Sunday, September 15, 2019

ஸஹ்ரானின் சீடர்கள் பலர் வலையில் வசமாக மாட்டியுள்ளனர்... ! பொலிஸார்

உயிர்த்த ஞாயிறன்று நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட ஸஹ்ரானின் சீடர்கள் 18 பேர் வரை, கடந்த 20 நாட்களுக்குள் இலங்கையில் பல்வேறு இடங்களிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அரச புலனாய்வுச் சேவையின் அம்பாறை அலுவலக அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் கைதுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த தாக்குதலை நடாத்தியதாகக் கூறப்படுகின்ற தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பினைச் சேர்ந்த பெரும்பாலானோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில் இரகசியமாக மறைந்து வாழ்கின்ற ஜமாஅத் மில்லத் இப்ராஹீம் அமைப்பினைச் சேர்ந்த உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

பொலன்னறுவை, கண்டி, மாவனல்லை, கம்பொல, அநுராதபுரம் போன்ற பிரதேசங்களில் இரகசியமாக மறைந்திருந்தோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒலுவில் பல்கலையில் கல்வி கற்றுவரும் மாணவர்கள் இருவரும் உள்ளனர் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளின் மூலம், மிக முக்கியமான பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், அதற்கேற்ப மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com