Sunday, January 31, 2016

ஐரோப்பிய அரசாங்கங்கள் அகதிகளுக்கு எதிரான தாக்குதலை அதிகரிக்கின்றன. By Marianne Arens

இவ்வார ஆம்ஸ்டர்டாம் கூட்டத்தில், ஐரோப்பிய உள்துறை மற்றும் நீதித்துறை மந்திரிமார்கள் நிராதரவான மத்திய கிழக்கு அகதிகளின் உள்வரவை எவ்வாறு நிறுத்துவது என்பதற்கான பரிந்துரைகளைக் கொண்டு ஒருவரையொருவர் விஞ்சி நிற்க முயன்றார்கள். எந்த நடவடிக்கையும் இல்லையென்றாலும் பரிசீலினைகளே கொடூரமாக இருந்தன.

உள்நுழையவியலாதவாறு எல்லைகளை மூடுவதில் தொடங்கி, தேசிய அரசாங்கங்களின் விருப்பம் இல்லையென்றாலும் கூட, Frontex துருப்புகளை நிலைநிறுத்துவது, அத்துடன் நூறாயிரக் கணக்கான அகதிகளுக்கு கொடுஞ்சிறைக்கூடங்களை எழுப்புவது வரையில் பரிந்துரைகள் இருந்தன.

பல்வேறு மந்திரிமார்கள் கிரீஸைத் தொடர்ச்சியாக தாக்கினர், ஏதென்ஸ் அந்நாட்டின் வழியாக ஐரோப்பாவிற்குள் வரும் அகதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவில்லை என்றால், அதை செங்கென் வலையத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென அவர்கள் கோரினர், இம்மண்டலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சுதந்திர-நகர்வுக்கு உத்தரவாதமளிக்கிறது.

மத்திய கிழக்கிலிருந்து வரும் அகதிகளில் பெரும் விகிதத்தினர், கிரீஸிற்கு அருகே கடந்து செல்வதற்கு முன்னதாக மற்றும் மாசிடோனிய எல்லையில் ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடுவதற்கு முன்னதாக, துருக்கியிலிருந்து கிரேக்க தீவுகள் வரையில் அபாயகரமான மற்றும் பெரும்பாலும் மரணகதியிலான பயணத்தை மேற்கொள்கின்றனர். மாசிடோனியா மற்றும் சேர்பியா வழியாக பயணித்த பின்னர், அவர்களில் பலர் ஜேர்மனியை அடையும் முயற்சியுடன், ஹங்கேரி, குரேஷியா மற்றும் ஸ்லோவேனியா வழியாக மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைகிறார்கள்.

உறையும் குளிர் மற்றும் சீற்றமான கடல்களுக்கு இடையே, இப்போதும் 2,000 வரையிலான அகதிகள் நாளாந்தம் கிரேக்க தீவுகளை அடைய ஏகியன் கடலைக் கடந்து வருகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி 23 வாக்கில், 44,000 பேர் ஏற்கனவே இந்த வழியாக 2016 இல் துருக்கியிலிருந்து ஐரோப்பாவை எட்டியிருந்தனர். உயிரிழந்தவர்கள் அல்லது காணாமல் போன அகதிகளின் எண்ணிக்கை 149 ஆக இருந்தது. ஜனவரி 22 இரவு மட்டுமே, 42 பேர் அப்பயணத்தை மேற்கொள்ளும் முயற்சியில் மூழ்கி இறந்தனர், அதில் 18 குழந்தைகளும் உள்ளடங்கும்.

இந்த பாதை அடைக்கப்பட உள்ளது. Frontex படைகளைக் கொண்டு மாசிடோனியாவை ஒட்டிய கிரீஸின் வடக்கு எல்லையைக் குறிப்பிடத்தக்க அளவில் பலப்படுத்துமாறு மந்திரிமார்கள் கோரினர், அத்துடன் 2017 இறுதிக்குள் செங்கென் வலையத்திற்குள் எல்லை கட்டுப்பாடுகளைப் பலப்படுத்தவும் ஒப்புக் கொண்டனர்.

அகதிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அல்லது செங்கென் வலையத்திலிருந்து நீக்கப்படுவதை முகங்கொடுக்க கிரீஸிற்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஜேர்மன் உள்துறை மந்திரி தோமஸ் டு மஸியர் அக்கூட்டத்திற்குப் பின்னர் கூறுகையில், “நிரந்தரமாக, குறிப்பிடத்தக்க மற்றும் நீடித்த அகதிகள் எண்ணிக்கை குறைப்பு நமக்கு அவசியம், மேலும் இது வரும் வாரங்களில் புலனாகக்கூடியதாக இருக்க வேண்டும்,” என்றார்.

டு மஸியர் தொடர்ந்தார், எல்லை பாதுகாப்பு முகமை Frontex எல்லைகளைப் பாதுகாப்பதில் ஓர் அங்கத்துவ அரசின் இடத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். ஜேர்மனியின் உள்துறை மந்திரியும் செங்கென் வலையத்திலிருந்து கிரீஸை வெளியேற்றுவதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. “கிரீஸ் அதன் வீட்டுப்பாடத்தை செய்ய நாம் அதற்கு அழுத்தமளிப்போம்,” என்றவர் அச்சுறுத்தினார்.

அகதிகள் மற்றும் புலம்பெயர்வோருக்கான பெல்ஜிய அரசு செயலர் Theo Francken கிரீஸில் 300,000 அகதிகளுக்கான ஓர் "அடைக்கப்பட்ட இடத்தின்" சாத்தியக்கூறை எழுப்பினார். அது ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டும், ஏனென்றால் கிரீஸின் "அரசு கட்டமைப்புகள் வெளிப்படையாகவே மிகவும் பலவீனமாக [இருந்தன],” என்று அந்த பெல்ஜிய அரசியல்வாதி தெரிவித்தார்.

Francken இன் பரிந்துரை, ஒரு நடுத்தர நகர அளவில் அகதிகளுக்கான ஒரு சேரிப்பிரதேசத்தை உருவாக்கி, கிரீஸை ஒரு பிரமாண்டமான கொடுஞ்சிறைக்கூடமாக மாற்றுவதற்கு ஒத்திருக்கிறது. நாஜி யுகத்திற்குப் பின்னர் ஐரோப்பாவில் இதனுடன் ஒப்பிடுவதற்கு ஒன்றும் கிடையாது.

Frontex படைகளின் ஒத்துழைப்புடன் மாசிடோனியா-கிரீஸ் எல்லையை மூடுவதற்கு ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டொர் ஓர்பன் ஆதரவு தெரிவித்தார், இவர் பல மாதங்களாக கிரீஸின் வடக்கு எல்லையில் பாரியளவில் எல்லை வேலிகளை ஸ்தாபிக்க கோரி வந்துள்ளார். ஸ்லோவாக்கிய பிரதம மந்திரி ரோபர்ட் பிகோவும் அவரது ஆதரவை வழங்கினார். Der Spiegel செய்தின்படி, ஹங்கேரி, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா ஏற்கனவே இந்த எல்லைக்கு அவற்றின் சொந்த பொலிஸ் படைகளை அனுப்பியுள்ளன, ஹங்கேரி ஒரு நிரந்தர வேலியைக் கட்டமைக்க அதிகளவில் கட்டுமானப் பொருட்களை அனுப்பியுள்ளது.

செவ்வாயன்று, டேனிஷ் நாடாளுமன்றம் தஞ்சம் கோருவோரின் உடைமைகளை பறிமுதல் செய்ய சட்டமசோதா நிறைவேற்றியது. குடும்ப மற்றும் உணவு செலவுகளுக்காக 10,000 குரோனெர் (1,340 யூரோ) மதிப்புக்கு அதிகமான உடைமைகளை இனிமேல் பொலிஸ் அகதிகளிடமிருந்து பறிமுதல் செய்யலாம். நிஜமான பரிந்துரையோ, 3,000 குரோனெர் மதிப்பிற்கு அதிகமிருந்தாலே அனைத்தையும் பறிமுதல் செய்யலாம் என்றிருந்தது. அதற்கும் கூடுதலாக, புலம்பெயர்வோர் அவர்களது உறவினர்களுடன் இணைய அவர்களுக்கு விண்ணப்பிப்பதற்காக முன்னதாக காத்திருக்க வேண்டியிருக்கும் காலம் ஓராண்டில் இருந்து மூன்றாண்டாக நீடிக்கப்படும், தற்காலிக வசிப்பிட அனுமதிகள் குறைக்கப்படும் மற்றும் ஒரு நிரந்தர அனுமதி பெறுவதற்கான நிபந்தனைகள் கடுமையாக்கப்படும்.

இரண்டாம் உலக போரின் போது யூதர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு, டேனிஷ் அரசாங்கம், இப்படி தான் வேலைவாய்ப்பற்ற டேனிஷ் பிரஜைகள் முன்னர் கையாளப்பட்டார்கள் என்று விவரித்து விடையிறுத்தது! எவ்வாறிருப்பினும் அத்தகைய பாசிசவாத நடவடிக்கைகளை எடுப்பதில் டென்மார்க் மட்டும் இப்போது தனியாக இல்லை.

டென்மார்க்கினது விதிகளைப் போன்ற அதேமாதிரியான விதிமுறைகளின் கீழ், ஆனால் 900 யூரோவிற்கும் குறைவாக மட்டுப்படுத்தி, சுவிட்சர்லாந்து 2015 இல் 100 மக்களிடமிருந்து உடைமைகளைப் பறித்தது. ஜேர்மனியில் உள்ள தெற்கு மாநிலங்கள் ஏற்கனவே அதுபோன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன, பாவேரியா 750 யூரோவிற்கு அதிகமான எல்லா சொத்துக்களையும் பறிமுதல் செய்கிறது, Baden-Württemberg வெறும் 350 யூரோவிற்கு அதிகமிருந்தால் பறிமுதல் செய்கிறது.

கிரீஸில் சிரிசா அரசாங்கம் ஏற்கனவே உழைக்கும் மக்களுக்கு எதிரான கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிப்பதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டியில் முன்னிலையில் உள்ளது. இப்போது அது அகதிகளுக்கு எதிராக அதேமாதிரி கொடூரமாக நடந்துகொள்ளுமாறு கூறப்படுகிறது.

கிரேக்க புலம்பெயர்வு மந்திரி Ioannis Mouzalas, சில ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் அகதிகள் மூழ்கி சாகட்டும் என்ற கருத்தைக் கொண்டுள்ளன, அதேவேளையில் வெளியுறவு மந்திரி Nikos Kotzias ஜேர்மனியின் TAZ பத்திரிகையிடம் குறைகூறிய போது அவர் புரிந்து கொண்டிருந்தவாறு என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர் தெளிவுபடுத்தினார் என்று அறிவித்து விடையிறுத்தார். “அகதிகளை நாம் தடுக்க வேண்டுமானால், அவர்களுக்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும். அவர்கள் மீது நாம் குண்டு வீசி, அவர்கள் படகுகளைக் கவிழ்க்க வேண்டும், அவர்கள் மூழ்கி இறந்து போகட்டும்,” என்று அவர் கூறியிருந்தார்.

கிரீஸ்-மாசிடோனியா எல்லையை கடப்பதென்பது அகதிகளுக்கு ஏற்கனவே ஒரு கடுமையான அனுபவம். புலம்பெயர்வோர் வழமையாக பொலிஸால் மிரட்டிப் பணிய வைக்கப்படுகிறார்கள், அடிக்கப்படுகிறார்கள். ஜேர்மனியின் அகதிகள் ஆதரவு அமைப்பு ProAsyl இன் சமீபத்திய அறிக்கை ஒன்று, பால்கல்களின் மூடப்பட்ட எல்லைகள் நாசகரமானது என்பதை மற்றும் அகதிகளுக்கு மரணகதியிலான விளைவுகளைக் கூட கொண்டு வந்திருந்ததை எடுத்துக்காட்டியது. இந்த விளைவு விருப்பத்திற்குரியது என்பதையும், பரிசீலிக்கப்படும் அணுகுமுறைகளுடன் பொருந்தி இருப்பதையும் ஆம்ஸ்டர்டாம் கூட்டம் தெளிவுபடுத்துகிறது.

அந்த அறிக்கையின்படி, பத்து ஆயிரக் கணக்கான அகதிகள் ஏற்கனவே மாசிடோனியாவில் கைவிடப்பட்டு, வீதிகளில் வசிக்க நிர்பந்திக்கப்பட்டு, அவர்கள் கிரீஸிற்கு திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

ஏதென்ஸிலேயே ஏறத்தாழ தஞ்சம் கோரும் ஒருவரைப் பதிவு செய்வது சாத்தியமில்லை. வருடாந்தர சராசரியாக 10,000 தஞ்சம் கோரும் விண்ணப்பங்களில் வெறும் 1,150 க்கு மட்டுமே ஏதென்ஸில் இடம் கொடுக்கப்படுகிறது என்பதை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் கமிஷனர் அறிவார். தஞ்சம் கோரி ஒருவர் பதிவு செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு, கிரேக்கத்தை விட்டு வெளியேற்றும் கூடத்தில் அடைக்கப்படுவார்.

ஏகியன் கடலைப் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கடந்து வருவதற்காக ஏதென்ஸ் அங்காராவில் உள்ள அரசாங்கத்தைக் குறை கூறியுள்ளது, அதேவேளையில் துருக்கிய அரசாங்கம் ஒட்டுமொத்த கடற்பகுதியையும் பாதுகாக்கும் தகைமைகள் அதற்கு இல்லை என அறிவித்துள்ளது. அகதிகள் பிரச்சினைகள் சில காலம் துருக்கிய ஒத்துழைப்பைப் பெற ஐரோப்பிய ஒன்றியம் முயன்றிருந்ததுடன், அது 3 பில்லியன் யூரோ உதவி வழங்கவும் உத்தரவாதம் அளித்திருந்தது, அத்தொகை இன்னும் செலுத்தப்படவில்லை.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவின் போர்களில் இருந்து தப்பியோடி வந்த 2.5 மில்லியன் பேர் இப்போது துருக்கியில் உள்ளனர். இவர்களில் சுமார் வெறும் 250,000 பேர் மட்டும் ஏற்கனவே இருக்கும் முகாம்களில் உள்ளனர். துருக்கி முழுமையாக ஜெனிவா அகதிகள் மாநாட்டு உடன்படிக்கையை அங்கீகரிக்கவில்லை, மேலும் அங்கே அகதிகள் வேலை செய்ய முடியாது அல்லது அவர்களது குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப முடியாது.

ஐரோப்பாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் இன்று மிகைமிஞ்சியும், வரவேற்கப்படாமலும் உள்ளனர். அரசியல்வாதிகளும் இதழாளர்களும் எந்தளவிற்கு சிறப்பாக அகதிகளை வெளியேற்றலாம், கைது செய்யலாம், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தள்ளிவிடலாம் என்று ஏதோ விலங்குகள் அல்லது பண்டங்களைக் குறித்து விவாதிப்பதைப் போல பகிரங்கமாக விவாதித்து வருகின்றனர். உண்மையில் அவர்கள், மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் வட ஆபிரிக்காவைச் சீரழித்துள்ள அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளது ஏகாதிபத்திய போர்களால் உருவாக்கப்பட்ட அவலத்திலிருந்து தப்பிப்பதற்கு நாட்டை விட்டு வெளியேறுவதை மட்டுமே ஒரே வழியாக காணும் அந்த மக்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com