Thursday, January 28, 2016

ஞானசார தேரருக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுப்பு! தொடர்ந்து என்னால் வழக்கை விசாரிக்க முடியாது நீதிபதி!

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 25ம் திகதி இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தினார் மற்றும் நீதிமன்றை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசேர தேரர் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட பிணைமனு ஹோமாகம நீதவான் ரங்க திஸாநாயக்க அவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிணை மனுவை நிராகரித்த நீதிபதி நீதிமன்றை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர் தொடர்பில் விடுக்கப்பட்ட பிணைமனுவில் போதிய நியாயங்கள் இல்லை என்றும் தெரிவித்து நிராகரித்துள்ளார்.

அத்துடன் இது விடயத்தில் தனது தலையில் துப்பாக்கியை வைத்து பிணை வழங்ககோரினாலும் அதை தான் செய்யப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளமை இன்று இலங்கையில் நீதிக்கு தலைவணங்கும் நீதிபதிகள் வாழக்கின்றார்கள் என்பதை புடம்போட்டுக்காட்டியுள்ளது.

மேலும் நீதிபதி அவர்கள் இவ்வழக்கினை தன்னால் தொடர்ந்து விசாரிக்க முடியாது என்றும் இது தொடர்பாக மேலிடத்திற்கு அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் திட்டமிட்டு வேண்டுமென்றே சிறைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினரும், தாய்நாட்டுக்கான படைவீரர்கள் அமைப்பின் அழைப்பாளருமான மேஜர் அஜித் பிரசன்ன குற்றம் சுமத்தியுள்ளார்.


சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேஜர் அஜித் பிரசன்ன மேலும் கூறுகையில்...

நீதிமன்றில் தவறுதலாக தொலைபேசி ஒலித்த போது ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரை கைது செய்தால், பௌத்த பிக்குகளுக்கும் சட்டம் ஒரேவிதமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

புத்தளம் நீதிமன்றம் மீது கல் வீசிய ரிசாட் பதியூதீனை கைது செய்யுமாறு உத்தரவிட்ட நீதவான் ரங்க திஸாநாயக்கவே, ஞானசார தேரரை கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள படைவீரர்களுக்கு பிணை வழங்கப்பட வேண்டுமென போராடி வருகின்றேன்.

எனினும் இந்தப் போராட்டங்ளில் ஒரு நாளேனும் ஞானசார தேரர் பங்கேற்கவில்லை. இது தொடர்பில் ஒரு நாளும் அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

இந்த நாட்களில் சிறைக்குச் செல்ல வேண்டிய மிகுந்த அவசியமொன்று ஞானசார தேரருக்கு காணப்பட்டது.

ஞானசார தேரர் திடீர் ஹீரோவாக மாறவே விரும்புகின்றார்.

உணர்வுகளுக்கு அடிமையாகிய சில சிங்கள பௌத்தர்களை ஆத்திரமூட்டி முஸ்லிம் கடைகளை எரித்து. சிலரைத் தாக்கி பிரச்சினை ஏறப்டுத்த முயற்சிக்கின்றார்.

இதன் மூலம் சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்கி, மக்கள் அதன் பின்னர் ஓடும் போது நாட்டை பிளவடையச் செய்யும் அரசியல் சாசனமொன்றை அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கக் கூடிய பின்னணியை உருவாக்கிக் கொள்ள முடியும்.

இது முழுக்க முழுக்க ஓர் சூழ்ச்சித் திட்டமாகும்.

இவர்கள் மஹிந்தவிற்கும் இதனையே செய்தார்கள். தற்போது சிங்க லே என்ற அமைப்பின் ஊடாக குழப்பம் விளைவிக்க முயற்சிக்கின்றர்கள்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பணததைக் கொண்டே இவ்வாறான போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த சூழ்ச்சி திட்டங்களில் சிங்கள பௌத்தர்கள் சிக்கிக் கொள்ளக் கூடாது , உணர்வுகளுக்கு அடிமையாகி விசராட்டம் ஆடாது, சிந்தித்து செயற்பட வேண்டிய தருணமிது என மேஜர் அஜித் பிரசன்ன தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com