Saturday, August 9, 2014

வாஷிங்டன் உலகப் போருக்கு திட்டமிடுகிறது. Patrick Martin

அமெரிக்க இராணுவ திட்டமிடல் மீது ஜூலை 31இல் பிரசுரமான ஒரு குறிப்பிடத்தக்க ஆவணம், அணுஆயுதங்களைக் கொண்டிருக்கும் எதிரி மீதான யுத்தங்கள் உட்பட ஒரேநேரத்தில் ஏறக்குறைய அரை டஜன் யுத்தங்களை நடத்த தயாராகுமாறு பென்டகனுக்கு அழைப்புவிடுக்கிறது.

"எதிர்காலத்திற்கான ஒரு பலமான இராணுவத்தை உறுதிப்படுத்துதல்" என்ற தலைப்பிலான அந்த ஆவணம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான பென்டகனின் உத்தியோகபூர்வ திட்டமிடல் ஆவணமான 2014 நான்காண்டு இராணுவ மீளாய்வு என்பதன் மீது ஒரு விமர்சனரீதியிலான மறுஆய்வை வழங்குவதற்காக, காங்கிரஸால் நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்மட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் ஒரு குழுவான தேசிய பாதுகாப்பு குழுவால் வரையப்பட்டதாகும்.

கிளிண்டன் நிர்வாகத்தில் பாதுகாப்பு செயலராக இருந்த வில்லியம் பெர்ரி மற்றும் அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் மத்திய கட்டளை தலைவரான ஜெனரல் ஜோன் அபைஜிட் ஆகியோர் அந்த தேசிய பாதுகாப்பு குழுவின் இணை-தலைவர்களாகவர். இதர நான்கு ஓய்வுபெற்ற ஜெனரல்கள் உட்பட, அத்தோடு ஒபாமாவின் கீழிருந்த முன்னாள் பாதுகாப்புத்துறை துணை செயலர் மிஷேல் ஃபுளோரினோய், மற்றும் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகத்தில் இருந்த ஒரு முன்னணி நவ-பழமைவாத மற்றும் பாதுகாப்புத்துறை துணை செயலர் எரிக் எடெல்மேன் ஆகியோரும் அதில் உறுப்பினர்களாக உள்ளடங்கி உள்ளனர்.

வாஷிங்டனின் உத்தியோகபூர்வ பாதுகாப்பு ஸ்தாபகத்தினது ஒட்டுமொத்த தொகுப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், அக்குழு இருகட்சி சார்ந்ததாக இருக்கிறது. போர் குறித்த ஆய்வுகளுக்காக அர்பணிக்கப்பட்டதும், பெடரலிடமிருந்து நிதியுதவி பெற்று வரும் ஒரு அமைப்பினது ஆதரவின் கீழ் அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது, அந்த அமைப்பின் பெயரோ, பிழையற்ற ஓர்வெல்லியன் தர்க்கத்தின்படி, அமைதிக்கான அமெரிக்க பயிலகம் என்பதாகும்.

சீனா மற்றும் ரஷ்யாவின் அதிகரித்துவரும் பலத்தை முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து வட கொரியா, ஈரான், ஈராக், சிரியா, ஒட்டுமொத்தமாக மத்திய கிழக்கு, பின்னர் ஆபிரிக்காவையும் பட்டியலிட்டு, அந்த ஆவணம் அமெரிக்கா முகங்கொடுக்கும் அபாயங்களைக் குறித்து எச்சரிக்கிறது. ஜோர்ஜ் டபிள்யு. புஷ்ஷால் 2002இல் அவரது இழிவார்ந்த "தீவினைகளின் அச்சு" (Axis of Evil) உரையில் சுட்டிக் காட்டிய மூன்று நாடுகளுக்கு முன்னே முன்னுக்கு வந்திருந்த, சீனா மற்றும் ரஷ்யா இவ்விதத்தில் அமெரிக்க இராணுவ நடவடிக்கையினது சாத்தியமான இலக்குகளின் பட்டியலில் முதலிடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, 1991இல் சோவியத் ஒன்றியம் பொறிந்ததற்குப் பின்னர், ஒரேநேரத்தில் இரண்டு பிரதான யுத்தங்களை நடத்த முடியுமென அமெரிக்க இராணுவ கோட்பாடு அழைப்புவிடுத்துள்ளதை அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. அதற்கடுத்ததாக அது அந்த கோட்பாட்டில் ஒரு தீவிரமான மாற்றத்திற்கும் அழைப்புவிடுக்கிறது:

“மோசமடைந்துவரும் அச்சுறுத்தலான சூழ்நிலையில், அந்த இரண்டு-யுத்த கட்டமைப்பிலிருந்து வேறுபட்ட ஒன்றாகவும், ஆனால் பலத்தில் குறைவில்லாமலும், அளவில் மிக விரிவார்ந்த படையைக் கட்டமைப்பது பொருத்தமானதென்று நாங்கள் நம்புகிறோம்."

பின்னர் இது மிக விரிவாக குறிப்பிடப்படுகிறது:

“ஓர் உலகளாவிய போரில்-சண்டையிடுவதற்கான தகைமை ஒரு வல்லரசின் தவிர்க்கவியலாத தகுதிக் கூறாக இருக்க வேண்டும் என்பதோடு, அமெரிக்காவின் ஒட்டுமொத்த தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தின் நம்பகத்தன்மைக்கும் அது அத்தியாவசியமானதாகும் ... என்று நாங்கள் நம்புகிறோம். தற்போதைய அச்சுறுத்தலான சூழ்நிலையில், கொரியன் தீபகற்பத்தின் மீது, கிழக்கு அல்லது தெற்கு சீனக்கடலில், மத்திய கிழக்கில், தெற்கு ஆசியா, மற்றும் பெரிதும் சாத்தியமாக ஐரோப்பாவில் என அடுத்தடுத்து கால அவகாசமின்றி அமெரிக்கா பல பிரந்தியங்களில் நம்பத்தகுந்த வகையில் சண்டையிடவோ அல்லது பின்வாங்கவோ இழுக்கப்படக்கூடும். அமெரிக்கா அணுஆயுதமேந்திய விரோதிகளைக் முகங்கொடுக்க வேண்டிய சாத்தியக்கூறையும் எதிர்கொள்கிறது. மேலும் கூடுதலாக, ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கின் புதிய பகுதிகளுக்கு அல் கொய்தா மற்றும் அதன் இணை-அமைப்புகள் பரவுவது, அமெரிக்க இராணுவம் உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நீடிக்கவும் மற்றும் வெளிநாட்டு பிராந்திய மோதலில் ஈடுபடும் போதே அமெரிக்க உள்நாட்டை பாதுகாக்கவும் தகுதியுடையதாக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது." [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

அமெரிக்கா ஒரேநேரத்தில் ஐந்து அல்லது ஆறு பெரிய யுத்தங்களில் சண்டையிட தயாராக இருக்க வேண்டுமென அந்த பட்டியல் அறிவுறுத்துகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு உலக யுத்தத்தை நடத்த தயாராக தொடங்க வேண்டுமென்ற முறையீட்டை விட இது குறைந்ததொன்றுமல்ல, அத்தகையவொரு யுத்தம் மனிதகுலத்தையே நிர்மூலமாக்க அச்சுறுத்தக்கூடும்.

அமெரிக்காவை தொடர்ந்து சீனா மற்றும் ரஷ்யா பூமியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிகப்பெரிய அணுஆயுத தளவாடங்களைக் கொண்டிருக்கும் நாடுகள் என்ற நிலையில், அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் இலக்கில் இருக்கக் கூடியவையாக அவை பட்டியிலில் முன்னுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது மிக அச்சுறுத்தலான தாக்கங்களைக் கொண்டிருக்கிறது.

சீனாவை எதிர்கொள்ள அமெரிக்க இராணுவப் படைகளின் "சமநிலைப்படுத்தும்" நடவடிக்கை என்ற ஒபாமா நிர்வாகத்தின் சித்தரிப்பை, "அமெரிக்க பாதுகாப்பு நலன்களினூடாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முன்னுரிமையை" மீண்டும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு முயற்சியாக வர்ணித்து, அந்த மூலோபாய முனைவை அந்த அறிக்கை ஆதரிக்கிறது.

அநேகமாக அதுபோன்றவொரு போர் வெடிப்பதைப் பொறுத்த வரையில், தேசிய பாதுகாப்புக் குழு ஒரு பெரிய மோதலை, குறிப்பாக தொலைதூர கிழக்கில், தூண்டிவிட விவாதிக்கிறது என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். அந்த மொழிநடை வார்த்தைஜாலங்களால் நிரம்பியிருக்கலாம், ஆனால் அந்த முன்னோக்கு எவ்வாறிருந்த போதினும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது:

“சான்றாக, ஆசிய-பசிபிக்கிலும் அத்தோடு மத்திய கிழக்கிலும் ஆளில்லாத மற்றும் அதிகளவில் தானியங்கி அமைப்புமுறைகளின் பெருக்கமானது, ஒரு நெருக்கடியின் போது ஸ்திரப்பாட்டைத் தக்க வைப்பதற்கான மற்றும் மோதல் வெடிக்கையில் அந்த தீவிரத்தை சமாளிப்பதற்கான ஆற்றலில் கடுமையான தாக்கத்தைக் கொண்டிருக்கும். இணையவழி தாக்குதல் மற்றும் தற்காப்பு மற்றும் வான்வழி தாக்குதலை எதிர்க்கும் தகைமைகளோடு ஒருங்கிணைந்த இத்தகைய அமைப்புகள், முக்கிய பிராந்தியங்களில் தாக்குதல் மற்றும் தற்காப்பு இராணுவ தகைமைகளுக்கு இடையிலான உறவில் பிரமாண்டமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதோடு அது கொள்கை-வகுப்பாளர்கள் மற்றும் இராணுவத் தளபதிகளும் மோதலுக்கு எதிர்வினை காட்டுவதற்கு போதிய நேரத்தைப் பெறுவதற்குள் அந்த நெருக்கடி வேகமாக வெடிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.”

அதை தெளிவாக கூறுவதானால், எந்தவொரு மனிதத் தலையீடும் இல்லாமல் இரண்டு தரப்பிலிருந்தும் ஆளில்லா விமான ஆயுதங்கள் மற்றும் தானியங்கி விடையிறுப்பு சாதனங்களின் பரிவர்த்தனைகளின் மூலமாக ஒரு பெரிய யுத்தம் வெடிக்கக்கூடும்.

அந்த அறிக்கை சுயமாக இராணுவ படையில் சேர்பவர்களைக் குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பவில்லை, ஆனால் அதன் அதிகரிக்கும் செலவுகளின் மீது ஒருமுகப்படுவதோடு, இன்னும் செலவுகளைக் குறைக்க "சம்பளங்கள் மற்றும் சலுகைகளில் புத்திசாலித்தனமான மற்றும் செலவுகளை வெட்டும் சீர்திருத்தங்களுக்கு" அழைப்புவிடுக்கிறது. எவ்வாறிருந்த போதினும், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் விரிவாக்கப்பட்ட இராணுவ ஆயத்தப்படுத்தல்களின் அழுத்தங்கள் ஒன்றுசேர்வதன் தர்க்கம் கடுமையானதாகவே இருக்கிறது: அதாவது, உடனடியாகவோ அல்லது சிலகாலம் கடந்தோ, தற்போதைய பொருளாதார வரைவுக்கும் கூட அப்பாற்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் ஏழைப் பிரிவுகளை இராணுவத்தில் பாரபட்சமின்றி நியமிக்கும் வகையில் "சுயமாக முன்வந்து சேர்ப்பதற்கு", அமெரிக்க ஆளும் வர்க்கம் ஏதோவொரு வடிவத்தில் படைக்கு கட்டாயமாக ஆளெடுப்பதை நோக்கி நகர வேண்டும் என்பதை அது அர்த்தப்படுத்துகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் மீதான நிதியியல் கட்டுப்பாடுகளும், மற்றும் குறிப்பாக 2011இன் வரவு-செலவு கணக்கு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ செலவுகளின் "வெட்டுக்களைப்" போல சுயமாக-திணித்துக் கொள்ளப்பட்ட வரம்புகள் போன்றவையும், பெண்டகனின் போர் தயாரிப்புகளை வெட்டுகிறது என்ற கவலையை அந்த பாதுகாப்பு அறிக்கை வெளிப்படுத்துகிறது.

அதை எழுதிய எழுத்தாளர்கள், உள்நாட்டு சமூக திட்டங்களினது சுமையின் காரணமாக அமெரிக்க இராணுவ செலவினங்கள் மட்டுப்படுவதைக் குறித்து திரும்ப திரும்ப குறைகூறுகிறார்கள், அவர்கள் "முதன்மையாக சமூக பாதுகாப்பு மற்றும் பிரதான சுகாதார திட்டங்கள் போன்ற தவிர்க்கவியலா திட்டங்களுக்காக சேகரிக்கப்படும் தொகைக்கும், அத்தகைய திட்டங்களுக்காக செலவிடப்படும் தொகைக்கும் இடையே அதிகரித்துவரும் பெரும் இடைவெளியைக்" குறிப்பிட்டுக் காட்டுகிறார்கள்.

"அதிவேகமான இராணுவ செலவினங்களுக்கும் ஒரேநேரத்தில் நிதியளிக்கும் வகையில் அமெரிக்கா அதன் நிதியியல் அமைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகளவிலான மருத்துவ கவனிப்பு செலவைக் கட்டுப்படுத்துவதை அந்த துறைக்குள்ளும் [சிப்பாய்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு] மற்றும் மிக பரந்தளவில் எல்லா அரசாங்க திட்டங்களிலும் இரண்டிலும் நிச்சயமாக பின்பற்ற வேண்டுமென" அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மீள-வலியுறுத்துகையில்: இதுவொரு இருகட்சி சார்பிலான அறிக்கையாகும். அமெரிக்க இராணுவ எந்திரத்தின் அகோரபசி கொண்ட இரைப்பைக்கு ட்ரில்லியன்களைக் கிடைக்க செய்வதை உறுதிப்படுத்த, உழைக்கும் மக்கள் எந்த சமூக திட்டங்களைச் சார்ந்து இருக்கிறார்களோ அவற்றை வெட்ட வேண்டுமென்ற அதன் கோரிக்கையை, ஜனநாயக கட்சியினரும் அத்தோடு குடியரசு கட்சியினரும், தாராளவாதிகளும் பழமைவாதிகளும், ஆமோதிக்கிறார்கள்.

அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளும் அவற்றின் செல்வத்தை மற்றும் பூமியினது பரந்த பிரிவுகளின் மீது அவற்றின் மேலாதிக்கத்தைக் காப்பாற்றி வைக்க, முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு வன்முறையைப் பிரயோகிப்பதில் அவர்கள் ஒன்றுபட்டுள்ளனர் என்பதையே இந்த ஆவணத்தின் இந்த இருகட்சி சார்ந்த குணாம்சம் நிரூபிக்கிறது. ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிரான போராட்டமானது, தொழிலாள வர்க்கம் அமெரிக்காவில் தற்போதிருக்கும் அரசியல் அமைப்புமுறையிலிருந்து உடைத்துக் கொண்டு, ஒரு புரட்சிகர சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு சுயாதீனமான பாரிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதன் மூலமாக மட்டுமே நடத்தப்பட முடியும் என்பதையே அது உறுதிப்படுத்துகிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com