Sunday, May 17, 2020

இதே மே மாதத்தில்தான் ஈழப்போராட்டம் ஒரு விடுதலை போராட்டம் என்ற தகுதியை இழந்தது. ராதா மனோகர்

ஈழப்போராட்டம் ஒரு விடுதலை போராட்டம் என்ற தகுதியை இழந்தது 1986 ஆம் ஆண்டு இதே மே மாதம் 6 ஆம் தேதி என்பதை இனியும் மூடி மறைக்க முடியாது. இலங்கை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே ஈழப்போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து ஒரு எழுச்சி மிகு உணர்வு ஏற்பட்டது. மேற்கு நாடுகளின் ஊடகங்கள் மற்றும் தலை நகரங்கள் தோறும் ஈழத்தேசம் பற்றிய வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருந்தன. அப்போதெல்லாம் ஈழத்தமிழர்கள பெரிதாக புலம் பெயர்ந்து இருக்கவில்லை.

அவர்கள் உலகம் முழுவதும் அகதிகளாக ஓடியவேளை ஐரோப்பிய நாடுகளும் அமேரிக்கா கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் மிக அனுதாபத்தோடு நடந்து கொண்டன. வேண்டிய வசதிகளை செய்து கொடுத்தன. ஈழத்தமிழர்களின் கதைகளை அக்கறையோடு கேட்டன.

1986 இல் புலிகள் மேற்கொண்ட சகோதர படுகொலை செய்திகள் உலக நாடுகளில் ஈழப்போராட்டம் என்பது ஒரு விடுதலை போராட்டம் என்ற தகுதியை இழந்து விட்டது என்று எல்லா நாட்டு பத்திரிகைகளும் எழுதின ( உலகின் மிக பிரபலமான பிரெஞ்சு பத்திரிகை Le Monde டெலோ தாக்குதல் பற்றி எழுதியது)

ஆபிரிக்க நாடுகளில் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்த பல விடுதலை போராட்டங்கள் இப்படித்தான் உள்ளூர் பயங்கரவாதிகளின் மாபியா இயக்கங்களாக பரிணாமம் அடைந்ததை கண்டவர்கள் அவர்கள்.
அன்றே ஈழத்தின் முதல் சாவு மணி அடிக்கப்பட்டது என்றே அவர்கள் கருதினார்கள். பின்பு ராஜீவ் காந்தியின் ஒப்பத்தம் ஒரு பெரிய நம்பிக்கையை ஈழ தமிழர்களுக்கு கொடுத்தது.

அதை சரியான முறையில் பயன்படுத்தி இருந்தால் இன்று இருக்கும் நிலைமையே வேறு. அதை மிக மோசமாக சிதைத்தனர் புலிகள். இணைந்த வடகிழக்கு மாநிலங்களுக்கு நிலம் போலீஸ் மற்றும் சகல சிவில் நிர்வாக உரிமைகளோடு மட்டுமல்லாமல் வெளிநாட்டு கடன்களை நேரடியாக பெற்று கொள்ளும் உரிமையுடன் கூடியது அது. அதை எல்லாம் தூக்கி காலில் போட்டு மிதித்தார்கள் புலிகள்.

கொஞ்சம் கூட நன்றியோ மனிதத்தன்மையோ நேர்மையோ அற்று ராஜீவ் காந்தியை தமிழ் நாட்டிலேயே வைத்து படு கோழைத்தனமாக கொன்றார்கள். புலிகளின் இந்த இரத்த வெறி கொண்ட வரலாற்றை நோக்கும் எந்த நாடும் இவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடைத்து விட க்கூடாது என்பதில் தெளிவாகவே இருந்தார்கள்.

ஆனாலும் உலகில் எந்த பயங்கரவாதிகளுக்கும் கிடைக்காத சலுகைகளை புலிகளுக்கு மட்டும் மீண்டும் மீண்டும் வழங்கியது மேற்குலகம். அவர்களுக்கு அளவுக்கு மீறி ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் வழங்கிய சலுகைகள் மிகவும் ஆச்சரியம் வாய்ந்தவை. புலிகளின் தலையில் இயல்பிலேயே தங்களை பற்றி ஒரு அசட்டுத்தனமான நம்பிக்கை அல்லது ஒரு ( megalomania ) போதை இருந்தது.

தமிழகத்தில் இதை சரியாக புரிந்து கொண்டவர் கலைஞர் மட்டும்தான். தெற்கு ஆசியாவில் ஒரு வடகொரியா உருவாவதை உலகம் ஒருபோதும் அனுமதிக்காது என்பது ஏனோ புலிகளுக்கோ புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறி கொண்டவர்களுக்கோ புரியவே இல்லை. அல்லது புரிந்தாலும் புலிகளால் அவர்களுக்கு கிடைத்து கொண்டிருந்த சுயலாபங்களுக்கு விலை போயினர்.

ஈழப்போராட்டத்தில் எம்ஜியார் புலிகளை வளைத்து பிடித்து தனது பிரைவேட் ஆர்மியாக மாற்றும் வரை மட்டுமே ஈழபோராட்டம் ஒரு விடுதலை போராட்டமாக இருந்ததூ.

புலிகளின் சகோதர படுகொலைகளோடு ஈழபோராட்டத்தில் கலைஞரின் கரங்கள் கட்டப்பட்டு விட்டன. பின்பு அவர் பதவிக்கு வந்த போதும்கூட புலிகளின் கலைஞர் மீதான கொலை அச்சுறுத்தல் இருந்தது.

பத்மநாபா கொலையானது பெரிய அதிர்ச்சி சம்பவம் மட்டுமல்ல அது இந்திய மண்ணில் புலிகளின் கரங்கள் எவ்வளவு நீள்கிறது என்பதை வெளிச்சம் போட்டி காட்டிய நிகழ்வாகும். அப்போது பதவியில் இருந்த சந்திரசேகர் உடனேயே புலிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தெற்காசியாவின் பெரிய நாடு .. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு எவ்வவளவு பலவீனமாக இருந்திருக்கிறது என்பதை அது தோலுரித்து காட்டியது. இவை எல்லாம் யாருக்கு புரிந்ததோ இல்லையோகலைஞருக்கு மட்டும் சரியாகவே புரிந்தது.

ஆனாலும் கூட இயல்பாகவே இருந்த தமிழ் பற்றும் ஈழபோராட்டம் எப்படியாவது வெற்றி பெறட்டும் என்று அவர் தன்னால் முடிந்த அளவு புலிகளுக்கு ஆதரவாகவே நடந்தும் கொண்டார். உண்மையில் அதில் எனக்கு கலைஞர் மீது வருத்தம்தான் . ஆனாலும் கலைஞருக்கு ஈழத்தின் மீதிருந்த அக்கறையை புரிந்து கொண்டேன்.

ஏற்கனவே புலிகளின் சகோதர படுகொலைகளால் வெறுத்து போயிருந்த மேற்கு நாடுகள் ராஜீவ் காந்தி கொலையோடு இவர்கள் அழிக்க பட வேண்டியவர்கள் என்ற முடிவுக்கு வந்திருந்தன. ஆனாலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு ஜனநாயக நாடு உருவாவது நல்லது என்றே கருதினார்கள்.

மேற்கு நாடுகளின் இந்த நோக்கம்தான் புலிகளுக்கு அதீத தன்னம்பிக்கையை கொடுத்திருக்கிறது என்று கருதுகிறேன். ஆனாலும் எதற்கும் ஒரு அளவு இருக்கிறதல்லவா? இந்த அடிப்படை பாடம் புலிகளுக்கு புரியவே இல்லை.

புலிகளின் ஆசைக்கு அளவே இல்லை . அவர்கள் அடுத்தடுத்த தலைமுறைக்கெல்லாம் போராட்டத்தை எடுத்து செல்லும் பேராசையில் இருந்தார்கள் என்றே எண்ணுகிறேன். எம்ஜியாரின் மறைவுக்கு பின்பு அதிமுக முற்று முழுதாக ஜெயலிதாவின் பிடிக்குள் சென்று விட்டது. புலிகளுக்கு அவர்களின் கண்ட்ரோலில் திமுகவோ அதிமுகவோ இல்லை என்றாகி விட்டது .

அதுதான் அவர்கள் வைகோவை வைத்து போட்ட திட்டங்கள் . கொடிய முதலைகள் நிரம்பிய ஆற்றை கடந்த வந்தார் கலைஞர். புலிகளின் அடாவடியில் இருந்து திமுகவை காக்க வேண்டிய அதே நேரத்தில் ஈழ மக்களையும் காக்க வேண்டிய நெருக்கடியான கால வெள்ளத்தில் நீந்தி வந்தார் கலைஞர். கலைஞர் மட்டும் கொஞ்சம் அசந்திருந்தால் இன்று திமுகவே இருந்திருக்காது என்பதுதான் உண்மை.
அது இன்னொரு அதிமுகாவாகவோ அல்லது மதிமுகாகவோ இருந்திருக்கும்.

புலிகள் தெரிந்தோ தெரியாமலோ முழுக்க முழுக்கக் பார்ப்பனீ யத்தின் நிகழ்ச்சி நிரலை அப்படியே நிறைவேற்றி உள்ளனர்

ஈழப்போராட்டத்தின் இறுதி முடிவு என்பது ஆர் எஸ் எஸ் இன் வெற்றியாக இன்று மாறிவிட்டது புலிகளின் பக்தர்களாக இன்று மேடைகளில் கூக்குரல் இடுவோர்கள் அத்தனை பேரும் அசல் ஆர் எஸ் எஸ் ஐந்தாம் படைகளாக இருக்கிறார்கள். புலிகளின் தமிழக ஆதரவாளர்கள் எவரும் தாங்கள் ஆர் எஸ் எஸ் இன் கூலிகள் அல்ல என்று நிருபிக்க முடியாது . அந்த அளவு அவர்கள் தற்போது அம்பலப்பட்டு உள்ளார்கள்

ஆர் எஸ் எஸ் இன் முழு முதல் எதிரியாக கலைஞர் இன்றுவரை இருக்கிறார். இவர்களுக்கும் கலைஞர்தான் முழு முதல் எதிரியாக இன்றுவரை இருக்கிறார் .. ஆம் இனியும் அவர் உங்களுக்கு சிம்ம சொப்பனமாகத்தான் இருப்பார்

அவரின் வழியில் ஏராளமான கலைஞர்கள் காலம் தோறும் வந்து கொண்டே இருப்பார்கள் . ஆரிய மாயையும் பாசிச மாயையையும் இருக்கும் வரை கலைஞரின் திராவிட முரசு முழங்கும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com