Wednesday, April 15, 2020

EU கொரோனா வைரஸ் பிணையெடுப்பில் அரை ட்ரில்லியன் யூரோவை ஏகாதிபத்திய நலன்களுக்காக செலவிட உள்ளது. Peter Schwarz

ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து அரசதலைவர்களும் உள்ளடங்கலாக ஐரோப்பிய ஒன்றிய நிதியமைச்சர்கள், 14 மணி நேர காணொளி கலந்துரையாடல் மற்றும் இரண்டு நாள் தொலைபேசியூடான இராஜாங்க உரையாடல்களுக்குப் பின்னர், வியாழக்கிழமை மாலை 500 பில்லியன் யூரோ மதிப்பிலான பிணையெடுப்பு பொதிக்கு உடன்பட்டனர். கொரோனா வைரஸ் தொற்று வெடிப்பதற்கு முன்னரே ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருந்த, ஆனால் குறிப்பாக இந்த நோய் வெடிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்நாடுகளுக்கு உதவுவதே அந்த தொகை ஒதுக்குவதற்கான நோக்கம் என்று மோசடியாக கூறப்பட்டது.

“இன்று ஐரோப்பிய நல்லிணக்கம் மற்றும் பலத்தின் தலைச்சிறந்த நாள்,” என்று ஜேர்மன் நிதியமைச்சர் ஓலாப் ஷொல்ஸ் (சமூக ஜனநாயகக் கட்சி, SPD) தெரிவித்தார். “இது குடிமக்களின் உடல்நலம் சம்பந்தப்பட்டது, இது வேலைகளைப் பாதுகாப்பது சம்பந்தப்பட்டது, இது இந்த நெருக்கடியை கடந்து நிறுவனங்கள் வெளிவருவதை உறுதிப்படுத்துவது சம்பந்தப்பட்டது,” என்றார்.

இதில் எதுவுமே உண்மையில்லை. இந்த கொரோனா வைரஸ் முதலாளித்துவ அமைப்புமுறை மற்றும் அதன் அமைப்புகளின் தன்மையை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தி உள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் பொருந்தும், ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பா மற்றும் அதன் மக்களினது ஐக்கியத்தினை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக பிரதான வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் நலன்களையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

இந்த பிணையெடுப்பு, மருத்துவக் கவனிப்பு முறையைப் பலப்படுத்துவதையோ, அல்லது வேலைகளைப் பாதுகாப்பதையோ நோக்கமாக கொண்டதில்லை. அது எந்தவொரு நிறுவனத்தையும் பொறிவிலிருந்து பாதுகாப்பதற்கில்லை, குறைந்தபட்சம் எந்தவிதமான சமூகத்தின் தேவைகளை கூட பாதுகாப்பதற்கில்லை. அவற்றின் அளவில் ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பையே விஞ்சும் தேசிய பிணையெடுப்பு திட்டங்களைப் போலவே, இந்தாண்டு அரசு மற்றும் பெருநிறுவன கடன்சுமையில் 1.1 ட்ரில்லியனை அதன் தரப்பில் ஏற்றுக் கொள்ளவிருக்கும் ஐரோப்பிய மத்திய வங்கியின் விலைக்கு வாங்கும் திட்டத்தைப் போலவே, ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பும் பங்குச் சந்தைகள், வங்கிகள் மற்றும் ஊக வணிகங்களின் செல்வவளத்திற்கு உத்தரவாதமளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

நிதியமைச்சர்கள் உடன்பட்ட 500 க்கு சற்று அதிகமான பில்லியன் யூரோ மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.

அதிகபட்சம் யூரோ கடன் நெருக்கடியை அடுத்து ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பான ஐரோப்பிய ஸ்திரப்பாட்டு இயங்குமுறை (ESM) ஊடாக வழங்கும் கடன்கள் மூலமாக 240 பில்லியன் யூரோ இதற்கு கிடைக்கும். சிக்கலில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வரையிலான மதிப்பை ESM வசமிருந்து கடனாக பெற விண்ணப்பிக்கலாம். இந்த கடன்களுடன் இணைக்கப்பட உள்ள நிபந்தனைகள் மீதான கருத்துவேறுபாடுகள் அந்த ஒட்டுமொத்த உடன்பாட்டையுமே கிட்டத்தட்ட பொறிந்து போகுமளவுக்குச் செய்தது. டச் அரசாங்கம், முன்னர் செய்ததைப் போலவே, கடன்களை வாங்கும் நாடுகள் வரி உயர்வுகள் மற்றும் ஓய்வூதிய வெட்டுக்களைத் திணிக்க வேண்டுமென வலியுறுத்தியது, ஆனால் இத்தாலி அதை நிராகரித்தது. நிபந்தனைகள் சற்றே தளர்த்தப்பட்டுள்ளன என்றாலும், இந்த கடன்கள் கொரோனா வைரஸ் நெருக்கடியுடன் தொடர்புபட்ட செலவுகளுக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும் மற்றும் திரும்ப செலுத்தப்பட வேண்டியவையாகும்.

சிறு மற்றும் நடுத்தர ரக நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதமாக இருநூறு மில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடம் (EIB) இருந்து கிடைப்பதை உள்ளடக்கி உள்ளது. இதைப் பொறுத்த வரையில், 27 ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளும் 25 பில்லியன் யூரோ மதிப்பிலான தொகைக்கு உத்தரவாதமளிக்க உடன்பட்டன.

மேற்கொண்டு 100 பில்லியன் யூரோ ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்திடமிருந்து வரும், ஐரோப்பாவின் குறுகிய கால வேலை திட்டங்களின் செலவுகள் அதிகரித்தால் அது குறைந்த வட்டி விகித கடன்களை வழங்கும். இந்த கடன்களும் பிந்தைய தேதியில் மீண்டும் செலுத்தப்பட வேண்டும், அதாவது சமூக சேவைகள், மருத்துவக் கவனிப்பு மற்றும் கல்வியை விலையாக கொடுத்து செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த பிணையெடுப்பு பொதி, ஷொல்ஸ் (Scholz) வாதிடுவதைப் போல ஐரோப்பிய நல்லிணக்கத்தை பலப்படுத்தவில்லை. அதற்கு மாறாக, அது ஐரோப்பாவுக்குள் பொருளாதார பிளவுகளை ஆழப்படுத்துவதுடன் அவ்விதத்தில் அது நேரடியாக பேரினவாத சக்திகளின் கரங்களில் சாதகமாக்கி கொள்ளப்படுகிறது. 2008 நிதியியல் நெருக்கடியைத் தொடர்ந்து வழங்கப்பட்ட பிணையெடுப்பு திட்டங்களும் இதே மாதிரியான விளைவையே கொண்டிருந்தன. இத்தகைய திட்டங்களை ஏற்ற நாடுகள் அவற்றை நிறைவேற்றிய போது முன்பை விட அதிக கடன் மட்டங்களில் வீழ்ந்தன, அவற்றின் சமூக, மருத்துவ கவனிப்பு மற்றும் கல்வித்துறை சீரழிவில் சிதைந்த போது சர்வதேச வங்கிகள் மட்டுமே அதிலிருந்து மிகவும் சிறப்பாக இலாபமீட்டி இருந்தன.

நிதியமைச்சர்களுக்கு இடையிலான இந்த இரண்டு நாள் மோதல் என்ன வரவிருக்கிறதோ அதற்கு ஒரு முன்னறிவிப்பை வழங்கியது. யூரோ பத்திரங்கள் மற்றும் "கொரோனா பத்திரங்கள்" என்றழைக்கப்படுவதன் மீதான மிகவும் சர்ச்சைக்குரிய அனைத்து பிரச்சினைகளிலும் அவர்களால் உடன்பாடு எட்ட முடியவில்லை. அவர்கள் இத்தகைய வடிவங்களின் குறிப்பிட்ட விடயங்களுக்குப் பொறுப்பேற்காமல் வெறுமனே "நிதி வழங்குவதற்கான புதிய வடிவங்களை" மீளாய்வு செய்வதற்கு மட்டுமே உடன்பட்டனர்.

நிதி நெருக்கடியிலிருந்து பொருளாதாரரீதியாக பலமாக மேலெழுந்த குறைந்தளவிலான அரசு கடன்களைக் கொண்ட நாடுகள், கடந்த நெருக்கடியின் போது ஐரோப்பிய ஒன்றியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகளுக்கு உள்ளான அதிக கடன்பட்ட நாடுகளுடன் கூட்டு பத்திரங்களை வெளியிட வேண்டும் என்பதும், அதிக கடன்பட்ட நாடுகள் தாங்களே பத்திரங்களை வெளியிட்டால் செலுத்த வேண்டிய வட்டிவிகிதங்களை விட குறைந்த வட்டிவிகிதங்களையே செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் அவை இதிலிருந்து ஆதாயமடையும் என்பதே "கொரோனா பத்திரங்கள்" என்பதன் அடிப்படை கருத்தாகும்.

ஜேர்மனி, நெதர்லாந்து மற்றும் இன்னும் சில வடக்கு ஐரோப்பிய நாடுகள், அரசு கடனுக்கு பொதுவான கடப்பாட்டை ஐரோப்பிய ஒன்றிய உடன்படிக்கைகள் வழங்கவில்லை என்று வாதிட்டு, இத்தகைய பத்திரங்களை உறுதியாக எதிர்த்துள்ளன. ஆனால் அதற்கு எதிர்விதத்தில், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஏனைய தெற்கு ஐரோப்பிய நாடுகள் உறுதியாக இதற்கு ஆதரவாக உள்ளன. இந்த தரப்பிற்கு முன்னணியில் குரல் கொடுப்பவராக பிரான்ஸ் முன்நிற்கிறது.

இந்த "கொரோனா பத்திரங்கள்" விவாதத்தில் இப்போது சில நகர்வுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அதிகளவில் கடன்பட்ட நாடுகளில் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவது இதன் நோக்கம் இல்லை. வேறு ஒவ்வொரு விதத்திலும் போலவே, இந்த பத்திரங்கள் மூலமாக திரட்டப்படும் எந்தவொரு பணமும் பெரிய வங்கிகளின் கணக்குகளுக்குள் பாய்ந்து பங்குச் சந்தைகளை ஊதிப் பெரிதாக்கும். இதை விட, போட்டியிடும் முதலாளித்துவ கன்னைகளுக்கு இடையிலான மோதல்கள் ஜேர்மனியின் பொருளாதார நிலையைப் பலவீனப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் துண்டாடப்படுவதைத் தூண்டிவிடலாம் மற்றும் சீனாவை இது பலப்படுத்தக்கூடும் என்பதே அதைவிட பெரிய கவலையாக உள்ளது.

ஆகவே ஐரோப்பிய ஒன்றியம் அதன் நடவடிக்கையைச் செய்து முடிக்க தவறினால் சீனா வெற்றி புன்னகை புரியுமே என்ற அச்சமே அதிகரித்தளவில் இந்த "கொரோனா பத்திரங்கள்" மீதான இந்த மோதலில் மேலோங்கி உள்ளது. பிரச்சினை இங்கே நல்லிணக்கம் சம்பந்தப்பட்டதல்ல, மாறாக ஏகாதிபத்திய நலன்கள் சம்பந்தப்பட்டதாகும்: அதாவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சி மற்றும் சீனாவின் வளர்ச்சியால் குணாம்சப்பட்ட ஓர் உலகில் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் தங்களின் நலன்களை எவ்வாறு உறுதிப்படுத்துவது? என்பதாகும்.

இத்தாலிய பிரதம மந்திரி யூசெப்பே கொந்தே ஏப்ரல் 2 இல் ஜேர்மன் வாராந்தர செய்தியிதழ் Die Zeit இல்இந்த"கொரோனாபத்திரங்கள்" மீதுஓர்அவசரஅழைப்பைமுன்வைத்தார்.

முதலாவதாக, அவர் குறிப்பிடுகையில், “இந்த சிக்கலான நேரத்தில் நிறுவனங்கள் விரோதிகளால் கைப்பற்றப்படுவதைப் பாதுகாப்பதே" முக்கிய பிரச்சினையாகும்" என்றார். “இந்த நெருக்கடியைக் கடந்த பின்னர், நாம் ஒரு சிக்கலான புவிசார் அரசியல் நிலப்பரப்பை முகங்கொடுத்திருப்போம், பன்முகச்சார்பிய நெருக்கடி, பொருளாதார பதட்டங்கள், புலம்பெயர்வு அழுத்தம், பயங்கரவாதம் என சமீபத்திய ஆண்டுகளில் ஏற்கனவே நாம் அனுபவித்துள்ள பிரதான பிரச்சினைகளை எதிர்கொண்டிருப்போம். இந்த அனைத்து பிரச்சினைகளுடன், நாம் ஐரோப்பியர்களாக நமது குரல்களை எழுப்ப வேண்டியிருக்கும் அல்லது முற்றிலுமாக குரல் எழுப்பாமல் இருக்க வேண்டியிருக்கும்” “மறந்து விடாதீர்கள்" என்று கொன்டே எச்சரித்தார்.

இரண்டாவதாக, இந்த கொரோனா வைரஸ் நெருக்கடியைத் தொடர்ந்து தொழிலாள வர்க்கத்தின் மீதும் மற்றும் சமூக நல அமைப்புமுறை மீதுமான தாக்குதல்களை இரட்டிப்பாக்க அவர் சூளுரைத்தார். “இப்போது நாம் தொடர்ந்து என்ன செவிமடுத்து வருகிறோமோ அதற்கு நேரெதிராக, இத்தாலி, 2010 மற்றும் 2019 க்கு இடையே ஒரேசீராக பிரதான வரவு-செலவு திட்ட உபரிகளுடன், அரசு கடன் நெருக்கடியைப் பின்தொடர்ந்து ஒரு சிக்கலான நிதிய சீரமைப்பு நிகழ்முறையினூடாக சென்றது. நமது நிதிகளை வெளிப்படையாக நிர்வகிக்கும் இந்த பாதை, நெறிமுறைகள் மீது கூட்டாக எட்டப்பட்ட உடன்பாட்டின்படி நாம் இந்த நெருக்கடியைக் கடந்த பின்னரும் தொடரும்," என்பதை அவர் வாசகர்களுக்கு அவர் நினைவூட்ட விரும்புவதாக கொந்தே எழுதினார்.

பசுமைக் கட்சி, இடதுக் கட்சி, சமூக ஜனநாயக கட்சியின் பிரிவுகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் யூரோ பத்திரங்களை முன்னர் எதிர்த்த கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளின் பிரிவுகளும் உள்ளடங்கலாக ஜேர்மனியில் யூரோ பத்திரங்களின் ஆதரவாளர்கள் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் முக்கியத்துவம் மீது அழுத்தமளித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பிந்தைய மிகப்பெரும் சவாலின் முன்னால், ஐரோப்பிய ஒன்றியம் "பரிதாபகரமாக தோல்வியடையும்" அச்சுறுத்தலில் உள்ளது என்றும், அதற்கு பதிலாக ரஷ்யா மற்றும் சீனா போன்ற சக்திகள் ஐரோப்பாவின் பற்றாக்குறைகளை எடுத்துக்காட்டும் விதமாக உதவி நிவாரணங்களை மிகவும் பகிரங்கமாக ஒழுங்கமைப்பதை நாம் பார்க்கிறோம்" என்றும் Tagesspiegel இன்ஏப்ரல்5 பதிப்பில்வெளியான"எச்சரிக்கைகுரலில்" முன்னாள்வெளியுறவுத்துறைஅமைச்சர்கள்சிக்மார்காப்ரியலும்(SPD) மற்றும்பசுமைகட்சியின்ஜோஸ்காபிஷ்ஷரும்எச்சரித்தனர்.

ஜேர்மனி "பொருளாதாரரீதியிலும் நிதியியல்ரீதியிலும் ஐரோப்பாவில் இருந்து அதிகமாக ஆதாயமடைகிறது. கிரேக்க நிதி நெருக்கடியிலிருந்தும் கூட நாங்கள் பணம் ஈட்டினோம்,” என்றவர்கள் குறிப்பிட்டனர். ஐரோப்பா "வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில், அனைவருக்கும் உபரிமதிப்பை" உருவாக்குகிறது. அதிலும் "குறிப்பாக ஜேர்மனிக்கு, அதுவும் குறிப்பாக பொருளாதார மற்றும் நிதியியல் அர்த்தத்தில்.” இதனை உருவாக்குகின்றது.

ஆகவே ஜேர்மனி “இப்போது பிரான்சின் சிறந்த கூட்டணியுடன் ஐரோப்பாவை வழிநடத்த அதன் தயார்நிலையைக் காட்ட” வேண்டும். ஐரோப்பாவுக்கு “இந்த நெருக்கடியின் போது பொதுவான உதவியும் இந்த நெருக்கடியைப் பின்தொடர்ந்து மறுகட்டமைப்பதற்கான ஒரு பொதுவான திட்டமும்” அவசியப்படுகிறது. அப்படியிருந்தால் மட்டுமே “டாலருக்கு ஒரு மாற்றீடாக, யூரோ ஓர் உண்மையான சர்வதேச கையிருப்பு செலாவணியாக மாறும்,” என்றவர்கள் வாதிடுகின்றனர்.

அவ்விரு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கருத்துப்படி, “இதை நாம் செய்யவில்லையானால், ஐரோப்பா அதன் பொருளாதார இறையாண்மையைக் கைவரப் பெற முடியாது, மாறாக நாம் ஈரான் அணுசக்தி உடன்படிக்கை மீதான மோதலில் கடுமையாக அனுபவித்ததைப் போல, டாலர் பிராந்திய கொள்கை மீது வியாபாரம் செய்ய வேண்டிய போது ஐரோப்பா எப்போதும் சார்ந்தே இருக்க வேண்டியிருக்கும்.” ஐரோப்பியர்கள் “இந்த புதிய தசாப்தத்தின் மிகப்பெரும் மூலோபாய சவால்களுக்கும், டிஜிட்டல்மயமாக்கல், புலம்பெயர்வு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கும் ஒருங்கிணைந்து மட்டுமே உயர முடியும்.”

அவ்விரு முன்னாள் அமைச்சர்களும், “ஓர் ஐரோப்பிய வெளியுறவு கொள்கையை ஸ்தாபிக்க இட்டுச் சென்ற 1990 களின் பால்கன் போர்களைப் போல, நெருக்கடிகள் ஐரோப்பாவுக்கான சந்தர்ப்பங்களாக ஆக முடியும்,” என்று குறிப்பிட்டு நிறைவு செய்கிறார்கள். அவர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்பது பிஷ்ஷருக்கு நன்றாகவே தெரியும். 1999 இல் ஜேர்மனி யூகோஸ்லேவியா போரில் இணைந்த போது, நாஜி ஆட்சி வீழ்ச்சிக்குப் பின்னர் முதன்முதலில் ஜேர்மனியின் இராணுவத் தலையீட்டுக்கு ஜேர்மன் வெளியுறவு மந்திரியாக அவரே பொறுப்பாவார். அவர் ஜேர்மனி இராணுவவாதத்தின் மீள்வருகையைத் தொடங்கி வைத்தார், அது அவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் அந்நடவடிக்கை வேகமானது.

ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கத்தைப் பொறுத்த வரையில், ஐரோப்பா அதன் மேலாதிக்கத்தைப் பலப்படுத்தவும், அதன் உலகளாவிய ஏகாதிபத்திய அபிலாஷைகளைப் பின்தொடரவும், இராணுவவாதத்தைக் கொண்டு முன்நகரவும் “கொரோனா பத்திரங்கள்" ஒரு வழிவகையை வழங்குகின்றன. உண்மையான ஐரோப்பிய நல்லிணக்கம் என்பது அனைத்திற்கும் மேலாக பின்வரும் ஒரு விடயத்தைக் கோருகிறது: அதாவது, கொரோனா வைரஸ் தொற்றுநோயை "ஐரோப்பாவுக்கான" மற்றும் அவற்றின் சூறையாடும் நலன்களுக்கான ஒரு "சந்தர்ப்பமாக" பார்க்கும் ஆளும் உயரடுக்கிற்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுவதாகும்.

இப்போது வங்கிகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் பாயும் பில்லியன்கள், இந்த தொற்றுநோயை எதிர்க்கவும் மற்றும் ஊதியங்களைத் தொடர்ந்து முழுமையாக வழங்கி மக்களைச் சாத்தியமானளவில் பலமாக பாதுகாப்பதை உத்தரவாதப்படுத்தவும் பயன்படுத்தப்பட வேண்டும். வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களினது செல்வவளத்தின் பெரும் தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டு, இந்த நெருக்கடியை எதிர்த்து போராட பயன்படுத்தப்பட வேண்டும்.

ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்பதே ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மாற்றீடாகும்.

சோசலிச வலைத்தளத்திலிருந்து

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com