Saturday, November 10, 2018

அரசியல் விபச்சாரிகள் மற்றும் நகைச்சுவை நடிகர்களிடம் நாங்கள் எங்கள் நாட்டை இழந்துவிட்டோம் , லக்மல் ஹரிஸ்சந்திரா

நான் எனது பிரியமான நாட்டினை இழந்துவிட்டதைப் போல உணருகிறேன், இந்து சமுத்திரத்தில் ஒரு முத்தினைப்போலத் திகழும் இந்த நாட்டினை, ஒரு தெருவோரsrilanka citizenக் கடையைக்கூட நிருவகிக்கத் தகுதியற்றவர்களிடம் ஒப்படைத்த முட்டாள்தனத்தினை ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் என்னால் முடியவில்லை. துரதிருஷ்டவசமாக ஜனநாயகம் என்கிற பெயரால், வெவ்வேறு கட்சிகளின் கூட்டணி ஒன்று மோசமான அரசியல் விளையாட்டை நடத்தி அதை குழப்பத்தில் தள்ளிவிட்டுள்ளது. சமீபத்தைய அரசியல் நெருக்கடியுடன் நாடானது ஆழமான அரசியல் முறிவான யுகத்துக்குள் திரும்பவும் பிரவேசிக்கிறது, சர்வாதிகாரத்தை வளர்த்துவிட்ட காலநிலை மற்றும் கடந்த காலத்தின் அனைத்து மோசமான துஷ்பிரயோக வேலைத்திட்டம் ஆகிய அனைத்தும் புதுப்பிக்கப்படலாம். நான் ஒரு தொழில்முறை எழுத்தாளன் இல்லை ஆனால் எனது ஏமாற்றம் மற்றும் விரக்தி என்பனவற்றின் காரணமாக நான் எனது சிந்தனைகளை வெளிப்படுத்துவதை தெரிவு செய்தேன் மற்றும் நெறிகெட்ட எங்கள் விபச்சார அரசியல் நடவடிக்கை மற்றும் காமெடியன்கள் மற்றும் மாடுமேய்ப்பவர்களைப் போன்றவர்களினால் எங்களது அரசியல் கலாச்சாரத்துக்கு ஏற்பட்டுள்ள ஊழல் என்பனவற்றுக்கு எதிராகப் எதிர்த்து எழவேண்டும் என்று எனது சக நாட்டுக்காரனை தூண்டிவிடவும் எண்ணினேன். அடிமட்டத்தில் உள்ளவர்கள் இந்த துரதிருஷ்டமான முன்னேற்றங்களைக்கண்டு வாயடைத்துப்போய் கவலையுடன் நடப்பதைக் கவனித்து வருகிறார்கள். ஒப்பீட்டளவில் எங்கள் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளும் வேகமாக எங்களைக் கடந்து செல்லுகையில் நாங்கள் மட்டும் உற்பத்தி மற்றும் திறமை ஆகிய இரண்டிலும் தன்னைத்தானே நிருவகிக்க முடியாத ஒரு தேசமாக ஏன் மாறியுள்ளோம் என்கிற பொருத்தமான கேள்வியை ஏன் கேட்கக்கூடாது?

ஸ்ரீலங்காவில் பல ஜனநாயகச் சோதனைகள் தோல்வியடைந்துள்ளன. 1948ல் சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரு தட்டில் வைத்து தரப்பட்ட பல வரலாற்று வாய்ப்புகளை நாங்கள் இழந்துள்ளோம். வேகமாக முன்னேறுகையில் மற்றுமொருமுறை தவறான ஒரு குழுவுக்கு வாக்களித்த பின்னர் நாங்கள் கிட்டத்தட்ட எங்களைக் கட்டிவைத்துள்ள ஒரு கயிற்றின் முடிவுக்கு வந்துள்ளோம். அதன் காரணமாக இன்று எங்கள் சொந்த மதியீனத்தினால் ஏற்பட்டுள்ள தவறான விளைவுகளைச் சமாளிப்பதற்கான நிர்ப்பந்தத்தில் சிக்கியுள்ளோம். ஒரு நகைச்சுவை வீட்டுக்குத் தலைமைதாங்குவதற்கு பொருத்ததான ஒரு ஜனாதிபதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, இரண்டு பிரதமர்கள் உள்ள ஒரு கோமாளிகளின் பாராளுமன்றத்தில், ஒரு கூட்டம் திருடர்கள், பாலியல் துஷ்பிரயோகிகள், காட்டிக் கொடுப்பவர்கள், ஏமாற்றுக்காரர்கள், மோசடிக்காரர்கள், தங்கள் ஆத்மாவைக்கூட காசுக்கு விற்கும் கீழ்தரமான கொள்கையற்ற கட்சிமாறிகள் மற்றும் ஒரு அரசாங்க அலுவலகத்தில் கடமையாற்றும் கடைநிலை பணியாளனை விட குறைவான கல்வித் தகுதியுடைய படிக்காதவர்கள் இடம்பிடித்துள்ளார்கள். ஒரு பேராசிரியர் முன்பு ஒருமுறை சொன்னது, பாராளுமன்றத்தில் எங்களைப் பிரதிநிதிப்படுத்துபவர்களில் பலர், முதியோர் இல்லத்திலும் பறவைகள் சரணாலயத்திலுமே இருக்கத் தகுதியானவர்கள் என்று. ஓ என்ன காலம்! ஓ என்ன சம்பிரதாயம்!

கடந்த எழுபது வருடங்களாக, ஸ்ரீலங்காவானது ஆசியாவின் பிரதான குழுமமாக பெருமையுடன் உயரத்தில் எழுந்து நின்றது, சிங்கப்பூரின் லீ குவான் யுங் ஒரு உதாரண மாதிரியாக எடுக்க விரும்பிய ஒரு நாடு, இன்று வேகமான பாதையில் சென்று கீழ்மட்ட நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கீழ்த்தரமான நாடாக மாறியுள்ளது. எல்லாவற்றிலும் மோசமாக ரௌடி அரசியல் வகுப்பினர் எங்கள் மக்கள் மத்தியில் இனவாதம் மற்றும் வகுப்புவாதம் எனும் அழியாப் பிளவுகளை கொண்டுவந்துள்ளதுடன் அதிகாரத்திற்கு வருவதற்காக அல்லது அதில் நிலைத்திருப்பதற்காக அவர்களைப் பயன்படுத்துகிறார்கள். நான் நினைக்கிறேன் ஸ்ரீலங்கா கிரிக்கட் அணிதான் ஸ்ரீலங்காவின் அரசியல் தரங்களைச் சீரழிப்பதில் மிகவும் பிரதிநிதித்துவம் வகிக்கிறது என்று. எங்கள் அடுத்த தலைமுறைக்கு எந்த மாதிரியான ஒரு நாட்டுக்கு நாம் மரபுரிமை வழங்கப் போகிறோம்? ட்ரம்ப் கேலிக்கிடமான மேற்கத்தைய பாணி ஜனநாயகத்தை உருவாக்கும் நேரத்திலும், கீழ்தரமான இனவாத அரசியலை நிலைநிறுத்துவதற்காக மோடி மகா பாரதத்தை அனுமதிக்கும் நேரத்திலும், சிறிசேன தனது முட்டாள்தனமான பலவினமான அரசியலாலும் ஃமகிந்த தனது திருப்தியடையாத அதிகாரப் பேராசையாலும்ஃரணில் தனது திறமையின்மை மற்றும் சுயநலம் ஊடாக அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதற்கும் ஆகமொத்தம் எல்லாம் கூடி இந்த அரசியலமைப்பு நெருக்கடியை தோற்றுவித்துள்ளதுடன் ஸ்ரீலங்காவில் ஜனநாயகத்துக்கு பின்னடைவை ஏற்படுத்தி முழு உலகமும் அதைப்பார்த்து கேலி செய்யும் நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

எவ்வளவு காலத்துக்கு நாங்கள் இந்தமாதிரி ஆட்களை எங்கள் நாட்டுக்குப் பொறுப்பாக இருக்கவும் நாட்டை இரத்தம் சிந்தி மரணிக்கவும் அனுமதிப்பது? ஏழு தசாப்தங்களாக நாங்கள் நீலத்துக்கும் பச்சைக்குமாக அல்லது இரண்டும் சேர்ந்த கலவைக்குமாக மாறி,மாறி வாக்களித்துள்ளோம், அவர்கள் அனைவரும் ஊழல், திறமையின்மை, இனவாதம் மற்றும் அற்ப அரசியல் என்பனவற்றுனுடாக நாட்டை உறிஞ்சிக் குடித்து அதை வரட்சியடையச் செய்துள்ளார்கள். மக்களின் சம்மதமின்றி ஸ்ரீலங்காவின் சொத்துக்களை ஜனநாயக நாட்டில் நிறைவேற்று மற்றும் சட்ட அதிகாரம் என்பனவற்றின் பெயரால் விற்பனை செய்வதற்கு அவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? ( உள்ளக கட்டமைப்பு என்ற பெயரால் ஒரு தொடர்ச்சியான வெள்ளை யானைகளை கட்ட வைத்ததின் மூலம், சீனக் கடன்பொறியில் சிக்கி பாதிக்கப்பட்ட முதல் நாடு ஸ்ரீலங்காவாகும்). பாராளுமன்றத்தில் அவர்களின் வாக்குகளை தங்கத்துக்கு விற்க அவர்களை யார் அனுமதித்தது? வீடுகள், ஆடம்பர வாகனங்கள் மற்றும் பாதுகாப்பு அதேபோல நம்பமுடியாத இலவச வசதிகள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை தமதாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்கு யார் அனுமதி வழங்கியது? வாக்குறுதி அளித்ததுபோல இந்த மோசடிக்காரர்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க ஏன் முடியாமற்போனது? கட்சி தாவும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கான இவ்வளவு பெருந்தொகைப் பணம் எங்கிருந்து வந்தது? அவர்களைப் பற்றி விசாரணை செய்வதற்கு தகுதி இல்லையா? மற்றைய துறைகளில் பொறுப்புக்கூற வைப்பதுபோல, விசித்திரக் கதைகளில் வருவதுபோல வாக்குறுதிகளை வழங்கிவிட்டு தேர்தல் முடிந்ததும் அதைப்பற்றி மறந்து விடுபவர்களை ஏன் பொறுப்புக் கூற வைக்க முடியாது? எங்கள் பொதுப் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் அடிப்படைக்கு ஏற்றுக்கொள்ளத் தக்க கல்வித் தகுதி மற்றும் அரசியல் அறிவு என்பன தேவை என்கிற ஒரு முறையை நாம் ஏன் கொண்டுவரக் கூடாது?

21 மில்லியன் மக்களைக் கொண்ட இந்த நாட்டின் தலைவர்கள் தவறான வழியில் பணம் திரட்டுபவர்களாகவும் தங்கள் நலன்களைப் பாதுகாப்பவர்களாகவும் வருவதற்கு நாம் ஏன் அனுமதித்தோம்? அனைத்து ராஜதந்திர விதிகளையும் காற்றில் பறக்கவிட்டு வெளிநாட்டு அரசாங்கங்கள் எங்கள் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதற்கு நாம் ஏன் அனுமதி வழங்குகிறோம்? இவைகள்தான் மக்கள் இன்று கேட்கும் சில கேள்விகள் ஆனால் துரதிருஷ்ட வசமாக அவர்கள் இந்த அழுக்கு மூட்டையை சுத்திகரித்து தூய்மையானதும் திறமையானதுமான அரசியல் அமைப்பை உருவாக்கும் ஒரு பரந்த இயக்கத்தின் பங்காளிகளாக மாறாமல் இன்னும் வெறுமே பார்வையாளர்களாக மட்டுமே இருக்க விரும்புகிறார்கள்.

ஜனநாயகம் என்பது ஒரு நல்ல விஷயம், ஆனால் ஸ்ரீலங்காவில் இந்த மாதிரியான கீழ்மட்ட அரசியல் வகுப்பினரின் கைகளில், அது பரந்த ஒரு பெரிய கேலிக்கூத்தாக மாறியுள்ளது. ஒவ்வொரு கணமும் மக்களின் பங்களிப்பு இடம்பெறும்போதுதான் ஜனநாயகம் பிரசாசமாக மாறுகிறது. மக்கள் நலனில் அக்கறையுள்ள ஒவ்வொரு விஷயத்தைப்பற்றியும் அறிவித்து, கலந்துரையாடி, விவாதிப்பதற்கு நாங்கள் புதிய தொழில்நுட்பங்களைப் பின்பற்றவேண்டும். மேலும் ஒரு ஜனநாயகத்தில் ஒரு குறிப்பிட்ட இன, மத அல்லது குறிப்பிட்ட ஒரு மக்கள் குழுவினரின் நலன்களுக்கு வேண்டி மட்டுமே செயற்படும் கட்சிகள் இருப்பது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். உண்மையான ஜனநாயகத்தில் எல்லாக் கட்சிகளும் எல்லா மக்களையும் பிரதிநிதிப்படுத்த வேண்டும். எனினும் ஸ்ரீலங்காவில் உள்ள அரசியற்கட்சிகள் அனைத்துவிதமான இன, மொழி மற்றும் மதக் கலவரங்களை உருவாக்குவதற்கு முற்றிலும் பொறுப்பாக உள்ளன. தரதிருஷ்டவசமாக ஊழல் என்பது கிட்டத்தட்ட நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா சமூகத்தினுள் வேரூன்றியுள்ளது. தங்களின் சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் வாழ்வின் அனைத்து நிலையிலுள்ள மக்களும் தங்கள் வசதிக்காக அல்லது சட்ட விரோதமாக செல்வம் சேகரிப்பதற்காக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். நாட்டில் ஊழலின் அச்சுறுத்தல் ஒரு தொற்றுநோயின் விகிதாச்சாரத்தில் வளர்ந்துள்ளது, மற்றும் அது ஒரு அதிவேக வளர்ச்சி வரைவின் உச்சத்தில் இருப்பது போலத் தோன்றுகிறது. இது தனிநபருக்கு அல்லது ஒரு குழுவுக்கு மற்றவர்களின் செலவில் தேவையற்ற அனுகூலங்களை பெற்றுக்கொள்ள இடமளிப்பதால் அது ஜனநாயகத்துக்கு பெருந் தடையாக உள்ளது.

நமது அரசியல் செயற்பாட்டில் சிறிதளவு நல்லொழுக்கங்களைக் கொண்டுவருவதற்கான ஒரே வழி சிவில் மற்றும் பொது செயற்பாட்டினை அணி திரட்டுவதேயாகும். சமீபத்தில் கொழும்பு ரெலிகிராப்பில் ஜயதேவ உயன்கொட ஒரு கட்டுரையில் சொல்லியிருப்பது, ‘2015 அனுபவம் குழப்பமான ஒரு புதிய அரசியல் பாடத்தை நமக்கு கற்பித்துள்ளது: அரசியல் கட்சிகள் மற்றும் தொழில்முறை வகுப்பைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆகியோர் ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் நம்பகமான கூட்டணியினராக இனிமேலும் இருக்கப் போவதில்லை. அவர்களுக்கு மக்களின் ஜனநாயக அவா மற்றும் அபிலாசைகள் என்பன அதன் மதிப்பில்வெறும் ஒரு கருவி மட்டுமே. அவர்களின்; சொந்த ஜனநாயக தொகுதிகளில் உள்ள விசுவாசம் மற்றும் நம்பிக்கை என்பன தற்காலிகமான, சந்தர்ப்பவாதமான மற்றும் இழக்கத்தக்கதானதாகவே உள்ளன…. எங்கள் சமூகத்தில் ஜனநாயக பாதுகாப்பையும் தடைகளையும் வலுப்படுத்தி கட்டியெழுப்ப ஒருவேளை இயலுமாக உள்ள ஒரே வழி மாலைதீவின் மற்றுமொரு பதிப்பாக ஸ்ரீலங்கா சீரழிவடையாமல் எதிர்ப்பதே ஆகும். ஜனநாயக எதிர்ப்பின் அமைப்புக்களான ஸ்ரீலங்கா அரசியல் கட்சிகளின் சரிவின் கண்ணோட்டத்தில் எதிர்ப்புக்கான பொறுப்பின் பெரும்பகுதி குடிமக்களின் தோள்களின் மீதும் மற்றும் அவர்களின் தன்னாட்சி அணிதிரட்டலின் மீதும் விழுகிறது.

அவர் மேலும் தெரிவிப்பது, ஒப்பீட்டளவில் எண்ணிக்கையில் அவைகளின் அளவு சிறியதாக இருந்தாலும், இந்தக் குழுக்களில் சிலதுதான் ராஜபக்ஸ சகோதரர்களின் ஆட்சியின்மீது முதலில் ஆங்காங்கே எதிர்ப்புகளை வெளியிட்டன மற்றும் அப்போது நீடித்த எதிர்ப்புகளுக்கான நிலமைகள், அரசியற் கட்சிகளின் புதியதொரு கூட்டணி உதயமாகி ஜனநாயக மறுமலர்ச்சிக்கான ஒரு புதிய இடைவெளியை திறப்பதற்கு உதவியது. இந்த குடியியல் குடியரசுக் குழுக்கள் இப்பொழுது பெருமளவில் செயலற்ற நிலையில் உள்ளன. அவைகள் ஒரு புதிய கட்ட அணிதிரட்டலுக்காகக் காத்திருக்கின்றன மற்றும் அவற்றுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளும் மற்றும் செயற்பாடுகளும் தேவையாக உள்ளன. சிதறிக்கிடக்கும் ஸ்ரீலங்காவின் ஜனநாயக சமூக அமைப்பான இந்த பிரதான குழுக்களுக்கு நிறுவன ரீதியான தலைமைத்துவத்தை வழங்கவேண்டியது ஒருவேளை செயலூக்கமானதும் மற்றும் வளம் நிறைந்ததுமான சிவில் சமூகக் குழுக்களின் உடனடிப் பணியாகும்.

மக்கள் ஜனநாயக நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை முற்றிலும் இழப்பதற்கு முன்பாக ஸ்ரீலங்கா மற்றொரு கட்ட ஜனநாயக மறுமலர்ச்சியை ஆரம்பிக்க வேண்டும். இந்த அரசியல் ஒட்டுண்ணிகள் நாட்டை நித்திய மறதி மற்றும் நரகத்திற்குள் தள்ளுவதற்கு முன்பாகவே மக்கள் பேசுவதற்கும் மற்றும் எதிர்ப்புக் காட்டவும் ஆரம்பிக்க வேண்டும். எனினும் நேரம் எங்களுக்குச் சாதகமாக இல்லை.

தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com