Friday, January 24, 2020

ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை வைத்திருக்க முடியுமா? வை எல் எஸ் ஹமீட்

புதிய அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இதுவரை யாரும் நியமிக்கப்படவில்லை. அதேநேரம் 19வது திருத்தத்தின்கீழ் ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்கமுடியாது; என்றொரு கருத்து நிலவிகிறது. இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சராக யாரையும் நியாமிக்காததது; எதிர்க்கட்சியினரால் கேள்விக்குட்படுத்தப்படுகின்றது.

இது தொடர்பான சட்டநிலைப்பாடு என்ன?

ஜனாதிபதி எந்த அமைச்சையும் வைத்திருக்க முடியாது; என்பவர்களின் வாதம்:

(19இற்கு முன்னும் பின்னும்) ஒரு பாராளுமன்ற உறுப்பினரைத்தான் ஓர் அமைச்சராக நியமிக்கமுடியும்.( சரத்து 44(1)(b) 19 இற்கு முன். 43(2) -19 இற்குப்பின்)

ஜனாதிபதி ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. எனவே, அவர் எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்க முடியாது. 19 இற்கு முன் அரசியலமைப்பு சரத்து 44(2) இனூடாக ஜனாதிபதிக்கு ஒரு விதிவிலக்கை அளிக்கப்பட்டிருந்தது. அதன்பிராகாரம்;

அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதபோதும் அவர் (1) தனக்கு வேண்டிய விடயதானங்களை அவர் வைத்திருக்கலாம் (2) அதேநேரம் எந்தவொரு அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத விடயதானங்களுக்கும் அவரின்கீழேயே இருக்கும். இந்த இருவகையான விடயதானங்குக்குரிய அமைச்சுக்களின் எண்ணிக்கையையும் அவர் தீர்மானிக்கலாம்.

சுருங்கக்கூறின் தனக்கு வேண்டிய அமைச்சுக்களையும் யாருக்கும் வழங்காத அமைச்சுக்களையும் அவர் வைத்திருக்கலாம். இந்த சரத்து 19இன் மூலம் நீக்கப்பட்டுவிட்டது. எனவே, அந்த விதிவிலக்கு தற்போது இல்லை.

19வது திருத்தத்தில் அதற்குப் பதிலாக முன்னாள் ஜனாதிபதிக்கு ( மைத்ரி) மட்டும் மூன்று அமைச்சுக்களை வைத்திருக்க சலுகை வழங்கப்பட்டது. ( S.51) அவை பாதுகாப்பு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடலாகும். தற்போதைய ஜனாதிபதிக்கு அந்த சலுகையும் இல்லை.

எனவே, ஜனாதிபதி ஒரு பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. முன்னைய ஜனாதிபதிகளுக்கிருந்த விதிவிலக்கும் இல்லை. எனவே, ஜனாதிபதி எந்தவொரு அமைச்சையும் வைத்திருக்க முடியாது. பாதுகாப்பு அமைச்சு ஏன் இன்னும் ஒருவருக்கும் வழங்கப்படவில்லை; எனக் கேள்வி எழுப்புகிறார்கள்.

இங்கு கவனிக்கவேண்டிய ஒருவிடயம், ஜனாதிபதி ஒரு அமைச்சை தன்னகத்தே வைத்திருக்கும்போது அவ்வமைச்சிற்குரிய அமைச்சர் என்ற கருத்தைப் பலர் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ஊடகங்களிலும் நடைமுறையிலும் அவ்வாறே அழைப்பதுண்டு. அந்த எண்ணமும் இந்த குழப்பத்திற்கு ஒரு காரணமாகும். ஆனாலும் சட்டத்தின் பார்வையில் அவர் அமைச்சை வைத்திருந்தாலும் அமைச்சரல்ல. அவர் ஜனாதிபதி மாத்திரம்தான்.

எனவே, ஒருவர் அமைச்சராக இருப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டுமென்பது சரியாகும். ஆனால் ஜனாதிபதி ஒரு போதும் அமைச்சராக இருந்ததில்லை.

ஜனாதிபதி அமைச்சரில்லை என்பதை இன்னுமொரு சரத்து உறுதிப்படுத்துகின்றது. அதாவது சரத்து 42(3) [19 இற்கு முன் 43(2)] இன் பிரகாரம் ஜனாதிபதி அமைச்சரவையின் அங்கத்தவரும் தலைவருமாவார்.

இங்கு கவனிக்க வேண்டியது “ அங்கத்தவர்” என்ற சொல். ஜனாதிபதி அமைச்சராக இருந்திருந்தால் “ அங்கத்தவர்” என்ற சொல் அவசியமில்லை. ஏனெனில் அமைச்சர்கள் எல்லோரும் அமைச்சரவையின் அங்கத்தவர்கள்தான். பிரதமரும் அமைச்சரவையின் அங்கத்தவர் என்று குறிப்பிடப்படவில்லை. ஏனெனில் அவர்தான் பிரதம அமைச்சர். எனவே அவரும் ஒரு அங்கத்தவர்.

அதேபோல் ஜனாதிபதி அமைச்சரவையின் தலைவர் என்றமுறையில் அவரும் அங்கத்தவராகத்தான் இருக்கவேண்டும். அங்கத்தவர் என்று குறிப்பிடப்படவேண்டிய அவசியமில்லை. ஆனாலும் குறிப்பிடப்பட்டுள்ளது; ஏனெனில், அவர் அமைச்சர் இல்லை என்பதனால் அவர் அமைச்சரவையின் அங்கத்தவரா? என்ற கேள்வி, சந்தேகம் எழக்கூடாது; என்பதற்காக.

மட்டுமல்ல, 19 இற்கு முந்திய சரத்து 44(2) இல் “

ஜனாதிபதியின் பொறுப்பில் அவ்வாறு அமைச்சுக்கள் இருக்கும்போது அரசியலமைப்பிலோ அல்லது ஏதாவது எழுதிய ஓர் சட்டத்திலோ “ அந்த விடயதானங்களுக்குப் பொறுப்பான அமைச்சர்” எனக்குறிப்பிடப்பட்டிருந்தால் அதனை “ ஜனாதிபதி “ என வாசிப்பதோடு அவ்வாறே பொருள் கொள்ளவும் வேண்டும்; என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவிதமான குறிப்பே 19வது திருத்தத்தின் S 51 இலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஜனாதிபதி ஒரு அமைச்சை வைத்திருந்தாலும் அவர் அதற்குரிய அமைச்சர் என்ற சொற்பதம் பொருந்தாதது. மாறாக ஜனாதிபதி என்ற முறையிலேயே அந்த அமைச்சை அவர் வைத்திருக்கின்றார்; என்றே பொருள் கொள்ளவேண்டும்.

மேலும் சரத்து 35 ( 19இற்கு முன்) ஜனாதிபதிக்கெதிராக, தனிப்பட்டரீதியிலோ, ஜனாதிபதி என்ற ரீதியிலோ வழக்குத் தொடரமுடியாது. ஆனால் ஜனாதிபதி வைத்திருக்கின்ற விடயதானங்கள் ( அமைச்சு) தொடர்பாக வழக்குத் தொடுக்கலாம், சட்டமாஅதிபரை பிரதிவாதியாக குறிப்பிட்டு; எனக் குறிப்பிட்டிருந்தது .

இங்கும் “ ஜனாதிபதி தான் வைத்திருக்கும் விடயதானங்கள்” என்று ‘ ஜனாதிபதி ‘ என்ற சொல்தான் பாவிக்கப்பட்டிருக்கின்றதே தவிர, அவர் அமைச்சரென்ற முறையில் அவருக்கெதிராக வழக்குத் தொடுக்கலாம்; என்று குறிப்பிடப்படவில்லை.

அதேபோன்றுதான் 19 வது திருத்தத்திலும் ( சரத்து 35) ஜனாதிபதிக்கெதிராக தனிப்பட்டமுறையில் வழக்குத் தொடரமுடியாது. உத்தியோக கடமை தொடர்பாக ( official capacity) வழக்குத் தொடரலாம்; எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு மிகவும் வலுவான ஒரு விடயம் என்னவென்றால் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வக் கடமைகள் தொடர்பாக வழக்குத் தொடுத்தல் எனும்போது இரு விடயங்கள் உள்ளடக்கப்படுகின்றன.

ஒன்று: நிறைவேற்று ஜனாதிபதி என்றமுறையில் அவரது கடமையுடன் தொடர்புபட்டது. உதாரணமாக, முன்னைய ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தபோது நீதிமன்றம் சென்றமை.

இரண்டு: அவரிற்குகீழ் வருகின்ற அமைச்சு தொடர்பாக நீதிமன்றம் செல்வது.

இந்த இரண்டையும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கடமை; என்ற பதத்திற்குள்ளேயே உள்ளடக்கப்பட்டிருக்கின்றதே தவிர, முதலாவது ஜனாதிபதி என்றமுறையிலும் இரண்டாவது குறித்த விடயங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் என்றமுறையிலும் என்று குறிப்பிடப்படவில்லை.

எனவே, ஜனாதிபதி அமைச்சுக்களை வைத்திருந்தாலும் அவர் ஜனாதிபதியாகத்தான் அவற்றை வைத்திருக்கிறார். அவ்விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராக இல்லை. அதன்பின்னாலுள்ள தத்துவம் அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினரல்ல. எனவே, அவர் அமைச்சராக முடியாது. வரலாற்றில் எந்தவொரு ஜனாதிபதியும் அமைச்சராக இருந்ததுமில்லை.

அமைச்சராக இல்லாமல் அமைச்சை வைத்திருக்க அரசியலமைப்பின் அனுமதிதேவை. அந்த அனுமதி தற்போது இல்லை; என்ற வாதம் சரியா? என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்; இன்ஷாஅல்லாஹ்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com