Thursday, December 26, 2019

சத்தியமா நாங்கள் ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் அல்லர். சம்பந்தன் சுமந்திரன் பேசும் ஐக்கியம் போலி. மண்டையன் குழுத்தலைவர்.

ஐக்கியத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல .ஆனால் சம்பந்தன் சுமந்திரன் போன்றோர் பேசச் கூடிய ஐக்கியம் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் தொடர்பில் அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கியத்திற்கு நாங்கள் விரோதிகள் அல்ல. திம்பு காலத்தில் இருந்தே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஐக்கியத்திற்காக இணைந்து செயற்பட்டு வந்திருக்கிறது. திம்பு காலத்தில் இருந்து இன்றுவரை பல்வேறுபட்ட ஐக்கியங்கள் தமிழ் மக்கள் மத்தியில் உருவாகுவதற்கு நாங்கள் காரணகர்த்தாக்களாகவும் இருந்திருக்கிறோம். ஆகவே நாங்கள் ஐக்கியத்திற்கு எதிரானவர்கள் கிடையாது என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறோம்.

ஆனால் சுமந்திரன், சம்பந்தன் போன்றோர் பேசக் கூடிய ஐக்கியம் என்பது என்ன அடிப்படையில் என்னத்திற்கானது என்று பார்க்க வேண்டும். அது உண்மையில் தமிழரசுக் கட்சியை வெல்ல வைப்பதற்கான ஐக்கியமா என்பதுதான் முதலாவது கேள்வி, அல்லது ஐக்கிய தேசியக் கட்சியைப் பாதுகாப்பதற்கான ஐக்கியமா என்பதும் கேள்வி. ஆகையினாலே அதெல்லாம் தவறானது என்று நாங்கள் கூறுகிறோம்.

ஆகவேதான் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து கூறிக் கொண்டிருப்பது என்னவெனில் ஒரு பரந்துபட்ட ஐக்கிய முன்னணி என்று சொன்னால் அந்த ஐக்கிய முன்னணிக்கான கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும். அந்த ஐக்கிய முன்னணிக்கான யாப்பு இருக்க வேண்டும். அந்த ஐக்கிய முன்னணி எவ்வாறு செயற்பட வேண்டும். அதனுடைய கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அந்தக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான வேலைத் திட்டங்கள் இருக்க வேண்டும். இவை எதுவுமே இல்லாமல் வெறுமனே ஐக்கியத்தைப் பற்றிப் பேசி பயனில்லை.

அதிலும் குறிப்பாக நாங்கள் யாரையும் வெளியேற்றவில்லை. விரும்பியோர் வந்து சேரலாம் என்று சொல்வது அது ஒரு ஐக்கியத்துக்கான அறைகூவல் அல்ல. ஐக்கியத்திற்கான கோரிக்கையும் அல்ல. அது உண்மையாகவே மக்களை ஏமாற்றுவதற்கான செயற்பாடாகத் தான் கருதுகின்றேன்.

அந்த அடிப்படையில் தான் மாற்று அணியைப் பற்றி நாங்கள் சிந்திக்கின்றோம். தமிழ் மக்களுடைய கோரிக்கைகளை வென்றெடுக்கக்கூடிய வகையில் இதில் யார் சேர்ந்து செயற்பட விரும்பினாலும் அவர்களையும் இணைத்துக் கொண்டு செல்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சனைக்கு ஒரு நியாயமான தீர்வு ஏற்பட வேண்டும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு ஏற்பட வேண்டும். அவர்கள் ஒரு சுயமாக முடிவுகள் எடுத்து நடைமுறைப்படுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டுமென்ற பல விடயங்கள் உள்ளன..

அதனை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் ஒரு சமஸ்டி அமைப்பு முறையை முன்னெடுத்துச் செல்வதை ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் அனைவரையும் நாங்கள் ஒன்றிணைத்து அதற்கான கட்டமைப்புகளையும் அதற்கான யாப்புக்களையும் உருவாக்கி நாங்கள் முன்னெடுத்தச் செல்வோமானால் அதற்குள் பிரச்சனைகள் வருவது நிச்சயமாக குறைவாக இருக்கும்.

ஆகவே சுமந்திரனுடைய அந்தக் கோரிக்கை என்பது ஒரு தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கான கோரிக்கை என்பது ஒன்று. இரண்டாவது விடயம் சுமந்திரன் பேச்சாளர் என்ற அடிப்படையில் கட்சியில் இருக்கின்றார். மாவை சேனாதிராசா கடந்த நாற்பது ஐம்பது வருடமாக சிறுவயதிலிருந்தே அரசியலில் இருக்கக் கூடியவர். அதே போல சம்பந்தரும் மிக நீண்டகாலமாக அரசியலில் இருக்கக் கூடிய ஒருவர். ஆகவே அவர்கள் வந்து இது குறித்து பேசாமல் இருக்கையில் இந்தக் கோரிக்கையை முன்வைப்பது சுமந்திரனாகத் தான் இருக்கின்றார்.

உண்மையில் கட்சியில் இப்படி கோரிக்கையை முன்வைக்குமாறு முடிவெடுக்கப்பட்டதா? அந்தக் கோரிக்கையின் பிரகாரம் அவர் பேசுகிறாரா? அது கூட்டமைப்பின் முடிவா? தமிழரசுக் கட்சியின் முடிவா? அல்லது சுமந்திரன் வாய்க்கு வந்தவாறு தான் பேசுகிறாரா? என்று பார்த்தால் நான் அறிந்த வரையில் சுமந்திரன் தான் விரும்பியவாறு தனது வாய்க்கு வந்தவகையில் பேசுகின்றார். எந்தவொரு முடிவும் எட்டப்படவும் இல்லை எடுக்கப்படவும் இல்லை. அவ்வாறான நிலைமையில் இவர் கூறுகின்ற ஐக்கியம் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

இப்போது கூட்டமைப்பிற்குள்ளே பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்கிறது. செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் போன்றோர் அண்மையிலே தமிழரசுக் கட்சியுடன் முரண்பட்டு பிற்பாடு பேச்சுவார்த்தைகளை நடாத்தி அந்த பேச்சுவார்த்தைகள் முடிவிற்கு வராமல் மீண்டும் கூடிப் பேசுவதாகக் கூட சொல்லப்படுகிறது.

ஆகவே அவ்வாறான நிலைமையில் தமிழரசுக் கட்சி விடக்கூடிய தவறுகளால் இன்றும் முரண்பாடுகள் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கிறது என்பது தான் கூட்டமைப்பிற்குள்ளே இருக்கக்க கூடிய நிலைமையாக இருக்கிறது என்றார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com