக இணைந்து செயற்படல் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்துக்கு சம்மேளன செயலாளர் ஏ.எல். அன்வர்டீன் பொருளாளர் எஸ்.எம்.சபீஸ், உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் புத்திஜீவிகள் கலந்துகொண்டிருந்தனர்


Read more...

Friday, December 9, 2022

தமிழ், முஸ்லிம் தலைமைகளின் பேச்சுக்கள் மூடு மந்திரமாக இருக்கக் கூடாதாம் என்கிறார் ஹாபிஸ் நசீர் அஹமட்

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு முஸ்லிம் கட்சிகளையும் அழைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு, அந்தப் பேச்சுக்களை மூடிய அறைக்குள் நடத்தாமல் பகிரங்கத்தளத்தில் பேச வேண்டுமென, சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முஸ்லிம் கட்சிகள் மற்றும் மலையக கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ள அவர் அது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளதாவது.

நீண்டகால அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பது வரவேற்கத்தக்கது. இப்பிரச்சினையால், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வாழும், தமிழ் பேசும் சமூகங்களே அதிகம் பாதிக்கப்பட்டன. எல்லோருக்கும் பொதுவான பிரச்சினை என்பதால்தான், திருமலைத் தீர்மானம், வட்டுக்கோட்டை தீர்மானங்களில் அப்போதைய தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் அங்கீகரித்துச் செயற்பட்டன.

முஸ்லிம்களுக்கான தனியான அடையாளத்தை தந்தை செல்வாகூட ஏற்றிருந்தார். இதனால்தான், எமது தலைவர் அஷ்ரஃப்கூட சிறுபான்மை அரசியலுடன் இணங்கிப் பயணித்தார். காலப்போக்கில், இந்த ஒற்றுமைகள் இல்லாமலாகி இரு சமூகங்களும் துருவங்களாகின.

இப்போதுள்ள நிலையில், இச்சமூகங்களை பொது அடையாளத்துக்குள் இணைப்பதற்கான முயற்சிகள் எதையும் சிறுபான்மை தலைமைகள் செய்யவில்லை. இதுதான் இன்றுள்ள கவலை.

இரு சமூகங்களும் அண்ணளவாக சம எண்ணிக்கையிலுள்ள கிழக்கு மாகாணத்தில் கூட, ஒரு இணக்கப்பாட்டுக்கு வர முடியாமலே உள்ளது. அதிகாரக் கெடுபிடி, நிர்வாகத் தொந்தரவு உள்ளிட்டவைகளால், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களுக்கு இன்னும் அநீதியிழைக்கப்படுகிறது. காணிகளைத் திட்டமிட்டுச் சுருட்டிக் கொள்வது பெரும்பான்மையைப் பலப்படுத்தும் நோக்குடனா? இந்த சந்தேகங்களும் மக்களிடத்தில் எழுகின்றன.

புலிகளின் கோட்பாட்டுச் சிந்தனையில் வளர்ந்த சிலரின், இந்தப் போக்குகள்தான், தமிழ்,முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கு குறுக்காக நிற்கின்றன. இருந்தாலும், இந்தப்போக்குகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் அரசியல் பலம் வாய்ந்த புத்தி ஜீவிகளிடமும் இருக்காது என்றே, நம்புகிறோம். இவர்களுடன் பேச நாம் தயாராக இருப்பதும் இந்த நம்பிக்கையில்தான்.

என்றாலும், 2001 இல், விடப்பட்ட தவறுகள் இம்முறையும் இடம்பெறக்கூடாது. முஸ்லிம்களின் தனித்தரப்பை மறுத்த பேச்சுக்கள் எவையும் வெற்றியளிக்காதென, அன்றே, நாம் அடித்துக் கூறினோம்.

இந்நிலையில் தமிழ், முஸ்லிம் தலைமைகள் நடாத்தும் பேச்சுக்கள் எவையும் மூடு மந்திரமாக இருக்கக் கூடாது.வடபுல வௌியேற்றத்தை விரும்பவில்லை எனக்கூறும் தமிழ் தரப்பு, எமது மக்களை மீண்டும் அங்கு குடியேற்ற எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. வட மாகாண சபையின் கடந்த செயற்பாடுகள், இனச் சுத்திகரிப்புக்கு அமைதியான ஆதரவு வழங்குவதாகவே இருந்தன.

ஒரு கல்லையாவது நட்டு, மீள் குடியேற்றத்துக்கு சமிக்கை வழங்கியிருக்கலாம். இவற்றையெல்லாம் முஸ்லிம் தலைமைகள் மறந்திருக்கலாம். முஸ்லிம்கள் மறக்கவில்லை. வாக்குகளுக்காகவும், வெவ்வேறு வாய்ப்புகளுக்காகவும் இந்த முஸ்லிம் தலைமைகள் தலையாட்டிகளாக உள்ளனவேயன்றி, தமிழ் மொழிச் சமூகங்களின் ஒன்றிணைவு அல்லது ஒரே தீர்வுக்கு இவர்கள் உழைக்கவில்லை. என்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more...

Friday, December 2, 2022

மட்டக்களப்பு வலயப் மகளிர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி! மட்டு- துஷரா

மட்டக்களப்பு கல்வி வலயத்தின் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயப் பாடசாலைகளுக்கிடையிலான மகளிர் கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்ட இச்சுற்றுப் போட்டிகள் வித்தியாலயத்தின் அதிபர் அ.குலேந்திரராஜா தலைமையில் இடம்பெற்றது.

14, 16 மற்றும் 19 வயது பிரிவுகளைச் சேர்ந்த 19 அணிகள் பங்குகொண்ட இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 14 வயதுப் பிரிவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அணியும், தன்னாமுனை சேன் ஜோசப் கல்லூரி அணியும் தெரிவு செய்யப்பட்டது. 16 வயதுப் பிரிவில் மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரி அணியும், மட்டக்களப்பு விவேகானந்தாக் கல்லூரி அணியும் தெரிவு செய்யப்பட்டது. 19 வயதுப் பிரிவில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அணியும், மட்டக்களப்பு மஹஜனக் கல்லூரி அணியும் தெரிவு செய்யப்பட்டது.

இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்ட அணிகளின் போட்டிகள் நேற்று முன்தினம் (30) மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இச்சுற்றில் 14 வயதுப்பிரிவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலய அணியினர் 3 கோல்களை அடித்து வெற்றிபெற்றது. 16 வயதுப் பிரிவில் மட்டக்களப்பு மஹாஜனக் கல்லூரி அணியினர் 1 கோலை அடித்து வெற்றிபெற்றது. 19 வயதுப் பிரிவில் புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலய அணியும், மஹஜனக் கல்லூரி அணியும் தலா 1 கோல் வீதம் அடித்து சமாந்திரமாக முடிவுற்ற இப்போட்டிக்கு, பினால்ட்டி முறையில் புதுக்குடியிருப்பு கண்ணகி மஹா வித்தியாலய அணியினர் 2 கோல்களை அடித்து வெற்றிபெற்றது.

இச்சுற்றுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கு.சுஜாதாவும், சிறப்பு அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் மற்றும் கோட்ட பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டு வெற்றியீட்டிய அணியினர்களுக்கு வெற்றிக்கிண்ணம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.




Read more...

Sunday, November 27, 2022

600 பொலிஸாரும் ரணில் ன் ஹன்சார்ட்டும். அவர் கொலையாளி என்றால், அவர்கள் யார்? சுமத்திரனின் இரட்டை வேடம். ஜெகன்

2023 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற முரண்பட்டு நிற்கும் இருவேறு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் ராசமாணிக்கமும் பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசதுரை சந்திரகாந்தனும் ஒருவர் மேல் ஒருவராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். அரச வளங்களை அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி சூறையாடியுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள இக்குற்றச்சாட்டுக்கள் எவையும் வெறுமனே அரசியல் காழ்ப்புணர்சியில் கூறப்படுகின்ற விடயங்கள் என்று என்னால் கடந்து செல்லமுடியாது. அவை தொடர்பான ஒரு விரிவான உரையாடலுக்கு இருதரப்பினரையும் அழைத்துள்ளதுடன் , இரு தரப்பாலும் உலாவ விடப்பட்டிருக்கின்ற ஆவணங்களின் உண்மைத்தன்மை தொடர்பில் போதிய ஆய்வின் பின்னர் பேசுவது பொருத்தமாகும் என எண்ணுகின்றேன்.

மேற்படி இருவருக்குமிடையேயான குற்றச்சாட்டுக்களின்போது பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் தனது கட்சியின் உறுப்பினரின் பெயர் „சாணக்கிய ராகுல் ராஜபுத்திரன் ராசமாணிக்கம்" திரிவுபடுத்தப்படுகின்றது என சிறப்புரிமைக் கேள்வியை எழுப்பியதுடன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு கொலையாளி என்றும் அதனை ரணில் விக்கிரமசிங்கவே தனது 06.05.2022 திகதிய உரையில் கூறியுள்ளமை ஹன்சார்ட் ல் பதிவாகியுள்ளதாகவும் ஆத்திரமும் ஆவேஷமும் அடைந்தது தொடர்பில் நிறைய புதிய சந்தேகங்கள் எழுந்துள்ளதுடன், இதுவரை இருந்துவந்த சந்தேகங்கள் பலவற்றுக்கும் விடையையும் தந்துள்ளது.

இலங்கை சோசலிஸ சனநாயக குடியரசின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் பெயர் ஆங்கிலத்தில் „Shanakiya Rahul Rajaputhiran Rasamanickam „ என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் திணைக்களத்திற்கு வழங்கியுள்ள தகவலின் பிரகாரம் இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் அவரது பெயர் ஆங்கிலத்தில் „Shanakiyan Rajaputhiran Rasamanickam" என பதிவிடப்பட்டுள்ளது. இந்த இரட்டை பெயர் தொடர்பில் சாதாரணமான சந்தேகங்கள் காணப்படும்போது, அப்பெயர்கள் வெளிப்படுவது தொடர்பில் சுமந்திரன் ஆத்திரமடைந்தவிதம் பலத்த சந்தேகங்களை கொடுக்கின்றது.



பிறப்பத்தாட்சிப் பத்திரத்தின் பிரகாரம் வழங்கப்படும் கடவுச்சீட்டில் காணப்படும் „சாணக்கிய" „சாணக்கியன்" ஆகியமையும் அங்கே காணப்பட்டும் „ராகுல்" நீக்கப்பட்டுள்ளமையும் தமிழ் மக்களிடம் வாக்குகளை வசூலிக்கும்போது, அவர் பிறப்பால் யார் என்ற கேள்வி எழுவதை தவிர்ப்பதற்காகவும் தமிழ் மக்களை வழமைபோல் ஏமாற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட திருகுதாளமாக இருக்க முடியும் என இத்தனை காலமும் யாவரும் கடந்து சென்றபோதும், இன்று இரட்டை பிரஜாவுரிமை கொண்டுள்ளவர்கள் இலங்கை பாராளுமன்றில் அங்கத்தவர்களாக இருக்க முடியாது என்ற சட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துவரும் நிலையில் சுமந்திரனின் தடுமாற்றம், இங்கே ஆள்மாறாட்டம் இடம்பெற்றுள்ளதா? அவ்வாறு இடம்பெற்றிருந்தால் கட்சியின் தலைமையும் அதற்கு பொறுப்புக்கூறவேண்டுமாகையால், சுமந்திரன் பதறுகின்றாரா? என்ற கேள்விகளுடன் சுமந்திரனின் இரட்டை வேடத்திற்கு செல்வோம்.

600 பொலிஸாரைக் கொன்ற கொலையாளியே பிள்ளையான் என்றும் இவ்விடயத்தை பாராளுமன்றிலே இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 06.05.2022 தெரிவித்துள்ளமை ஹன்சார்ட்டில் பதிவாகியுள்ளதாகவும் சுமந்திரன் கூறுகின்றார். 1990 ம் ஆண்டு கிழக்குப் பகுதியில் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் பகுதியில் வைத்து கோழைத்தனமாக புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். ஆனால் 1990ம் ஆண்டு ஆனி மாதம் 11 அல்லது 12 ம் திகதி இப்படுகொலை இடம்பெற்றபோது, பிள்ளையான் அவ்வியக்க உறுப்பினராக இருக்கவில்லை என்பது வெளிப்படையான உண்மை.

குறித்த கொலை இடம்பெற்றபோது அவ்வியக்க உறுப்பினராக இருந்திராதபோதும், பிள்ளையானை அக்கொலைகளின் கொலையாளியாக எடுத்துக்கொள்ளலாமா என்பதுதான் விடயம். சரணடைந்து நிராயுதபாணிகளாகவிருந்த மேற்குறித்த 600 பொலிஸாரையும் உலக யுத்த நியதிகளை மீறி கொலை செய்து அது ஒரு பயங்கரவாத இயக்கம்தான் என புலிகளியக்கம் மீண்டும் தன்னை நிரூபித்து நின்றபோது, அவ்வியக்கத்தின் கொள்கையை ஏற்று 1991 ம் ஆண்டு புலிகளியக்கத்தில் பிள்ளையான் இணைந்து அவ்வியக்கத்தை பலப்படுத்தியிருக்கின்றார் என்றால் அவ்வியக்கத்தின் சகல குற்றங்களுக்கும் கூட்டாக பொறுப்புக்கூறவேண்டியவர்தான் என்ற தர்க்கத்தை சுமந்திரன் முன்வைப்பாரானால், அத்தர்க்கத்தை நான் ஏற்றுக்கொள்வதுடன் பிள்ளையான் 600 பொலிஸாரைக் கொன்ற கொலையாளிதான் என்பதையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

அவ்வாறாயின், 600 பொலிஸார் கொல்லப்பட்ட விடயத்தில் பிள்ளையான் கொலையாளிகள் பட்டியலில் இணைக்கப்பட்டால் அங்கு தவிர்கமுடியா அடுத்த கேள்வியாதெனில், அவ்வியக்கத்தின் அங்கத்தினர் அனைவரும் 600 பொலிஸாரையும் கொன்ற கொலையாளிகள் என்றுதானே எடுத்துக்கொள்ளவேண்டும். எனவே மாவீரர்கள் , முன்னாள் போராளிகள் என்பவர்கள் யார்? அவர்களும் கொலைக்குற்றவாளிகளாகத்தானே இருக்கவேண்டும். கொலையாளிகளை மாவீரர்கள் எனப்போற்றுவது நகைப்புக்குரியதல்லவா?

ஆகவே கொலைக்குற்றவாளிகளை மாவீரர்கள் மற்றும் போராளிகள் என்று போற்றுவது எந்த விதத்தில் நியாயம் என சுமந்திரனைக் கேட்கின்றேன். அதாவது தங்களது அரசியல் பித்தலாட்டங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்போரை முன்னாள் போராளிகள் என்பார்கள், தங்களது வாக்குவங்கியை நிரப்புவதற்காக கொலையாளிகளை மாவீரர்கள் என விளக்கேற்றி அர்ச்சிப்பார்கள், தங்கள் அரசியல் பாதைக்கு குறுக்கே செல்வோரை கொலையாளிகள் என்பார்கள். இது அயோக்கியத்தனமான இரட்டை வேடம் இல்லையா?

Read more...

Friday, November 25, 2022

அதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கு ஆபத்தானதாம், அதிலும் சமஷ்டி பேராபத்தாம்! வயிற்றிலடித்து கதறுகிறார் சட்டத்தரணியார்!

இலங்கையில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு ஒன்றினைக்காணும் பொருட்டு பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், பல்வேறு தரப்புகளாலும் இம்முறை இடம்பெறவிருக்கும் பேச்சுவார்த்தைகள் கடந்தகாலங்களை விட சில தீர்வுகளை தரலாம் என நம்பப்படுகின்றது. இந்நிலையில் இப்பேச்சுவார்த்தைகளின் முடிவில் அதிகாரப்பகிர்வு அல்லது சமஷ்டி என்ற முடிவினை எட்டின் அது முஸ்லிம்களை ஆபத்திற்கும் அப்பால் பேராபத்தில் வீழ்த்தும் என்றும் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களின் நலனிலும் பார்க்க தமிழர்களின் நலனில் அக்கறையாக இருப்பதாகவும் ஒப்பாரி வைக்கின்றார் சட்டத்தரணி வை.எல்.எஸ் ஹமீட்.

இது தொடர்பில் அவர் எழுதியுள்ள கட்டுரை வருமாறு:

ஜனாதிபதி அதிகாரப் பகிர்வு விடயத்தில் சாதகமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். சூழ்நிலைகள் பலவந்தப்படுத்தினாலேயொழிய ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெற வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் உரிய காலத்திற்குமுன் நடாத்தமுடியாது.

எது எவ்வாறிருந்தபோதிலும் ஜனாதிபதித் தேர்தலை மனதிற்கொண்டு ஒரு தீர்வினைத் தமிழ்தரப்பிற்கு வழங்க ஜனாதிபதி முனைப்புக்காட்டுவது புரிகிறது. 2/3 பெரும்பான்மை கிடைக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் எதையும் இப்பொழுது அறுதியிட்டுக் கூறமுடியாது.

இந்நிலையில் அதிகாரப்பகிர்வு தொடர்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன? முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இதுவரை தெளிவான நிலைப்பாடுகள் இல்லை. அதிகாரப்பகிர்வு என்பது வட-கிழக்கு இணைப்பு, பிரிப்பு சம்பந்தமானது; என்பதே பலரது பார்வையாக இருக்கின்றது. அதற்கு அப்பால் எதுவும் தெரியாது; அதுப்பற்றி சிந்திப்பதற்கும் ஆயத்தமில்லை.

இதில் மிகவும் பரிதாபகரமான நிலை என்னவென்றால் வட-கிழக்கிற்கு வெளியில் வாழும் சாதாரண முஸ்லிம்கள் மட்டுமல்ல, நான் சந்தித்த சில புத்திஜீவிகள்கூட, அதிகாரப்பகிர்வு வட-கிழக்கிற்கே தாக்கம் செலுத்தக்கூடியது, அதற்கு வெளியே அல்ல, என்றுதான் நினைக்கிறார்கள். அதிகமான மலையகத் தலைவர்களும் அவ்வாறே நினைக்கிறார்கள். வட-கிழக்கைவிட வெளியே வாழுகின்ற சிறுபான்மைகள் மீதுதான் அதிகாரப்பகிர்வு பாரதூரமான எதிர்மறைத் தாக்கத்தைச் செலுத்தப்போகிறது; என்பதை ஏனோ அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அதிகப்பட்டச அதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது. சமஷ்டி அதைவிட பேராபத்தானது; என்பது தொடர்பில் சமூகத்திற்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. கண்மூடித்தனமாக அரசியல் தலைமைகளை நம்பும் ஓர் சமூகம் நம் சமூகம்.

சமூகத்தில் எதுவித அக்கறையுமற்ற அரசியல் தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம். தலைவர் மறைந்து 22 வருடங்கள் கடந்துவிட்டன. இன்னும் தலைவரின் பெயரைச்சொல்லி அரசியல் செய்யும் கட்சிகள் சமூகத்திற்காக தீர்த்துக்கொடுத்த பிரச்சினை எதுவுமில்லை. 

முஸ்லிம்களில் அன்றி தமிழ்த்தரப்பில் அதிக அக்கறைகொண்ட முஸ்லிம் தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம். தமிழர் கோருகின்ற வட-கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கத்தை வழங்க இந்தியாவுக்கு அழுத்தம் வழங்க, கடிதம் எழுதி கையொப்பம் வைக்கமுனையும் தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம். 

கல்முனையைக் கூறுபோட எத்தனிக்கும் தமிழ்த்தலைவர்களிடமிருத்து கல்முனையைப் பாதுகாத்துத்தர, அதற்காக உருப்படியான ஒரு பேச்சை பாராளுமன்றத்தில் பேசுவதற்குக்கூட வக்கற்ற தலைவர்களைக்கொண்ட சமூகம் நாம். 

இந்நிலையில், ஏற்கனவே, நல்லாட்சியில் வரையப்பட்ட யாப்பு வரைபில் பல விடயங்கள் முஸ்லிம்களையும் மலையகத் தமிழர்களையும் பாதிக்கக் கூடியாதாய் இருக்கின்றன. சமஷ்டிக்கும் மேலான அதிகாரப்பகிர்வு அதில் முன்மொழியப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக அச்சந்தர்ப்பத்தில் நிறைய எழுதியிருக்கின்றேன். பல கருத்தரங்குகள் நடாத்தியிருக்கின்றேன்.

எனவே, அதகாரப்பகிர்வுக்கான முஷ்தீபுகள் நடைபெறும் இச்சந்தர்ப்பத்தில் அரசியல்தலைமைகளை நம்பி முஸ்லிம் சமூகம் ஏமாந்துவிடக்கூடாது. நாம் தமிழர்களின் அபிலாசைகளுக்கு எதிரானவர்களல்ல, ஆனால் அது முஸ்லிகளை ஓர் இருண்ட யுகத்திற்குள் தள்ளிவிடக்கூடாது.

ஏதோ ஓர் தீர்வுத்திட்டம் வரப்போகிறது. அது நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பது வேறுவிடயம். அவ்வாறு தீர்வுத்திட்டம் வெளிவரும்போது நாம் தடுமாறிக்கொண்டிருக்க முடியாது. 21 வது திருத்தத்தில் அரசியலமைப்பு சபையில் ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் வரக்கூடிய விதத்தில் ஒரு வரியை சேர்க்க வக்கற்ற தலைவர்கள்தான் நம் தலைவர்கள். கோட்டாவின் 20 இன் பாராளுமன்ற சபையில் ஒரு முஸ்லிம் வருவதை உறுதிப்படுத்தக்கூடிய சரத்து இருந்தது. ( அந்த சபைக்கு அதிகாரம் இருந்ததா? இல்லையா? என்பது வேறுவிடயம்)

இது தொடர்பாக விரிவாக வேறாக எழுதுகின்றேன். இன்ஷா அல்லாஹ்.

எனவே, இந்த சூழலில் புத்திஜீவிகள் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒன்றுசேரவேண்டும். தீர்வுத்திட்டத்தில் நமது உரிமைகளைப் பாதுகாக்கும் அம்சங்கள் எவ்வாறு இடம்பெற வேண்டும்; என்பதை அடையாளம் காணவேண்டும். பின்னர் பல பிரதேச புத்திஜீவிகளை இணைத்த ஒரு சம்மேளனம் உருவாக்கப்பட்டு அவற்றில் ஒரு பொது நிலைப்பாடு எட்டப்பட வேண்டும். 

அதனை முஸ்லிம் கட்சிகளிடம் சமர்ப்பித்து அதுவே அவர்களின் நிலைப்பாடாகவும் இருக்கவேண்டும். அதேபோன்று, அரசிடமும் எதிர்க்கட்சிகளிடமும் அந் நிலைப்பாட்டை சமர்ப்பித்து அழுத்தம் கொடுக்கவேண்டும்.

தயவுசெய்து பஸ் போனபின் கைகாட்டாமல் இப்பொழுதே புத்திஜீவிகள் செயற்பட முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Read more...

Tuesday, November 22, 2022

ராஜீவ் காந்தி கொலையில் புலிகளின் தொடர்பு : முடிச்சி எவ்வாறு அவிழ்ந்தது? தொடர் 04 - பிறேம்குமார்

ராஜிவ் கொல்லப்படுவதற்க்கு சரியாக 1 ஆண்டுக்கு முன்பு பேரறிவாளனும் இரும்பொறையும் இலங்கைக்கு சென்றனர் . முத்துராஜா அவர்களுக்கு சில மாதம் முன்பே சென்று விட்டான். இரும்பொறை என்னும் நபர் தி.க வை சேர்ந்த நபர். பேரறிவாளனும் தி.க வை சேர்ந்தவர் என்பது மட்டும் அல்ல இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பொரும்பாலான இந்தியர்கள் திராவிட கழத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு எல்லாம் ஆமை கறி தராத பிரபாகரன் சீமானுக்கு மட்டும் ஆமை கறி தந்தது ஒர வஞ்சனை.

சரி நாம் மீண்டும் கொலை வழக்குக்கு வருவோம். இலங்கை சென்ற இந்த இருவரும் முத்துராஜாவுடன் 1990-ம் ஆண்டு அக்டோபரில் இலங்கையிலிருந்து இந்தியா திரும்பினர். இவர்கள் சென்னைக்கு வராமல் கோவைக்கு சென்றனர். பக்கியநாதனையும் கோவைக்கு வர வைத்த முத்துராஜா உளவு பிரிவு நிக்சனுக்கு அறிமுகம் செய்து வைத்தான். கோவையில் உளவு பிரிவு தளம் அமைக்கப்பட்டது.

1991-ம் ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் நிக்சன், மற்றொரு இளைஞரை பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அவரும் உளவுத்துறையைச் சேர்ந்தவர் என அறிமுகம் செய்து வைத்தார். அந்த இளைஞர்தான், ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள முருகன்!

நிக்சன், பாக்கியநாதனிடம் முருகனை அழைத்து வந்ததற்கு காரணம் இருந்தது. விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் வைத்திருந்ததாக கூறப்பட்டு, 1991 ஜனவரியில் தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.(பத்மநாபா படுகொலை பற்றி இதில் எழுதும் பொழுது அதை கொஞ்சம் விரிவாக சொல்கிறேன்)

கவர்னர் ஆட்சி ஆரம்பித்தது.

தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டவுடன், தமிழகத்தில் ஏராளமான விடுதலைப்புலிகள் கைது செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என அறியப்பட்ட முத்துராஜாவை இந்திய உளவுப்பிரிவு கண்காணித்து வந்தது. இதனால், முருகனை தனது வீட்டில் முத்துராஜாவால் வைத்திருக்க முடியவிலலை. இதனால் முருகனை, இந்தியர் வீட்டில் உறவினர் என்று தங்க வைப்பதே பாதுகாப்பானது என்று நிக்சன் முடிவெடுத்தார். அதற்காகவே பாக்கியநாதன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். விடுதலைப்புலிகள் மீது உச்ச அபிமானத்தில் இருந்த பாக்கியநாதன், மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

முருகன் என்னும் ஸ்ரிதரன் இவன் யாழ்பானத்தை சேர்ந்தவன் 1987 ல் விடுதலை புலியில் இணைந்தான். பொட்டாமான் ஆள்( இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது ராஜிவ் காந்தியை கொல்ல அல்ல வரதராஜ பெருமாள் கதையை முடிக்க, இது பற்றி விரிவாக அடுத்து எழுதுகிறேன் )

பாக்கியநாதனுக்கு மட்டுமே இவன் புலி கூட்டம் என தெரியும். மற்றவர்களிடம் தான் இலங்கையில் இருந்து இங்கிலீஸ் கிளாஸ்க்காவும் வேலை தேடியும் இந்தியா வந்தாக குறிப்பிட்டான். பாக்கியநாதன் குடுப்பத்தில் உள்ளோரிடம் நட்பாக பழகினான். மறுபுறம் பேரறிவாளனுடன் சேர்ந்து தினசரி தூர்தர்சன் செய்திகளை VCR ல் ரெக்கார்டு செய்து இலங்கையில் தன் தலைமைக்கு அனுப்பினான். (ராஜிவ் படுகொலைக்கு பிறகு இந்த கேசட்டுகளை தன் நண்பன் வீட்டில் பேரறிவாளன் ஒழிய வைத்து அது கண்டு பிடித்து எடுக்கப்பட்டது )

மேலும் இயக்கத்துக்கான ஆட்களை ஒருங்கிணைப்பது உளவு தளத்தை பலப்படுத்துவது என பிசியாக இருந்தான். இந்த சூழ்நிலையில் தான் பாக்கியநாதன் அக்கா நளினி வீட்டுல் கோவிச்சி கொண்டு வெளியே இருப்பது தெரிய வந்தது. அவரை சமாதானப்படுத்த அவர் கம்பேனிக்கு சென்றான் அவன் அன்பான பேச்சு நளினிக்கு பிடித்து போனது, அடுத்த அடுத்த சந்திப்பு தொடர்ந்தது காதல் மலர்ந்தது . தான் விடுதலை புலிகள் இயக்கத்தில் செயல் படுவதையும் தெரிவித்தான். ஒவ்வொரு முறை வரும்போதும் யாராவது ஒரு புதிய நண்பரை நளினிக்கு அறிமுகப்படுத்துவது முருகனின் வழக்கம். அப்படி அறிமுகமானவர்கள்தாம் ஹரி பாபு, ராபர்ட் பயஸ் ( தற்போது சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டோரில்ஒருவன் ) எல்லோரும்.

விசேஷம் என்னவென்றால் முருகன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தப் புதிய நண்பர்களும் தனித்தனியே தொடர்ந்து நளினியின் அலுவலகத்துக்கு வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவருடனும் நளினிக்கு நட்பு ஏற்பட்டது. நெருக்கமானார்கள். நளினிக்கு மகிழ்ச்சிதான். முருகன் என்கிற நபர் அவரது வாழ்க்கையில் வந்த பிறகுதான் அவருக்குத் தன் குடும்பத்தாருடன் இருந்த கோபங்கள் குறைய ஆரம்பித்து, பழைய உறவுகள் பலப்படத் தொடங்கியிருந்தன. புதிதாகவும் பல நட்புகள் கிடைத்திருந்தன. அப்படி ஒருநாள் ஒருவரை அறிமுகப்படுத்தி இவர் தனக்கு மேலான இயக்க பொறுப்பாளர் என்றான் . அவன் பெயர் சிவராசன்.

சிவராசன் யாழ்ப்பாணம், உடுப்பிட்டியை சேர்ந்தவன் பாக்கியச்சந்திரன் என்பது தான் இவன் இயற்பெயர் இயக்கத்தில் ரகு எனவும் சிவராசன் எனவும் அழைக்கப்பட்டான். ஆரம்ப நாட்களில் டெலோ இயக்கத்தில் இருந்த இவன் பின் நாட்களில் விடுதலை புலிகள் இயக்கத்தில் தன்னை இனைத்து கொண்டான். எதையும் மிகவும் நுட்ப்பமாக திட்டமிட்டு செயல் படுத்த கூடியவன். உதாரனமாக இவன் தங்கி இருந்த இடத்தை அதிகாரிகள் கைப்பற்றிய பொழுது அதில் ஸ்ரீபெரும் புதூருக்கு ஒரு நாளைக்கு எத்தனை பேருந்து செல்கிறது எந்த எந்த இடத்தில் அவை நிற்க்கும் என்பது முதற்கொண்டு அவன் குறித்து வைத்து இருந்தது தெரிந்தது.


அதே போல அதீத துனிச்சலுக்கு சொந்தகாரனாக இருந்து இருக்கிறான். இவனை ஒட்டு மொத்த இந்திய போலீசும் , ரானுவமும் தேடிய பொழுதும் பொட்டமானை தொடர்பு கொண்டு ராஜிவ் கொலை வழக்கை விசாரிக்கும் மல்லிகை அலுவலகத்தை தாக்க அனுமதி கேட்டு இருக்கான். ராஜிவ் கொலைக்கு முன்பும் பல முறை தமிழ்நாட்டுக்கு இவன் வந்து உள்ளான் . இவன் போரில் கண்பாதிப்புக்கு உள்ளான பொழுது சிகிச்சைக்கு மதுரைக்கு வந்து உள்ளான்.

அதன் பிறகு EPRLF தோழர் பத்மநாபாவை கொலை செய்ய தமிழ்நாட்டுக்கு வந்து உள்ளான் .தோழர் பத்மநாபா பிரபாகரனுக்கு நேர் எதிர் கொள்கையை கொண்டவர் . பிரபாகதரன் சர்வாதிகாரத்தை விரும்புபவர். தோழர் பத்மநாபாவோ அனைத்திலும் ஜனநாயக்கத்தை விரும்புபவர். அதனாலேயே விடுதலை புலிகளோடு முரண்பட வேண்டி இருந்தது. ( தோழர் பத்மநாபா பற்றி தனி தொடரே எழுதலாம் )

விடுதலை புலிகளால் அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவரும் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த தோழர் வரதராஜ பெருமாளும் இந்தியாவில் அடைக்கலம் கோரி தஞ்சம் அடைந்தனர். பத்மநாபாவை கொல்லும் திட்டம் சிவராசனிடமும் , டேவிட்டிடமும் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு உளவு வேலை பார்க்க 20 வயது இளைஞனை பிடித்தனர். அவன் பெயர் சுதந்திர ராஜா என்னும் சாந்தன் தற்பொழுது சிறையில் இருக்கும் 6 பேரில் இவனும் ஒருவன்.

தொடரும்...

Read more...

Monday, November 21, 2022

ரவூப் ஹக்கீம் உள்ளவரை அம்பாறையின் கதி அதோ கதியாம்! அடித்துக்கூறுகின்றார் அப்துர் ரஸாக் (ஜவாத்)

ரவூப் ஹக்கீம் இருக்கும் வரை அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைமை பதவி முஸ்லிம் காங்கிரஸில் யாருக்கும் வழங்கப்படமாட்டாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும், அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவருமான அப்துர் ரஸாக் (ஜவாத்) தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் சாய்ந்தமருது மத்திய குழு அங்குரார்ப்பன நிகழ்வு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் கட்சியின் உயர் பீட உறுப்பினரும், மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளருமான ஜுனைதீன் மான்குட்டி இன் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவரும் முன்னாள் நிருவாக உத்தியோகத்தருமான உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்றது.

இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய அப்துர் ரஸாக் (ஜவாத்) தொடர்ந்தும் தனதுரையில்,

அம்பாறை மாவட்டத்தின் மத்திய குழுவின் தலைவராக, உறுப்பினர்களாக இருக்கவேண்டிய உரிமை உள்ளவர்கள் அந்த மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் மாத்திரம் தான் என்றும் அவர்களைத்தான் தெரிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்த ஒரே ஒரு கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மட்டும்தான். இதனூடாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்களுடைய உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு வீட்டினுடைய உரிமை அந்த வீட்டினுடைய தலைவருக்கு, தலைவிக்கு அல்லது அந்த வீட்டினுடைய ஒரு மகனுக்கு வழங்கப்பட வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனுக்கு அந்த உரிமை வழங்கப்பட முடியாது. பக்கத்து வீட்டுக்காரன் என்றாலும் பரவாயில்லை; மு.கா.வில்கண்டியை சேர்ந்த ஒருவருக்கு அம்பாறை மாவட்ட மத்திய குழுவின் தலைவர் பதவி கடந்த 23 வருடங்களாக வழங்கப்பட்டு இருக்கின்றது என்றால் அது பிழை. அப்பதவியை இன்னும் கொடுக்க முடியாத, கொடுப்பதற்கு நம்பிக்கை இல்லாத ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இருக்கின்றது.

ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அப்படியானதல்ல, பிரதேசத்தில் உள்ள மக்களே அப்பதவிக்கு வர வேண்டும் என்ற ஜனநாயக கோட்பாட்டில் உறுதியாக இருந்து இன்றும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் வெளிப்பாடுதான் இன்று நாம் இந்த மத்திய குழுக்களின் நிர்வாகங்களை தேர்வு செய்து கொண்டிருக் கின்றோம்.

முஷார்ரப் எம்.பி ஆக வேண்டும் என்பது அல்லாஹ்வின் நாட்டம். ஆனால் சாய்ந்தமருதில் சலீம் அவர்கள் எங்களது தலைவருடன் பேசிய பேச்சுக்கு இணங்க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு இருந்தால் இன்று இந்த கட்சியில் அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கப் போகின்றவர் சலீம் மாத்திரம்தான். அப்போதைய பொதுத் தேர்தலில் இருந்து நான் அப்போது விலகி இருப்பேன். இந்த விடயத்தை குழப்பியவர்கள் இதனை மறுப்பதற்கு முடியாது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் எதற்கும் அஞ்ச மாட்டார். தயங்க மாட்டார், ஓடி ஒளிய மாட்டார். அவரை எப்படியும் சிறையில் மாட்டி, சிறைக்குள் கொலை செய்ய வேண்டும் என்ற அளவு முயற்சியை மஹிந்த குடும்பம் செய்தது. ஆனால் அவரோடு இறைவன் இருந்தான். இறைவன் துணையோடு அவர் இப்பொழுது வெளியில் வெளியேறி இருக்கின்றார். பாராளுமன்றத்தில் தைரியமாக தற்போது பேசுகின்றார். எதிர்வரும் 23 ஆம் தேதி அம்பாறை மாவட்ட காணிப் பிரச்சினை தொடர்பாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்று கூட்டி இது சம்பந்தமாக ஆராய இருக்கின்றார். இதற்கான முயற்சியை அவர் செய்துள்ளார். ஏதாவது ஒரு விடயத்தை மக்களுக்காக செய்கின்ற விடயத்தில் றிஷாட் பதியுதீன் வல்லவர் என்றும் கூறினார்.

கூட்டத்திற்கு கெளரவ அதிதிகளாக கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் உச்சபீட உறுப்பினருமான நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் அஷ்ரப் தாஹிர், கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும், உச்சபீட உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் ஆகியோர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சியின் மகளிர் அமைப்பு முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

எஸ்.அஷ்ரப்கான்

Read more...

Sunday, November 20, 2022

இலங்கையின் பொருளாதார நோயை சமாளிக்கும் ரணில் அரசபொருளியல் (Ranil Politinomics): பகுதி – 2 அ. வரதராஜா பெருமாள்

மக்களை தாமாகவே மூச்சடக்கி வாழ நாசூக்காக பழக்கி விட்டார்.

5. இருப்பதையும் கிடைப்பதையும் வைத்துக் கொண்டு உயிர் வாழ்வதைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என பரந்துபட்ட பொதுமக்கள் அவர்களாகவே இதுதான் விதியென ஏற்றுகொண்டு மூச்சுக் காட்டாமல் சீவிக்கும் நிலைமைக்கு பொது மக்களை கொண்டு போய் நிறுத்தியுள்ள சாதனையை ஜனாதிபதி ரணிலின் ஆட்சி படிப்படியாக, வெற்றிகரமாக சாதித்துள்ளது.

கொரோணா காரணமாக அடுத்தடுத்து அமுலாக்கப்பட்ட ஊரடங்குகள், போக்குவரத்துத் தடைகள், கொரோணாப் பரவல் தொடர்பாக மக்களிடையே நிலவிய அச்சங்கள் என்பன காரணமாக 2020ம் ஆண்டே மக்கள் அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே தம்மை பழக்கப்படுத்திக் கொண்டனர், மேலும்,

(1) இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்து ஏற்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடுகள் மற்றும் மக்கள் நாடு முழுவதுவும் இரவு பகலென்றில்லாது நாட்கணக்கணக்கில் கியூ வரிசைகளில் கால் கடுக்க நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டமை, இவற்றால் பொருட்களின் விலைகள் இரண்டு மடங்கு மூன்று மடங்கு என திடீரென உயர்ந்தமை,

(2) உற்பத்திகளின் வீழ்ச்சிகளின் விளைவாக ஏற்பட்ட வேலையின்மைகளால் மக்களின் வருமானத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி,

(3) மக்கள் பொருட்களை வாங்குகின்ற பொருளாதார சக்தி தொடர்பில் மக்களின் வருமானத்தினுடைய மெய்யான பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என எல்லாம் சேர்ந்து இப்போதைக்கு மிக அத்தியாவசியமான பொருட்களைத் தவிர ஏனையவற்றை வாங்குவதை மக்கள் தாமாகவே குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் இதனை இப்போது தமது வாழ்க்கையின் இயல்பான ஒரு விடயமாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

அதன் மூலம், 200க்கு மேற்பட்ட வகையான பல்லாயிரக் கணக்கான பொருட்களுக்கு ஜனாதிபதி தடை விதித்த போதிலும், மிக அத்தியாவசியமான பொருட்களின், இறக்குமதியை அரைவாசியாக்கியுள்ள போதிலும், அவற்றின் விளைவாக வேலையில்லாமைகள் அதிகரித்திருக்கின்ற போதிலும், முன்னர் 100 ரூபாவுக்கு வாங்கிய பொருட்களை ,இப்போது 250 அல்லது 300 ரூபா கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ள போதிலும், இதனால் அரசாங்கத்தைக் குறித்து பரந்துபட்ட மக்கள் மத்தியில் உள்ளுர ஆத்திரமும் வெறுப்பும், விரக்தியும் நிலவுகிற போதிலும், இவையெதுவும் அரசுக்கெதிரான எழுச்சியாக மாறி விடாத ஒரு நிலைமையைப் பராமரிப்பதில் ஜனாதிபதி ரணில் ஒரு சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

– ‘கிடைத்தால் முயல் போனால் எறிந்த கற்கள் தானே’

6. சர்வதேச நாணய நிதியத்திடமிருந்த கடனுதவி கிடைப்பது இந்த ஆண்டுக்குள் சாத்தியமாகாது என ஏற்கனவே நாடுகளின் பொருளாதாரம் தெரிந்தவர்கள் கூறி விட்டார்கள். ஜனாதிபதி அவர்கள் அதில் மிகுந்த அனுபவம் பெற்றவர். அவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடாதது மிகவும் பிழையானது என கோத்தாபய ஜனாதிபதியாக ,இருந்த போது குற்றம் சாட்டியோர் பலர். இந்தியா, யப்பான் மற்றும் மேலைத் தேச நாடுகளும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியனவும் தாம் தொடர்ந்து ,இலங்கைக்கு உதவி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முதலில் சர்வ தேச நாணய நிதியத்திடம் இருந்து உதவியைப் பெற வேண்டும் என வலியுறுத்தின.

ரணில் அவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் அடிக்கடி கடன் வாங்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கிற நவதாராளவாதியே. இப்போது அதனிடம் போகவில்லை எல்லாருமாகச் சேர்ந்து தன்னைப் போக வைத்துவிட்டார்கள் என்பது போல அந்த நிதியத்துடன் ஊடாடுகிறார்.

கடன் கிடைத்தால் அது அவரது சாதனையாகும், கிடைக்கவில்லையென்றால் அதற்கு அவர் பொறுப்பாளியாக மாட்டார்.

இந்தா கடன் வரப் போகிறது…. பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக முடிந்து விட்டன: அடுத்த மாதத்துக்குள் கிடைக்கும்: இந்த வருடத்துக்குள் கிடைக்கும் என காலத்தை மிகக் கெட்டித் தனமாகவே கடத்தி தனது ஆட்சிக் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

சற்றுக் காலம் தாழ்த்தித் தன்னும் அந்த நிதியம் உதவி தந்தாலும் அந்தத் தொகை அரசின் தேவைக்கு ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’ போட்ட மாதிரியே இருக்கும். ஆனாலும் அவர் உலக நாடுகளிடமிருந்தும், உலக நிறுவனங்களிடமிருந்தும் சளைக்காமல் முயற்சிக்கிறார். நாடுகளெல்லாம் தன்னை அடுத்தடுத்து அழைக்கின்றன என்பது போல நாடு நாடாக தொடர் பயணங்களை மேற் கொள்கிறார். நாட்டின் பொருளாதார நிலைமையை சீர்படுத்த நமது ஜனாதிபதி எவ்வளவு கடுமையாக உழைக்கிறார் என மக்கள் கருதும் வகையாக செயற்பட்டு மக்கள் மத்தியில் ஓர் அனுதாப அலையையும் ஏற்படுத்துகிறார். இது அவருக்கு அடுத்த தேர்தலுக்கு நன்கு பயன்படும்.

காற்றைக் கையால் பிடித்து போத்தலில் அடைத்து விற்கிறார் 7. இந்த ஆண்டு கிடைத்த வெளிநாட்டு உதவிகளெல்லாம் பெரும்பாலும் கோத்தாபய அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போது கிடைத்தவையும் அவர் காலத்தில் தரப்படுவதாக உறுதி செய்யப்பட்டவையுமே.

ரணில் அவர்கள் ஜனாதிபதி ஆகிய பின்னர் மருந்துக்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும், உரத்துக்குமென அவ்வப்போது சில நாடுகள் வழங்கும் சிறுசிறு உதவிகளைத் தவிர குறிப்பிடத்தக்க எந்த உதவியும் இன்னமும் எந்தவொரு நாட்டிடமிருந்தோ அல்லது எந்தவொரு சர்வதேச நிறுவனத்திடமிருந்தோ கிடைக்கவில்லை.

கோத்தாபய அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போதே வெளிநாடுகளுக்கான கடன்கள் தொடர்பில் இலங்கை தன்னைத் தானே வங்கிரோத்து நாடு என அறிவித்துக் கொண்டது. ஆனால், வெளிநாடுகளுக்கான மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கடன்களில் இந்த ஆண்டில் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகைக்கான அந்நியச் செலாவணி தொடர்பான சுமையிலிருந்து தப்பித்திருக்கும் வாய்ப்பாக ஜனாதிபதி ரணில் அதனை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இல்லையென்றால் இவர் 2015க்கும் 2019க்கும் இடையில் ஆட்சியில் இருந்த போது அம்பாந்தோட்டையில் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலப்பரப்பையும், கொழும்பில் கடலை நிரப்பி நிலமாக்கியதில் அரைவாசி நிலப்பரப்பையும் சீனாவுக்கு எழுதிக் கொடுத்த மாதிரி இந்நேரம் இவர் இலங்கையில் இன்னும் பல இடங்களை நாடுகளின் கடனுக்குப் பதிலாக எழுதிக் கொடுத்திருப்பார்.

இப்போதைக்கு ஏற்றுமதி வருமானத்துக்கும் இறக்குமதி செலவுக்கும் இடையில் ஏற்படுகின்ற பாதகமான வர்த்தக நிலுவையை எவ்வளவுக்குக் குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைக்கும் ஒரு காட்சியைப் படமாக்குவது மட்டுமே தன் வேலை என பதட்டமின்றி செயற்படுகிறார்.

போராட்டங்களில்லாத நாடே முன்னேறுமாம் 8. நாடு பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அதற்காக அரசாங்கம் மிகவும் கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது என அமைச்சர்களும், அரச உயர் அதிகாரிகளும் அடிக்கடி கூறி வருகின்றனர்.

அதேவேளை எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையையும் மேற்கொள்ளாமலேயே – மேற்கொள்ள நிதி எதுவும் இல்லாமலேயே அவ்வப்போது தங்கள் தங்கள் அமைச்சுக்கு உட்பட்ட விடயங்களில் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது எனவும் அறிக்கை விடுகிறார்கள்.

அறகலய போன்ற போராட்டங்கள் மற்றும் தொழிற் சங்கங்களின் போராட்டங்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை மேலும் மோசமாக்கும் எனவும் அதன் விளைவாக ஏற்படும் அரசியல் உறுதியின்மையின் காரணமாக நாடுகளோ சர்வதேச நிறுவனங்களோ இலங்கைக்கு உதவமாட்டா எனவும் பிரச்சாரங்கள் செய்து அதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலையை அடைந்து விடுமோ என ஓர் அச்ச மனோநிலையை மக்கள் மத்தியில் வளர்த்து விடுகின்ற கடமை அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரிகிறது.

ஏதோ அறகலயக்காரர்களினதும் தொழிற் சங்கங்களினதும் போராட்டங்களால்த்தான் நாடு இன்றைய அளவுக்கு குட்டிச் சுவராகப் போனது என அரச பிரச்சாரங்கள் தீவிரமாக நடக்கின்றன.

உண்மையில் அரசாங்க ஊழியர்களின் சம்பளமெதுவும் பொருட்களின் விலையேற்றத்துக்கு உரிய விதமாக உயர்த்தப்படவில்லை. சம்பளங்களின் மெய்யான பெறுமதி 200 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்து விட்டது. தனியார் நிறுவனங்களிலுள்ள ஊழியர்களின் நிலைமையும் அதுவே.

பெரும் நிறுவனங்கள் அனைத்தும் கொரோணா தொடங்கிய நாள் தொட்டு இன்று வரை முன்னரை விட அதிகமாகவே லாபம் சம்பாதிப்பதை அந்த நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகளே குறிப்பிடுகின்றன.

ஆனால் அவ்வாறான தனியார் நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட வேண்டும் என அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. அதேவேளை ரணில் அவர்களின் ஆட்சியில் இதுவரை எந்தவொரு போராட்டமும் அரச ஊழியர்கள் பக்கத்திலிருந்து எழவில்லை.

அவ்வாறு எதுவும் எழுந்து விடாதபடி ஒரு பயக்கெடுதியான நிலையை அரசாங்கம் தனது அனைத்து யந்திரங்களையும் பயன்படுத்தி பராமரிக்கிறது. தாங்கள் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுத்தால் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடுமோ என தொழிற்சங்கத் தலைவர்களையும் அச்சமுற ஆக்கிவிட்டது ,இந்த ஆட்சி.

(பகுதி 3ல் தொடரும்)

.

Read more...

மகாவலி , LRC காணி அதிகாரங்களை பி. செயலாளர்களுக்கு வழங்குவது கோழியை பிடித்து நரியிடம் கொடுப்பதற்கு ஒப்பானது.

பா.உ ஹேஷா வித்தானகே சீற்றம்! அமைச்சர் அஷோக பிரியந்த அந்தரத்தில் !! 

  வரவு செலவு திட்டு விவாதத்தின்போது பிரதேச செயலாளர்களின் ஊழல்களை போட்டுடைத்த பாராளுமன்ற உறுப்பினரிடம், குறித்த பிரதேச செயலாளர்களுக்கு எதிராக நடவடிக்க எடுப்பதாக உறுதியளித்தார் இராஜாங்க அமைச்சர்.

அப்பட்டியலில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ. வாசுதேவனையும் இணைத்துக்கொள்ளும் அமைச்சரே!


நேற்றுமுன்தினம் 18.11.2022 பாராளுமன்றில் இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா வித்தானகே, மகாவலி அபிவிருத்தி மற்றும் எல்ஆர்சி எனப்படுகின்ற காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவிடம் இருக்கின்ற காணிகள் குறித்த நிறுவனங்களால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் முறைமைக்கு அப்பால் அக்காணிகள் பிரதேச செயலாளர்களால் பகிர்ந்தளிக்கப்படக்கூடியவாறு, பிரதேச செயளார்களுக்கு அதிகாரங்களை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகின்றது. இவ்விவகாரங்களுக்கு பொறுப்பான எனது நண்பரும் அமைச்சரும் இச்சபையிலே அமர்ந்திருக்கின்ற நிலையிலே, இம்முயற்சியானது கோழியை பிடித்து நரியிடம் கொடுக்கும் முயற்சியாகும் என்பதுடன் நான் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடவிரும்புகின்றேன்.

நான் அம்பிலிப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவன். நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்ற விடயத்தை முழு அம்பிலிப்பிட்டியும் இரத்தினபுரியும் அறியும், ஆனால் கௌரவ அமைச்சருக்கு தெரியுமா என்பது எனக்கு தெரியாது. அம்பிலிப்பிட்டி பிரதேச செயலகம் என்பது முழு இலங்கையிலுமிருக்கின்ற ஊழலுக்கு பெயர்போன பிரதேச செயலகங்களில் முன்னணி வரிசையில் முதல் நான்காம் ஐந்தாம் இடங்களில் இருக்கக்கூடும். அம்பிலிப்பிட்டி பிரதேச செயலகத்தில் பகிரங்கமாக லஞ்சம் பெறப்படுகின்றது. மண் எடுப்பதானாலும் , கல் எடுப்பதானாலும் ஏன் எந்த சேவையை பெற்றுக்கொள்வதானாலும் பிரதேச செயலாளருக்கு லஞ்சம் வழங்கவேண்டும். இந்த பிரதேச செயலாளருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ அமைச்சர் அவர்களை இந்த சபையிலே கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

அதன்போது சபையிலே எழுந்த உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த, நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான தகவல்களை வழங்குவீர்களாயின் குறித்த பிரதேச செயலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என்பதை இவ்விடத்தில் உறுதி கூறுகின்றேன் என்றார்.

மேலும் அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், பிரதேச செயலாளர்கள் மற்றும் எமது அமைச்சுக்குட்பட்ட உத்தியோகித்தர்களின் ஊழல், மோசடிகளை தெரிவிக்கும் பொருட்டு நான் அமைச்சராக பாரமேற்றதன் பின்னர் 1905 என்ற இலக்கத்தை உருவாக்கியிருக்கின்றோம். மோசடி புரிகின்றவர்கள் தொடர்பில் இந்த இலக்கத்தை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குங்கள், நாங்கள் தாமதமின்றி விசாரணைகளை மேற்கொள்வோம் என்றார்.

இலங்கையில் இவ்வாறான பல்வேறு இலக்கங்கள் காலத்திற்கு காலம் அறிவிக்கப்பட்டு வந்திருக்கின்றது. இவ்வாறான இலக்கங்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் மற்றும் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளுக்கு என்ன நடைபெற்றது , நடைபெற்று வருகின்றதென்பதையும் நாட்டு மக்கள் நன்கறிவர். இலங்கை வரலாற்றில் இன்றும் TELLIGP என்று ஒரு முறைப்பாட்டுக்கான வழி இருக்கின்றது. ஒரு காலத்தில் Tellpresident , Tellprimeminister என்றும் முறைப்பாட்டு வழிகள் இருந்தது. மேலும் எத்தனையோ முறைப்பாட்டு வழிமுறைகள் இருந்தது. ஆனால் அங்கு கடமையாற்றுகின்றவர்களும் குற்றஞ்சுமத்தப்படுகின்ற அரச ஊழியர்களும் நண்பர்கள். இவ்வாறான நிறுவனங்களிடம் முறையிட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பவங்கள் எதுவும் வரலாற்றில் பாதிவாகவில்லை என்பதையும் அவர்கள் அனைவரும் கூட்டுக்கொள்ளையர்கள் என்பதையும் அமைச்சருக்கு சுட்டிக்காட்டுகின்றோம்.

2020 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ச தேர்தலில் குதித்தபோது, பலர் நம்பிய விடயம் யாதெனில், ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பதாகும். கோத்தபாய ராஜபக்ச கடமையேற்று சிறிது நாட்களில், அரச அலுவலகங்களில் கடமை தவறுகின்ற ஊழியர்களை புலனாய்வுத்துறையினர் சிவில் உடையில் உளவு பார்த்து வருகின்றனர் என கோத்தபாய தரப்பால் கூறப்பட்டது. இப்பிரச்சாரத்தை நம்பியவர்கள், பிலிப்பீன் ஜனாதிபதியாகவிருந்த Rodrigo Duterte (ரொட்றிகோ டுரேர்ரே) ஊழலை ஒழிப்பதற்காக ஊழலுக்கு துணைபோன அரச உயர் அதிகாரிகள் ஆயிரக்கணக்கானோரை கொன்றொழித்தது போன்றதொரு நிகழ்வு நிறைவேறப்போகின்றது, இலங்கையில் மக்கள் பணத்தை மோசடி செய்து தங்களது வயிற்றை வழர்த்துள்ள அரச ஊழியர்களின் வண்டி கிழிக்கப்பட்டு அவர்களது கழுத்துப்பட்டியால் கம்பத்தில் கட்டப்படப்போகின்றார்கள் என மக்கள் ஆவலுடன் எதிர்பாத்திருந்தனர். ஆனால் இலங்கையில் துருப்பிடித்துக்கிடக்கும் அரச இயந்திரத்தின் ஒரு நட்டைக்கூட கழட்டி பூட்ட கோத்தபாயவாலும் முடியாது போனது.

இந்நிலையில் அமைச்சர் புதிதாக உருவாக்கியிருக்கும் 1905 என்ற இலக்கத்திற்கு தகவல் கொடுத்து மாற்றம் நிகழப்போகின்றது என்றோ நீதிகிடைக்கப்போகின்றது என்றோ மக்கள் நம்பப்போவதில்லை. அவ்வாறு அமைச்சருக்கு அதிசயம் ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், மட்டக்களப்பு மண்முனை-வடக்கு பிரதேச செயலாளரான வ. வாசுதேவன் என்பவனின் காணி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில், இங்கே வைக்கப்படுகின்ற பகிரங்க முறைப்பாட்டினை வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை செய்து அவனுக்கு தண்டனை வழங்கி தாங்கள் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகின்ற பொறிமுறை இத்தனை காலமும் கூறப்பட்டு மறைந்த பத்தோடு ஒன்று பதினொன்றுதான் இல்லை என்பதை உறுதிசெய்யுமாறு இலங்கைநெட் கோருகின்றது.

ஆரையம்பதி பிரதேசத்தில் நபர் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜெயபூமி அளிப்பொன்றை அந்த அளிப்பின் நிபந்தனைகளை மீறி தனது சகோதரனின் பெயருக்கு மாற்றி பின்னர் காத்தான்குடி வர்த்தகர் ஒருவருக்கு பலகோடி ரூபாய்களுக்கு விற்பதற்கு வ. வாசுதேவன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மோசடி புரிந்திருக்கின்றான் என பிரதேச மக்கள் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இம்முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் விசாரணைப் பிரிவிலிருந்து சென்ற விசாரணையாளர்கள் (!) வாசுதேவனுடன் விருந்துண்டு மகிழ்ந்துவிட்டு விசாரணையை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திடம் பாரம்கொடுத்துவிட்டு திரும்பியுள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் குறித்த விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஆதாரங்களுடன் நாம் கடந்த வருடம் கேள்வி எழுப்பியிருந்தபோதும் எமது கேள்வி அமைச்சின் விசாரணைப் பிரிவின் காதுகளுக்கோ அன்றில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கருணாகரின் காதுகளுக்கோ கேட்கவில்லை. எனவே அமைச்சரின் புதிய விசாரணைப் பிரிவினரின் காதுகளுக்கு கேட்கும் என்ற நம்பிக்கையில் குறித்த மோசடி தொடர்பான ஆவணங்களுடனான கட்டுரையை மீண்டும் இங்கு இணைத்து இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம்.

அரச காணிகளை தம்பியின் பெயரில் ஆட்டையை போடும் பிரதேச செயலர். ஆதன உறுதியுடன் ஆதாரங்கள் இதோ!

மேலும் 2018.07.24 ம் திகதி அன்றைய மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய குணநாதன் என்பவன், காணிகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றில், „தமது பிரிவில் 2011 ம் ஆண்டு தொடர்க்கம் 2017 ம் ஆண்டு வரை இடம்பெற்ற காணிக் கச்சேரிகளில் காணி அற்றோராக பலர் தோற்றி அவற்றிலிருந்து 3247 பேர் தெரிவு செய்யப்பட்டு எதிர்காலத்தில் காணி வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக காணி அற்றோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்' எனத் தெரிவித்திருக்கின்றான்.

தற்போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக கடமை புரியும் வ. வாசுதேவன் என்பவன் அவனுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற முறைப்பாடு ஒன்றுக்கு விளக்கமளித்துள்ள 2022.01.28 ம் திகதிய கடிதத்தில், „இதுவரை நடைபெற்ற காணிக் கச்சேரிகள் மூலம் காணியற்றவர்களாக 3247 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்திருக்கின்றான்.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளராக வாசுதேவன் கடமையேற்றதிலிருந்து இன்றுவரை நூற்று மேற்பட்ட நபர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளபோதும் காணியற்றோராக இனங்காணப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3247 ஆகவே காணப்படுகின்றது. எனவே எவ்வாறு பயனாளர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்? காணிகள் வழங்கப்படும்போது முன்னுரிமை வழங்குவதற்கு என ஏற்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து ஏன் பயனாளிகள் தெரிவு செய்யப்படவில்லை? என்ற விசாரணை இங்கு அவசியமாகின்றது. (விசாரணைக்கு தேவையான சகல ஆவணங்களும் வழங்கப்படும்)

அம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகம் இலங்கையில் காணப்படும் ஊழல்மிகு பிரதேச செயலகங்களில் நான்கு அல்லது ஐந்தாம் இடத்தில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றஞ்சுமத்தியபோது குறித்த பிரதேச செயலாளர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்கின்றேன் என உறுதி வழங்கிய அமைச்சரின் அந்த ஆர்வத்தின் மீது நம்பிக்கை கொண்டு இலங்கையில் ஊழல் மிகு பிரதேச செயலகங்களில் முதலாவது இடத்தில் காணப்படும் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதே செயலாளரின் மோசடிகள் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அது தொடர்பான மேலதிக தகவல் வேண்டின் இலங்கைநெட் இன் ஆசிரியர் குழுவினை ilankainet@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகின்றோம்.

ஜெகன்

Read more...

Friday, November 18, 2022

பெய்ஜிங்கின் உலகளாவிய ஊடக செல்வாக்கு: சர்வாதிகாரத்தின் நீட்சி மற்றும் ஜனநாயகத்தின் மீள்திறன்.

ஃப்ரீடம் ஹவுஸின் புதிய அறிக்கை ஒன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியானது இலங்கை மற்றும் ஏனைய உலக நாடுகளின் ஊடகங்களில் தீவிரமாக செல்வாக்கு செலுத்தும் வகையில் மிக நுணுக்கமான அதிநவீன தந்திரோபாயங்களை பயன்படுத்துவதாகத் தெரிவிக்கிறது.

மேலும் அவ்வறிக்கையில் சீன கம்யூனிஸ்ட் கட்சி(CCP) பொதுவான கருத்தை தங்களுக்குச் சாதகமாக வடிவமைப்பதற்காகவும், தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவும், அதன் உலகளாவிய கொள்கைகளை முன்னுரிமைப்படுத்துவதற்காகவும் பல மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஊடகச் செல்வாக்குப் பிரச்சாரங்களை மேற்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெய்ஜிங்கின் உலகளாவிய ஊடக செல்வாக்கு:
சர்வாதிகாரத்தின் நீட்சி மற்றும் ஜனநாயகத்தின் மீள்திறன், பெய்ஜிங்கின் உலகளாவிய ஊடகப் பிரச்சாரமானது எவ்வாறு 30 நாடுகளை அழுத்தத்திற்குட்படுத்தியிருக்கின்றது என்பதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த அறிக்கையில் ஒவ்வொரு நாடும் எதிர்கொள்ளும் செல்வாக்கின் அழுத்தம் மற்றும் அதற்கு அவையாற்றும் எதிர்வினையின் வலிமை ஆகியவை தொடர்பாக அந்நாடுகளிலிருந்து பெற்றுக்கொண்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பெய்ஜிங்கின் செல்வாக்கு உந்துதலுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டவை அல்லது பாதிக்கப்படக்கூடியவை என அந்நாடுகளை வகைப்படுத்தியுள்ளது.

இலங்கை வலிமை குறைந்த எதிர்வினையாற்றும் ஆற்றலையும் பெய்ஜிங்கின் குறிப்பிடத்தக்க ஊடக செல்வாக்கின் உந்துதலையும் கொண்டிருப்பதால், அது பெய்ஜிங்கின் ஊடக உந்துதலால் பாதிக்கப்படக்கூடிய நாடொன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் மிக முக்கியமான காரணிகள் பின்வருமாறு;

அரசியல் மாற்றத்தின் மத்தியில் அதிகரித்த செல்வாக்கு முயற்சிகள்:
சீனக் கட்சி-அரசின் ஊடகச் செல்வாக்கு முயற்சிகள் 2019-21 இடைப்பட்ட காலத்தில் தீவிரமடைந்தன. பெய்ஜிங் சார்பாக செல்வாக்கு செலுத்துபவர்கள் சமூக ஊடக வெளியில் தங்கள் செயல்பாடுகளை அதிகரித்துள்ளனர், குறிப்பாக இலங்கையின் இளைய தலைமுறையினருடனான அவர்களின் தொடர்பு - மற்றும் சிந்தனைக் குழுக்கள் உட்பட்ட பிரமுகர்களுடனான புதிய ஒப்பந்தங்கள், ஊடகங்களில் உரையாடல்களை வடிவமைத்துள்ளன. 2020இல் ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வந்தமையும் , 2022இல் அவர்களை வெளியேற்றுவதற்கான எதிர்ப்பும் பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளையும், ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களையும் அதிகரித்தன.

பலதரப்பட்ட மக்கள் பிரதிபலிப்பு:
சீனா சில சமயங்களில் மேற்கத்திய செல்வாக்கிற்கு எதிராக சமநிலைப்படுத்தும் சக்தியாக செயல்படக்கூடிய ஒரு நட்பு நாடாக பார்க்கப்படுகிறது, அத்துடன் இது மிகவும் அவசியமான கோவிட் -19 உதவியை வழங்கியது. அதே சமயம், 2017 ஆம் ஆண்டு இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன அரச நிறுவனமொன்றுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்கியதில் இருந்து, அதன் பொருளாதார தாக்கம் குறித்த பின்னடைவும், கவலையும் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது .

பிரமுகர்களுடனான நெருங்கிய உறவுகள்:
இலங்கைக்கும் சீன அரசுக்கும் இடையில் உள்ள உயர்மட்ட உறவுகளின் விளைவாக அரசியல், வணிகத் தலைவர்கள் சீனாவின் பிரச்சாரக்கொள்கைகளை உள்நாட்டிலும் சர்வதேச தளங்களிலும் பரப்புகின்றனர். அத்துடன் அவர்கள் சின்ஜியாங்கின் சீன ஆட்சி மாதிரியையும் அங்குள்ள மனித உரிமை நிலைமைகளையும் பின்பற்ற வலியுறுத்துகின்றனர். அரசுக்குச் சொந்தமான நாளிதழ் டெய்லி நியூஸும், தேசிய வணிக செய்தித்தாள் தி டெய்லி எஃப்டியும், சில உயர்மட்ட பிரமுகர்கள் நடத்தும் கலாச்சார அமைப்புக்களும், சிந்தனைக்குழுக்களும் சீன அரசின் பிரச்சாரங்களையும் விவரணைகளையும் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கின்றன.

சமூக ஊடகங்களில் தீவிரமான இராஜதந்திர உந்துதல்:
சமூக ஊடகத்தளங்களில் தங்களுக்கு எதிராக வைக்கப்படும் விமர்சனங்களை சீன அரசியல் நிபுணர்கள் "வுல்ப் -வாரியர்" எனும் தந்திரோபாயத்தினை கைக்கொண்டு தொடர்ச்சியாக தீவிரமான எதிர்ப்பினைக் காட்டி வருகின்றனர். இலங்கைச் சமூக ஊடகங்களிலும், ராஜதந்திர ரீதியிலான சீனப் பிரதிநிதித்துவம் போலிக் கணக்குகள் மூலமாக அதிகரித்துள்ளது.

சீனா ரேடியோ இன்டர்நேசனல்:
சீனா ரேடியோ இன்டர்நேஷனல், எஃப்எம் ரேடியோவில் இலங்கையின் பிரதான மொழியான சிங்களத்தில் இலங்கையர்களை இலக்காகக் கொண்ட நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டுள்ளது. இது சமூக ஊடகங்களில் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஒலிபரப்பப்படுகிறது, 1.4 மில்லியனுக்கு அதிகமானவர்கள் சமூக வலைத்தளங்களில் தமிழ், சிங்கள வானொலிச்சேவைகளைப் பின்தொடர்கின்றனர்.

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்கள் இளைஞர்களை குறிவைக்கின்றனர்:
2020 முதல், குறிப்பாக சீன அரசு ஊடகத்துடன் இணைந்த முகநூல் செல்வாக்கு செலுத்துபவர்கள், சிங்களம் உட்பட்ட உள்ளூர் மொழிகளில் இளைஞர்களை குறிவைக்கும் உள்ளடக்கங்களுடன் பாரிய முறையில் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இந்த கணக்குகளை 1.2 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர்.இந்த கணக்குகள் சீனாவின் நேர்மறையான, அரசியலற்ற பக்கங்களை விளம்பரப்படுத்துவதுடன் அவ்வப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பான உள்ளடக்கங்களுக்கும் அழுத்தம் கொடுக்கின்றன. சமூக ஊடகத்தளங்கள், இவை சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கணக்குகள் என அடையாளப்படுத்துவதற்கு தொடர்ந்தும் போராடி வருகின்றன.

விமர்சனங்களை அமைதிப்படுத்தும் தூதரக முயற்சிகள்:
இலங்கையில் உள்ள பத்திரிகையாளர்களும், செய்தி நிறுவனங்களும் சீன அரசாங்கம் அல்லது அதன் ஈடுபாடு குறித்து சாதகமற்ற முறையில் அறிக்கை எதையும் வெளியிட்டால், சீனத் தூதரகம் அல்லது சீன அரசு சார்பான பிற நபர்களால் அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு மன்னிப்புக் கோரவோ அல்லது உள்ளடக்கத்தை அகற்றவோ நிர்பந்திக்கப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களால் பத்திரிகையாளர்கள் மத்தியில் சில சுய-தணிக்கைகள் இடம்பெறுகின்றன.

உள்ளூர் சீன மொழி ஊடகம் இன்மை :
உள்ளூர் சீன மொழி ஊடகம் ஒன்றின் இன்மையானது நாட்டில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சீன புலம்பெயர்ந்தோரே உள்ளனர் என்பதைப் பிரதிபலிக்கிறது .

மட்டுப்படுத்தப்பட்ட சீன நிபுணத்துவம் மற்றும் வளர்ந்து வரும் சிவில் சமூகக் கவனம் :
உள்நாட்டு சீன அரசியல் தொடர்பாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு பொறிமுறைகள் தொடர்பாகவும் இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட நிபுணத்துவத்தையே கொண்டுள்ளது. இருப்பினும் பத்திரிகை சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் செயலாற்றும் சமூகம் ஒன்று உள்ளது, மேலும் சிவில் சமூகத்தில் அதிகளவான மக்கள், இலங்கையில் சீன அரசின் பிரச்சார முயற்சிகள் எவ்வாறு நேர்மையற்ற முறையில் சமூக ஊடகங்களை கையாளுகிறது என்பது குறித்தும் கொழும்பு துறைமுக நகரம் உள்ளடங்கலாக சீனத் தலையீட்டுடன் இலங்கையில் உருவாக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

நாட்டில் ஊடக கல்வியறிவு ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளமை சீன அரசின் செல்வாக்கிற்கு மற்றொரு கட்டுப்படுத்தும் காரணியாக செயல்படுகிறது

ஊடக சுய- ஒழுங்குமுறைப் பிளவுகள் :
இலங்கையில் புலனாய்வு அறிக்கையிடல் கலாச்சாரத்துடனான ஊடக நிபுணத்துவம் மிகவும் அருகி வருகிறது. இருப்பினும் இப்பிளவினை சமாளிக்கக்கூடிய வகையிலான ஊடகவியலாளர் பயிற்சிகளும் அரசாங்க முன்னெடுப்புகளும் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.

அரசியல் செல்வாக்கிற்கு எதிரான பாதுகாப்பின்மை :
உரிமையின் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் மற்றும் வெளிநாட்டு உரிமையை கட்டுப்படுத்தும் சட்டங்கள் இருந்தாலும், குறுக்கு உடைமை மற்றும் பக்கச்சார்பு உரிமைக்கு எதிரான சட்டங்கள் இல்லை. குறிப்பாக சீனாவுடனான வலுவான அரசாங்க உறவுகள் மற்றும் ஊடகங்கள் அரசியல் தொடர்புகளைக் கொண்டிருக்கும் போக்கு போன்றவற்றாலும் தேவையற்ற அரசியல் செல்வாக்கினாலும் இலங்கை ஊடகங்கள் ஆபத்தில் உள்ளன. இலங்கை அரசாங்கம் சமீபத்திய ஆண்டுகளில் பத்திரிகையாளர்களை குறிவைப்பதைத் தீவிரப்படுத்தியுள்ளது, இது அரசாங்கக் கொள்கையை எதிர்க்கும் கண்ணோட்டங்கள் மீதான சுய-தணிக்கையின் அபாயத்தை அதிகரிக்கிறது.

தமிழில் Bhavna Mohan

Freedom House ன் முழு அறிக்கையினை வாசிக்க அழுத்தவும்..

இலங்கை தொடர்பான Freedom House ன் அறிக்கையை வாசிக்க அழுத்தவும்.

Read more...

Tuesday, November 15, 2022

230 அகதிகள் பிரான்சில் தரையிறங்கிய இத்தாலியுடனான சண்டை, ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திர நெருக்கடியை தூண்டுகிறது. Samuel Tissot

வெள்ளிக்கிழமை காலை, SOS மத்தியதரைக் கடல் அமைப்பால் இயக்கப்படும் அகதிகள் மீட்பு படகான ஓஷன் வைக்கிங் (Ocean Viking) ஆல் மீட்கப்பட்ட 230 அகதிகள், பிரான்சின் தெற்கு கடற்கரையில் உள்ள துலோனில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டனர். மூன்று வாரங்களுக்கு மேலாக கடலில் சிக்கித் தவிக்கும் 55 குழந்தைகள் உட்பட, அதன் பயணிகளின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வருவதால் மட்டுமே படகு கப்பல்துறைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு SOS மத்தியதரைக் கடல் அகதிகளை மீட்கத் தொடங்கியதிலிருந்து இது மிக நீண்ட தடையாகும்.

ஓஷன் வைக்கிங் என்ற மனிதாபிமானக் கப்பல் பிரான்சின் துலோனில் உள்ள இராணுவத் தளத்திற்குள் நுழைகிறது, வெள்ளிக்கிழமை, நவம்பர் 11, 2022. NGO SOS Méditerranée ஆல் இயக்கப்படும் நோர்வே நாட்டுக் கொடியுடன் கூடிய கப்பல், சுமார் 230 பேருடன் கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் கடலில் இருந்தது. இத்தாலி புலம்பெயர்ந்தோரை இத்தாலிய பிரதேசத்தில் இறங்க அனுமதிக்க மறுத்துவிட்டது. [AP Photo/Daniel Cole]


சர்வதேச சட்டத்தையும் மீறி, இத்தாலிய அரசு கப்பலை தரைக்கு கொண்டுவர அனுமதிக்காததை அடுத்து, கப்பல் பிரான்சில் தரையிறங்கியது. மெலோனி அரசாங்கத்தின் நடவடிக்கைகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் உறுப்பினர்களான பிரான்ஸ் மற்றும் இத்தாலி இடையே ஒரு பெரிய இராஜதந்திர நெருக்கடியைத் தூண்டியது, உக்ரேனில் பொருளாதார நெருக்கடி மற்றும் நேட்டோ-ரஷ்யா போரை எதிர்கொண்டு ஐரோப்பிய ஒன்றிய (EU) ஒற்றுமையின் மாயையை உடைத்துவிட்டது.

SOS Mediterranean இன் கூற்றுப்படி, அக்டோபர் 22 முதல் 26 வரை ஆறு நடவடிக்கைகளில் ஓஷன் வைக்கிங் 234 பேரை மீட்டது. இந்த படகு பல ஐரோப்பிய துறைமுகங்களுக்குள் நுழைய சட்டவிரோதமாக மறுக்கப்பட்டது, நவம்பர் 10 ஆம் தேதியில் பயணிகளின் உடல்நிலை மோசமாக இருந்தது. அன்று காலை, உடல்நிலை சரியில்லாத 3 பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் பாஸ்டியாவுக்கு (Bastia) உறவினர் ஒருவருடன் வெளியேற்றப்பட்டனர். மீதமுள்ள 230 பேர் நவம்பர் 11 அதிகாலையில் துலோனில் வெளியேற்றப்பட்டனர்.

தற்போது, சுமார் 270 அகதிகளுடன் மீட்கப்பட்ட மற்ற மூன்று SOS மத்திய தரைக்கடல் மீட்புக் கப்பல்கள் இன்னும் இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளிலும் கப்பல்துறைக்குச் செல்ல இன்னும் அனுமதி மறுக்கப்படுகிறது.

ஓஷன் வைக்கிங் கரைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், SOS மத்திய தரைக்கடல் இயக்க இயக்குனர் சேவியர் லோத், இந்த நிலைமை 'முன்னோடியில்லாத வகையில் கடல்சார் சட்டத்தை மீறிய அனைத்து ஐரோப்பிய நாடுகளின் வியத்தகு தோல்வியின் விளைவு' என்று கூறினார்.

ஓஷன் வைக்கிங்கின் மூன்று வார கடும் சோதனையின் போது, கப்பல்துறைக்கு செல்ல 43 கோரிக்கைகள் இத்தாலிய அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டன, இவை அனைத்தும் சர்வதேச சட்டத்தை மீறி நிராகரிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை காலைக்கு முன், ஓஷன் வைக்கிங்கை உடனடியாக கப்பல்துறைக்கு அனுமதிக்க பிரெஞ்சு அரசாங்கமே மறுத்தது, இது கடல்சார் சட்டத்தின்படி சட்டவிரோதமானது. மத்தியதரைக் கடலில் சிக்கித் தவிக்கும் மற்ற மீட்புக் கப்பல்களுடன் பாரிஸ் இதைத் தொடர்ந்து செய்கிறது.

பாரிஸ் மற்றும் ரோம் இரண்டும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை மீறி, அகதிகளை ஏற்றுக்கொள்ள ஒருவரையொருவர் கட்டாயப்படுத்த முயன்றதால் ஒரு பெரிய இராஜதந்திர நெருக்கடி வெடித்தது. அகதிகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தங்களில் பங்கேற்பதை பிரெஞ்சு அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது.

இத்தாலிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரெஞ்சு உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மனின் அறிவித்தார்: 'இத்தாலி ஐரோப்பிய ஒற்றுமை மற்றும் அதன் கடமைகளுக்கு வெளியே தன்னை ஈடுபடுத்துகிறது', 'இருதரப்பு உறவு [பிராங்கோ-இத்தாலியன்] மற்றும் ஐரோப்பாவிற்கும் இத்தாலிய அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு குறித்து மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.' 2023 கோடைகாலத்திற்கு முன்னர் 3,500 இத்தாலியில் குடியேறியவர்களை வரவேற்பதற்கான ஒப்பந்தத்தில் இருந்து பிரெஞ்சு அரசாங்கம் விலகியுள்ளது மற்றும் அதன் இத்தாலிய எல்லையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

மெலோனி பிரெஞ்சு பதிலை 'ஆக்கிரமிப்பு' மற்றும் 'நியாயமற்றது' என்று அழைத்தார், அதே நேரத்தில் பிரான்சில் கப்பல் நிறத்தப்பட்டதை தனது அரசாங்கத்தின் தீவிர வலதுசாரி தளத்திற்கு ஒரு பெரிய வெற்றியாக முன்வைத்தார். சனிக்கிழமையன்று, மெலோனி அரசாங்கம் தனது நிலைப்பாட்டை இரட்டிப்பாக்கியது, கிரீஸ், மால்டா மற்றும் சைப்ரஸுடன் சேர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, அவர்கள் ஏற்றுக்கொள்ளும் அகதிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தற்போதுள்ள ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் ஒப்பந்தங்களை மீண்டும் எழுத ஒரு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்தது.

இத்தாலியில், துணைப் பிரதம மந்திரியும், நவ-பாசிச வடக்கு லேகா கட்சியின் செயலாளருமான மத்தேயோ சல்வீனி, தனது அரசாங்கத்தின் கொள்கையை 'சக்திகளின் சமநிலை மாறிவிட்டது' என்று மகிழ்ந்தார்.

பிரான்சில், தீவிர வலதுசாரித் தலைவர் மரீன் லு பென் கூறினார்: 'எங்கள் நாடு, அதன் தலைவரின் குரல் மூலம், அடிபணிந்துள்ளது. எனவே, இது ஒரு தொடர் NGO படகுகளின் ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன்.'

உண்மையில், பிரெஞ்சு அரசாங்கமும், அதன் ஐரோப்பிய ஒன்றிய நட்பு நாடுகளைப் போலவே, தற்போது மீட்புப் படகுகளில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கணக்கான அகதிகளை அனுமதிக்க மறுக்கிறது, அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின், ஐரோப்பிய கோட்டை (Fortress Europe) கொள்கையை தொடர்கிறது. இது ஒவ்வொரு மாதமும் டஜன் கணக்கான உயிர்களைக் கொல்கிறது.

பெனிட்டோ முசோலினியின் அரசியல் வாரிசுகளை சட்டபூர்வமாக்குவதற்கும், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு ரோமின் தொடர்ச்சியான ஆதரவை உறுதி செய்வதற்கும், பதவியேற்ற மறுநாளே தீவிர வலதுசாரி பிரதம மந்திரியை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க விரைந்த மக்ரோனுக்கு மெலோனியின் நடவடிக்கைகள் பாரிசில் பெரும் அவமானமாக பார்க்கப்படுகிறது.

இதேபோல், இந்த கோடையில் இத்தாலி கையொப்பமிட்ட ஐரோப்பிய ஒன்றிய அகதிகள் பகிர்வு ஒப்பந்தத்தை அவரது அரசாங்கம் மீறியுள்ளது, இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கான அதன் அர்ப்பணிப்பு மற்றும் உக்ரேனில் போருக்கு அதன் ஆதரவு பற்றிய அதன் முந்தைய உத்தரவாதங்கள் குறித்து பிரஸ்ஸல்ஸில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பெருகிவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போருக்கு மத்தியில் ஓஷன் வைக்கிங்கின் ஊழலில் இருந்து எழும் இராஜதந்திர குற்றச்சாட்டுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையின் தோற்றத்தை சிதைத்துவிட்டன. சனிக்கிழமையன்று தனது தலையங்கத்தில், பிரெஞ்சு நாளேடான லு மொன்ட்இந்த சம்பவத்தை 'ஒரு ஐரோப்பிய பேரழிவு' என்று விவரித்தது. குடியேற்ற பிரச்சினை மற்றும் கண்டம் முழுவதும் தீவிர வலதுசாரி கட்சிகளின் பதில் '[ஐரோப்பிய] ஒன்றியத்தின் எதிர்காலத்தையே அச்சுறுத்துகிறது” என்று அது எச்சரித்தது.

குறிப்பாக 2011 லிபியாவில் போர் கட்டவிழ்த்து விடப்பட்ட லிபிய உள்நாட்டுப் போரில் எதிரெதிர் பிரிவுகளுக்கு இரு நாடுகளின் ஆதரவின் காரணமாக பிராங்கோ-இத்தாலிய விரோதங்கள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. 2019 ஆம் ஆண்டில், தொடர்ச்சியான அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னர், இத்தாலிக்கான தனது தூதரை பிரான்ஸ் திரும்பப் பெற்றது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தங்களில் இருந்து மெலோனி அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக முறித்துக் கொண்டது, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் மேலும் தீவிரமடைவதை சமிக்ஞை செய்கிறது.

மெலோனி அரசாங்கத்தின் மனித உயிர்களை முற்றிலும் புறக்கணித்ததற்கு மாறாக, அது கப்பலை தரையிறங்க அனுமதித்ததால், மக்ரோன் அரசாங்கம் அதன் பதிலை சிடுமூஞ்சித்தனமாக 'மனிதாபிமான' அக்கறையின் சான்றாக முன்வைக்க முயன்றது. ஞாயிற்றுக்கிழமை காலை BFMTV இல் பேசிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒலிவியே வெரோன், பாசாங்குத்தனமாக, '[எங்கள்] பதில் மனிதாபிமானமானது' என்று கூறினார்: 'பிரான்ஸ் செய்தது போல் செயல்படவில்லை என்றால் பிரான்ஸ் இனி பிரான்சாக இருக்காது.'

உண்மையில், பிரெஞ்சுக் கடற்கரையில் இருந்து ஒரு கல்லெறி தூரத்தில் மீட்கப்பட்ட 234 அகதிகள் சட்ட விரோதமாக மரணமடையும் வாய்ப்பைப் பற்றிய மக்களின் சீற்றத்தைத் தவிர்ப்பதற்காகத்தான் மக்ரோன் ஓஷன் வைக்கிங்கை ஏற்றுக்கொண்டார். மக்ரோன் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐரோப்பிய கோட்டை குடியேற்ற எதிர்ப்புக் கொள்கையைத் தொடர்ந்தார், இதன் விளைவாக அவரது ஜனாதிபதி பதவியில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர்.

SOS Mediterranean இன் கூற்றுப்படி, இது 2015 இல் செயல்படத் தொடங்கியதிலிருந்து, 20,182 அகதிகள் மத்தியதரைக் கடலில் மூழ்கியுள்ளனர், இதில் 2022 தொடக்கத்தில் இருந்து 1,337 பேர் உள்ளனர்.

மேலும், மக்ரோனின் கீழ், பிரான்ஸை அடையக்கூடிய புகலிடக் கோரிக்கையாளர்கள் பயங்கரமான நிலைமைகளைத் தாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். சுகாதார வசதிகள் மற்றும் உணவுக்கு போதுமான அணுகல் இல்லாமல் முக்கிய நகரங்களின் விளிம்பில் ஆயிரக்கணக்கானோர் கூடார முகாம்களில் வாழ்கின்றனர். 2020 ஆம் ஆண்டில், 'எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தெருவில் வாழும்' புகலிடக் கோரிக்கையாளர்களின் 'மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான வாழ்க்கை நிலைமைகள்' தொடர்பாக மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தால் பிரெஞ்சு அரசாங்கம் கண்டனம் செய்யப்பட்டது.

இந்த வகையில், ஓஷன் வைக்கிங் இல் வரும் அகதிகளின் முழு சட்ட உரிமைகளையும் மறுக்க, மக்ரோன் அரசாங்கம் கடைசி நிமிட சட்ட ஓட்டையை பயன்படுத்தியுள்ளது. படகு தரையிறங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, துலோன் மற்றும் அருகிலுள்ள ஹையர்ஸில் உள்ள இரண்டு நிலப்பகுதிகள் தன்னிச்சையாக 'சர்வதேச காத்திருப்பு மண்டலங்கள்' என்று அறிவிக்கப்பட்டன.

டார்மனன் விளக்கினார், 'எனவே உயிர் பிழைத்தவர்கள் தொழில்நுட்ப ரீதியாக பிரெஞ்சு மண்ணில் இருக்க மாட்டார்கள்.' இந்த சட்டபூர்வ தந்திரம் என்பது இந்த அகதிகள் பிரான்சில் தஞ்சம் கோர முடியாது என்பதாகும், எனவே அவர்கள் சட்ட உதவி இல்லாமல் நாடு கடத்தப்படலாம். டார்மனனின் கூற்றுப்படி, பிரான்ஸ் வெறும் 80 பேரை மட்டுமே ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டது; மீதமுள்ளவை மற்ற 11 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும்.

முதலாளித்துவ நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், ஐரோப்பிய ஆளும் வர்க்கம் அதிகாரத்தின் மீதான தனது பிடியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றே தேசியவாதம், இராணுவவாதம் மற்றும் குடியேற்ற எதிர்ப்பு வெறுப்புகளை ஊக்குவிக்கிறது. இது ஐரோப்பிய அரசியல் வாழ்வில் நவ-பாசிசத்தின் மேன்மையை அதிகரிக்கிறது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் வெளிப்படையான பிளவுகளை உருவாக்குகிறது.

புவி வெப்பமடைதல், உக்ரேன் மற்றும் அதற்கு அப்பால் உள்ள போர்கள் சர்வதேச அளவில் மோசமான சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு இட்டுச் செல்வதால், ஐரோப்பாவிற்கு ஆபத்தான பயணத்திற்கு முயற்சிக்கும் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், இவை வரும் காலத்தில் மேலும் மோசமடைய உள்ளன.

அகதிகளைப் பாதுகாக்க அணிதிரட்டப்படக்கூடிய சக்தி ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் மட்டுமே. ஐரோப்பிய எரிசக்தி நெருக்கடி, போர் மற்றும் விரைவான பணவீக்கத்தின் மத்தியில், பிற்போக்குத்தனமான ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் அகதிகளுக்கு எதிரான இன வெறுப்புகளைத் தூண்டுவதில் ஒன்றுபட்டுள்ளன. அதன் கொலைகார ஐரோப்பிய கோட்டை கொள்கைகள் நடைமுறையில் இருக்கும் வரை, போர் மற்றும் வறுமையிலிருந்து தப்பி ஓடும் இன்னும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் மத்தியதரைக் கடலில் தொடர்ந்து மூழ்கிவிடுவார்கள்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com