Wednesday, February 1, 2012

வடமராட்சி கிழக்கில் உப்பு மற்றும் கருவாட்டிற்கு இரண்டு ஆலைகள் அமைக்கப்படவுள்ளது

வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்களின் சமாசத்திற்கு ஜ.ஓ.எம் நிறுவன நிதியுதவியுடன் உப்பு அரைக்கும் ஆலை மற்றும் மற்றும் கருவாடு பொதி செய்யும் கட்டடம் என்பன அமைக்கப்படவுள்ளன.

இதற்கான ஒப்பந்தத்தில் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்களின் சமாசப்பிரதிநிதிகளும் ஜ.ஓ.எம் நிறுவன பிரதிநிதிகளும் கடந்த வெள்ளிக்கிழமை கையொப்பமிட்டுள்ளனர்.

உப்பு அரைக்கும் ஆலை மற்றும் மற்றும் கருவாடு பொதி செய்யும் கட்டடம் ஆகியன 2 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளது.

இங்கு பெண்களைத் தலைமைத்துவமாகக்கொண்ட 32 குடும்பங்களுக்கு கருவாடு பதனிடுவதற்கு தலா 10 ஆயிரமும் சுழற்சிக்கடனாக வழங்க ஜ.ஓ.எம் நிறுவனம் முன்வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

பின்லேடன் கொல்லப்பட்ட போட்டோ: கையை பிசைகிறது சி.ஐ.ஏ.

பின்லேடன் கொல்லப்பட்ட பின் எடுக்கப்பட்ட போட்டோக்கள் தொடர்பான வழக்கு, அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் சி.ஐ.ஏ. மிகக் கடுமையாக போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டோக்களில், பின்லேடன் தலையில் துப்பாக்கி தோட்டா பாய்ந்த நிலையில் உள்ள போட்டோ ஒன்றும், பின்லேடனின் உடல் கடலில் வீசப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்றும் அடங்கும் என்று கோர்ட்டில் கூறப்பட்டுள்ளது. (தற்போது இன்டர்நெட்டில் உலாவும், பின்லேடனின் கொல்லப்பட்ட உடல் போட்டோக்கள் அனைத்தும் போலி)

சி.ஐ.ஏ.யால் எடுக்கப்பட்ட இந்த போட்டோக்கள், அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலருக்கு, சில மாதங்களுக்குமுன், லாங்க்லியில் உள்ள சி.ஐ.ஏ. தலைமையகத்தில் வைத்து காண்பிக்கப்பட்டது. ஆனால், பெதுமக்கள் பார்வைக்கு இந்த போட்டோக்களை வெளியிடுவதில்லை என்று சி.ஐ.ஏ. முடிவு செய்திருந்தது.

சி.ஐ.ஏ.-யின் இந்த முடிவுக்கு எதிராக Judicial Watch அமைப்பு தொடுத்திருந்த வழக்குதான் இந்த வாரம் விசாரணைக்கு வந்துள்ளது. அமெரிக்க தகவல் அறியும் சட்டப் பிரிவின் அடிப்படையில் சி.ஐ.ஏ.-க்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. “பின்லேடன் கொல்லப்பட்டது என்பது ஒரு சரித்திரபூர்வமான நிகழ்வு. அதை முழுமையாக அறிந்துகொள்ளும் உரிமையும், அந்த நிகழ்வின்போது எடுக்கப்பட்ட போட்டோக்களை பார்க்கும் உரிமையும் ஒவ்வொரு அமெரிக்கப் பிரஜைக்கும் உள்ளது” என்று தனது மனுவில் கூறியுள்ளது Judicial Watch அமைப்பு.

சி.ஐ.ஏ. தரப்பு தமது வாதத்தில், “பின்லேடன் கொல்லப்பட்ட பின் எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட்டால், வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கலாம். அமெரிக்க சொத்துக்களுக்கும், அமெரிக்கர்களின் உயிர்களுக்கும் அழிவு ஏற்படுத்தப்படலாம்” என்று கூறியுள்ளது.

பதில் வாதம் செய்த Judicial Watch, “அழிவு ஏற்படலாம் என்பதை ஊக அடிப்படையிலேயே சி.ஐ.ஏ. சொல்கிறது. போட்டோக்களை வெளியிடுவதால் அமெரிக்காவுக்கு எதிராக வன்முறை வெடித்தது என்று கடந்த காலத்தில் எந்த சம்பவத்தையும் ஆதாரமாக காட்ட முடியாது” என்கிறது.

சி.ஐ.ஏ.-க்கு எதிரான இந்த வழக்கு, சில மாதங்களுக்குமுன் தொடரப்பட்ட மற்றொரு வழக்கின் சில அம்சங்களுடன் ஒத்திருக்கிறது என்றும் கோர்ட்டில் சி.ஐ.ஏ. கூறியுள்ளது. இவர்கள் குறிப்பிடும் அந்த வழக்கு, “அமெரிக்காவுக்கு வெளியே சி.ஐ.ஏ. நடத்திய விசாரணை முகாம்களில் சித்திரவதை செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோக்களை வெளியிட வேண்டும்” என்று, American Civil Liberties Union தொடுத்திருந்த வழக்கு.

அந்த வழக்கில் சி.ஐ.ஏ.-க்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

அந்த வழக்கில் சி.ஐ.ஏ. தமது தரப்பு சாட்சியாக அழைத்தவர்களில் ஒருவர், ஸ்டீபன் ஆஃப்ரர்குட். இவர், அமெரிக்க விஞ்ஞானிகளின் ரகசிய காப்பு ப்ராஜெக்ட்டின் டைரக்டர். ஸ்டீபன் தனது சாட்சியத்தில், “சித்திரவதை செய்யப்படும் போட்டோக்களை வெளியிடுவது கெட்ட ரசனை (“bad taste”) என்று குறிப்பிட்டது, கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த வழக்கில் சி.ஐ.ஏ.க்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியதற்கு ஸ்டீபனின் இந்தப் பதிலும் ஒரு காரணம்.

அதை இவ்வளவு விலாவாரியாக ஏன் சொல்கிறோம் தெரியுமா? பின்லேடன் போட்டோ வழக்கு தொடர்பாக அதே ஸ்டீபன் தனது தனிப்பட்ட கருத்தை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“பின்லேடன் போட்டோ வெளியிடப்படுவது கெட்ட ரசனை என்ற வகையில் இல்லாமல், சரித்திர நிகழ்வு பற்றிய தகவல் அறிவது என்ற வகையில் வருகிறது. போட்டோ வெளியானால், அமெரிக்காவுக்கு எதிராக தாக்குதல் நடக்கும் என்று சி.ஐ.ஏ. கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அல்-காய்தாவும் தலிபானும் எமக்கு (அமெரிக்காவுக்கு) எதிராக ஏற்கனவே யுத்தம் புரிந்துகொண்டுதானே உள்ளார்கள்? போட்டோ வெளியானால், இதைவிட அதிக கடுமையாக முயற்சி எடுத்து போராட போகிறார்களா?” என்பது அவரது கேள்வி.

பின்லேடன் போட்டோ வழக்கை தொடுத்துள்ள Judicial Watch அமைப்பு, ஸ்டீபனை தமது தரப்பு சாட்சியாக அழைக்கலாம் என்று தெரிகிறது. சி.ஐ.ஏ. தேவையில்லாமல், பழைய வழக்கு பற்றி பிரஸ்தாபித்து, தானே சிக்கிக் கொண்டுள்ளது.

Read more...

பாவனைக்கு உதவாத ஒரு தொகை தேயிலை மீட்பு.

பெரியமுல்ல பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த கலப்படமானதும் , பயன்பாட்டுக்கு பொருத்தமற்றதுமான ஒரு தொகுதி தேயிலை கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களும், கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த தகவல்களுக்கமைய, கம்பளை மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்ட சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

தேயிலை தொழிற்சாலைகளிலிருந்து அகற்றப்படுகின்ற கலப்பட தேயிலையை, இரசாயண உரம் தயாரிப்பதாகவெனத் தெரிவித்து, மிக குறைந்த விலைக்கு, பெற்றுக்கொண்டுள்ளோர். வெனிலா இரசாயண பதார்த்தத்தை கலந்து, ஒரு கிலோ தேயிலையை 300 ரூபாவிற்கு நீர்கொழும்பு மொத்த வர்த்தகர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரசாத் லியனகே உள்ளிட்ட அதிகாரிகள், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

Tuesday, January 31, 2012

மத்தியவங்கி மீதான புலிகளின் தாக்குதல் 16 ஆண்டுகள். உயிரிழந்தோருக்காக விசேட பூஜைகள்.

மத்திய வங்கி மீது புலிப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தி, இன்றுடன் 16 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. 1996 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி புலிப் பயங்கரவாதிகள், மத்திய வங்கி மீது தாக்குதல் நடாத்தினர். இலங்கை பொருளாதாரத்தின் இருதயமாக விளங்கிய மத்திய வங்கி மீது பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடாத்தினர். இந்த தாக்குதலின் போது, மததிய வங்கி ஊழியர்கள் உட்பட 91 அப்பாவி பொது மக்கள், கொல்லப்பட்டனர். ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோர், காயமடைந்தனர். நூற்றுக்கும் கூடுதலானோர், பார்வையிழந்தனர்.

குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்ததுடன் அவர்களின் ஆத்தமசாந்திக்கா விசேட பூஜை நிகழ்வுகள் மத்திய வங்கியின் தலைவர் அஜித் கப்ரால் தலையில் நிகழ்த்தியதுடன் நினைவுப் பலகை ஒன்றும் திரைநீக்கம் செய்யப்பட்டது.


வெடிபொருட்கள் அடங்கிய டிரக் வண்டி, மத்திய வங்கியின் நுழைவாயலில் பிரவேசித்த போது, முச்சக்கர வண்டியில் வருகை தந்த தற்கொலை குண்டுதாரி, மத்திய வங்கிக்குள் ஊடுறுவி மேற்கொண்ட தாக்குதலில், பல மாடிகளை கொண்ட மத்திய வங்கி கட்டிடத் தொகுதி மாத்திரமன்றி, அதனை அண்டிய 8 கட்டிடங்களும், சேதமடைந்தன.

இந்த பயங்கர தாக்குதலில், காயமடைந்தவர்களில், அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து நாட்டவர்களும், அடங்கினர். இந்த பயங்கர குண்டு தாக்குதலை நடத்திய  பயங்கரவாத தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், 200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கச் செய்வதற்கும் இந்த தாக்குதல் காரணமாக, அமைந்தது.

இந்த தாக்குதல், இடம்பெற்று பல வருடங்களுக்கு பின்னர், அதாவது செப்டெம்பர் 11 நியூயோர்க் தாக்குதல் நடாத்தப்பட்ட சர்ந்தப்பத்தில், இதுபோன்ற ஒரு தாக்குதலே , இலங்கை மத்திய வங்கி மீதும் மேற்கொள்ளப்பட்டதை, சர்வதேச சமூகம் உணர்ந்தது. பயங்கரவாத தாக்குதலினால் அழித்தொழிக்கப்பட்ட மத்திய வங்கி கட்டிடத் தொகுதி, தற்போது, சகல சவசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு கேடு விளைவித்த பயங்கரவாதமும், முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டு, நாட்டில் சமாதானம் நிலை நிறுத்தப்பட்டுள்ளமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.
...............................

Read more...

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாரிக்கும் ஆள் இல்லாத விமானம்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கம் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. அமெரிக்கா ஆள் இல்லாத விமானங்களை அனுப்பி உளவு பார்த்து வருகிறது. கடந்த மாதம் அமெரிக்கா இதே போல அனுப்பிய விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

இப்போது ஈரான் ஆள் இல்லாத விமானத்தை விரைவில் தயாரிக்க போவதாக அந்த நாட்டு ராணுவ மந்திரி அகமது வாஜி கூறியிருக்கிறார். இந்த விமானத்துக்கு ஏ-1 என்று பெயரிட்டு உள்ளனர். 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. 2 மணி நேரம் தொடர்ந்து பறக்கும். 5 கிலோ குண்டை ஏந்தி சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்க முடியும்.

இதன் எரி பொருளாக பெட்ரோல் மற்றும் கியாஸ் பயன்படுத்தப்படும். ரேடார் கருவிகளும் இதில் பொருத்தப்பட்டு இருக்கும். ஈரான் ஏற்கனவே கடற்படைக்கு பயன்படுத்தும் விமானங்களை தயாரிக்க போவதாக அறிவித்து உள்ளது.

Read more...

தடைசெய்யப்பட்ட கடற்றொழில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

தடைசெய்யப்பட்ட கடற்றொழில்களை யாழ்ப்பாணத்தில் முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வடபகுதி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதி நிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய இழுவைப்படகுகளும் உள்ளுர் இழுவைப்படகுகளும் கடல் வளங்களை முற்றாக அழிப்பதாக தெரிவித்துள்ள இவர்கள் இழுவைப்படகுகளால் கடற்றொழில் உபகரணங்களும் சேதமாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வெடி வைத்தல் தங்கு ஊசி வலை உள்ளிட்ட உபகரணங்களை இன்னமும் கடற்றொழிலாளர்கள் பாவனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ள இவர்கள் இதனை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த சில கிழமைகளுக்கு முன்னர் கொழும்பிலிருந்து யாழ்.வந்த கடற்றொழில் நீரியல் வளத்துறைத்திணைக்கள விசேட குழவினர் சட்டவிரோத கடற்றொழில் முறைகளை பாவித்து கடற்றொழிலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.








Read more...

ஈராக்கிலுள்ள இலங்கை தூதரகத்தை திறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

ஈராக்கிலுள்ள இலங்கை தூதரகத்தை மிக விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தை சொந்த இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமாகாண ஆளுநரின் உதவியுடன் இச்செயற்பாட்டை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டு வருகின்றது.உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 25 வருடகாலமாக இயங்காமல் இருந்த இவ்வெளிக்கள நிலையம் மாணவர்களின் விஞ்ஞான அறிவையும் வெளிக்கள பயிற்சி அனுபவங்களையும் மேம்படுத்தி கல்வியை தரமாக்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

யுத்தத்தின் பின்னர் தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இந்நிலையத்தை வடமாகாண ஆளுநரின் செயலாளரும் முன்னாள் கல்வியமைச்சின் செயலாளருமான இ.இளங்கோவனின் பணிப்பில் வல்வெட்டித்துறை நகர சபையினால் இது புனரமைக்கப்படவுள்ளது.

இதற்காகதொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தினால் வழங்கப்பட்ட 48 லட்சம் பெறுமதியான காணியில் கடந்த செவ்வாய் கிழமை இதற்கான முதற்கட்டபணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கான நிதியினை தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தின் முன்னாள் ஆலோசகர் சரத் கொட்டகோட வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

பாராத லக்ஷ்மனின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை வழங்க மறுப்பு

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு பதிலாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராவதற்கு எழுந்த எதிர்ப்பை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் சந்தேக நபரான துமிந்த சில்வாவுக்கு பதிலாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராக முடியாது என இன்று தீர்ப்பளித்துள்ளார்.

முல்லேரியா சம்பவம் குறித்த அனைத்து விசாரணை அறிக்கைகளும் சட்ட மா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டு அவருடைய ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் துமிந்த சில்வாவை கைது செய்வது குறித்து சட்ட மா அதிபர் இன்னும் தமக்கு ஆலோசனை வழங்கவில்லை என இரகசிய பொலிஸார் தெரிவித்துளளனர்

பாராத லக்ஷ்மனின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய ஆர்.காமினி என்பவருக்கு பிணை வழங்குமாறு அவருடைய சட்டத்தரணி கேட்டுக் கொண்ட போதும் இரகசிய பொலிஸார் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனால் பிணை வழங்க மறுத்த நீதவான் முல்லேரியா சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 13 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.




Read more...

ஈரான் மீதான பொருளாதார தடையினால் சிறிய நாடுகள் பாதிப்பு -ஜனாதிபதி

அமெரிக்காவின் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கே தாக்கம் ஏற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடன் இலங்கை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வருகிறது. எவ்வாறாயினும், பொருளாதார தடையை ஏற்படுத்தியதன் பின்னர் மாற்று நடவடிக்கைகள் அவசியமாகிறது.

இந்தியாவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஅங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

நீர்கொழும்பு சிறு மீன்பிடி துறை மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் பகிஸ்கரிப்பு

நீர்கொழும்பு கொட்டுவ மைதானம் அருகில் உள்ள (திறந்த மீன்விற்பனை சந்தையருகில் ) கடலோரப் பகுதியில் கருவாட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் கருவாட்டு தயாரிப்பதற்காக வெளியிடங்களிலிருந்து மீன்களை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல் அப்பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

நீர்கொழும்பு கடற்கரைத் தெரு மற்றும் குடாப்பாடு ஆகிய பிரதேசங்களில் சிறிய ரக மீன்பிடி படகுகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தி நின்று எதிர்ப்பை தெரிவித்தனர்.

தங்களிடம் மீன்களை கொள்வனவு செய்யாமல் (வாங்காமல்) வெளியிடங்களிலிருந்து மீன்களை கருவாட்டு தயாரிப்பதற்காக வாங்குவதால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து பொலிஸார் அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் குறிப்பிட்ட இடத்தில் நீதிமன்றங்கள் சில இருப்பதன் காரணமாக அமைதியை பேணுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.

இப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர் ஆயினும் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

Read more...

நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு தாக்குதல்

நீர்கொழும்பு மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் மீது இன்று காலை வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று காலை 8.20 மணியளவில் நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல விகாரை அருகில் இடம் பெற்றுள்ளது .

மாநகர சபை உறுப்பினர் கபில நந்தன சுலோச்சன மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வலது கையில் காயங்களுக்கு உள்ளான மாநகர சபை உறுப்பினர் பின்னர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கையில் பத்து தையல்கள் போடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மாநகர சபை உறுப்பினர் நீர்கொழும்பு ஹரிச்சந்திர தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் தனது மகளை இன்று காலை பாடசாலையில் விட்டு வரும் போது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்து வந்தவர், மாநகர சபை உறுப்பினரை வாள் ஒன்றினால் வெட்ட முயன்றுள்ளார்.இதன் போது அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது . சம்பவத்தை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தப்பி சென்றுள்ளனர் .

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை,

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

Read more...

பதிவுசெய்யப்படாத பயிற்சி மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை

சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸ் பதிவு இல்லாமல் நாட்டில் கடமையாற்றும் பயிற்சி மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன் பொலிஸார் நடத்திய ஒரு கணக்கெடுப்பில் நாட்டில் 40 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் இலங்கை மருத்துவ கவுன்சில், ஆயுர்வேதம் குழுவில் பதிவு செய்யாமல் இருந்தனர் என்று அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (GMOA) தலைவர் டாக்டர் அநுராத பதனிய தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களின் படி, மருத்துவ கவுன்சில் இணைந்து பதிவுசெய்யப்படாத மருத்துவர்கள் பயிற்சியின் போது சிறு அபராதத்தை செலுத்தி கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கொள்கின்றனர். இருப்பினும், இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பதிவுசெய்யப்படாத பயிற்சி மருத்துவர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டுமென டாக்டர் அநுராத மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கதிர்காமம் ஹோட்டலில் தற்கொலை அங்கி மீட்பு.


கதிர்காமம் பகுதியில் தற்கொலை தாக்குதல் அங்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் விடுதியொன்றில், சந்தேகத்திற்கிடமான தற்கொலை அங்கியொன்று காணப்படுவதாக, பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பொன்றை அடுத்து கதிர்காம பொலிஸார், மேற்கொண்டு பரிசோதனையின்போது, தற்கொலை குண்டுதாரிகள் அணியும் அங்கியொன்றை கண்டெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அங்கி, இவ்விடத்திற்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது? மற்றும் இதனுடைய நோக்கம் தொடர்பாக அறிந்து கொள்ளும்பொருட்டு கதிர்காமம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ள பொலிஸார் அதனை அண்டிய பகுதிகளில் உள்ளவர்களிடமிருந்து தகவல்களை பெற்றுவருவததாகவும் தெரிவித்துள்ளார்.

குண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஓய்வு விடுதியொன்றிலேயே, இந்த அங்கி காணப்பட்டதாக, அறிவிக்கப்படுகிறது. 

Read more...

யாழ்.மாவட்டத்தில் தீவிரமடைகிறது டெங்கு- தை மாதத்தில் மட்டும் 91 நோயாளர்கள்

யாழ் மாவட்டம் முழுதிலும் தை மாதத்தில் மட்டும் 91 டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு நோயாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஏழாலை பகுதியிலும், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் நீர்வேலி பகுதியிலும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மல்லாகம் பகுதியிலும் அதிகரித்த டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக வெட்டப்பட்ட வாழைக்குற்றிகள், கிளுவை மரப் பொந்துகள், வாழைப் பூவிலிருந்து உதிரும் மடல்கள் போன்றவற்றில் தேங்குகின்ற நீரிலிருந்து நுளம்புகள் பெருக்கமடைவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தவிர யாழ் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் டெங்கு நோய்த் தாக்கம் பரவலாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தமது சுற்றாடலில் டெங்கு நுளம்புகள் பெருக்கமடையாது தினந்தோறும் கண்காணிப்பதன் மூலமும், காய்ச்சல் நோயாளர்கள் உடனடியாகவே தகுதியான வைத்திய ஆலோசனை பெறுவதன் மூலமும் டெங்கு நோயினால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளிலிருந்த தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

Read more...

சட்டவிரோத கருக்கலைப்பு! இரு வைத்தியர்கள் இருபெண்கள் கைது.

குருநாகல் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட  வைத்தியர்கள் இருவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெல்லவ பானகமுவ பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தி வந்த சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையத்தினைச் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது கருக்கலைப்பிற்காக வருகை தந்திருந்த இரு பெண்களுடன் வைத்தியர்கள் எனக் கூறப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு நபர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருநாகல் பிரதேச வைத்தியரின் ஊடாக இந்த கருக்கலைப்பு மத்திய நிலையத்திற்கு தேவையான பெண்கள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுப்பதாகவும், கருக்கலைப்பு நிலையத்தை நடத்திச் சென்ற வீட்டுக்கார இளைஞனும் மற்றும் கருக்கலைப்பிற்காக வருகை தந்திருந்த இரு வைத்திய அதிகாரிகளும் ஒன்றிணைந்து இந்தக் சட்டவிரோத நிலையத்தினை நாடாத்தி வந்துள்ளமை பொலி;ஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் கலைப்புச் செய்யப்பட்டவர் எனவும் மற்றையவர் அதற்குத் தயார் நிலையில் இருந்தவர் எனவும் பொலிஸர் தெரிவிக்கின்றனர்,

கருக்லைப்பிற்காகப் பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள் மற்றும்  போக்குரத்திற்காகப் பயன்படுத்திய முச்சக்கர வண்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் கலகெதர பிரதேசத்தையும் மற்றையவர் மெல்சிரிபுரு பிரதேசத்தையும் வதியிடமாகக் கொண்டவர்கள் எனவும் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Read more...

Monday, January 30, 2012

சரத் பொன்சேகாவின் விடுதலை கோரி பெப்ரவரி 8 இல்ஆர்ப்பாட்டம்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்று பெப்ரவரி 8ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஜனநாயக விரும்பிகள் என சகல தரப்பினரும் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

கருணா எனது நண்பன்! ஆனால் அரசியலில் எதிரி! சுவிட்சர்லாந்தில் பிள்ளையான் முழக்கம்.

ஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண முதல்வரான பிள்ளையான் எனபடுகின்ற சந்திரகாந்தன் சுவிட்சர்லாந்தில் பல மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். அவ்வாறான சந்திப்பு ஒன்றில் பொதுமகன் ஒருவரால் : கருணாவுடனான தங்கள் உறவு எவ்வாறு உள்ளது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிள்ளையான் : ' கருணா தனிப்பட்ட வாழ்வில் எனது நண்பன், அனால் அரசியலில் அந்த நிலைமை கிடையாது! அவர் புலிகளியக்கத்திலிருந்து விலகி வந்தபோது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததை நானும் அறிந்திருந்தேன் நீங்களும் அறிந்திருப்பீர்கள், நாங்கள் அவற்றை அப்போது நம்பாமல் நிராகரித்தோம், அனால் தற்போது அக்குற்றச்சாட்டுக்கள் யாவற்றையும் அவரே நிரூபித்து காண்பித்துள்ளார்' என பதிலளித்துள்ளதுடன் கருணா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

Read more...

கந்தரோடை கந்தையா வித்தியாசாலையின் பாடசாலை தினமும், பரிசளிப்பும்.

யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் பாடசாலை தினமும், பரிசளிப்பு விழாவும் இன்று பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வித்தியாசாலை அதிபர் கா.சசிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண பாடசாலைகள் வேலைப்பகுதி பணிப்பாளர் க.குகநேசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வித்தியாசாலையின் ஸ்தாபகர் குடும்பம் சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். பொறியியலாளர் க.பிரகாஸ் அவர்கள் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து பாடசாலைச் சிறார்களின் பாட்டு, நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கிராம மக்கள், பெற்றோர், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல்லினை யாழ் மேயர் அவர்களும் நாட்டிவைத்தமை சிறப்பம்சமாகும்.





Read more...

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் இன்றைய தினம் காலையில் சம்பிரதாய பூர்வமாக நாட்டி வைக்கப்பட்டுள்ளது.காலையில் இடம் பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பருத்தித்துறை நகரில் உள்ள பழைய பொலிஸ் நிலைய கட்டிடத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பருத்தித்துறையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் சிரேஷ்ர பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா யாழ்.மாவட்ட சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் ரி.இந்திரன் காங்கேசன் துறைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி காமினி பேராரா பருத்தித்துறை உதவிப்பிரதேச செயலளர் திருமி எஸ்.உஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Read more...

மாலை மலர் | தலைப்புச்செய்திகள்

BBC தமிழ் தலைப்புச் செய்திகள்

தினமலர் தலைப்புச் செய்திகள்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com