Sunday, December 30, 2018

மதமும் ஒர் அரசியல், அரசியலும் ஒரு மதம். வ.அழகலிங்கம்

புதிய அரசியல் அமைப்பில் பௌத்தமதத்திற்கு முதன்மையான இடத்தை உறுதிப்படுத்துவதோடு ஓற்றை ஆட்சி முறையை மாற்ற மாட்டேன் என்றும் சிறிலங்கா பிரதமர் றணில் விக்கிரமசிங்கா உறுதி அளித்துள்ளளார்.

இராஜவரோதயம் சம்பந்தனாலும் ஆபிரகாம் சுமந்திரனாலும் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் எதுவும் கேளாமல் தமிழ் மக்களின் ஆசை அபிலாசை இன்ப துன்பங்களைப் பற்றி எதுவும் சட்டை செய்யாமல் தன்மூப்பில் மீண்டும் பிரதமராக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க 28.12.2018 இல் தான் ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போதோ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பை திருத்தும் போதோ புத்தமதத்தின் முன்னுரிமையையும் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பு முறையையும்; செத்தாலும் மாற்ற மாட்டேன் என்று புத்த பீடாதிபதிகளுக்கு உறுதி அளித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு இது அதிர்ச்சியைத்தராது. அப்படி இல்லாமல் விட்டால்தான் அதிர்ச்சியாகும். எப்போதும் சிவசின்னங்களாகிய திருனூறு சந்தணம் தவறாமல் பூசிக்கொண்டு 'மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்துவிடின்' என்றதைப் பழிப்பதே வாழ்க்கையாகக் கொண்ட சம்பந்தன் 'நம்பி நட, நம்ப நடாவாதே' என்பதன் பிரகாரம் தான் றணில் விக்கிரமசிங்காவோடு சேர்ந்து எந்த உறுதி மொழி ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று வழமைக்கு மாறாக முழு உலகத்திற்கு முன்னால் சத்தியஞ் செய்து தலையாலே கிடங்கு கிண்டிக் காப்பாற்றிய யூ.என்பி பிரதமரது கூற்று இது.

வார்த்தையே கடவுள். சொன்ன சொல்லை மறந்திடுவாரோ? அவர் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ. இன் அமுதைப் போல் பேசிய றணிலின் இனிய வார்த்தை எம் உடலை வாட்டுதே என்கின்றன நாறும் பிணங்களான தமிழ்தேசியக் கூட்டணி.

நேற்றுமுன்தினம் (28.12.2018) பிரதமர் தான் மீண்டும் எந்தவித சுயநலமோ தமிழ் நலமோ இல்லாத, அஞ்சுவது அஞ்சாமை பேதமை என்று தெரியாத தமிழ் தேசிக் கூட்டணியின் ஈடு இணையற்ற உதவியால் பிரதமரான பின் கண்டியில் உள்ள ஸ்ரீதலதா மாளிகைக்கு சென்று மல்வத்தை பீடாதிபதி மகாநாயக்க தேரர்;. அதிவணக்கத்திற்குரிய. தீபோட்டுவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடாதிபதி; வண.வாரகாகொட ஸ்ரீ கன்னரநாத தேரர் ஆகியோரின் ஆசீர்வாதங்களைப் பெற்றார்.

பிரதம மந்திரி விக்கிரமசிங்கவை அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகள் அழைத்து அரசியலமைப்பையும் மக்களுடைய இறையாண்மையையும் பாதுகாத்துக் கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்கள்.
பிரதமர் கூறினார்: 'ஐக்கிய தேசியக் கட்சி பல எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளோடு கலந்துரையாடி விவாதித்து புத்தமதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அரசியலமைப்பின் 9 வது பிரிவை மாற்றாமையை ஒப்புக்கொண்டர்கள்.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி அரசு கொள்கை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் ஒத்துக் கொண்டார்கள்.' மீண்டும் பழைய கிளடி கதவைத் திறவடி.

அரசியலும் ஒரு மதம். மதமும் ஒர் அரசியல். ஜனநாயக அரசு என்பது மத சமத்தவ அரசு. 1972 மட்டும் இலங்கை மத சமத்துவ அரசாக இருந்தது.

உலகின் முதன் முதல் 1776 இல் எழுதப் பட்ட அமெரிக்கச் சட்டத்தில் மதசமத்துவம் இருந்தால்தான் அந்தச் சட்டம் ஜனநாயகச் சட்டமாக இருக்கும். அந்த ஜனநாயகச் சட்டத்தை எழுதிய ஜெபர்சன் சொன்னார்:-'எங்கே அரசு மதத்தில் தலையிடுகிறதோ அன்றில் எங்கே மதம் அரசியலில் தலையிடுகிறதோ அந்த நாடு வெகு சீக்கரத்தில் அழிந்து போகும்.' இதை அடியொற்றியே உலகில் தம்மை ஜனநாயக நாடென்று பிரகடனப் படுத்தும் எல்லா நாடுகளுமே தமது அரசியல் சட்டத்தில் மத சமத்துவத்தை உறுதியாகவே பிரகடனப் படுத்தி இருக்கின்றன.

ஓர் அரச மதமுள்ள நாடு ஜனநாயக நாடே அல்ல. அது நிலப் பிரபுத்துவ அமைப்பு முறைக்கு முந்திய காட்டு மிராண்டி நாடு. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு முழுப் பொறுப்பும் மல்வத்தை பீடாதிபதிகளும் அஸ்கிரிய பீடாதிபதிகளும்தான்.

புத்த மதம் ஆயிரம் வருசம் தமிழை வளர்த்த மதம். புத்த மதம் காஞ்சியிலே இருந்தே உலகம் முழுவதும் பரவியது. இலங்கைக்கும் தமிழ் புத்த துறவிகளே புத்த சமயத்தைக் கொண்டு வந்தனர். மகாவம்சத்தைத் தமிழ் புத்த துறவியான தர்மகீர்த்தியே பாளியில் எழுதினார். சிங்களத்திற்கும் தமிழிற்கும் பொதுவான பல ஆயிரக்கண்கான சொற்கள் பாளியிலிருந்து புத்த சமயத்தோடு தமிழுக்கு வந்தவை.

மூன்று தமிழ்ச் சங்கங்களும் புத்த சங்கங்கள். மணிமேகலை புத்தத்தின்
முன்னோடியான சமணத்தை 'கொல்லா நல இயக்கம்,, என்கிறது.
சிலப்பதிகாரம் புத்தனை 'தனக்கென வாழாப் பிறர்க் குரியாளன்,, என்கிறது.
தமிழிலக்கியம்; முழுவதிலும் இதற்கு இணையாக எதையுமே காட்ட முடியாது. மானிட வாழ்வியலைப் புத்தம் அந்த மட்டத்திற்கு உயர்த்தியது.

சைவத்தின் மூல நூலான சிவஞான சித்தியார் புத்தனை 'போதியில் பொலிந்த புனிதன'; என்கிறது.

திருக்குறளில் வரும் 'அறவாளி அந்தணன்,, என்பது புத்தனையே குறிக்கிறது என்பர் பல தமிழ் புலமையாளர்கள். ஆனால் இலங்கையில் உள்ள புத்தமதத் துறவிகள் மாத்திரமல்ல எல்லா மதத்தறவிகளும் 30 வருட யுத்தத்தில் கொலையை ஆதரித்த கொடூரர்கள்.

'வரலாறு சில தனிப்பட்ட நபர்களைப் போன்றது அல்ல. வரலாறு அதன் இலக்கை அடைவதற்கு சில மனிதர்களைப் பயன்படுத்துகிறது. வரலாறு என்பது மனிதர்களின் இலக்கை அடைவதற்காக ஈடுபடும் செயல்களே தவிர வேறில்லை., -புனிதக் குடும்பம் கார்ல் மார்க்ஸ்

இலங்கையிலே சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதே இல்லை. இலங்கையிலே 'பயங்கரவாதத்தடைச் சட்டத்தின், ஆட்சியே நடைபெறுகிறது. தனித்து அக்டோபர்26, 2018 மாத்திரம் சட்டம் மீறப்படவில்லை. ஒவ்வொரு செக்கனும் சட்டம் ஏதோ ஒரு விதத்தில், ஏதோ ஓர் இடத்தில், ஏதோ ஒரு வடிவத்தில் மீறப்படுகிறது.

அதிகமாகச் சட்டத்தை மீறுபவர்கள் சட்டத்தை இயற்றுகின்ற பாராளுமன்ற அங்கத்தவர்களும் அவர்களில் தங்கிவாளும் மானிட ஒட்டுண்ணிகளுமாகும். ஆதலால் பாராளுமன்றைத்தைத் தூக்கியெறிந்து அதனிடத்தில் மானிடத்துன்பங்களை உண்மையிலே உணரும் திறன்வாய்ந்த ஒரு அமைப்பைப் பிரதியிட வேண்டும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com