Tuesday, March 5, 2019

மாகந்துரே மதுஷின் வழிநடத்தலின் கீழ் கொள்ளையிடப்பட்ட வைரம், கண்டுபிடிக்கப்பட்டது - ருவான் குணசேகர

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட, பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதுஷின் வழிநடத்தலின் கீழ் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய கொள்ளை சம்பவம் குறித்து, இன்றைய தினம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த தினம் பன்னிப்பிட்டி பகுதியில் உள்ள வைர வியாபாரியிடம் இருந்து, 500 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய வைரம் கொள்ளையிடப்பட்டது. இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டதை அடுத்து, தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்றன.

இதன்போது, கொள்ளையடிக்கப்பட்ட பெறுமதியான வைரத்துடன், ஒருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டார். பேலியகொட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால், பாணந்துறை – வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டை சோதனையிட்டபோது, அங்கு சுமார் ஒன்றரை கோடி ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனிடையே கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மாகந்துரே மதுஷின் நெருங்கிய நண்பர் என்பதுடன், மதுஷின் தந்தை மரணித்த போது, அவரது இறுதி கிரியைகளில் கலந்து கொண்டிருந்ததாக காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com