Saturday, March 9, 2024

இந்திய எதிர்ப்பு வாதத்தை தூசிதட்டும் புலித்தேசியம்.

ஒரே நொடியில் சந்திக்கு வந்த தேசியம் பேசுவோரின் இந்திய விரோத வீரம்.
புலிகளால் கட்டி எழுப்பப்பட்ட மக்களுக்கு விரோதமான கருத்தியல்கள் எண்ணிலடங்காதவை. இதில் இந்திய எதிர்ப்பு மனோநிலையை மக்கள் மனங்களில் விதைத்ததும் முக்கியமான ஒன்று. 1987 ஒப்பிரேசன் லிபரேசன் நடவடிக்கை இலங்கை இராணுவத்தால் ஆரம்பிக்கப்பட்டது. புலிகள் தமது பலமிக்க கோட்டையாக இருந்த வடமராட்சியில் இருந்து, படிப்படியாக விரட்டியடிக்கப்பட்டு, இறுதியாக குறிகட்டுவான் கடலடி மட்டும் வந்து இந்தியாவுக்குப் படகேற காத்திருந்தார்கள். விட்டால் யாழ் குடாநாடு முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் நிலை. புலிகளின் கதை முடியும் நேரம்.

அதே நேரம் குடாநாடெங்கும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது. இந்தியா படகுகள் மூலம் உணவு எடுத்துவர முயற்சி செய்தது. இந்தியப் படகுகள் உணவுப் பொருட்களுடன் இலங்கையின் கடல் எல்லைக்கு வந்து காத்துக்கிடக்கின்றன. உள்ளே வர இலங்கை அரசு அனுமதி கொடுக்கவில்லை. இலங்கை அரசு இந்தியாவின் அந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தியது. இந்தியா விமானம் மூலம் உணவு போட முடிவு செய்தது. இந்திய போர் விமானங்கள் அத்துமீறி இலங்கையின் வான் பரப்புக்குள் நுழைந்தன.

இந்தியா "ஒப்பிரேசன் பூமாலை" என்ற பெயரில் குடாநாட்டின் சில பகுதிகளில் உணவுப் பொட்டலங்களைப் போட்டு இலங்கைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. ஜே.ஆர் தன் நிலையில் இருந்து இறங்கி வந்தார். இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் பிரவேசித்தது.

இந்திய இராணுவ வாகனங்களில் தமது கொடிகளைக் கட்டி, புலிகள் தாமும் அவற்றின் மீது ஏறி வீதிகளில் வலம்வந்தார்கள். பூரண கும்ப மரியாதை செய்து இந்திய இராணுவத்தினரை புலிகள் வரவேற்றார்கள். எல்லாம் சிலகாலம் தான். புலிகள், ஏனைய இயக்க உறுப்பினர்களைத் தேடித்தேடி கொலை செய்தார்கள்.

உத்தேச மாகாணசபை அமைப்பதில் பல சிக்கல்களை உருவாக்கினார்கள். இந்திய அமைதிப்படையை சினமூட்டும் வேலைகளைத் தொடர்ச்சியாக செய்தார்கள். இந்திய அனுசரணையுடன் , தமிழர்களுக்குத் தீர்வு எதுவும் வந்துவிடக்கூடாது என்ற மேற்குலகின் அபிலாசைக்கு அமைய புலிகள் இந்தியாவுடன் முரண்படத் தொடங்கினார்கள்.

1987 ஐப்பசி மாதம் இந்திய அமைதிப்படை மீது புலிகள் தாக்குதல் தொடுத்தார்கள். அன்றிலிருந்து அமைதிப்படையினரால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களால் மக்கள் இந்தியா மீது வெறுப்புக் காட்டத் தொடங்கினார்கள். இந்த சூழ்நிலையைப் புலிகள் தமக்கு சாதகமாக்க, மக்கள் செறிவாக இருக்கும் இடங்களில், அமைதிப்படை மீது பல தாக்குதல்களை நடத்தினார்கள். அந்த சமயங்களில் அமைதிப்படை எடுத்த நடவடிக்கைகளின் போது பொதுமக்களும் பாதிக்கப்பட்டார்கள். உதாரணத்துக்கு யாழ் பொது வைத்தியசாலை சம்பவத்தைக் குறிப்பிடலாம். வைத்தியசாலைக்குள் மக்கள் தாக்கப்பட வேண்டும் என்ற நோக்குடனேயே, உள்ளிருந்து புலிகள் தாக்குதல் மேற்கொண்டார்கள்.இப்படியாகத்தான் இந்திய எதிர்ப்பு மனநிலை படிப்படியாக மக்களுக்கு ஊட்டப்பட்டது.

இவ்வளவு வருடங்கள் ஓடி முடிந்த பின்னும், மக்கள் மனங்களில் இருந்து இந்த எண்ணத்தை மாற்ற முடியவில்லை. புலிகளின் நச்சுச் சூழலுக்குள் இருந்து மக்கள் மீண்டு வந்து விட்டாலும், சில புலி சார் அமைப்புக்களும், புலம் பெயர்ந்து வாழும் புலிப் பினாமிகளும், அரசியல்வாதிகள் சிலரும், தமிழ் பத்திரிகைகளும் மக்களை மாறவே விடமாட்டார்கள்.

பள்ளிப் பருவத்திலேயே புலிகளுடன் சேர்ந்து, சயனற் என்னும் நஞ்சை காவித் திரிந்த, அப்பாவி மாணவன், பல கொடூரக் கொலைகளின் பங்குதாரி சாந்தனின் இறுதி நிகழ்வுகளில் மக்களை உணர்ச்சியூட்டி, அதில் குளிர்காய பலரும் முயற்சி செய்தார்கள். பல இடங்களுக்கு சாந்தனின் உடலத்தைக் காவித் திரிந்து அஞ்சலி நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்தார்கள். உச்சக்கட்டமாக வல்வெட்டித்துறை பிரபாகரன் வாழ்ந்த இடத்திலும் சாந்தனின் உடலை வைத்து படம் காட்டினார்கள். இவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம், சாந்தன் சாமானியனல்ல. அவன் புலிகளின் முக்கிய உறுப்பினன் என்பதை உலகத்துக்கு குறிப்பாக இந்தியாவுக்கு முகத்தில் அறைந்து சொல்லியுள்ளது.

இவ்வளவு காலமும் சாந்தன் ஒரு அப்பாவி. படிப்பதற்காக இந்தியா சென்ற சாதாரண மாணவன் என்ற புலித் தேசியங்களின் சுத்துக்கள் எல்லாம் போலி என்று நிரூபணமாகிவிட்டது. சாந்தனின் இளைய சகோதரன், அண்ணனின் புலிச் செயற்பாடுகள் பற்றி தனது முகநூலில் பதிவுகள் போட்டுள்ளார். அவர்கள் குடும்பமே அதிதீவிர புலிகளாகவே இருந்திருக்கிறார்கள்.

இந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்கள், இவர்களின் எச்சரிக்கையால் இந்தியா வெலவெலத்துப் போய் நிற்கிறது. எவை இந்த புற்றீசல் சிவில் அமைப்புக்கள். இந்த அமைப்புக்களின் பெயர் விபரங்களை யாழ்ப்பாண உதயன் பத்திரிகையிடம் விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும். தமிழரசுக் கட்சியின் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள சிறிதரன், சாந்தனின் உடலத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த தேர்தல் ஒன்றில் தனக்குத்தானே 75க்கு மேற்பட்ட கள்ள வாக்குகள் போட்டதாகப் பெருமையாகச் சொல்லிக்கொண்ட சாதனைத் தலைவர், சாந்தனைப் பெரிய தியாகியாக்கி அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளை இலங்கை அழைத்து வர பாராளுமன்றத்திலே குரல் கொடுக்கிறார் தமிழரசுத் தலைவர். பொன்னம்பலம் கட்சி கஜேந்திரன் உட்பட சிலரும் ஓர் ஓரமாக நின்று அஞ்சலியை செலுத்தி ஒரு சில ஓட்டுக்களுக்கு.....

ஜே.வி.பி கட்சியினரும், கூடவே இலங்கையின் புலனாய்வுப் பிரிவுடன் கூடி இயங்கும் முன்னாள் புலிகளும் இந்தப் பயங்கரவாதியின் உடலுக்கு அஞ்சலி செய்கிறார்கள். ஒன்றுமே புரியலே, இங்கே என்னமோ நடக்குது. ராஜீவ்காந்தியை துவக்கால் அடித்து கொல்ல முயன்ற கட்சியினர், அவரைக் கொன்றவனுக்கு அஞ்சலி செய்வது ஒன்றும் ஆச்சரியமல்ல.

இவ்வளவுக்கும் இந்த சாந்தன் ஈவிரக்கமற்ற பயங்கரக் கொலையாளி. பத்மநாபா உட்பட 12 பேரை கொலை செய்து விட்டு, இலங்கைக்கு தப்பிச் சென்றான். அங்கு தனது தாய் கையால் சாப்பிட்டு உடலைத் தேற்றிக்கொண்டு அடுத்த கொலைக்கான திட்டத்துடன் மீண்டும் இந்தியாவுக்கு வருகிறான். அங்கு புலிகளின் கொலைக்குழுவுடன் ஒன்றிணைந்து ராஜீவ்காந்தி மற்றும் 12 பேரை தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் கொலை செய்கின்றான். இந்தியாவின் ஒப்பற்ற இளம் தலைவனைக் கொலை செய்த ஒரு கொலைகாரனுக்கு இலங்கைத் தமிழர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள். இந்தியாவைத் தூற்றுகிறார்கள். இந்திய எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறார்கள்.

புலிகளின் அழிவுக்குப் பின் இனப் பிரச்சனைத் தீர்வுக்கு இந்தியத் தயவை வேண்டி நின்ற தமிழர் தரப்பு, ஒரு நொடி தோன்றிய உணர்ச்சி வேகத்தில், இந்திய கனிவை தலைகீழாக மாற்றி வைத்துக்கொண்டுள்ளது. இனப்பிரச்சனைத் தீர்வுக்காக இந்தியாவுக்கு கடிதம் எழுதுவது, இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கு புதுடில்லி போவது, அடிக்கடி இந்திய தூதுவர் அலுவலுகத்துக்கு காவடி எடுப்பது, இந்தியாவுக்குப் போவது மகஜர் கொடுப்பது, இந்தியத் தூதுவரிடம் கொடுப்பது என்றிருந்த தமிழ் கட்சித் தலைவர்கள், சாந்தன் என்ற கொலைகாரனுக்காக இந்திய எதிர்பாளர்களாக மாறிக் கொண்டுள்ளார்கள்.

இந்த தமிழ்க் கட்சித் தலைவர்களின் இந்திய விரோத மனப்போக்கு ஒரு நொடியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இனியும் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியாவிடம் போய் நிற்கப் போகிறார்கள். இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்தும் ஆள் மாறி ஆள் மாறி கருத்துத் தெரிவித்துக்கொண்டு, இந்தியா உதவி செய்யவில்லை என எவ்விதம் நீங்கள் ஒப்பாரி வைக்கலாம். இதற்குள் இந்தியாவுக்கு இறுதி எச்சரிக்கை வேறு. இது எப்படி இருக்கிறதென்றால், இந்திய அமைதிப்படை தானாக இலங்கையை விட்டு வெளியேறிய பின், உலகின் நான்காவது பெரிய இராணுவத்தையே அடித்துக் கலைத்து விட்டோம் என்று புலிகள் பீத்திக்கொண்டது போலத்தான்.

இலங்கைத் தமிழர்கள் மத்தியில் இந்த இந்திய எதிர்ப்பு மனநிலை நீண்ட காலமாகவே இருந்து வருவதாகவே நான் அனுமானிக்கிறேன். போராட்ட ஆரம்ப காலங்களிலேயே (1970 – 1980) இடதுசாரி எண்ணம் கொண்ட பலரும் தமது இந்திய எதிர்ப்பு கருத்துக்களை வெளியிட்டு வந்து இருக்கிறார்கள். இந்திய விஸ்தரிப்பு தமிழீழத்துக்குப் பாதகம் என வகுப்பெடுத்தவர்கள் பலர். காலப்போக்கில் எல்லோருமே இந்தியாவே கதி என அங்கேயே அடைக்கலமானார்கள்.

1983 இனக் கலவரத்துடன் தமிழ் மிதவாதத் தலைவர்கள் தொடக்கம் இயக்கங்களின் தலைவர்கள் எல்லோருமே இந்தியாவில் தஞ்சம் அடைந்தவர்கள் தான். இந்தியா வழங்கிய சகல சலுகைகளையும் பயன்படுத்திக் கொண்டவர்கள்தான். இந்திய எதிர்ப்பை பலமாக எடுத்துவந்த புலிகள் முதல் அனைவரும், இந்தியாவிடம் பணம் உட்பட பலவிதமான உதவிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் தான். பிராந்திய அரசியல் பற்றிய எவ்வித புரிதலும் இல்லாத, அறிவுகெட்ட ஜடங்களின் சமூகவலைத்தள பதிவுகள், கருத்தாடல்கள், எமது இனத்துக்கு பாரிய பின்னடைவுகளை ஏற்படுத்தும். இவற்றை எல்லாம் கடந்து, எமது மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.

யூலியன். 08 03 24.

Read more...

Sunday, February 25, 2024

தீப்பொறி - புதியதோர் உலகம் - தமிழீழக்கட்சி விசாரம்

அமைப்பிற்கு உள்ளே வைக்கப்படவேண்டிய விமர்சனங்களை அமைப்பிற்கு உள்ளேயே வைக்கவேண்டும் . அவற்றிற்கு இடமில்லாதபோது அந்த அமைப்பிலிருந்து விலகி வெளியே வைத்தல் மிகவும் நிதானத்துடன் செய்யப்படவேண்டும்.

தனிமனித ஆளுமையும் அரசியற் தெளிவும் கொண்ட டொமினிக்- கேசவன் - தான் சார்ந்த புளொட் அமைப்பிலிருந்து வெளியேறி அந்த அமைப்பிலிருந்த முரண்பாடுகளை ,குழப்பங்களை ,நெருக்கடிகளை தன் பார்வையில் தீப்பொறி என்ற சிறிய அமைப்பொன்றை உருவாக்கி புதியதோர் உலகம் என்ற நூலைத் தன் பார்வையில் எழுத அதை வெளியிடுவதற்கு என் எல் எவ் ரி , தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்பினரிடமிருந்து நல்ல ஆதரவு கிடைக்கின்றது.

ஹற்றன் நசனல் வங்கியில் என் எல் எவ் ரி கொள்ளையடித்த பணத்தில் இப் புதினத்தை வெளியிட ஆங்கே புல்லுக்கும் பொசிந்ததுபோல் நிதியுதவி கிடைக்கிறது. இந்த நாவலை எல்லா மட்டங்களிலும் கொண்டுபோய்ச் சேர்க்க புலிகள் வேலை செய்கிறார்கள். அப்போது புலிகளும் என் எல் எவ் ரியும் தம் பிரதான எதிர்த்தரப்பாகக் கருதியிருந்தது புளொட் அமைப்பைத்தான்.

தமிழ் நாட்டில் அச்சடித்த நூலைப் புலிகள் தம் படகுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி இலங்கைக்குக் கொண்டுவந்து சேர்த்து வினியோகிக்கிறார்கள். ஆனால் உயிராபத்தான நெருக்கடிகளை தீப்பொறி அமைப்பினர் எதிர்கொண்டபோது அவர்களுக்கு முதலில் பாதுகாப்பு வழங்கியது புலிகள்தான்.

இப்போது புலிகளின் பாதுகாப்பு வலயத்தில் அகப்பட்ட தீப்பொறியினரைச் சந்திக்கவரும் இதர அமைப்பாளர்கள் புலிகளின் கண்காணிப்பினுள் வருகிறார்கள். இப்படியிருக்க புளொட்டிலிருந்து வெளியேறியபின் தீப்பொறி அமைப்பினர் தம் கருத்தியல்களை மீள வடிவமைக்க வேண்டியிருந்தது.

தமிழீழம் ,தமிழ்த் தேசியம் இவற்றை முன் மொழியாவிடினும் அதற்கிணையாக ஒரு குறுங்குழுவாத சிந்தனை முறையில் தம்மைப் பாடுபடுத்தி, ஈடுபடுத்தி ,அறியப்படுத்திக் கொண்டார்கள் . இத்தனைய குறுங்குழுவாதச் சிந்தனை முறையின் விருப்பார்வங்களை புதியதோர் உலகத்திலும் காணலாம்.

அந்த நாவலில் ஒரு பாத்திரமாக வரும் ஜான் மாஸ்ரர் கனடாவிலிருந்து எழுதிய எழுத்துக்களில் மோசமாக திரிபாயும் குறுக்கமாயும் இவற்றைக் காணலாம். இந்த நாவல் இத் தீப்பொறிக் குழுவினரை வேறொரு தளத்திற்கு எடுத்துச் சென்றது. முற்றுமுழுதாக தலைமறைவாக இருக்கவேண்டிய நிலையில் புலிகளும் என் எல் எவ் ரி யும் இதன் வினியோகத்தைக் கையேற்றுப் பிரச்சாரப்படுத்திக் கொண்டார்கள் எனப் பார்த்தோம்.

தமிழீழக் கட்சி என்ற பெயரில் தம்மைத் தளமாற்றம் செய்த தீப்பொறியினர் புலிகளின் ஒவ்வொரு செய்கைக்கும் செயலுக்கும் நியாயம் சொல்ல வேண்டியவராயினர். எப்படியெனில் ஒரு சிறு உதாரணம் சொல்லலாம் , மாணிக்கதாசனைக் கிளைமோர் தாக்குதலில் புலிகள் கொன்றபோது பீடை ஒழிந்தது ! என தம் பத்திரிகையில் எழுதிவேண்டிய நிலை வந்தது.

பின்னர் "உயிர்ப்பு" என ஒரு சித்தாந்தக் கோட்பாட்டு சஞ்சிகையை கொண்டுவந்தபோதும் அதற்குள் இருந்த அக முரண்பாடுகளால் அந்த எத்தனமும் இல்லாமலாகி பின் தீப்பொறி ,தமிழீழக் கட்சி, உயிர்ப்பு இவையெல்லாமும் காணாமலானது.

முதற்பதிப்பு 1985 இல் வெளிவருகிறது. தோராயமாக ஆண்டின் இறுதிப்பகுதி எனக் கொண்டாலும் 1986 பிப்ரவரியில் நடந்த தளமாநாட்டிற்கு முன்னரே நூலும் தீப்பொறி அமைப்பும் தயாராகிவிடுகின்றது . இரண்டு மா நாடுகளிலும் கோவிந்தனோ ஜான் மாஸ்ரரோ கலந்துகொள்ளவில்லை.

இந்தா! பிடி ! இந்தா பிடி !
சுடுகுது ,மடியைப்பிடி ! என்ற அவசரக் குடுக்கைத் தனத்துக்கு அவர்கள் தம்மை ஒப்புக்கொடுத்ததில் அவர்கள் செலுத்திய விலை மிக அதிகம் !

இந்த நூல் ஏற்படுத்திய தாக்கத்தில் புளொட் அமைப்பு மிகப் பலவீனமான நிலையை அடைந்தது. புலிகளின் நோக்கமும் அதுவாயிருந்தது. தாபனத்தைப் பலவீனப்படுத்துவதில் வெளியேயான விமர்சனங்களுக்கு இருக்கும் வலு இதுமட்டும்தான்.

"நீண்டகால மக்கள் யுத்தம் "எனும் கோட்பாடு வலிமைகாண்பதும் இங்குதான். இப்படி இன்னொரு தளத்தில் புலிகளுடன் முரணில்லாத ,விமர்சனங்களில்லாத வகையில் தாம் இயங்கமுடியும் என்ற நப்பாசையில் இருந்தபோதும் ஏற்கனவே மற்ற அமைப்புகளை அழித்தொழித்த திமிரில் 1991 மே மாதம் 17 ஆம் தேதி கேசவனும் அவர் சார்ந்த தோழர்களும் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டு புலிகளால் கொல்லப்படுகின்றனர்.

தமிழீழம் என்ற அதே இலட்சியத்துடனும் கோட்பாட்டுடனும் தீப்பொறி தம் குறுகிய காலத்தில் இயங்கிய போதிலும் 1986 மே மாதம் ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம் கொல்லப்பட்ட கையோடு தலையெடுத்த தமிழ்ப்பாசிச வகைமை தமிழ்ப்பிரதேசங்களில் இயங்கிய அமைப்புகளை அனைத்தையுமே அழித்தொழித்தது.

ஆனால் புதியதோர் உலகம் 1985 இல் வெளிவருகிறது. புதியதோர் உலகம் வெளிவந்த பின்னரே உடுவிலில் தளமாநாடு நடைபெறுகிறது .அதில் புளொட்டின் படைத்துறைச் செயலர் கண்ணன் , அரசியற்துறைச் செயலர் வாசுதேவா ஆகியோர் கலந்துகொண்டு வைக்கப்பட்ட விமர்சனங்களை ஏற்றுக்கொள்கின்றனர். தாபனத்தை அமைப்பினுள்ளிருந்து சீர்திருத்துவதற்குப் பதில் அவர்களுக்கு தெரிந்த ஒரே வழி தீப்பொறி குழுவாக வெளியேறி புதியதோர் உலகம் நாவலைக் கூட்டுச் சேர்ந்து எழுதிப் பரப்புவதுதான்.

இத்தனைக்கும் கேசவனும் ஜானும் அமைப்பின் அதியுயர் பொறுப்புகளில் இருந்தவர்கள் . ஆனால் அமைப்பின் அடிமட்டத் தோழர்களுக்கும் அமைப்பின் வெகுமக்கள் பிரதிநிதிகளுக்கும் இருந்த கடப்பாடு இவர்களுக்கு இருக்கவில்லை. தாம் வெளியேறுவதற்கான நியாயங்களைச் சொல்லும் தூய்மைவாத வெள்ளை அறிக்கையாகத்தான் புதியதோர் உலகத்தைக் கட்டமைத்தார்களேயன்றி தார்மீகப் பொறுப்பேற்கும் கடப்பாட்டிலிருந்து அல்ல.

கேள்விப்பட்டவற்றை சுவாரஸ்யமான புனைவாக்கம் செய்தமாறான புதியதோர் உலகம் கதைக்கு உதாரணம் சொல்வதென்றால் பிரான்ஸிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறார் , என்னுடைய குதம் இப்போ எவ்வளவு விரிவடைந்திருக்கிறது தெரியுமா ? எனக் கேட்டபடி அப் பாத்திரம் அறிமுகமாகிறது. நாவலின்படி அப் பாத்திரம் போதை மருந்து கடத்தி அதனால் வரும் பணத்தை அமைப்பிற்குக் கொடுக்கிறது. அப் பாத்திரம் கதையின்படி போதை மருந்து வியாபார நபர்.

ஆனால் உண்மையில் அப் பாத்திரம் காந்தீயம் உள்ளிட்ட அமைப்புகளில் கடுமையாக வேலைசெய்து பொலிஸ் நெருக்கடிகளால் பிரான்சுக்குப் புலம்பெயர்ந்து சில தொழில் நிறுவனங்களை அவரது படித்த துணைவியாரோடு உருவாக்கி அதன் வருமானத்தை மிக எளிமையாக வாழ்ந்து அமைப்பிற்குக் கொடுத்து வந்தவர். இதற்காகவே தமக்கென வாரிசு எதையும் ஏற்படுத்திக்கொள்ளாதவர்கள்.

போர்க்காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்விற்கு உதவிசெய்து மிகப் பின்தங்கிய தங்கள் பிரதேசத்து மக்களின் வாழ்வாதாரத்திற்கு இன்றுவரை ஆதாரமாய் நிற்பவர். ஆனால் புதியதோர் உலகத்தின் தூய்மையில் ,கேள்விச் செவியில் அவர் ஒரு போதைவியாபாரி. இப்போது லண்டனில் ஒரு நுட்பமான வியாபார நிலை காணப்படுகிறது. புதியதோர் உலகம் விற்பனையை கைத்துணையாகக் கொண்டு புதுவை ரத்தினதுரையை விற்பதில் ஒரு வியாபார அனுகூலம் உண்டு.

தர்க்கத்திலும் திறந்த பார்வை மதிப்பீடுகளிலும் ஒரு விடுதலை அமைப்பினுள் உள்ள உள்முரண்பாடுகளைப் புனைவின் வழியே வெளியே முன்வைத்ததில் இருந்த திறந்தநோக்கு இருக்க புலிகளின் பாசிச அமைப்பு முரண்களை அதற்குள் இருந்து இப்படி வெளிக்கொண்டு வந்திருக்கிறார்களா?

மாத்தையாவும் கருணாவும் துரோகிகளாகவே இருந்துவிட்டுப்போகட்டும் !

கவிஞராகவும் அறியப்பட்டு புலிகளின் அறியப்பட்ட பிரமுகராகவும் அதிகாரக் குரலாகவும் இருந்த ஒருவரின் எழுத்துக்களை ,பிரபாகரனின் அணிந்துரையுடன் அவை ஏற்கனவே நூல்களாக வெளிவந்து பாசிச மன நிலையை பொது உளவியலில் கட்டமைப்பதில் பங்குவகித்த ஒருவரின் தொகுப்பை விற்பதில் மனம் கூசாது வந்தவரை லாபம் என்ற வியாபார எண்ணம் நிச்சயம் மாற்றுக்கருத்துகளையும் மாற்று முயற்சிகளையும் ஜனநாயத்தையும் அவாவி நிற்போருக்கு எதிர்காலம் குறித்து அச்சமூட்டவே செய்யும் .

வானத்தைப் பிளந்த கதை எழுதி ஈ பி ஆர் எல் எவ் வை விமர்சித்து ,மன ஆறுதல் அடைந்தபின் செழியன் உதிரியாகிச் சீரழிந்து பின் புலிகளின் பிரச்சாரப் பிரமுகராகி புலிக்கொடியும் பிரபாகரன் கொடியும் ஏந்தித் தன் அந்திமத்தைத் கண்டு , தன் அற உணர்வைக் கைவிட்டதுபோல ,தீப்பொறி முகாமையில் வெளிவந்த "புதியதோர் உலகம் தொட்டு ஒரு புலிச்சாய்வு எடுத்து ஈற்றில் புலிகளாலேயே கொல்லப்பட் டும் சீரழி துயரமும் நிகழ்ந்தது.

வலதுசாரிகளுக்கு அமைப்புகள் பிளவுபட்டு உதிரி அமைப்புகள் உருவாகுவது அவர்களளவில் சேதங்களை உருவாக்காது , ஆனால் இடதுசாரி ,ஜனநாயக ,மக்கள் சார்பு அமைப்புகளில் இருந்தவர்கள் அவ்வவ்வமைப்புகளில் இருந்து வெளியேறும் முடிவுகளை ஆற அமர யோசித்தே எடுக்கவேண்டும் , தம்மை நம்பிவந்த தோழர்களை அப்படியே நடுத்தெருவில் விட்டுவிட்டு தாம்மட்டும் தம் கருத்தியல் தூய்மையையும் தூயதிலும் தூய கரங்களையும் காட்டிக்கொண்டிருக்க முடியாது.

அமைப்புகளிலிருந்து வெளியேறியபின் தம்மைத் தூய்மையாளர்களாக நிறுவ முன்னிறுத்தப்பட்ட நூல்களிற்கும் படைப்பினூடு இலக்கியமாய்க் கதை அமைவில் வெற்றிபெறும் படைப்புகளுக்கும் வேறுபாடுண்டு. அடூர் கோபால கிருஷ்ணனின் "முகாமுகம் " அப்படியாக கலை நுட்பத்திலும் இலக்கியக் கதையாதலிலும் வெற்றிபெற்ற திரைப்படம்.

புளொட் மக்கள் அமைப்பில் அமைப்பாளராயிருந்து பின் தீப்பொறியிலும் இயங்கிய ஆளுமை மிக்க தோழர் ஒருவர் இப்போதும் கொழும்பில் மனநிலை பிறழ்ந்து சிங்கள உறவுகளின் பராமரிப்பில் இருக்கிறார். அமைப்பினுள் இருந்து இயங்கியமட்டிலும் அவர் மிகவும் ஆளுமை மிக்கவராயிருந்தார். அவரது ஆளுமைச் சிதைவிற்கு காரணம் தமிழ்ப் பாசிசம் . போர்க்குணாம்சமிக்க போராளிகள் அரசியல் ,சமூக அரங்குகளிலிருந்து அகற்றப்பட்ட அவ்விடத்தில் வந்தமர்ந்த பாசிசம். இந்த அவலமான சித்திரங்களையெல்லாம் புதியதோர் உலகத்தின் பின்னணியிலிருந்தெல்லாம் புரிந்துகொள்ளமுடியாது.

மேலும் அதே தளத்தில் அமைப்புக் குறித்த விமர்சனங்களோடும் சுயவிமர்சனங்களோடும் தளப்பொறுப்பாளராயிருந்த சின்ன மெண்டிஸ் - விஜயபாலன் - கிட்டுவால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பின்னணியையெல்லாம் புதியதோர் உலகத்தைத் தலைமேற் தூக்கிவைத்துக் கொண்டாடுபவர்கள் இணையாகப் பேசப்போவதில்லை.

20/05/1989 இல் முள்ளிக்குளத்தில் இலங்கை ராணுவ உதவியோடு புலிகள் 60 க்கும் மேற்பட்ட ஆரம்பகாலப் புளொட் தோழர்களைப் படுகொலை செய்த பின்னணியையும் கூறப்போவதில்லை. "புலிப்பொறியினுள் வீழ்ந்த தீப்பொறி'' என தேசம் நெற் ஜெயபாலன் பொருத்தமாகப் பெயரிட்டிருந்தார். பாசிசத்தின் மனச் சாய்வில் தற்திருப்தி காண்பவர்களுக்கு ,கொள்பவர்களுக்கு புதியதோர் உலகத்தை விட்டால் வேறு போக்கிடமுமில்லை.

புதியதோர் உலகம் நூலாசிரியர் கோவிந்தன் குறித்த விபரங்கள்:

பெயர் : சூசைப்பிள்ளை நோபேட்
புனைபெயர்கள் : டொமினிக், ஜீவன்.
பிறப்பு : 1948.5.02 பாலையூற்று, திருகோணமலை.
தந்தையின் பெயர் : மைக்கல் சூசைப்பிள்ளை.
தாயின் பெயர் : நிக்கொலஸ் அன்னம்மா.
கல்வியும் தொழிலும் : தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித வளனார் தமிழ் வித்தியாலயத்தில் முடித்தார். இடைநிலைக் கல்வியை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியிலும் உயர்கல்வியை திருகோணமலை இந்துக் கல்லூரியிலும் முடித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். அக் காலத்தில் மாணவர் அமைப்புகளில் தீவிரமாக பங்கெடுத்தார். மார்க்சியக் கருத்துகளில் ஈடுபாடு செலுத்தினார். பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் எழுதுவினைஞராகப் பணியாற்றினார். பின்பு திருமலை மாவட்ட கல்விக் கந்தோரில் பணியாற்றினார்.
அரசியல் : பல்கலைக்கழக வாழ்வில் பல்வேறு இடதுசாரிக் குழுக்கள், அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டார். பின்னர் மலையகத்திலிருந்து வெளியான “தீர்த்தக்கரை” எனும் அரசியல், இலக்கிய காலண்டிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் அதன் வெளியீட்டாளராகவும் இருந்தார். அப்போது பிரான்சிஸ் சேவியர் எனும் பெயரில் சிறுகதைகள் எழுதியுள்ளார்.
1980 களின் தொடக்கத்தில் “சங்கப்பலகை ” எனும் குழுவை அமைத்து மாதாந்தம் முக்கிய சமூக, அரசியல், பொருளாதார, கலை இலக்கிய விடயங்கள் தொடர்பான கருத்தரங்குகளை தொடர்ச்சியாக நடாத்தி வந்தார்.
1982 இல் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (PLOTE) இணைந்து கொண்டார். 1983 இல் முழுநேர உறுப்பினரானதுடன் கழகத்தின் மத்திய குழுவிற்கும் தெரிவானார். 1985 இல் PLOT அமைப்பிலிருந்து வெளியேறினார்

பச்சை இனவாதிகள்

டொமினிக்கின் (கேசவன்) வவுனியா வருகையை அடுத்து தோழர் சுனிமெல்லினுடனான சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் "தீப்பொறி" செயற்குழு உறுப்பினர்களான டொமினிக்கும்(கேசவன்) நானும் கலந்துகொண்டிருந்தோம். தோழர் சுனிமெல் தனது கருத்துக்களையும், தனக்கு தென்னிலங்கையில் இருக்கும் பாதுகாப்புப் பிரச்சனைகளையும் எடுத்துக் கூறியதோடு "தீப்பொறி"க் குழுவுடன் இணைந்து செயற்பட விரும்பும் தனது முடிவையும் கூடவே தெரிவித்திருந்தார்.

தோழர் சுனிமெல்லினுடைய கருத்துக்களை செவிமடுத்த டொமினிக் (கேசவன்) "தீப்பொறி" செயற்குழுவின் முடிவை தோழர் சுனிமெல்லிடம் தெரிவித்தார். அதாவது, சுனிமெல் தென்னிலங்கைக்கு சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்படுவதன் மூலம் அவர் ஒரு இனவாதியல்ல என நிரூபிக்க வேண்டும் என்பதே அம்முடிவாகும்.

டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட "தீப்பொறி" ச் செயற்குழுவின் முடிவைக் கேட்டுக்கொண்டிருந்த தோழர் சுனிமெல் சற்றுப் பொறுமையிழந்தவராக உணர்ச்சிவசப்பட்டவரானார். "அப்படியானால் என்னை ஒரு இனவாதி என்கிறீர்களா?" என அவரால் அடக்கிக்கொள்ள முடியாத ஆவேசத்துடன் எம்மீது கேள்வி எழுப்பினார்.

"இனவாதி என்று நாம் உங்களைக் கூறவில்லை, சிங்கள மக்கள் மத்தியில் சென்று செயற்படுமாறு தான் கூறுகிறோம்" என டொமினிக்(கேசவன்) தோழர் சுனிமெல்லுக்குப் பதிலளித்தார்.

ஆனால், நாம் தோழர் சுனிமெல்லிடம் கூறிய கருத்து அல்லது செயற்குழுவின் முடிவு எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததொன்றாகும்.

"தென்னிலங்கை சென்று சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு தோழர் சுனிமெல் ஒரு இனவாதியல்ல என்று நிரூபிக்க வேண்டும்" என்பதானது முழுமையான இனவாதக் கருத்தேதான் என்பதை ஒரு பள்ளிச் சிறுவனால் கூடப் புரிந்து கொள்ள முடியும்.

இத்தகையதொரு கருத்துக்கு நாம் எவ்வளவு தான் கவர்ச்சிகரமாக விளக்கம் கொடுத்தாலும் அதன் சாராம்சம் அல்லது அதன் கருப்பொருள் இனவாதமே தான்.

டொமினிக்கால் (கேசவன்) தெரிவிக்கப்பட்ட செயற்குழுவின் முடிவால் தனது பொறுமையை இழந்தவராகக் காணப்பட்ட தோழர் சுனிமெல் "தீப்பொறி"க் குழு குறித்த தனது கருத்தை முன்வைத்தார்.

"நீங்கள் இடதுசாரிகள் அல்ல, பச்சை இனவாதிகள்" என தோழர் சுனிமெல் எம்மை விமர்சித்தார்.

"உங்கள் போன்றவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறுவதைவிட நான் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டாலோ, அல்லது ஜே.வி.பியால் கொலை செய்யப்பட்டாலோ கூடப் பரவாயில்லை தென்னிலங்கைக்கு செல்கிறேன்" எனக் கூறிய தோழர் சுனிமெல் எம்முடனான சந்திப்பை இடையில் முறித்துக் கொண்டவராய் தென்னிலங்கைக்கு புறப்பட்டுச் சென்றார்.
(ஒரு தீப்பொறித் தோழரின் சுயவிமர்சனம் - April 06, 2012 )

புலிகள் தலையெடுத்து முழுச் சமூக சூழ்நிலைகளையும் தம் சமூகப் பாஸிச கொலைக் கலாச்சார நடைமுறையில், கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் கொண்டு வந்த நிலையில் தீப்பொறி ஒரு பெருப்பிக்கப்பட்ட, சக்திவாய்ந்த அரசியல் அமைப்பாக வெளிநாட்டு அரசியல் ஆர்வலர்கள், இயக்கங்களிலிருந்து விலகியும் அதிருப்தி அடைந்து ஒதுங்கியோர் மத்தியிலும் ஒரு தோற்றப்பாட்டைக் கொண்டிருந்தது.

ஆனால் அவர்கள் தம்மையே காப்பாற்றிக்கொள்ள முடியாத, அடுத்தவர் தயவில் அனுசரணையோடு இருக்கும் நிலையில் அவர்களை நம்பி வந்த தென்னிலங்கை சிங்கள முற்போக்கு சக்திகளுக்கு எப்படியான தப்பித்தல் வழிகளைக் காட்டி நின்றனர் என்பதற்கு இந்தச் சுய விமர்சனம் ஒரு எடுத்துக்காட்டு.

ஒரு அரசியற் தந்திரோபாயம் என்ற அளவிற்கூட இதற்கு எவ்வித பெறுமானமுமில்லை. தீப்பொறியின் அறிவிக்கை ஒரு அரசியற் குழப்பமான சிறு குழுவொன்றின் அனாதைத் தனமான பொறுப்பற்ற பிரலாபம் . அவர்களால் எப்படியேனும் தம்மைத் தகவமைக்க முடியவில்லை. இதில் அடுத்தவரைக் காப்பாற்றிப் பேணும் சால்பிற்கு எங்கு நோக !

அபத்தம் இதழுக்காக சுகன்


Read more...

Tuesday, February 13, 2024

மாவை யின் பொறுத்துக்கொள்ளமுடியாத சுயநலம். சிறிதரனும் சுமந்திரனும் வீடுதேடிச் சென்று மூச்சில் குத்தினர். டி.பி.எஸ்.ஜெயராஜ்

கடந்த பத்து வருடங்களாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்துவந்த மாவை சேனாதிராஜா ஜனவரி 21 திருகோணமலை நகர மண்டபத்தில் கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பின்னரும் நிலைவரம் எல்லாம் ஏதோ பழைய மாதிரியே இருப்பது போன்ற நினைப்பில் இருக்கிறார். கௌரவமான முறையில் பதவியில் இருந்து இறங்காமல் அவர் தொடர்ந்தும் தொங்கிக்கொண்டிருக்கிறார்.

தமிழரசு கட்சி 2022 ஆம் ஆண்டு வரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியாக இருந்தது. வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள சகல ஐந்து மாவட்டங்களிலும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் ஒரேயொரு தமிழ்க் கட்சியாக தமிழரசு கட்சியே விளங்குகிறது. ‘ சமத்துவமான கட்சிகளில் முதலாவது ‘ என்ற அந்தஸ்தை அனுபவித்துவந்த போதிலும், அந்த கட்சி அண்மைக்காலமாக நகைப்புக்கிடமானதாக மாறிவிட்டது. இந்த நிலைக்கு சேனாதிராஜாவின் சுயநல நடத்தை பெருமளவுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறது.

மாவை சேனாதிராஜா மொத்தமாக ஒரு ஐந்து வருடங்கள் பாராளுமன்றத்தில் தேசியப்பட்டியல் உறுப்பினராக அங்கம் வகித்தார். பிறகு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவாகி 20 வருடங்களாக யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் மொத்தமாக 25 வருடங்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தார்.2014 தொடக்கம் 2024 வரை பத்து வருடங்களாக தமிழரசு கட்சியின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். அதற்கு முதல் கட்சியின் பொதுச் செயலாளராகவும் செயற்பட்டார்.

தமிழரசு கட்சியின் தலைவர்கள் இரு பதவிக் காலங்களுக்கும் அதிகமாக பதவியில் தொடர்ந்து இருக்காத ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது.2010 ஆம் ஆண்டில் தலைவராக வந்த முதுபெரும் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டில் பதவியில் இருந்து இறங்கினார். அவர் தலைவராக இருந்த காலத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மாவை சேனாதிராஜா 2014 ஆம் ஆண்டு் தலைவரானார்.

இரு பதவிக்காலங்களுக்கு பிறகு 2018 ஆம் ஆண்டில் தலைவர் பதவியில் இருந்து அவர் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அவ்வாறு செய்யவில்லை. 2014 — 2024 காலப்பகுதியில் அவர் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்தார். தமிழரசு கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ச்சியாக பத்து வருடங்களாக நீடித்த ஒரே அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவே ஆவார். கட்சியின் தாபகத் தலைவரான மதிப்புக்குரிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ( தந்தை செல்வா ) கூட அவ்வாறு பல வருடங்கள் தலைவராக இருந்ததில்லை.

தமிழரசு கட்சியின் மகாநாடு

சுமார் ஒரு தசாப்தகாலமாக ” நல்ல வழியோ, கெட்ட வழியோ எப்படியாவது ” மாவை தமிழரசு கட்சியின் தலைவராக இருந்துவிட்டார். புதிய ஒரு தலைவர் கட்சியின் பொது மகாநாட்டில் வைத்து பொதுச் சபையினாலும் மத்திய செயற்குழுவினாலும் தெரிவுசெய்யப்படுவதும் இரு வருடங்களுக்கு ஒரு முறை மகாநாடு நடத்தப்படுவதும் வழமை. ஆனால், 2014 மகாநாட்டில் மாவை சேனாதிராஜா தலைவராக தெரிவுசெய்யப்பட்ட பிறகு அடுத்த மகாநாடு 2019 ஆண்டில் மாத்திரமே நடத்தப்பட்டது. அந்த ஆண்டிலும் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவான பிறகு இன்னொரு ஐந்து வருடங்களாக 2024 வரை அவரால் மகாநாட்டை ஒத்திவைக்கக்கூடியதாக இருந்தது.

2024 ஜனவரியில் மகாநாட்டை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டபோது தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு உட்கட்சித் தேர்தல் ஒன்று நடக்கப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தலைவரைத் தெரிவுசெய்வதற்கு தமிழரசு கட்சி தேர்தலைத் தவிர்த்து கருத்தொருமிப்பின் அடிப்படையிலான நடைமுறை ஒன்றே பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டுவந்த நிலையில் தலைவர் தெரிவுக்கு உட்கட்சி தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது இதுவே முதற்தடவை. போட்டித் தேர்தல் கட்சியைச் சிதறடித்துவிடும் என்ற அச்சம் கட்சி வட்டாரங்களில் நிலவியது. அந்த அச்சம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

இந்த அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டிய மாவை சேனாதிராஜா இடைக்காலத் தலைவராக தானே பதவியில் தொடர்ந்துகொண்டு மகாநாட்டை காலவரையறையின்றி ஒத்திவைக்கலாம் என்று யோசனையை முன்வைத்தார். அவரின் அதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்பியதால் அவரது யோசனையை ஏற்பதற்கு எவரும் இருக்கவில்லை. அதனால் தி்ட்டமிட்டபடி ஜனவரி 21 தமிழரசு தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. இன்னொரு யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனை சிவஞானம் சிறிதரன் 47 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்டார்.

அதற்குப் பிறகு புதிய மத்திய செயற்குழுவும் கட்சியின் புதிய நிருவாக உறுப்பினர்களும் ஜனவரி 27 ஆம் திகதி தெரிவு செய்யப்படவிருந்தனர். மறுநாள் மகாநாட்டின் பொதுகூட்ட்டத்தில் பழைய தலைவர் சம்பிரதாயபூர்வமாக பதவியில் இருந்து இறங்கவும் புதிய தலைவர் பொறுப்பை ஏற்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது. பொதுச்செயலாளர் உட்பட புதிய நிருவாகிகளும் அன்னறயதினம் அறிமுகம் செய்யப்படவிருந்தனர்.

தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டவுடன் பழைய தலைவரின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. தலைவராக தெரிவுசெய்யப்பட்டவர் தன்னியல்பாகவே புதிய தலைவராகிவிடுவார். அடுத்த நாள் மகாநாட்டில் முறைப்படி பதவிப்பொறுப்பைக் கையளிப்பது என்பது வெறுமனே அடையாளபூர்வமான ஒரு சம்பிரதாய நிகழ்வு மாத்திரமே.

ஆனால், ஜனவரி 27 தமிழரசு கட்சிக்குள் குழப்பம் மூண்டது. ஆரம்பத்தில் சிறிதரன் சுமந்திரனுக்கு நேசக்கரம் நீட்டி இருவரும் சேர்ந்து பணியாற்றும் நிலை தோன்றியது. ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மத்திய செயற்குழு புதிதாக அமைக்கப்பட்டது. அடுத்து 2024 — 2026 காலப்பகுதிக்கான கட்சியின் புதிய நிருவாகிகள் பட்டியலும் இறுதிசெய்யப்பட்டது.

பொதுச்செயலாளர்

இந்த நிருவாகிகளில் முக்கியமான செயலாளர் பதவியும் அடங்குகிறது. 16 நிருவாக உறுப்பினர்கள் பட்டியலும் மத்திய செயற்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த பட்டியல் பொதுச்சபைக்கு ஒரு தீர்மானமாக முன்வைக்கப்பட்டது. புதிய தலைவர் சிறிதரனின் முன்மொழிவை குழு உறுப்பினரான பீட்டர் இளஞ்செழியன் வழிமொழிந்தார். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அடுத்து சில கலந்தாலோசனைக்கு பிறகு பொதுச்சபையும் அதை அங்கீகரித்தது.

தலைவர்,செயலாளர் என்ற முக்கிய பதவிகளை வடக்கையும் கிழக்கையும் சேர்ந்தவர்கள் பகிர்ந்துகொள்வது தமிழரசு கட்சியில் ஒரு நடைமுறையாகப் பின்பற்றுப்பட்டு வருகிறது. வட மகாணத்தைச் சேர்ந்தவர் தலைவராக இருந்தால் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். கிழக்கு மாகாணத்தவர் தலைவராக இருந்தால் வட மாகாணத்தைச் சேர்ந்தவர் செயலாளராக இருப்பார். சிறிதரன் வடமாகாணத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயலாளர் கிழக்கு மாகாணத்தவராக இருக்கவேண்டும். சிறிதரனின் நெருங்கிய ஆதரவாளரான முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் செயலாளர் பதவி மீது கண்வைத்திருந்தார். ஆனால் அவருடன் சிறிதரன் பேசி திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சி தலைவரான சண்முகம் குகதாசன் செயலாளராகுவதற்கு வழிவிட இணங்கவைத்தார்.

மதிய உணவுக்கு பிறகு கூட்டம் மீண்டும் தொடங்கியபோது மனமாற்றம் ஒன்று ஏற்பட்டுவிட்டது போன்று தெரிந்தது. தானே செயலாளராக வரவேண்டும் என்று தனது நலன் விரும்பிகள் விரும்புவதால் குகதாசனை செயலாளராக ஏற்றுக்கொள்ளமுடியாது என்று சிறீநேசன் கூறினார். சுமந்திரனின் ஆதரவாளராக குகதாசன் தவறாக கருதப்பட்டதால் சிறிதரனின் பல ஆதரவாளர்களும் அவரை கண்டனம் செய்ததுடன் செயலாளராக அவரை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறினர்.

பொதுச்செயலாளர் உட்பட முழு நிருவாகிகள் பட்டியலும் ஏற்கெனவே மத்திய செயற்குழுவினாலும் பொதுச்சபையினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததனால் இப்போது அதை வாக்கெடுப்புக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ‘தேர்தலை ‘ நடத்திவைக்குமாறு பதவி விலகும் தலைலர் சேனாதிராஜாவும் புதிய தலைவர் சிறிதரனும் சுமந்திரனைக் கேட்டு்க்கொண்டனர்.

பட்டியலை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை பொதுச்சபை உறுப்பினர்கள் தங்கள் கைகளை உயர்த்தி வாக்களிப்பதன் மூலம் தெரிவிக்கலாம் என்று சுமந்திரன் கேட்டுக்கொண்டார். ‘ஆம் ‘ என்ற வாக்குகளும் ‘ இல்லை ‘ என்ற வாக்குகளும் வரிசை வரிசையாக எண்ணப்பட்டன. சுமந்திரன் கைகளை எண்ணிக்கொண்டிருந்தபோது சிறிதரனின் உறுதியான ஆதரவாளரான நாவலனும் தனியாக கணக்கெடுத்தார். இருவரதும் எண்ணிக்கைகள் ஒன்றாகவே இருந்தன.

சண்முகம் குகதாசன்

செயலாளர் சண்முகம் குகதாசன் உட்பட நிருவாகிகள் பட்டியலுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதன் மூலமாக தமிழரசு கட்சியின் புதிய செயலாளர் குகதாசன் என்பது உறுதிசெய்யப்பட்டது. அதையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்தது. தமிழரசு கட்சியின் மகாநாடு மறுநாள் நடக்கவிருந்தது. புதிய தலைவரும் செயலாளரும் நிருவாகிகளும் பொதுமக்கள் முன்னிலையில் வைபவரீதியாக பதவிகளை ஏற்றுக்கொள்ளவிருந்தனர்.

தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கலைந்து சென்றுகொண்டிருக்கையில், பொதுச்சபை உறுப்பினர்களில் ஒரு குழுவினர் மாவை சேனாதிராஜாவை அணுகி குகதாசனை செயலாளராக தங்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினர். புதிய தேர்தல் ஒன்று நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர்கள் ஜனவரி 28 கட்சியின் மகாநாடு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தினர்.

சேனாதிராஜா அப்போது “விசித்திரமான ” முறையில் நடந்துகொண்டார். புதிய தலைவர் சிறிதரனைக் கலந்தாலோசிக்காமல் முன்னாள் தலைவர் மாவை அடுத்த நாள் நடைபெறவிருந்த மகாநாடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். செயலாளர் பதவி தொடர்பில் தகராறு ஒன்று இருப்பதால் புதிய தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்றும் அதற்குப் பிறகு மாத்திரமே மகாநாடு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

இன்னமும் கூட தானே கட்சியின் தலைவர் என்ற மாயையில் மாவை இருக்கிறார் போன்று தெரிந்தது. மாகாநாட்டில் மாத்திரமே சிறிதரன் உத்தியோகபூர்வமாக பதவியேற்பார் என்று மாவை நினைத்தார் போன்று தோன்றியது. அதனால் மகாநாட்டை ஒத்திவைத்ததன் மூலம் அவர் தனது தலைவர் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்படுவதாக நினைத்தார்.

சிறிதரனும் சுமந்திரனும் மாவையின் வீடுதேடிச் சென்று மூச்சில் குத்தினர்

சிறிதரனும் சுமந்திரனும் ஜனவரி 28 சேனாதிராஜாவை சந்தித்தனர். தமிழரசு கட்சியின் யாப்பின் பிரகாரம் உண்மை நிலைவரம் என்ன என்பதை ஜனாதிபதி சட்டத்தரணியான சுமந்திரன் அந்த சந்திப்பில் சேனாதிராஜாவுக்கு தெரியப்படுத்தினார். ஜனவரி 27 மத்திய செயற்குழு கூட்டத்துக்கு பிறகு சேனாதிராஜா தலைவர் பதவியில் இல்லாமற்போய்விட்டார் என்று சுமந்திரன் சுட்டாக்காட்டினார். மகாநாடு நடத்தப்படுமோ இல்லையோ சிறிதரன் தான் இப்போது கட்சியின் தலைவர். அதனால் சேனாதிராஜாவினால் ஒருதலைப்பட்சமாக மகாநாடு ஒத்திவைக்கப்பட்டது செல்லுபடியாகாது.

பொதுச் செயலாளராக குகதாசனின் தெரிவும் சட்டத்தில் செல்லுபடியாகும் என்றும் சுமந்திரன் வலியுறுத்திக்கூறினார். மத்திய செயற்குழு அதை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது. பொதுச்சபையும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. பிறகு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது ஆதரவாக 112 வாக்குகளும் எதிராக 104 வாக்குகளும் கிடைத்தன. அதனால், புதிய செயலாளரைத் தெரிவுசெய்யவேண்டியிருக்கிறது என்ற சாக்குப்போக்கில் மகாநாட்டை சேனாதிராஜா ஒத்திவைத்தது சரியானதல்ல.

சுமந்திரனின் விளக்கத்தை சேனாதிராஜா ஏற்றுக்கொள்ளவில்லை. தானே இன்னமும் கட்சியின் தலைவர் என்ற நிலைப்பாட்டை அவர் எடுத்தார். தனது மகனின் திருமணத்துக்காக சிங்கப்பூர் செல்வதாகவும் பெப்ரவரி 10 ஆம் திகதியே நாடு திரும்பவிருப்பதாகவும் அவர் கூறினார். நாடு திரும்பியதும் பொதுச்சபையைக் கூட்டி பிரச்சினையைத் தீர்ப்பதாக அவர் கூறியது சிறிதரனுக்கும் ஏற்புடையதாக இருந்தது. சிறீநேசனை ஆதரிக்கும் தனது ஆதரவாளர்களின் நெருக்குதலின் கீழ் சிறிதரன் இருந்தார்.

சேனாதிராஜாவின் யோசனை தமிழரசு கட்சியின் யாப்புக்கு முரணானது என்று சுமந்திரன் அப்போது கூறினார். அதற்கு சேனாதிராஜா ” கட்சியின் யாப்பின் பிரகாரம் எல்லாவேளையிலும் நடக்கவேண்டும் என்றில்லை” என்று பதிலளித்தார். கட்சியின் யாப்பை மீறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அதனால் சட்டரீதியான விளைவுகள் ஏற்படலாம் என்றும் சுமந்திரன் கூறிவைத்தார். வார்த்தைகளில் கூறாமல் சிறிதரன் குறிப்பால் உணர்த்திய ஆதரவுடன் மாவை சுமந்திரனின் ஆலோசனையை அலட்சியம் செய்துவிட்டு சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார்.

சட்டரீதியான நிலைப்பாடு

அதைத் தொடர்ந்து தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பற்றிய சட்டரீதியான நிலைப்பாட்டை விளக்கி சுமந்திரன் சிறிதரனுக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். சிறிதரனே தற்போது தலைவர் என்றும் சாத்தியமானளவு விரைவாக அவர் வைபவரீதியாகப் பதவியை ஏற்கவேண்டும் என்றும் சுமந்திரன் கடிதத்தில் வலியுறுத்தினார். கடிதம் ஊடகங்களுக்கும் வெளியிடப்பட்டது. தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். சிவராஜாவுக்கு சுமந்திரன் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றையும் வழங்கினார். ‘நெற்றிக்கண்’ அலைவரிசையில் ஔிபரப்பான அந்த நேர்காணலில் அவர் தமிழரசு கட்சியின் சர்ச்சைக்குரிய விவகாரங்கள் தொடர்பில் சட்டரீதியான நிலைப்பாட்டை மிகவும் விரிவாக விளக்கினார்.

அடிப்படை தமிழ் மொழியறிவும் கொஞ்சமேனும் பொது அறிவும் இருக்கும் எவரும் சுமந்திரனின் கடிதத்தையும் வாசித்து தொலைக்காட்சி நேர்காணலையும் பார்த்தால் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவு தொடர்பிலான நற்போதைய சட்ட அடிப்படையிலான நிலைப்பாட்டை எளிதாக விளங்கிக்கொள்ளமுடியும். ஆனால் மாவை அநாவசியமாக பிரச்சினையைத் தேடிக்கொண்டார் போன்று தெரிகிறது. செயலாளர் பதவி தொடர்பிலான தகராறு நீண்ட ஒரு காலத்துக்கு தானே தலைவர் பதவியில் தொடருவதற்கு வாய்ப்பாக அமையும் என்ற மருட்சியில் அவர் இருக்கிறார். சாத்தியமானளவு காலத்துக்கு கட்சியின் அதிகாரத்தை தன்வசம் வைத்திருப்பதில் மாவைக்கு இருக்கும் பேராசையை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அவரது நடத்தை கண்டிக்கத்தக்கது என்றாலும் விளங்கிக் கொள்ளக்கூடியதே.

ஒருதலைப்பட்சமான தனது நடவடிக்கையின் விளைவாக ஏற்படக்கூடிய சட்டரீதியான விளைவுகளை சேனாதிராஜா புரிந்துகொள்ளவில்லை. சட்டரீதியான தலைவராக இல்லாதபோது தமிழரசு கட்சியின் தலைவரின் அதிகாரங்களையும் கடமைப் பொறுப்புக்களையும் கையகப்படுத்துவது சாதாரண விடயம் அல்ல. தமிழரசு கட்சியின் யாப்பை மீறுவதற்கு தயாராயிருப்பது போன்று பேசுவது மேலும் மோசமானதாகும்.

இந்த கட்டத்தில் பெரிதாக ஊகங்களைச் செய்யவேண்டியதில்லை, ஆனால் விவகாரம் நீதிமன்றத்துக்குப் போனால் சேனாதிராஜா பெரும்்ஆபத்தில் சிக்கிக்கொள்ளக்கூடும். மகாநாட்டை திடீரென்று ஒத்திவைத்ததன் விளைவாக ஏற்கெனவே கட்சிக்கு பெரும் பணவிரயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரம் இல்லாமல் மகாநாட்டை சட்டவிரோதமாக ஒத்திவைத்ததன் மூலம் ஏற்பட்ட இழப்புக்களை பொறுப்பேற்கவேண்டிய நிலைக்கு மாவை தள்ளப்படலாம். மேலும் தலைவர் தெரிவு உட்பட கட்சியின் தேர்தல் முழுவதுமே செல்லுபடியற்றது என்று பிரகடனம் செய்யப்படக்கூடும். அவ்வாறு நேர்ந்தால் அதற்கு மாவையே பிரதான காரணம்.

ஜனவரி 21 கட்சி தலைவர் தேர்தல் நடைபெற்றபோது சேனாதிராஜாவே தலைவராக இருந்தார். மத்திய செயற்குழுவுக்கு மேலும் 18 உறுப்பினர்களை நியமிப்பதற்கு அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தார். அது கட்சியின் யாப்புக்கு எதிரானது. ஆனால் கட்சி யாப்பின் விதிமுறைகளை பின்பற்றுவதில் நம்பிக்கை இல்லாத சேனாதிராஜா அந்த நியமனங்களை தன்னெண்ணப்படி அடாத்தாகச் செய்தார்.

மகன் கலையமுதன்

மத்திய செயற்குழுவுக்கு சட்டவிரோதமாக நியமிக்கப்பட்டவர்களில் சேனாதிராஜாவின் மகன் கலையமுதனும் அவரது மாமியார் சசிகலா ரவிராஜும் அடங்குவர். சசிகலா கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் மனைவியாவார். அவர்களின் மகள் பிரவீனாவையே கலையமுதன் மணம் முடித்திருக்கிறார்.

இரு முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகனுக்கும் மகளுக்கும் இடையிலான பந்தம் குடும்பத்தாருக்கு ஆதரவும் சலுைகையும் அளிப்பதாக மாவைக்கு எதிராக குற்றச்சாட்டு கிளம்புவதற்கு வழிவகுத்திருக்கிறது. புதிய ஒரு அரசியல் வம்சத்தை உருவாக்கும் ஒரு முயற்சியாக சேனாதிராஜா தனது மகனை அரசியலில் ஊக்குவிக்கிறார் என்று அவருக்கு எதிரானவர்கள் ஏற்கெனவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள். வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினராக கலையமுதன் தெரிவுசெய்யப்பட்டார். அந்த பிரதேச சபையின் தலைவராக அவரைத் தெரிவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் தமிழரசு கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவராக கலையமுதனை கொண்டுவருவதற்கான இன்னொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டன. சேனாதிராஜாவும் சசிகலாவும் 2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடனர் எனினும் வெற்றிபெறவில்லை. கலையமுதன் வலிகாமம் வடக்கில் வீதியொன்றுக்கு தனது பெயரைச் சூட்டவைத்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அரசியலில் சேனாதிராஜாவின் சுயநலச் செயல்களுக்கு பல சம்பவங்களைக் கூறமுடியும். 2020 பாராளுமன்ற தேர்தலில் உதயன் பத்திரிகை உரிமையாளர் சரவணபவனுடன் அணிசேர்ந்துகொண்டு தமிழரசு கட்சியின் சகபாடி வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்தது அவற்றில் ஒன்று. ஏனைய தமிழ்க்கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு தனது சொந்த தமிழரசு கட்சியின் நலன்களுக்கு எதிராக சேனாதிராஜா அடிக்கடி துரோகத்தனமாகச் செயற்பட்டிருக்கிறார். இன்பதுன்பம் கலந்த நீண்டகால அரசியல் வாழ்வொன்றில் சேனாதிராஜாவுக்கு நிலையான நண்பர்களோ அல்லது எதிரிகளோ இல்லை. ஆனால், ஒரு சுயநலத்துடன் கூடிய நிலையான நலன்கள் இருக்கின்றன.

மாவையின் கடந்த காலம்

தமிழரசு கட்சியில் மாவை சேனாதிராஜாவின் கடந்தகாலத்தை இரு பகுதிகளாக பிரிக்கலாம். முதலாவது பகுதி அவரின் வாழ்வின் தொடக்ககாலத்துடன் தொடர்புடையது. இளைஞனாக பல போராட்டங்களில் பங்கேற்று அரசியல் காரணங்களுக்காக சிறைசென்ற அவர் கணிசமான தியாகங்களைச் செய்திருக்கிறார். இந்தியாவில் சுய அஞ்ஞாதவாசம் செய்த காலப்பகுதி பல்வேறு வழிகளில் கடுமையான இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது. அதை நான் நேரடியாக கண்டேன்.

அவரது வாழ்வின் இரண்டாவது பகுதி வித்தியாசமானது. இந்த பகுதியில் சேனாதிராஜா பழைய காலத்து இலட்சியவாதியாக நடந்துகொள்ளவில்லை. அரசியலில் உயர்மட்டத்தில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராயிருக்கும் ஒரு சுயநல அரசியல்வாதியாக மாறினார். அமிர்தலிங்கம் கொலைசெய்யப்பட்தை அடுத்து தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தனக்கு தரவேண்டும் என்று கோரியது தொடக்கம் 2020 தேர்தல் தோல்விக்கு பிறகு தேசியப்பட்டியல் உறுப்பினராக வருவதற்கு அருவருக்கத்தக்க முறையில் மேற்கொண்ட முயற்சி வரை அரசியல் பதவியைப் பெறவதில் தனக்கு இருக்கும் சுயநல வேட்கையை சேனாதிராஜா வெளிக்காட்டினார்.

அவர் இவ்வாறு நடந்துகொள்வதற்கு கட்சியும் கட்சி உறுப்பினர்களும் ஏன் இடங்கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. பொறுத்துக் கொள்ளமுடியாத சுயநலத்தை ஏன் அவர்கள் பொறுத்துக் கொண்டார்கள்? அதற்கு பதில் சேனாதிராஜாவின் கடந்த காலமே. தியாகங்கள் நிறைந்த அவரின் இளமைக்காலப் போராட்ட வாழ்வை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டிக்கவோ விமர்சனம் செய்யவோ தயங்குகிறார்கள். தற்போது அவர் எவ்வாறு நடந்துகொண்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் கடந்த காலத்தைப் பற்றியே நினைக்கும் அவர்கள் தொடர்ந்தும் அவர் மீது அனுதாபம் காட்டுகிறார்கள். இந்த கட்டுரையாளரும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலை வரும்வரை ” சேனாதி அண்ணை ” மீது அன்புகொண்டிருந்தவர்களில் ஒருவரே!

Read more...

Monday, February 12, 2024

இந்தியாவிற்கு ஜேவிபி சென்றது இதுதான் முதற்தடவை அல்ல. இந்திய விரிவாக்க கொள்கை கைவிடப்பட்டு தசாப்பதங்கள்.

தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் தோழர் அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினருக்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் மற்றும் வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா ஆகியோருடன் பேச்சுவார்த்தைக்காக இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்விஜயத்தின்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் ஆகியவை தொடர்பாக கவனம் செலுத்தும் வகையிலான நேர்மறையான மற்றும் பயனுள்ள உரையாடல்கள் நடத்தப்பட்டதாக கலாநிதி ஜெய்சங்கரின் சமூக ஊடகப் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு அனுராவுக்கு என்பதை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளதா?

தோழர் அநுரகுமார ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) தலைவராகவும் உள்ளார். அவரின் இந்த சமீபத்திய விஜயமானது அரசியல் ஆய்வார்களால் பெரிதும் விவாதிக்கப்பட்டு விமர்சிக்கப்பட்டாலும், ஜனதா விமுக்தி பெரமுன இந்திய அரசாங்கத்துடன் தொடர்புகொண்டு செயற்பட்டது இதுதான் முதல் தடவை அல்ல. தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி.யுடன் தொடர்புடையவர்களின் சமூக ஊடகப் பதிவுகள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தோழர் அநுரவின் வெற்றியின் சாத்தியப்பாட்டிற்கு இந்தியா அளித்த அங்கீகாரமாக இந்த விஜயத்தை அர்த்தப்படுத்துகின்றன. இதற்கு முன்னர் ஜே.வி.பி.யானது போதுமான அளவு பலமான ஒரு அரசியல் சக்தியாக காணப்படாததாலேயே இராஜதந்திரிகள் அதனுடன் பெரிதாக ஈடுபாட்டைக் காட்டவில்லை. தேசிய மக்கள் சக்தியானது குறிப்பாக கீழ் நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிகளவு கவனத்தையும், புகழையும், நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளதால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

ரோஹன விஜேவீரவும் நரசிம்மராவை சந்தித்தார்.

நான் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளராகவும் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான பொலிட்பியூரோ உறுப்பினராகவும் இருந்தபோதுதான் இந்திய அரசாங்கத்துடன் ஜே.வி.பி.யின் முதல் தொடர்பு ஏற்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் நாங்கள் நல்லுறவைப் பேணி வந்தோம். எண்பதுகளின் தொடக்கத்தில் திரு.நரசிம்மராவ் இலங்கை வந்தபோது, ​​தோழர் ரோகண விஜேவீரவும் நானும் அவரைச் சந்திக்கச் சென்றோம். அந்தக் காலத்தில் "இந்திய விரிவாக்கம்" என்ற கொள்கையை நாம் கைவிட்டிருந்தோம். அது 1972 இலேயே கைவிடப்பட்ட அக்கருத்து 1984 க்குப் பிறகு ஜனதா விமுக்தி பெரமுனாவால் புத்துயிர் அளிக்கப்பட்டது.

பின்னாளில் ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கிய சோமவன்ச அமரசிங்க போன்ற முன்னணி தோழர்கள் கடும் இந்திய விரோதிகளாக இருந்ததோடு, இலங்கைக்கான இந்திய இறக்குமதிகளை தடை செய்யும் அளவிற்கு சென்றனர். ஆனால் நகைப்பிற்கிடமான காரணம் யாதெனில், தோழர் ஹென்றி விக்கிரமசிங்கவின் தலையீட்டின் மூலம் சோமவன்ச அமரசிங்க இலங்கையை விட்டு தப்பி இந்தியாவிற்குடாவே வெளியேறினார். மிக அண்மையில் இந்தியா, அமெரிக்கா மற்றும் பல வெளிநாடுகளைச் சேர்ந்த தூதர்கள் தேசிய மக்கள் சக்தி மற்றும் அதன் தலைவர்களை சந்தித்து உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், புவியியல் ரீதியாக இலங்கை இந்தியாவுடன் நெருக்கமாக இருப்பதால் குறிப்பிடத்தக்க கலாச்சார, பொருளாதார, வரலாற்று, அரசியல் மற்றும் புவிசார் மூலோபாய உறவுகளைப் பேணிவருகிறது. இலங்கை சமூகத்தின் பல அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதில் இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது. இன்று, இலங்கைத் தீவின் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேசத் துறையிலும் இது ஒரு சக்திவாய்ந்த நிலையாக மாறியுள்ளது. இந்தியா வல்லரசாக உருவெடுத்ததைக் கருத்தில் கொண்டு, தேசிய மக்கள் சக்தியும் ஜே.வி.பியும் இந்த யதார்த்தத்தை அங்கீகரித்து, இந்தியாவுடன் நல்லுறவை வளர்த்துக்கொள்வதில் அர்த்தமுள்ளது.

"இந்திய விரிவாக்கம்" என்ற கருத்து இனி இல்லை.

அண்மைய ஆண்டுகளில் ஜேவிபி புத்துயிர் பெற்று தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த முன்னணியை ஸ்தாபித்த பின்னர், "இந்திய விரிவாக்கம்" என்ற அரசியல் கோஷத்தை அவர்கள் பயன்படுத்துவதை நான் செவிமடுக்கவில்லை. ஒரு அரசியல் ஆர்வலராக, எனது மாவோயிஸ்ட் காலத்திலிருந்தே தோழர் மாவோ சேதுங் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தபோது அவர் முன்வைத்த "இந்திய விரிவாக்கம்" என்னும் கொள்கையுடன் நான் உடன்பட்டேன்.

எனினும், அக்கருத்து இந்திய தொழிலாள வர்க்கத்திற்கோ அல்லது இலங்கையில் வாழும் மலையக தொழிலாளர்களுக்கோ எதிரான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது நோக்கமாக இருக்கவில்லை. மாறாக இந்திய முதலாளித்துவத்தினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல், இலங்கையில் உள்ள தமது முதலாளித்துவ சகபாடிகளுடன் சேர்ந்து மலையக மக்கள் என்னும் காரணியையும் வைத்துக்கொண்டு இலங்கையின் மீது அவர்கள் ஏற்படுத்த முனையும் தாக்கங்கள் என்ன என்பதை பற்றி இலங்கையின் உழைக்கும் மக்களுக்கு போதிக்க நாங்கள் விரும்பினோம்.

இந்திய அமைதி காக்கும் படைகள்

1980 களில், குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தில் இருந்தபோதும், இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு ​​ஜே.வி.பி.யின் பலத்த எதிர்ப்பின் பிரதிபலிப்புகள், மற்றும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த பெரும்பாலான பெரிய, சிறிய அரசியல் அமைப்புகள் இலங்கையில் இந்திய தலையீட்டிற்கு எதிரான கருத்தில் இருந்தன என்பதும் இவ்விடத்தில் நினைவுகூரப்படுவது முக்கியமாகும். பௌத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மத பிரதிநிதிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் தற்போதைய பிரதமரின் மக்கள் ஐக்கிய முன்னணி (MEP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) மற்றும் அனைத்து மாவோயிஸ்ட் குழுக்களும் இருந்தன.

அதற்கு ஆதரவாக ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.சி.எஸ் ஹமீட் மற்றும் காமினி திஸாநாயக்க, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, ஸ்ரீலங்கா மக்கள் கட்சி (SLMP), மற்றும் ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி (CPC) போன்றவர்கள் இருந்தனர். மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி (LSSP). வடக்கு கிழக்கில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) மற்றும் பல சிறிய அரசியல் குழுக்களும் இருந்தன.

அன்றைய அரசின் பிரதமர் ஆர் பிரேமதாச மற்றும் அவரது கட்சியில் உள்ள ஏனையவர்களின் எதிர்ப்பையும் மீறி இந்திய அமைதி காக்கும் படையை (IPKF) இலங்கைக்கு அழைத்தவர் ஜனாதிபதி ஜெயவர்த்தன. ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த அமைச்சர் காமினி ஜயசூரிய, இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவையில் இருந்து விலகினார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு, பிரதமர் ஆர்.பிரேமதாச இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிரான இயக்கத்தின் தலைவராக ஆனார். அவர் IPKF படைகளை எதிர்கொள்ள தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கினார், இறுதியில் இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தார். பிரேமதாச ஆட்சியின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையின் தலைவராக இருந்தார். கொழும்பில் புறக்கோட்டை போதி மரத்துக்கு அருகில் இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் IPKF இராணுவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

13வது திருத்தம் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு இன்னும் மாறவில்லை.

விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கில் போரை நடத்திக் கொண்டிருக்க, ஜனதா விமுக்தி பெரமுனா தெற்கில் ஆயுதமேந்திய எதிர்ப்பை ஆரம்பித்த நிலையில், ஜனாதிபதி ஜெயவர்த்தன தலைமையிலான ஐ.தே.க ஆட்சி தனது அரசியல் பிழைப்புக்காக போராடிக் கொண்டிருந்தது. தேசியப் பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரத் தீர்வை உருவாக்கும் எண்ணம் ஆட்சியாளர்களுக்கு இருக்கவில்லை. 1987ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம், இலங்கை அரசின் ஒப்புதலுடன் இலங்கையில் ஏற்பட்டிருந்த மோதல் நிறைந்த சூழ்நிலையில் இந்திய அரசு இராணுவ ரீதியில் தலையிடும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் நாட்டின் ஒற்றையாட்சி அந்தஸ்து மற்றும் அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை அங்கீகரித்ததுடன், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டது. ஆனால் இந்திய- இலங்கை ஒப்பந்தம் இலங்கையின் தேசியப் பிரச்சனையை மேலும் மோசமாக்கியது.

ஆயினும்கூட, அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வு தேசிய பிரச்சினையில் இந்தியாவின் முக்கிய நிலைப்பாடு மாறாமல் உள்ளது.

இந்த உடன்படிக்கை ஒருதலைப்பட்சமாக மேலிருந்து திணிக்கப்பட்ட ஒன்றாகும். இது இலங்கை மக்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆலோசனை செயல்முறையின் விளைவாக கொண்டுவரப்பட்டதொன்றல்ல. IPKF இராணுவத்தின் வருகை மற்றும் இந்திய இலங்கை ஒப்பந்தம் மூலம் இந்தியா மேற்கொண்ட தலையீட்டிற்கு எதிராக பல அரசியல் ஸ்தாபனங்கள் காட்டிய எதிர்ப்பை இந்த வகையிலலேயே நாம் புரிந்து கொள்ள முடியும். அதேவேளை இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நியாயமான மற்றும் நீண்டகால நோக்கிலான ஒரு தீர்வை உருவாக்குவதற்கும் அதனை அமுல்படுத்துவதற்கும் எந்தவொரு உண்மையான, நேர்மையான முயற்சிகளையும் எடுக்காததற்காண பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் நிறுவனங்களும் ஏற்க வேண்டும்.

அறுபதுகளில் இருந்த காலம் இப்போது மாறிவிட்டது .

1983 - 1987 காலப்பகுதியில் "இந்திய விரிவாக்கம்" மற்றும் "இந்திய எதிர்ப்பு" போன்ற அரசியலை புரிந்துகொள்ள அக்காலத்தின் உலகளாவிய சமூக-பொருளாதார மற்றும் அரசியல் சொல்நிலைமைகள் பற்றி விவாதிக்காமல் புரிந்து கொள்ள முடியாது. கடந்த காலத்தை மீளப் பார்க்கும் போது அவற்றை நேர்மையாகவும் விமர்சனரீதியாகவும் பார்க்க வேண்டும் எனக் கூறுவதானால், அக்காலத்தில் இருந்த அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளையும் அதே அடிப்படையில் ஆராய வேண்டும். இன்று நாட்டில் நிலவும் விரும்பத்தகாத சூழ்நிலையில் இது மிகவும் முக்கியமானது. இருப்பினும், இந்த அத்தியாவசியமான பணியைச் செய்யத் தொடங்குவதற்கு எந்த ஒரு அரசியல் நிறுவனமும் அதற்குரிய தைரியத்துடனும் நேர்மையுடனும் இருப்பதாகத் தெரியவில்லை.

1960 களில், ஜே.வி.பி மட்டுமல்ல, ஏனைய அனைத்து மாவோயிஸ்ட் குழுக்களும் 'இந்திய ஆதிக்க விரிவாக்கம்' என்ற கருத்தை ஏற்றுக்கொண்டன. அந்தக் காலங்கள் மாறிவிட்டன. நவதாராளவாதத்திற்கே உரித்தான இயல்பான அகவயமான இயல்பு காரணமாக, அதன் முக்கிய பங்காளிகள் அனைவரும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஒருவித் ஆதிக்க விரிவாக்க நிகழ்ச்சி நிரலில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அத்ததுடன் நடைமுறை அரசியலில், 1960கள், 1980கள் மற்றும் குறிப்பாக 1987 முதல் 2024 வரையிலான பிராந்திய மற்றும் சர்வதேச அதிகார சமநிலையில் ஏற்பட்ட மாற்றங்களை இப்போது கருத்தில் கொள்வது அவசியம்.

சோவியத் யூனியன் தலைமையிலான 'சோசலிச' முகாம் 1989ல் சரிந்தது. சீனா ஒரு புதிய உலகளாவிய இராணுவ மற்றும் பொருளாதார வல்லரசாக உருவெடுத்துள்ளது. இந்தியாவும் ஒரு பொருளாதார வல்லரசாக மாறி, சர்வதேச அரங்கில் ஒரு முக்கிய சக்தியா மிளிர இருக்க விரும்புகிறது. எனவே, இப்பகுதியில் சீன, இந்திய தலையீடும், சகிப்புத்தன்மை அற்ற நிலையம் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை.

தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக ஜே.வி.பி எதனை முன்வைக்கிறது என்பது மேலும் தெளிவுபடுத்தபட வேண்டும்

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் மாகாண சபைகள் என்பவற்றுக்கு தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) எதிர்ப்பு தணிந்துள்ளதாகத் தெரிகிறது. புதிய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் வரை இலங்கையின் அரசியலமைப்பு தளத்தில் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக அந்த 13ம் திருத்தத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்தகைய கட்டமைப்புரீதியான, யாப்பியல் ரீதியான மற்றும் அரசியலமைப்பு மாற்றங்கள் எதுவும் செயல்படுத்தப்படுமா என்பது இன்னமும் விவாதத்திற்கு உரியதாகவே உள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக அப் பிராந்தியத்தில் இந்தியா வகிக்கும் முக்கிய பங்கை ஜே.வி.பி அங்கீகரித்துள்ளது. எனது பார்வையில், இந்த முற்போக்கான நடவடிக்கைகள் 1980களின் பிற்பகுதியில் அவர்கள் எடுத்த நிலைப்பாடுகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. இருந்தபோதிலும், தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக ஜனதா விமுக்தி பெரமுன முன்வைக்கும் விடயம் மேலும் விருத்தி செய்யப்பட்டு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் ஆட்சிக்கு வர விரும்பும் எந்தவொரு அரசியல் கட்சியும் முடிந்தவரை பல நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக உயிர் பிழைப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது, குறிப்பாக இலங்கை அரசியலில் இந்தியாவும் சீனாவும் வகிக்கும் சக்திவாய்ந்த பாத்திரத்தின் காரணத்தினால் இந்து சமுத்திரத்தில், இலங்கை மக்களின் நலன்களுக்கு ஆதரவான அரசியல் நிகழ்ச்சி நிரலை பின்பற்றும் அதே வேளையில், இந்த இரண்டு வல்லரசுகளின் போட்டி நிகழ்ச்சி நிரல்களை எவ்வாறு நிர்வகிப்பது, கையாளுவது என்பதை ஆட்ச்சிக்கு வரும் எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது கூட்டணியோ கணத்தில் எடுக்க வேண்டும்.

இது அசாதாரணமானத சூழ்நிலைமை அல்ல.

ஒரு தேர்தல் ஆண்டில் தேசிய மக்கள் சக்தி பிரபலமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அவர்களின் இந்திய வருகையை அந்த அடிப்படையிலேயே கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய மத்திய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தியையும் அதன் தலைவரையும் அழைத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய அரசாங்கத்தின் கடந்தகால நடைமுறைகளைப் பொறுத்தவரை இது அசாதாரணமானதும் அல்ல. ஒரு ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, தேசிய மக்கள் சக்தியானது தமது கொள்கை உருவாக்கம், சமூக அணிதிரட்டல் மற்றும் பிரச்சாரம் போன்ற துறைகளில் நேரடியாக நுழைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும், ஆனால் அவர்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் உள்ளது. பிரச்சனைகள், குறைகள், தவறுகள், கடந்த காலத்தை பார்ப்பதை தவிர்த்தல் போன்றவற்றை தமக்குள் கலந்துரையாடல் செய்து நிவர்த்தி செய்துக்கொள்ளல் வேண்டும். எவ்வாறாயினும், இந்த முக்கியமான வரலாற்று சந்தியில், இலங்கையில் உள்ள முற்போக்காளர்கள் மத்தியில் எந்த ஒரு அரசியல் நிறுவனமும் ஒட்டுமொத்தமாக முழுமையானவை என்று சொல்வதற்கில்லை.

இப்பிராந்தியத்தில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டியைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியை கையாளுவதற்கு சீனாவும் அவர்களை அணுகினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கலாநிதி லயனல் போபகே - Dr. Lionel Bopage
ஜேவிபி இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினரும்1971ம் ஆண்டு நடத்தப்பட்ட இடதுசாரி ஆயுத கிளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவருமாவார்.

தமிழில் மனோரஞ்சன்


Read more...

Sunday, November 26, 2023

ஜனாதிபதி தேர்தல் பந்தயத்தில் வரவு செலவுத் திட்டம் 2024-.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தானே நிதிஅமைச்சர் என்ற வகையில் 2024ம் ஆண்டுக்கான அரச வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளார். அடுத்த ஆண்டு (2024) கிட்டத்தட்ட இதே நாட்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கு உரியவை. கௌரவ ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தான் ஜனாதிபதியாக வந்து விட வேண்டும் என்ற விருப்பதிலேயே தனது அனைத்து அரசியல் நகர்வுகளையும் மேற் கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிச்ததே. அந்த வகையில் இந்த வரவு செலவுத் திட்டமும் அதன் ஒரு பிரதானமான பாகமே என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதித் தேர்தல் நோக்கி பரந்துபட்ட மக்கள் மத்தியில் தனது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்கு அவர் இங்கு சில அறிவிப்புகளை – ஒதுக்கீடுகளை மேற்கொண்டுள்ளபோதிலும், அவருடைய விருப்பங்களையும் மீறிய வகையில் இருக்கும் தடைகளுக்கும் வரையறைகளுக்கும் உட்பட்டே அவற்றை தன்னுடைய இலக்கில் அவர் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வகையில் அவர் மேற்கொண்டுள்ளவைகள் மிகச் சிலவே.

1) அரச ஊழியர்கள் சுமார் 13 லட்சம் பேர் உள்ளனர். அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்று இளைப்பாறுபவர்களாக சுமார் 5 லட்சம் பேர் உள்ளனர் இவர்களையும் இவர்களது குடும்ப அங்கத்தவர்களாக உள்ள வாக்காளர்களையும் தனது வாக்கு வங்கியாக உறுதிப்படுத்திக்கொள்ளும் நோக்குடன், சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு ரூபா 10000 சம்பள உயர்வாக அறிவித்துள்ளார். அதேபோல ஓய்வு பெற்றுள்ளோருக்கு ரூபா 5000 உயர்த்தியுள்ளார்.

2) நாட்டின் மோசமான பொருளாதார நிலைமையின் காரணமாக அதிகரித்த வறுமையின் காரணமாக அரசாங்கம் அஸ்வேசும (ASWESUMA) என்னும் விசேட உதவித் திட்டத்தை தொடங்கியது. அதன் கீழ் வெவ்வேறு வகைப்பட்ட சுமார் 17 லட்சம் பேருக்கு ரூபா 2000 தொடக்கம் ரூபா 5000 வரை மாதாந்த கொடுப்பனவு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகிறது. மிக மோசமான வறுமை நிலையில் உள்ளோரென கிட்டத்தட்ட 60000 பேருக்கு ரூபா 15000 வழங்கி வருகிறது. இப்போது ஜனாதிபதி ரணில் அவர்கள் மேற்குறிப்பிட்ட ஒவ்வொருவருக்குமான மாதாந்த கொடுப்பனவை ரூபா 2500 ஆல் உயர்த்தியிருக்கிறார்.

ஆக மொத்தத்தில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி நாட்டு வாக்காளர்களில் சுமார் 37 லட்சம் பேருக்கு ருபா 2500 தொடக்கம் 15000 ரூபா வரை மாதாந்த முன் கொடுப்பனவுகளுக்கு இந்த வரவு செலவுத் திட்டம் மூலம் ஏற்பாடு செய்துள்ளார். இந்த அதிகரிப்புக்காக 2024ம் ஆண்டு சுமார் 20000 கோடி ருபாக்கள் செலவிடப்பட உள்ளன. இது தேர்தல் தந்திர ஒதுக்கீடா அல்லது நாட்டில் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை ஈடு செய்வதற்காகவே மக்களுக்கு இந்த ஒதுக்கீடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அரசியல் பொருளாதார அறிவுடையோரால் பகுத்தறிய முடியும்.

சுதந்திரமடைந்த காலம் தொட்டு, குறிப்பாக 1977ம் ஆண்டு தொடக்கம் அடுத்தடுத்து ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் ஒவ்வொன்றும் மேற்கொண்ட தப்பான பொருளாதார நிர்வாகம் காரணமாக நாட்டின் பிரதானமான பொருளாதார அமசங்கள் ஒவ்வொன்றிலும் பெருகி வந்த நெருக்கடிகள் 2022ம் ஆண்டு ஒரு பெரும் அரசியல் நெருக்கடியாக – பரந்துபட்ட மக்கள் எழுச்சியாக – அறகலய கிளர்ச்சியாக வெடித்தது. நாட்டின் பொருளாதாரம் வங்கிரோத்தானது - அந்நிய நாடுகள் முன்னால் மண்டியிட வேண்டிய நிலைக்கு உள்ளானது. இதையெல்லாம் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கா வெற்றி கொண்டு விட்டார் - நாட்டை நெருக்கடிகளிலிருச்து மீட்டு முன்னேற்றப்பாதையில் செலுத்தி விட்டார் என்றெல்லாம் அவர் பற்றி கூறப்படுகிறது – அவ்வாறு அவரது அரசாங்க சார்பானவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். அவ்வாறு கூறுவது – கருதுவது சரியானதல்ல என்பதை இந்த வரவு செலவுத் திட்டம் வெளிச்சமிட்டு காட்டுகிறது.

தொடர்ந்து கடனில் மூழ்கும் நாடு
கணக்கு விடும் விக்கிரம சிங்கன்

2022ம் ஆண்டு வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத வங்கிரோத்து நாடென இலங்கையை அரசாங்கம் அறிவித்த நாளிலிருந்து இன்று வரை வெளிநாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்ற கடனின் எந்தவொரு பகுதியும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. இதனால் வெளிநாட்டுக் கடன்கள் மட்டும் இலங்கையில் தேசிய வருமானத்தோடு ஒப்பிடுகையில் 65 சதவீதத்துக்கு மேலாகி உள்ளது. உள்நாட்டுக் கடன்களையும் சேர்த்தால் அது 140 சதவீதத்தை அண்மிக்கிறது. 2024ம் ஆண்டுக்கு அரசாங்கம் வட்டியாக கட்ட வேண்டிய தொகை மட்டும் இரண்டு லட்சத்து அறுநூற்று ஐம்பது கோடி (2650 பில்லியன்கள்) ரூபாக்கள். இது 2024ம் ஆண்டில் கிடைக்குமென அரசாங்கத்தின் திட்டமிடப்பட்டுள்ள மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகமாகும். இவ்வாறு வட்டி கட்டும் வீதாசாரம் வருடாவருடம் வேகமாக அதிகரித்துச் செல்கிறதே தவிர குறைவதாக இல்லை.

அபிவிருத்திக்கு மூலதனமில்லை
அலங்காரத்துக்கு அமைச்சர்கள்


2024ம் ஆண்டுக்கான மொத்த செலவீனமாக கிட்டத்தட்ட ஏழு லட்சம் கோடி ருபாக்கள் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதனைச் சமாளிக்க அரசாங்கம் மேலும் சுமார் 2 லட்சத்து எண்ணூற்று ஐம்பது கோடி (2850 பில்லியன்) ருபாக்களை கடன் வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 2023ம் ஆண்டு அனுபவத்தைக் கணக்கிலெடுத்தால், இந்த கடன் வாங்கல் குறைந்த பட்சம் மேலும் 10 சதவீதத்தால் அதிகரிக்கும். அல்லது அரசாங்கம் அபிவிருத்தக்கென ஒதுக்கியுள்ள மூலதன செலவுகளையே திட்டமிட்ட தொகையிலிருந்து குறைக்க வேண்டும். இரண்டாவதே பெரும்பாலும் நடக்கும். ஆக் அபிவிருத்தித் திட்ட செயற்பாடுகள் எதுவுமின்றி அரசாங்கம் வெறுமனே 1) அரச ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கூலிகள் கொடுத்தல்,
2) கடன்களுக்கு வட்டி கட்டுதல், மற்றும்
3) சமூக பொருளாதார உதவிகள் என வழங்கப்படும் மான்யங்கள் மற்றும் கொடைகள் கொடுத்தல் என்பவற்றோடு காலத்தை ஓட்டுவதே 2024ம் ஆண்டில் அரசாங்கம்.

அரசாங்க வருமானத்தை திட்டமிடப்பட்டுள்ள அளவுக்கு அரசாங்கத்தால் திரட்ட முடியாது என வரவு செவலவுத் திட்டம் வெளிவந்து சில மணி நேரங்களிலேயே பொருளாதார அறிஞர்கள் கூறி விட்டனர். கடந்த ஆண்டு ஜனாதிபதி திட்டமிட்ட வருமானத்தில் சுமார் 15 சதவீதம் குறைவாகவே திரட்ட முடிந்தது. இந்த வருடமும் அதே அளவு வீதாசாரம் குறைவாகவே அரச வருமானம் அமையும் என்பது நிச்சயமே. அதை ஈடு கட்ட அரசாங்கத்தினால் உள்நாட்டிலிருந்தும் சரி வெளிநாடுகளிலிருந்தும் சரி மேலதிகமாக கடன் வாங்க எந்த வாய்ப்பும் இல்லை. ஒரே வழி செலவுகளைளக் குறைப்பதுதான். நடைமுறைச் செலவுகளைப் பொறுத்த வரையில் இதற்கு மேல் குறைக்க முடியாது. மிகக் கட்டாயமான செலவுகளையே அறிவித்துள்ளது. ஆக, அரசாங்கத்தால் கை வைக்கப்பட உள்ள ஒரே இடம் அபிவிருத்திகளுக்கான மூலதனங்களே.

அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தமது அமைச்சின் மூலம் சாதிக்கப் போவதாக எதனையும் எத்தனையும் சொல்லலாம். அவர்கள் எவருக்கும் திறைசேரியிலிருந்து மூலதனச்செலவுகளுக்காக வெறும் கண்துடைப்புக்காக மிகச் சிறு தொகைகளே கொடுக்கப்படும். பெரும்பாலும் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அமைச்சுக்களையே கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான அமைச்சுகளின் 2024ம் ஆண்டுக்குரிய நடைமுறைச் செலவுகளுக்கான ஒதுக்கீடுகள் கூட குறைக்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை.

வயிற்றைக் கட்டி வாழ மக்கள்
தேர்தல் பந்தயத்தில் ஜனாதிபதி

சரவதேச நாணய நிதியம் நான்கு ஆண்டுகளில் 3000 மில்லியன் டாலர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி அளித்தது. 2023ம் ஆண்டு குறைந்த பட்டம் 1000 பில்லியன் அமெரிக்க டொலராவது கிடைக்கும் என அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 300 மில்லியனோடு நிறுத்தப்பட்டு விட்டது. ஏனெனில் அரசாங்கத்துக்கு அவை விதித்த கடப்பாடுகளை அரசாங்கம் நிறைவேற்றவில்லை. 2024ம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கணிசமான தொகை உதவியைப் பெறுவதற்கு இந்த வரவு செலவுத் திட்டம் வழி வகுக்க மாட்டாது என்பது இப்போதே தெரிகிறது. இறக்குமதி தடைகளையும் கட்டுப்பாடுகளையும் தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் இறக்குமதி செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்து, ஏற்றுமதி வருமானத்தை மட்டும் வைத்து இறக்குமதிச் செலவுகளை சமாளிக்கும் வகையாக வெளிநாட்டு வர்த்தக நிதி நிர்வாக முறையையே இந்த அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது.

2021ம் ஆண்டு இறுதியோடு ஒப்பிட்டால், அனைத்து பொருட்களினதம் விலைகள் 100 தொடக்கம் 150 சதவீதம் அதிகரித்தாகவே உள்ளது. இப்போது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பெறுமதி கூட்டு (VAT வரியினை அரசாங்கம் 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அறிவித்துள்ளது. இது சந்தையில் அனைத்து பண்டங்களினதும் விலைகளை 20 சதவீதம் அதிகரிக்கும். ஏனெனில் பெறுமதி கூட்டு வரியானது விற்பனையாளர்களினூடாக நுகர்வோரிடமிருந்து அறவிடப்படும் வரியாகும். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்று வரையில் நாட்டில் மாதாந்த சம்பள அடிப்படையில் ஊதியம் பெறும் ஊழியர்களில் எவரது வருமானமும் 25 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கவில்லை. இந்த வகையில் ரூ.2500, ரூ.5000, ரூ.10000 என மேலாதிகமாக வழங்கப் போவதான அறிவிப்பு வெறும் தம்மாத்துண்டு அளவான வருமான அதிகரிப்பே.

நாட்டு மக்களின் வாங்கும் திறனைக் குறைத்து, இறக்குமதி குறைப்பால் மற்றும் தடையால் நாட்டின் உற்பத்திகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் குறைவாக சந்தைகளில் பண்டங்களின் வழங்கலில் (நிரம்பலில்) ஏற்பட்ட வீழ்ச்சியை ஒரு பொருளாதார நிர்வாகமாக கடைப்பிடிக்கும் தந்திரம் ஜனாதிபதி ரணிலின் பொருளாதார அணுகுமுறையாக ஆகிவிட்டது. மக்களும் அதனை சர்வசாதாரணமாக கடந்து செல்பவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

தமது கடன்களை திருப்பிச் செலுத்துவது தொடர்பான காலத்தை இரண்டு ஆண்டுகள் பின்தள்ளிப் போட ஒத்துக் கொண்டு நாடுகள் மீண்டும் தமது கடனை திருப்பித் தரும்படி கேட்க அடுத்த ஆண்டு தொடங்குவார்கள். அதற்கிடையில் நாட்டின் எந்தெந்த நிலப்பகுதிகள் வெளிநாடுகளுக்கு விற்கப்படப் போகின்றன என்பது தெரியவில்லை. அதற்கிடையில் அடுத்த தடைவை தேர்தல் மூலம் தான் ஜனாதிபதியாக வந்து விட்டால் பின்னர் சமாளித்துக் கொள்ளலாம் எனவுள்ள ஜனாதிபதியின் திட்டம்தான் இந்த வரவு செலவுத் திட்டமோ! விரைவில் வெளிச்சத்துக்கு வரும்.

அ. வரதராஜா பெருமாள்
இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
17 – 11 – 2023

Read more...

Saturday, November 25, 2023

100 கோடி நஷ்ட ஈடு கோரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர். யார் இந்த ஷானி அபயசேகர?

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, 100 கோடி ரூபா நட்டஈடு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளார். பொய் வழக்குகளில் கைது செய்து நீதிமன்ற செயற்பாட்டை முறைகேடாகப் பயன்படுத்தி தன்னை ரிமாண்ட் செய்து தனது சுயமரியாதைக்குக் கேடு விளைவித்தமைக்காகவே அவர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன், கொழும்பு குற்றப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சட்டத்தரணி மஞ்சுள பாலசூரியவின் ஊடாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் ஊடாக, கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் ஷியாமின் கொலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கிகள் தொடர்பில் கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் தனக்கு எதிராக தீங்கிழைக்கும் நோக்கத்துடனும் பழிவாங்கும் நோக்கத்துடனும் விசாரணைகளை மேற்கொண்டதாக திரு.ஷானி அபேசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் மற்றும் மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் தீர்மானத்திற்கு அமைய இந்த விசாரணை நடத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விசாரணைகளின் போது கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஜகத் நிஷாந்த ஆகியோர் தமக்கு எதிராக பொய்யான வாக்குமூலங்களை வழங்குமாறு பல்வேறு நபர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக திரு.ஷானி அபேசேகர தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தாம் கைது செய்யப்பட்டு கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பல மாதங்களின் பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டதாக அவர் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். வெறுமனே பழி வாங்கும் நோக்கில் தனது சுயகௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்தியமைக்காக 100 கோடி ரூபா நட்டஈடு கோரி ஷானி அபேசேகர இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கின் முன் நிற்கின்ற சாதகமான நிலை யாதெனில், ஷானி அபயசேகர மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என அவரை நீதிமன்று விடுவித்துள்ளதுடன் அவருடன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த உதவிப் பொலிஸ் பரிசோதகர் சுகத் மென்டிஸ் என்பவருக்கு அரசு 10 லட்சம் ரூபா நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென உச்ச நீதிமன்று தீர்பளித்துள்ளது.

நஷ்ட ஈடு கோரி வழக்குத்தாக்கல் செய்த உதவி பொலிஸ் பரிசோதகர் மென்டிஸ், மொஹமட் ஷியாம் வழக்கில் குற்றவாளியென மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன விடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அவரை குற்றவாளியாக்குவதற்காக ஷானி அபயசேகரவினால் வைக்கப்பட்டது என சாட்சியமளிக்குமாறு தன்னை கைது செய்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கோரியதாகவும் தான் ஷானி அபயசேகரவிற்கு எதிராக பொய்சாட்சி கூற மறுத்தமையினால் தன்னை விளக்க மறியலில் அடைத்ததாவும் தெரிவித்திருந்தார். இதனை உச்ச நீதிமன்று ஏற்றுக்கொண்டிருக்கின்ற நிலையில், ஷானி அபயசேகர தன்னை தீயநோக்குடன் கைது செய்தார்கள் என்பதற்கான சாட்சியங்கள் நீதிமன்றின் முன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றே எடுத்துக்கொள்ள முடியும்.

யார் இந்த ஷானி அபயசேகர?

1986.02.10 இலங்கை பொலிஸ் சேவையில் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்ட ஷானி அபயசேகர சிறந்த துப்பறியும் நிபுணனாக இலங்கையில் அவிழ்கப்பட முடியாது எனக் கருதப்பட்ட பல்வேறு பாரிய குற்றச் செயல்களின் முடிச்சுக்களை அவிழ்த்ததுடன் குற்றவாளிகளை மோப்பம்பிடித்து கைது செய்தது மாத்திரமல்லாது அவர்களை நீதிமன்றின் முன் நிறுத்தி தண்டனையும் பெற்றுக்கொடுத்திருக்கின்றார்.

துப்பறிதலில் மாத்திரமன்றி நாட்டின் குற்றச் செயல்களை தடுப்பது சம்பந்தமான சட்டதிட்டங்களையும் கசடறக் கற்றுள்ள இவர் கையில் எடுக்கும் வழக்குகளிலிருந்து குற்றவாளிகள் தப்புவது மிகக்கடினமானது என்பது பொலிஸ் திணைக்களத்தினர் மாத்திரமல்ல குற்றவாளிகளும் அறிந்த விடயமாகும்.

அந்தவகையில், 1999 ம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சி தாக்குதல், 2001 ம் ஆண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், 2005ம் ஆண்டு றோயல் பார்க்கில் யுவதி ஒருவர் தனது காதலனால் மேற்கொள்ளப்பட்ட கொலை விவகாரம், அங்குலான பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கொலை, மொஹமட் சியாம் என்ற வர்த்தகர் பிரதி பொலிஸ் மா அதிபரான வாஸ் குணவர்த்தவின் தலைமையில் கொலை செய்யப்பட்டமை போன்ற பல்வேறு சிக்கலான வழக்குகளை முன்னின்று விசாரணை செய்ததுடன் குற்றவாளிகளுக்கு தண்டனையும் பெற்றுக்கொடுக்க அயராது செயற்பட்டுள்ளார்.

அத்துடன் கொழும்பின் புறநகர் பிரதேசங்களில் 11 மாணவர்கள் கடற்படையின் ஒரு பகுதியினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை, லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணை, பிரகீத் எகனலியகொட காணமலாக்கப்பட்டமை தொடர்பான விசாரணை போன்ற சர்ச்சைக்குரிய விடயங்கள் மீதான விசாரணைகளை தலைமை தாங்கி முன்னெடுத்துக் கொண்டிருந்த தருணத்தில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச பதவியேற்று 48 மணித்தியாலயங்களுள் ஷானி அபயசேகர குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் பதிவியிலிருந்து தூக்கப்பட்டு காலி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கான பிரத்தியேக உதவியாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதே நேரத்தில் இலங்கை 2018ம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கும் ஷானி அபயசேகரவே தலைமை வழங்கியிருந்தார் என்பதுடன், குறுகிய காலத்தினுள் அவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து உண்மைகளை கண்டறிய அவர் செயற்பட்ட முறையினை பாராட்டி சர்வதேச பொலிஸாரின் தலைவரினால் நற்சான்றுதழ் ஒன்றும் வழங்கப்பட்டது.


Read more...

Saturday, November 11, 2023

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு

1974ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அதன் வெள்ளிவிழாவை 1999ம் ஆண்டு கொண்டாடியது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் ‘பாசிஸப் புலிகளின்’ அதிகாரத்தின் கீழ் தமிழ் அரசியலும், தமிழ் சமூகமும் முழுமையாக ஆட்பட்டுக் கிடந்ததினால், யாழ்.பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு தொடர்பாக எந்த தமிழ் ஊடகமும் எழுதத் துணியவில்லை அல்லது அதுபற்றி எழுதாமல் கள்ள மெளனம் காத்தன என்றும் கூறலாம்.

அந்தக் கள்ள மெளனத்தை உடைத்து யாழ். பல்கலைக்கழக வரலாற்றின் உண்மையை வெளிக்கொணர "அமுது" சஞ்சிகை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பிறந்த வரலாறு என்னும் கட்டுரைத் தொடரை வெளியிட்டது. அடுத்து வரும் 2024ம் ஆண்டு யாழ். பல்கலைக்கழகம் அதன் பொன்விழாவை (50ஆண்டு) கொண்டாட வேண்டும். ஆனால் கடந்த இரு வாரங்களுக்கு முன் சட்டத்தரணியும், முன்னனி சமூகச் செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கத்தின் கருத்துரை வழங்கும் நிகழ்வொன்றுக்கு அங்கு தடை விகிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகம் எங்கு போய்க்கொண்டிருக்கின்றது என இன்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

எனவே, இன்றுள்ள தலைமுறையினருக்கு யாழ். பல்கலைக்கழகம் உருவான வரலாற்றுத் தகவல்களை வழங்கும் நோக்கில் 2001 "அமுது" சஞ்சிகையில் வெளிவந்த அந்த தொடர் கட்டுரை இங்கு மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது.

- அமுது - பிரதம ஆசிரியர் எஸ். மனோரஞ்சன் –
2023 – November.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் தனது 25 வருட பூர்த்தியை வெள்ளி விழாவை அண்மையில் கொண்டாடியது. இவ்விழாவை முன்னிட்டு விழா மலர் ஒன்றும் (ஆங்கிலத்தில் மட்டும்) வெளியிடப்பட்டதுடன் பல நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. யாழ். பல்கலைக்கழகத்தின் கடந்தகால பன்முக வளர்ச்சி பற்றியும் எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பல கட்டுரைகள் அறிஞர் பெருமக்களால் எழுதப்பட்டன. எல்லாம் நல்லபடியாக நடந்த போதும் இந்நிகழ்ச்சிகளின் போது, யாழ். பல்கலைக்கழகம் பற்றி வெளிவரத் தவறிய முக்கிய விடயம் ஒன்று தொடர்பாக அதன் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களின் மத்தியில் விசனித்து இருப்பதை அவதானிக்க முடிகிறது.

அதாவது-
இப் பல்கலைக்கழகம் எவ்வாறு பலத்த போராட்டங்களின் மத்தியில் உருவானது என்பது பற்றிய அதன் வரலாறகும். வெள்ளிவிழா ஏற்பாட்டாளர்கள் அதன் வரலாற்றை வெளிக்கொணர தவறியது அவர்களது அசட்டையீனம் மட்டுமன்றி, ஒரு திட்டமிட்ட இருட்டடிப்பு என்று கருதுவதற்கும் நியாயமான காரணங்கள் உண்டு. ஒரு தனிமனிதனும் சரி, ஒரு ஸ்தாபனமும் சரி, ஒரு நாடும் சரி தனது தோற்றத்தை அறிந்திருக்க வேண்டும், என்ற ஒரு சாதாரண விடயம் கூட தமிழ்ச் சமூகத்தின் உயர் தன்மை வாய்ந்த புலமைச் சமூகமொன்றின் புலனுக்கு எட்டாமல் போனது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது. இன்னொரு பக்க உண்மையும் இந்த விடயத்தில் உண்டு. இன்றைய தலை முறையைச் சேர்ந்த தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமன்றி, இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்ற அநேக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கும் கூட இது தோற்றம் பெற்ற வரலாறு தெரியாது என்பது கவலைக்குரிய உண்மையாகும்.

ஒவ்வொரு தமிழ் மகனும் இப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றை அறிந்து இருப்பது வெறும் தகவல்களுக்காகவோ புலமைத்துவத்துக்காகவோ அல்ல. நமக்கு அன்றைய காலகட்டத்தில் தலைமை வழங்கிய தமிழ் தலைமைகள் தமது அப்புக்காத்து தொழிலிலும், சுயநல அரசியல் தேவைகளிலும் செலுத்திய அபரிமிதமான அக்கறையை தமிழ்ச் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் காட்டவில்லை என்பது மட்டுமன்றி, அதற்கு எதிராகவும் இருந்துள்ளார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவுமே. அவர்கள் தொடக்கி வைத்த தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிரான இந்த அழிவுப் பாதை அரசியல் இன்றும் தொடரப்படும் துரதிர்ஷ்டத்தையும் நாம் பார்க்கிறோம். இப் பல்கலைக்கழகத்தை இயங்க விடாதிருக்க எடுத்த முயற்சிகளும், இளம் சமுதாயத்தை கல்வியறிவற்றவர்கள் ஆக்கி கொடிய யுத்தத்தில் அவர்களை பலிக்கடாக்கள் ஆக்குவதிலும் இருந்தும் இதை நாம் புரிந்துகொள்ள முடியும் எனவேதான் இப் பல்கலைக்கழகத்தில் கற்கும் ஒவ்வொரு மாணவனும் ஏனையவர்களும் இதன் தோற்றத்தைப் பற்றிய வரலாற்றை தெரிந்து கொள்ளுவது அவசியமாகின்றது.

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு- கிழக்கு பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டுமென்ற தமிழ் மக்களின் அவா இலங்கை 1948ம் ஆண்டு பெப்ரவரி 4ல் சுதந்திரம் அடைவதற்கு முன்பதாகவே உருவான ஒரு விடயமாகும். ஆனால் அக்கோரிக்கையை தமது அரசியல் கோஷங்கள் ஆக்கியவர்கள் யாரெனில், மூத்த தமிழ் அரசியல் கட்சியான திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலத்தின் தமிழ் காங்கிரஸ் கட்சியும் அதிலிருந்து பிரிந்து சென்ற திரு. எஸ். ஜே. வீ. செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியுமே. ஆனால் தம் வாழ்நாளின் பெரும் பகுதியை கீரியும் பாம்புமாக எதிரெதிரான அரசியலை நடத்தி வந்த இந்தக் கனவான்கள், இந்த யாழ் பல்கலைக்கழக விவகாரத்திலும் ஏட்டிக்கு போட்டியான நிலையிலேயே செயல்பட்டனர்.

தமிழ் மக்களுக்கு தேவையானது "இந்து" பல்கலைக்கழகம் என பொன்னம்பலம் கோர, செல்வநாயகமோ தமிழ்ப் பல்கலைக்கழகமே அமைக்க வேண்டும் என கூறினார். இவர்கள் இருவரினதும் புத்திசாலித்தனமற்ற, தவறான, பிடிவாதமான நிலைப்பாடு தமிழ் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கும் கடமையை தட்டிக் கழிப்பதற்கு அரசாங்கத்திற்கு மிகவும் வசதியாக இருந்தது. இரண்டு தமிழ் கட்சிகளும் ஒற்றுமைப்பட்டு தமிழ் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் கோரிக்கையை வலியுறுத்தினால் சாதகமான நிலைமை உருவாகும் என்றும், அவ்வாறுஅமைக்கப்படும் பல்கலைக்கழகத்தில் இயல்பாகவே தமிழ் மக்களின் மொழி, கலாச்சாரவிடயங்களின் அபிவிருத்திக்கு களம் ஏற்படும் என்றும், பல தமிழறிஞர்களும் முற்போக்கு அரசியல்சக்திகளும் அன்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இரு தலைவர்களும் தமது நிலைப்பாட்டிலேயே அழுங்குப் பிடியாக நின்று காரியம் கை கூடாமல் பார்த்துக் கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியினரோ ஒருபடி முன்னே சென்று தமது கற்பனைத் "தமிழரசுராஜ்யத்தின் தலைநகரான" திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சியிலும் இறங்கினார்கள். இதற்கென பல்வேறு குழுக்கள் அமைத்து பொதுமக்களிடமிருந்து அன்பளிப்பாகவும் மலிவு விலையிலும் பல ஏக்கர் கணக்கான காணிகளைப் பெற்றதுடன், ஆயிரக்கணக்கான ரூபா நிதியையும் சேகரித்தனர். ஆனால் இன்றுவரை அம்முயற்சிகைகூடவில்லை அதற்கென பெற்ற காணிகளுக்கும் நிதிக்கும் என்ன நடந்தது என்பதும் மர்மமாகவே இருக்கின்றது.

இந்து - தமிழ் பல்கலைக்கழகத்திற்காக இழுபறிப்பட்ட கனவான்கள் ஒன்றாக ஐக்கிய தேசியக் கட்சி அரசில் இணைந்து கொண்டனர்.

இத்தகைய சூழ்நிலையில் தான் 1965 ஆம் ஆண்டு திரு. டட்லி சேனநாயக்கா தலைமையில் ஐக்கியதேசியக்கட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. தீவிர சிங்கள இனவாதிகளான கே. எம். பி. ராஜரத்ன, ஆர்.ஜி. சேனநாயக்க போன்றவர்களையும் உள்ளடக்கி இருந்த அந்த ஏழு கட்சி கூட்டணி அரசாங்கத்தின் பங்காளிகளாக தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சிகளும் இணைந்து கொண்டன. தமிழ் காங்கிரஸ் சார்பாக திரு. மு. சிவசிதம்பரம் பிரதி சபாநாயகராகவும், தமிழரசு கட்சி சார்பாக திரு. மு. திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராகவும் பதவியேற்றனர். தமிழர் பிரச்சினை சம்பந்தமாக இவ்விரண்டு கட்சிகளும் டட்லியுடன் இரகசிய உடன்படிக்கை ஒன்று செய்ததாகவும் கூறப்பட்டது. டட்லி செல்வா உடன்படிக்கை ஒன்றின் மூலம் மாவட்ட சபைகள் அமைக்கவும் இணக்கம் காணப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் பல்கலைக்கழக நம்பிக்கை மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. 1947ல் அமைந்த டட்லியின் பிதா டி. எஸ். சேனநாயக்கவின் ஐக்கிய தேசிய கட்சி அரசில் ஜீ.ஜீ. பொன்னம்பலம் மந்திரிப் பதவி பெற்று, அவ்வரசு இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமையையும் வாக்குரிமையையும் பறிக்கும் செயலுக்கு உடந்தையாக இருந்ததற்காக, அவரை விட்டு பிரிந்து சென்று தமிழ் அரசு கட்சி அமைத்த செல்வநாயகம் அவர்கள் இப்பொழுது பொன்னம்பலத்துடன் டட்லி அரசில் இணைந்து கொண்டதே மக்களின் இந்த நம்பிக்கைக்கு காரணம் ஆகும்.

தமிழர்களுக்கு நன்மையான விடயங்கள் ஏதாவது நடக்கலாம் என மக்கள் எதிர்பார்த்தனர். புதிய அரசாங்கம் அமைத்ததும் நடாத்திய முதலாவது கொள்கை விளக்க உரையான சிம்மாசன பிரசங்கத்தில் மகாதேசாதிபதி கவர்னர் ஜெனரல் திரு. வில்லியம் கோபல்லாவ யாழ்ப்பாணத்தில் ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு அடையாள மானியமாக பத்து ரூபா ஒதுக்குவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அரசின் மனப்பூர்வமான ஒரு அறிவிப்பு அல்ல என்றாலும், இரண்டு கட்சிகளும் நினைத்திருந்தால் அதை பயனுள்ளதாக மாற்றியிருக்க முடியும். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி நினைத்தபடியே விவகாரம் அவர்களுக்கு சாதகமாக முடிந்தது.

இரண்டு தமிழ் கட்சிகளும் வழமை போலவே "இந்து" பல்கலைக்கழகம் "தமிழ்" பல்கலைக்கழகம் என்ற குஸ்தியில் இறங்கி காரியத்தை கெடுத்துக் கொண்டனர். ஐக்கிய தேசியக்கட்சி குரங்குக்கு அப்பம் பங்கிட வேண்டிய தேவையே இல்லாமல் போய்விட்டது. நாலரை ஆண்டுகள் டட்லி அரசுடன் இணைந்திருந்தும், தமதும் தமது நெருங்கிய உறவினர்களின் சகபாடிகளினதும், தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொண்ட காங்கிரஸ், தமிழரசு தலைமைகள் தமிழ் மக்களுக்கு ஒன்றையும் பெற்றுக் கொடுக்கவில்லை மாவட்ட சபைகளும் பல்கலைக்கழக கோரிக்கையும் குப்பைக் கூடைக்குள் தூக்கி வீசப்பட்டன. இந்த முக்கிய விடயங்களை விடுத்து "திருகோணமலையை புனித நகராக பிரகடனம் செய்யவில்லை" என்ற நொண்டிக் காரணத்தை கூறி 1970 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் தமிழ் அரசு கட்சி அரசிலிருந்து விலகிக் கொண்டது.

தமிழரசும் காங்கிரசும் மண் கவ்வினர்.

ஆனால் "சிங்களத் தலைமை வழமைபோல் எங்களை ஏமாற்றிவிட்டது" என்று ஒப்பாரி வைத்து அடுத்த தேர்தலில் வாக்குக்காக இக்கட்சிகள் ஆடிய கபட நாடகத்தை தமிழ் மக்கள் நன்கு விளங்கிக்கொண்டதை பின்னர் 1970 தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டின. 1970 பொதுத்தேர்தலில் திருமதி சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர, சமசமாஜ, கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டு அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பதவிக்கு வந்தது. தமிழ் மக்கள் மத்தியில் மீண்டும் பல்கலைக்கழகம் பற்றிய நம்பிக்கை தோன்ற ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக சம சமாஜக், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் குறிப்பிடக் கூடிய செல்வாக்கு இருந்தது. அதனால் அந்தக் கட்சிகளின் தலைமைகள் இவ் விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கக் கூடும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

இந்த இடத்தில் 1970 பொதுத்தேர்தலில் வட பகுதியில் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகளுக்கு மக்கள் வழங்கிய தீர்ப்பு வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரக்கூடிய ஒன்றாகும். தமிழரசுக் கட்சியின் தளபதி என வர்ணிக்கப்பட்ட அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டை தொகுதியில் தோல்வியுற்றதுடன், அது தனது கோட்டைகளாக இருந்த நல்லூர், கிளிநொச்சி தொகுதிகளையும் இழந்தது. அதேபோல உடுப்பிட்டி தொகுதியில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் போட்டியிட்ட "உடுப்பிட்டிச் சிங்கம்" முன்னாள் உபசபாநாயகர் திரு. மு. சிவசிதம்பரம் தோல்வி கண்டதுடன், கட்சியின் தலைவர் முடிசூடா மன்னன் திரு ஜீ. ஜீ. பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியில் தோற்கடிக்கப்பட்டார்.

தமிழரசு கட்சியின் சார்பில் டட்லி அரசின் உள்ளூராட்சி அமைச்சராகவிருந்த திரு. மு. திருச்செல்வம் பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்படாது செனட் சபை என்னும் மூதவை மூலம் கொல்லை வழியாக அமைச்சர் ஆனபடியால் 1970 தேர்தலில் போட்டியிடாது வந்த வழியே தப்பிக்கொண்டார்.

இந்த பாரதூரமான தோல்விகளுக்கு காரணம் இந்த இரு கட்சிகளும் ஐக்கிய தேசிய கட்சி அரசுடன் இணைந்து தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்தது மட்டுமல்லாமல், வட பகுதி தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பிரிவான தாழ்த்தப்பட்ட மக்கள் இக்காலகட்டத்தில் நடாத்திய ஆலய பிரவேசம், தேநீர்க்கடை பிரவேசம், பொது இட சமத்துவ போராட்டங்களை அடக்க முற்பட்டமையுமேயாகும். தேர்தலின் பின்னர் சிறிமாவோ தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசு அமைந்ததைத் தொடர்ந்து அது நிறைவேற்ற எண்ணிய வேலை திட்டங்களில் ஒன்றாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அமைவும் அதன் நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றது. வட பகுதியில் அக்காலகட்டத்தில் இயங்கிய மக்கள் நலன் மீது அக்கறையும், செல்வாக்கும், தீர்க்கதரிசனமும், திறமையும் வாய்ந்த இடதுசாரித் தலைமைகளும் பிற ஜனநாயக சக்திகளுமே இதற்கு காரணமாகும்.

யாழ் பல்கலைக்கழக கனவை நிறைவேற்ற திட்டம் வகுக்கப்பட்டது. கனகநாயகம் தலைவராக தெரிவு

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைப்பதை துரிதப்படுத்துவதற்காகவும், அதன் செயற்பாடுகளை விசாலப் படுத்துவதற்காகவும் மக்கள் இயக்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் தலைவராக சேர். பொன். இ,ராமநாதனின் மருமகனும் பிரபல சட்டத்தரணியும், தமிழ் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், முன்னாள் செனட்டருமான ஆர். கனகநாயகம் தெரிவு செய்யப்பட்டார். அவருடன் வடக்கின் பிரபல இடதுசாரித் தலைவர்களான மு. கார்த்திகேசன், அ. வைத்திலிங்கம், அ. விசுவநாதன், வீ.ஏ. கந்தசாமி, எம். சி. சுப்ரமணியம், பத்மா சிவகுருநாதன், டாக்டர் சு.வே. சீனிவாசகம், ஐ.ஆர். அரியரத்தினம், ஆர். தர்மரத்தினம், மாதகல் வ.கந்தசாமி ஆகியோர் செயல்பட்டனர்.

வட பகுதி மக்களின் நீண்டகால அபிலாசையை பிரதிபலித்து நின்ற இந்த இயக்கத்திற்கு தமிழ்ச்சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த பல்வேறு பிரிவினரிடம் இருந்தும் பெரும் ஆதரவு கிடைத்தது. பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றோரும் இந்த முயற்சிக்கு தமது மனப்பூர்வமான ஆதரவை தெரிவித்து இந்த இயக்கத்தின் கூட்டங்களில் திரண்டனர். ஆசிரியர்களை பெருமளவு கொண்ட இலங்கை தேசிய ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் என்பனவும் ஏனைய தொழிற்சங்கங்களும் இம் முயற்சிக்கு உறுதுணையாக நின்றன.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஊடாக தமது ஆதரவை பிரகடனம் செய்தனர். யாழ்ப்பாண கல்வித்துறையின் தூண்களாக அக்காலத்தில் விளங்கிய ஒரேடர் சி. சுப்ரமணியம், எஸ். சிவபாதசுந்தரம், என். சபாரத்தினம், எஸ். கனகரத்தினம், வீ. மகாலிங்கம், க.ந. வேலன் உட்பட பல கல்விமான்களும் கல்விச் சேவை அதிகாரிகளும் சமயப் பெரியார்களும் பல்கலைக்கழக இயக்கத்தின் உந்து சக்திகளாக விளங்கினர்.

மறுபக்கத்தில் பேராதனை, கொழும்பு பல்கலைக்கழகங்களின் பிரசித்திபெற்ற விரிவுரையாளர்களான பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. இந்திரபாலா, கா. சிவத்தம்பி, எஸ். சிவஞானசுந்தரம் (நந்தி), அ. சந்திரசேகரம், எஸ். தர்மரத்தினம், கே. கைலாசநாதக் குருக்கள், எஸ். ராமகிருஷ்ணன், எம். ஏ. நுஃமான், சித்திரலேகா மௌனகுரு போன்றவர்கள் யாழ் பல்கலைக்கழக அமைவில் கரிசனையுடன் பங்காற்றினர்.

அரசாங்க தரப்பை பொறுத்தவரை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா, கல்வி அமைச்சர் பதியுதீன் மஹ்மூத், அமைச்சரும் முன்னாள் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவருமான கே. பி. இரத்னாயக்கா மற்றும் அமைச்சர்கள் பீட்டர் கெனமன், செல்லையா குமாரசூரியர் ஆகியோரும், அப்போது கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகவிருந்த பிரேமதாச உடகம போன்றோரும் பல்கலைக்கழகத்தை நிறுவுவதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டனர்.

இவ்விடயத்தில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்ட இன்னொருவர் சிறிமாவோவின் மூத்த புதல்வி சுனேத்ராவின் கணவராக இருந்தவரும், ஜனவேகய பத்திரிகையின் ஸ்தாபகருமான திரு. குமார் ரூபசிங்க அவர்களாவார். அவர் யாழ். பல்கலைக்கழகம் அமைவதை அரசாங்க வட்டாரத்தில் தீவிரமாக வலியுறுத்தியதுடன், அதன் திறப்பு விழா ஒழுங்குகளுக்காக பல நாட்கள் முன்னதாகவே வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து செயலாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் 1977 ல் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்தன அரசியல் பழிவாங்கும் நோக்குடன் பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக இருந்த குமார் ரூபசிங்கவை யாழ் பல்கலைக் கழகத்துக்கு மாற்றம் செய்த சுவாரசியமும் நிகழ்ந்து.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் குழிபறிப்பு தொடர்கிறது.

தமிழ் மக்கள் தரப்பில் இருந்தும் அரசாங்க தரப்பிலிருந்தும் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைவதற்கு இவ்வளவு ஆதரவு இருந்தபோதிலும் தமிழர் விடுதலை கூட்டணி தலைவர்கள் தமது எதிர்ப்பை கைவிடவில்லை. தமது கடந்தகால சுயநல, போட்டி அரசியலால் சாதிக்க முடியாமல்போன கைங்கரியத்தை ஏனையவர்கள் அதுவும் குறிப்பாக இடதுசாரிகளும், தம்மால் தமிழ் துரோகிகள் என்று முத்திரை குத்தப்பட்டவர்களும் சேர்ந்து சாதித்தால், அது வரலாற்றில் பதிவாகி தமக்கு ஒரு நிரந்தர இழுக்காக போய்விடும் என்ற அச்சமே கூட்டணி தலைவர்களின் எதிர்ப்புக்கு பிரதான காரணமாகும்.

எனவே தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் இந்தக் காரியத்தை, நமக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நின்று மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எதிரான தமது காரணங்களாக மிக சிரிப்புக்கிடமான பல கதைகளை மக்கள் மத்தியில் அவிழ்த்து விட்டனர்.

அதில் ஒன்று சேர். பொன் இராமநாதனால் உருவாக்கப்பட்ட திருநெல்வேலியில் உள்ள பரமேஸ்வரா கல்லூரியில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டால் அக்கல்லூரி இல்லாது போய்விடும் என்பதாகும். அத்துடன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருப்பது போல் ஏராளமான கட்டிடங்களை கட்டி ஆரம்பிக்காமல், சும்மா வெறுமனே ஒரு பாட சாலையில் பெயர் பலகையை மாட்டிவிட்டு இதுதான் பல்கலைக்கழகம் என அரசாங்கம் தமிழர்களை ஏமாற்றப் பார்க்கிறது என்றும் கூறினர்.

இதற்கு பதிலளித்த திரு. எஸ். ஆர். கனகநாயகமும் ஏனையோரும், பரமேஸ்வரா கல்லூரியையும், மருதனாமடத்தில் நிறுவப்பட்டுள்ள இராமநாதன் பெண்கள் கல்லூரியையும் எதிர்காலத்தில் மிக உயர்நிலை கல்வி நிறுவனங்களாக வளர்த்தெடுப்பதே இராமநாதன் தம்பதியினரின் நோக்கமாக இருந்தது என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு எடுத்துக் கூறினர். அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் போன்றவை கூட ஒரு குதிரைப் பந்தய திடலில்தான் ஆரம்பிக்கப்பட்டது என்பதையும், பேராதனைப் பல்கலைக்கழகம் கூட பல கட்ட வளர்ச்சிக்கு ஊடாகவே இன்றைய நிலையை அடைந்தது என்பதையும் எடுத்துக் கூறினர்.

கூட்டணியினர் முன்வைத்த மற்றோரு காரணம் மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற சூழலில் பல்கலைக்கழகம் அமைந்தால் அங்கு பயிலும் மாணவ மாணவிகளின் சேஷ்டைகளைப் பார்த்து இதர பாடசாலை மாணவர்களும் கெட்டு போய்விடுவார்கள் என்றும், அயலில் உள்ள மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் பிணக்குகள், மோதல்கள் உருவாகும் என்பதுமாகும். அத்துடன், தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் வழக்கத்திலுள்ள பகிஸ்கரிப்பு, மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் என்பனவும் மாணவர்களை அதிகம் ஆகர்சிக்கின்ற இடதுசாரி அரசியல் கருத்துக்கள் யாழ்ப்பாணத்திற்கு தொட்டுவிடும் என்ற அச்சமும் ஆகும். ஆனால் பிற்காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்தவர்களால் மிகப் பெரிய அளவில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு மோதலை தவிர பொது மக்களுடன் யாழ். பல்கலைக்கழகத்துடன் எந்தவித மோதலும் நடைபெறவில்லை.

அது மட்டுமில்லாமல் அரசால் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனவழிப்பு யுத்தத்திற்கு எதிராகவும், பின்னர் விடுதலைப் புலிகள் உட்பட பல்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் மாணவர் விரோத மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் பல்கலைக்கழக மாணவர்களே முன்னணியில் நின்று போராடி வந்துள்ளதை, போராடி வருவதை வரலாறு நிரூபித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமது எதிர்ப்புக்காக முன்வைத்த மற்றொரு காரணம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்தால் அங்கு சிங்கள மாணவர்களுக்கும் கற்பதற்கு வருவார்கள், அதன் மூலம் யாழ்ப்பாணத்தில் சிங்கள ஆதிக்கம் வந்து விடும் என்பதாகும்.

இந்த "சிங்கள பூச்சாண்டியும்" அங்கு எடுபடவில்லை. ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக இருந்த பேராதனை, கொழும்பு, கட்டுப்பத்தை, வித்யோதய, வித்யாலங்கார என்பவற்றில் தமிழ், சிங்கள, முஸ்லிம் என மூவின மாணவர்களும் இணைந்தே கல்வி கற்று வந்தனர். இன்றும் கூட யாழ்ப்பாணம், மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்களில் மூவின மாணவர்களும் இணைந்தே கல்வி கற்கின்றனர்.

விடுதலைப் புலிகளினதும் சில பல்கலைக்கழக கல்விமான்களினதும் "யாழ்ப்பாண தமிழ் இனவாத" கொள்கை காரணமாக பின்னர் சிங்கள மாணவர்கள் மட்டுமன்றி முஸ்லிம் மாணவர்களும் யாழ். பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி பல்வேறு பிரச்சாரங்களையும் தந்திரோபாயங்களையும் கைக்கொண்ட போதும் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் நிறுவுவதில் உறுதியுடன் செயல்பட்டது. இச்சூழ்நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக ஒரு தற்காலிக ஏற்பாடாக விஞ்ஞான பீடத்திற்கென அமெரிக்கன் மிஷனரிகளால் நிறுவப்பட்ட பழமை வாய்ந்த வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சில கட்டடங்களை அரசாங்கம் சுவீகரித்தது. இந்த நடவடிக்கை யாழ்ப்பாண கல்லூரி நிர்வாகமும் அதனுடன் சம்பந்தப்பட்ட மதத் தலைமையும் கடுமையாக ஆட்சேபித்தனர். இந்த ஆட்சேபனை தமிழ் மக்களுக்கு வியப்பை அளித்தது. ஏனெனில் அமெரிக்கன் மிஷனரியினர் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்காகவே யாழ்ப்பாணக் கல்லூரியையும் இதர பாடசாலைகளையும் தமிழ் பகுதிகளில் நிறுவினர். உண்மையாக இருந்தால் அவற்றை விட சிறப்பான உயர்வான பல்கலைக்கழகத்தின் வரவை மகிழ்ச்சியுடன் வரவேற்றல்லவா இருக்க வேண்டும், என அன்று மக்கள் தக்க பூர்வமாக வினவியதில் வியப்பில்லை.

ஓடுற வெள்ளத்தில் அள்ளத்தீர்மானித்த தமிழரசு சுக்கானை பிடிக்க முஸ்தீபு

இது சம்பந்தமாக யாழ்ப்பாணக் கல்லூரியின் சம்பந்தப்பட்ட மத நிர்வாகத்துடன் திருவாளர்கள் எஸ். ஜே. வீ. செல்வநாயகம், அ. அமிர்தலிங்கம் போன்றோர் ஆலோசனைகளை நடத்தியதுடன், குருநாகலில் உள்ள சில சிங்கள இன மதத் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு கொழும்பு சென்று, அரசாங்கத்தில் இருந்த செல்வாக்கு பெற்ற கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த அமைச்சரான திரு. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா மூலம் தங்கள் எதிர்ப்புக்களை நிறைவேற்ற முயன்றனர். ஆனால் இந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. எப்படியும் அரசாங்கம் பல்கலைக் கழகத்தை ஆரம்பித்தே தீரும் என்ற நிலை உருவானதால் ஓடுற வெள்ளத்தில் அள்ளுவது மிச்சம் என்ற நிலைப்பாட்டை கூட்டணியினர் எடுக்கத் தீர்மானித்தனர்.

பல்கலைக்கழகத்தில் தமக்கு வாய்ப்பான சூழலை உருவாக்குவதற்காக அதன் சுக்கானைப் பிடிக்கும் முக்கிய பதவியான தலைவர் பதவிக்கு தமிழரசு கட்சியினதும் தமிழர் விடுதலைக் கூட்டணியினதும் நீண்டகால தீவிர ஆதரவாளரான பேராசிரியர் சு.வித்தியானந்தனை நியமிப்பதற்கு "அலுவல் பார்க்கும்" கைங்கரியத்தில் இறங்கினர். ஆனால் அதுவும் அவர்களுக்கு கை கொடுக்க தவறிவிட்டது. அரசாங்கம் திரு. க.கைலாசபதி அவர்களை யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் முதலாவது தலைவராக நியமித்து தன்னையும், கைலாசபதியையும், தமிழையும் பெருமைப்படுத்திக் கொண்டது.

இவ்விடத்தில் இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேச உறுப்பினர்கள் சிலர், அதிலும் குறிப்பாக பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் சொந்த ஊரான கரவெட்டி வடமராட்சியை சேர்ந்த சிலர் திரு. கா. சிவத்தம்பியை (இப் பேராசிரியர் நீண்டகாலமாக கம்யூனிஸ்ட் மாஸ்கோ சார்பு பிரிவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த காரணத்தால்) யாழ். பல்கலைக் கழகத்தின் முதலாவது தலைவராக அவரை நியமிக்கும் படி அரசாங்கத்துக்கு தந்திகளையும் கடிதங்களையும் அனுப்பி வைத்தனர். ஆனால் அரசாங்கத் தலைமை ஏகோபித்த முறையில் கைலாசபதியையே முதலாவது தலைவராக நியமனம் செய்தது.

கைலாசபதியின் வீட்டின் மீது குண்டுத்தாக்குதல்

திட்டமிட்டபடி 74 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவரது இரண்டு நாள் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரல்களும் வகுக்கப்பட்டன. தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் கைலாசபதி உடனடியாக யாழ்ப்பாணம் சென்றார். நிலைமைகள் நல்ல முறையில் உருவாகி வந்த போதிலும் எதிர்ப்பாளர்கள் தமது எதிர்ப்பு நடவடிக்கைகளில் மூர்க்கத்தனமாகவே இருந்தனர் அகிம்சையைப் பேசிக்கொண்டே வன்முறையில் ஈடுபட திட்டம் வகுத்தனர். முதலாவதாக வன்முறை பேராசிரியர் கைலாசபதி மீது காட்டப்பட்டது. அவர் யாழ்ப்பாணம் வந்து தங்கிய முதல் இரவு அன்றே நாட்டு வெடிகுண்டு ஒன்றை அவரின் வீட்டின் மீது எதிர்ப்பாளர்கள் வீசினர் ஆனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. பேராசிரியர் யாழ்ப்பாணம் வந்த ஆரம்ப நாட்களில் வண்ணார்பண்ணை தபாலகத்திற்கு அருகில் இருந்த தமது மைத்துனர் (பிற்காலத்தில் அரசாங்க அதிபராக இருந்த திரு. கே.பொன்னம்பலம்) வீட்டிலேயே தங்கியிருந்தார்.

குண்டுவீசிய செய்தியை காலையில் உள்ளூர் பத்திரிகைகளில் பார்த்துவிட்டு அவரை நலம் விசாரிக்க சென்ற நண்பர்கள் இருவரிடம் திரு. கைலாசபதி சிரித்துக் கொண்டே கூறிய வார்த்தைகள் அவர் உறுதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. "நானும் பனங்காட்டு நரிதான் என்பதை இந்த மடையன்கள் மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது" என பேராசிரியர் அப்பொழுது கிண்டலாக கூறியதாக அவரை பார்க்கச் சென்றவர்கள் பின்னர் குறிப்பிட்டனர்.

திறப்பு விழாவுக்கு முன்னர் எல்லா ஒழுங்குகளையும் கைலாசபதி நேரடியாக கண்காணித்து செய்து முடித்தார். தினசரி காலை முதல் இரவு ஆகும்வரை பல்கலைக்கழகம் அமைய இருந்த பரமேஸ்வரா கல்லூரியின் ஒரு சிறிய அறையில் (இப்போது பாதுகாப்பு அதிகாரியின் காரியாலயமாக இருக்கிறது) எவ்வித வசதிகளுமற்ற நிலையில் கடுமையாக உழைத்தார். கட்டிட வேலை, வர்ணம் பூசுதல், நீர், மின்சார விநியோகம், தளபாட அமைப்பு, துப்புரவு வேலை என எல்லா வேலைகளையும் நேரடியாக தானே முன்னின்று கவனித்து செய்வித்தார்.

இரவில் அவர் வீடு திரும்பும் ஒவ்வொரு நாளும் தலையில் சுண்ணாம்பு தூசிகளுடன் ஒரு மேசன் தொழிலாளியை போலவே வீடு திரும்பினார். எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்ட சூழ்நிலையில் தமிழர்களின் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கப் போகும் மங்களகரமான நிகழ்வுக்காக, அதாவது யாழ் பல்கலைக்கழக வளாகத்தை (அப்பொழுதெல்லாம் பல்கலைக்கழகங்களும் Campus களாகவே இருந்தன) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைப்பதற்காக பிரதமர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தனது சிரேஷ்ட அமைச்சர்கள், அதிகாரிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் சகிதம் வருகை தந்தார். மறுபக்கத்தில், தமது எதிர்ப்பு முயற்சிகள் அனைத்திலும் தோல்வி கண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர் "தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்" போல தமது அடுத்தகட்ட எதிர்ப்பு நடவடிக்கையை பெரும் ஆராவாரத்துடன் அறிவித்தனர்!

சிறிமாவோவின் வருகையும் தமிழரசின் ஹர்த்தாலுக்கான அழைப்பும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இரண்டு நாட்களையும் குடா நாட்டுத் தமிழ்மக்கள் துக்க தினமாக அனுஷ்டிக்கும்படி தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வேண்டுகோள் விடுத்தனர். அந்த இரண்டு நாட்களும் பிரதமர் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்றும், கடைகள் யாவற்றையும் பூட்ட வேண்டும் எனவும் தெருக்களில் மக்கள் நடமாடாது மயான அமைதி நிலவ வேண்டும் எனவும் கூட்டணியினர் அறிவித்தனர். பிரதமர் சிறிமாவோ யாழ்ப்பாணத்தை விட்டு புறப்பட்ட பின்னரே மக்கள் தமது அன்றாட வேலைகளில் ஈடுபட வேண்டும் என்றும் கூறினர். தனது உணர்ச்சியூட்டும் வசனங்களால் தமிழ் மக்களை அரசாங்கத்துக்கு எதிராக திருப்பி விடுவதற்கு தமிழரசு கட்சியின் பிரச்சார ஏடான "சுதந்திரன்" படாத பாடுபட்டது.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தமிழர் விடுதலைக் கூட்டணியினர் நல்லூர் வீரமாகாளி அம்மன் கோவிலில் உண்ணாவிரதம் ஒன்றையும் இரு நாட்களுக்கு ஏற்பாடு செய்தனர். இந்த போராட்டத்தில் கூட்டணியின் தலைவர்கள் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு எதிராக கூட்டணியினர் செய்து கொண்டிருந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை கண்டு மக்கள் வேதனையும் ஆத்திரமும் அடைந்த அதே வேளையில் இன்னொரு வதந்தியும் வேகமாக பரவியது.

அதாவது உண்ணாவிரதம் இருப்பவர்களை போலீசார் தாக்கப் போகிறார்கள் என்பதே அந்த வதந்தியாகும். அது 1974ல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு குழப்பத்தில் பெற்ற அரசியல் இலாபம் போல், இந்த நிகழ்விலும் அவ்வாறு ஒரு இலாபத்தை உருவாக்கிக் கொள்ள எண்ணிய கூட்டணியினர், போலீஸ் தாக்குதல் பற்றிய வதந்தியை முன்னதாகவே பரப்பி மக்கள் மத்தியில் ஒரு பதட்டத்தை உருவாக்க முயன்றனர் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது.

ஆனால் மக்களை பொறுத்தவரையில் இவர்களது கூத்துக்களால் மிகவும் வெறுப்புற்ற நிலையில் உண்மையிலேயே போலீஸ் வந்து "இவர்களுக்கு ரெண்டு போட்டால் என்ன" என்று எண்ணும் நிலையிலேயே இருந்தனர். ஆனால் நடந்த வேடிக்கை என்னவென்றால், சில கூட்டணி தலைவர்கள் திட்டமிட்டு பரப்பிய இந்த வதந்தியினால் கூட்டணியின் இன்னொரு பகுதியினர் உண்மையிலேயே அச்சத்திற்கு உள்ளாகினர். விபரீதங்கள் எதுவும் ஏற்பட்டு விடுமோ என அவர்கள் அஞ்சினர். அவர்களில் முக்கியமானவர் அப்போதைய கோப்பாய் தொகுதி எம். பி. யாக இருந்த சிந்தனைச் சிற்பி திரு.சி. கதிரவேற்பிள்ளை ஆவார்.

திரு கதிரவேற்பிள்ளை உடனடியாக காரியத்தில் இறங்கினார். தான் மிகவும் மதிப்பு வைத்திருந்த, அத்துடன் சகல தரப்பினரதும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக உண்மையான ஒரு கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து கொண்டிருந்த திரு. மு. கார்த்திகேசன் அவர்களை அழைத்து வரும்படி தனது காரை அனுப்பி வைத்தார். திரு. கார்த்திகேசன் அப்பொழுது பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்தார். கார்த்திகேசன் தனது இலட்சியத்தில் மிகவும் உறுதியான பற்று உள்ளவர் என்பதை அறிந்திருந்த கதிரவேற்பிள்ளை, அவர் தனது காரில் ஏறி வருவதற்கு வசதியாக தனது காரில் எப்போதும் பறந்து கொண்டிருக்கும் கூட்டணியின் உதயசூரியன் கொடியையும் கழட்டி வைத்துவிட்டுதான் காரை அனுப்பி வைத்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கதிரவேற்பிள்ளையின் வேண்டுகோளை ஏற்று கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்த நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலய முன்றலை கார்த்திகேசன் சென்றடைந்த பொழுது, போலீசார் தங்களை தாக்கி கலைக்காது இருக்க கார்த்திகேசன் அரசாங்க தலைவர்களிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் கதிரவேற்பிள்ளையினால் விடுக்கப்பட்டது. கார்த்திகேசன் அவ்வாறான பிரத்தியேக செல்வாக்கு எதுவும் அரசுடன் தனக்கு இல்லை என்பதை விளக்கியதுடன், அரசோ போலீசாரோ உண்ணாவிரதிகள் மீது அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று தாம் நம்பவில்லை என்று தமது ஊகத்தை தெரிவித்தார் உண்மையும் பின்னர் அவ்வாறே அமைந்தது. இருந்தும் மாலையில் உண்ணாவிரதம் முடிவடையும்வரை சில கூட்டணி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று கார்த்திகேசன் அங்கேயே தங்க நேர்ந்தது.

வாள் ஏந்தி நின்று போர்பிரகடணம் செய்தார் அமிர்தலிங்கம்.

ஆனால் மாலையில் உண்ணாவிரத முடிவில் கூட்டணிச் செயலதிபர் அமிர்தலிங்கம் "சங்கிலி அரசனின் வாள்" என்று சொல்லி ஒரு வாளை ஏந்தி அரசுக்கு எதிரான போர் பிரகடனம் ஒன்றை விடுத்து தன் வீரத்தை வெளிப்படுத்திக்கொண்டார்.

இவை ஒருபுறமிருக்க, தமிழர் விடுதலைக் கூட்டணியின் பலவித எதிர்ப்புகளையும் மீறி திருநெல்வேலி பரமேஸ்வரா கல்லூரி அமைந்திருந்த இடத்தில் திட்டமிட்டவாறு பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவினால் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் மிகவும் கோலாகலமான முறையில் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் அரசாங்க தலைவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு தூதுவர்களும், உள்ளூர் கல்விமான்கள், அரசியல் தலைவர்கள், சமயப் பெரியார்கள் என்போரும் கலந்து கொண்டனர். இந்த இரண்டுநாள் நிகழ்ச்சிகளிலும் குடாநாட்டில் சிறிமாவோ பண்டாரநாயக்கா சென்ற இடமெங்கும் மக்கள் வீதிகளில் இரு மருங்கிலும் நின்று வரவேற்பு கொடுத்ததை யாழ்ப்பாணம் முன்னொருபோதும் கண்டிருக்கவில்லை.

தமிழ் மக்களின் இந்த செயற்பாடானது தமிழர் விடுதலைக் கூட்டணி இழைத்த மிகப் பெரும் குற்றத்திற்கு வழங்கப்பட்ட தண்டனையாக வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட பின்னரும் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அதன் செயற்பாடுகளை சீர்குலைப்பதற்கு முயன்று வந்தனர். பேராசிரியர் கைலாசபதி தலைமையிலான நிர்வாகத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு திரைமறைவில் பல முயற்சிகள் செய்யப்பட்டன. அயலில் உள்ள மக்களையும் மாணவர்களையும் மோத வைப்பதற்கும் பல முறை முயன்றனர். எல்லாமே தோல்வியில் முடிந்தன.


1977ல் ஜே. ஆர். அரசு பதவிக்கு வந்ததும் அதுவரை பேசி வந்த தீவிர தமிழ் தேசியவாதத்தை கைவிட்டு வழமை போல ஐக்கிய தேசிய கட்சி அரசுடன் அரசியல் ஒற்றுமைகாண கூட்டணியினர் முயன்றனர். தமிழரசு, காங்கிரஸ் பழைய தலைமைகளின் துரோகத்தனத்துக்கு எதிராக பிற்காலத்தில் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலை இயக்கங்களுக்கும் யாழ் பல்கலைக்கழகமே ஊற்றுமூலமாக இருந்தது. பின்னர் இயக்கங்கள் வழிதவறி அராஜக நடவடிக்கைகளில் இறங்கிய பொழுதும் பல்கலைக்கழக சமூகமே அவற்றைத் தட்டிக் கேட்டது.

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம், இயக்க அராஜங்களுக்கு எதிரான ஜனநாயகத்துக்கான போராட்டம் என்ற மிகச் சரியான திசையில் யாழ் பல்கலைக்கழக சமூகம் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டது. புலிகளின் காலத்தில் இப்போராட்ட முனைப்பு மழுங்கடிக்கப்பட்டது. இருப்பினும் இந்த இருவகை போராட்டங்களிலும் பல நல்ல மனிதர்களை யாழ். பல்கலைக்கழக சமூகம் இழந்தது. குறிப்பாக கேதீஸ்வரன், ரவிசேகர், ராஜனி திராணகம, செல்வி, விஜிதரன், விமலேஸ்வரன், மனோகரன், தில்லைநாதன், சிவரமணி, தர்மலிங்கம், ரமணி இப்படி எத்தனையோ பேர் தமது வாழ்வை தியாகம் செய்தனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ் மக்களுக்காக யாழ். பல்கலைக்கழக சமூகம் சிந்திய செந்நீர் துளிகள்.

இத்தகைய பாரம்பரியத்தை கொண்ட யாழ். பல்கலைக்கழகம் இன்று பகிடிவதை என்கின்ற அநாகரிகமான செயல்களிலும், ஜனநாயக செயற்பாடுகள், கருத்து சுதந்திரம் என்பவற்றை மறுதலிக்கும் அரசியல் செயல்பாடுகளில் தன்னை வீழ்த்தி இருப்பது கவலைக்குரியது. இதை தடுத்து நிறுத்தி பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளை இடையூறின்றித் தொடர மீண்டும் களத்தில் இறங்க வேண்டியவர்கள் தமிழ் பொது மக்களும் முற்போக்கு எண்ணம் கொண்ட தமிழ் கல்விமான்களுமேயாவர்.

இன்று தமிழ் மக்கள் ஒருபுறம் 50 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள பேரினவாதத்தால் இன உரிமைகள் பறிக்கப்பட்டு வருகின்றன நிலைமை, இன்னொரு பக்கத்தில் விடுதலைக்கு போராட புறப்பட்டவர்களிடம் இருந்து அடிப்படை மனித உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் இழந்துள்ள அவலம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் ஒரு கண்ணை மூடிக்கொண்டு செயல்பட முடியாது. இரண்டு கண்களையும் திறந்து, இரண்டு கைகளையும் வீசி, இரண்டு கால்கலாலும் நடந்து முன்னைய காலங்களைப் போல் முழு மனிதனாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும் என்பதே உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்ற தமிழ் சமூகத்தின் எதிர்பார்ப்பாகும்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com