Friday, January 24, 2020

மிருசுவிலில் எட்டு தமிழர்களை கழுத்தறுத்து கொலை செய்தவருக்கு பொது மன்னிப்பு

மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்புக்கு இணங்க அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தமிழ் மக்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை போன்று அமைந்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. சிறிநேசன் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அண்மையில் பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்தப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் நீதிமன்றத்தில் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டிருந்த ராணுவத்தினர் 34 பேரும் அடங்குகின்றனர். அதிலும் குறிப்பாக, மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தறுத்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவரும் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளார்" என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன், இது தமிழர்களுக்கு விடுக்கின்ற எச்சரிக்கை போன்று அமைந்துள்ளது" என்றும் தெரிவித்தார்

யாழ்ப்பாணம் - மிருசுவில் பகுதியில் வைத்து 19 டிசம்பர் 2000ஆம் ஆண்டு ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட எட்டு தமிழர்களின் சடலங்கள், கழுத்தறுக்கப்பட்ட நிலையில், மலசலக் குழியொன்றிலிருந்து மீட்கப்பட்டன.

மேற்படி நபர்கள் கடத்தப்பட்ட மறுநாள் 20ஆம் தேதி இந்தப் படுகொலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட எட்டுப் பேரில் 05 வயது சிறுவனும், பதின்ம வயதுடைய மூவரும் அடங்குவர். இதனையடுத்து இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டார்கள் எனும் குற்றசாட்டில் ராணுவத்தைச் சேர்ந்த ஐவர், போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் 2015ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் தேதி, ராணுவத்தில் சார்ஜன் தரத்திலிருந்த சுனில் ரத்நாயக்க என்பவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்துள்ளபோதும் குறித்த நபர் விடுதலை செய்திருப்பதாக எவ்வித உத்தியோகபூர்வ தகவல்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்..

ஊகங்களின் அடிப்படையில் முகநூல்களில் வெளியான செய்திகளை வைத்தே சிறிநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com