Monday, February 25, 2019

கூட்டு ஒப்பந்தத்தை, இனி ஒருபோதும் மாற்ற முடியாது - முதலாளிமார் சம்மேளனம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக கைச்சாத்திடப்பட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தை, இனி ஒருபோதும் மாற்றி அமைக்க முடியாதென முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது.

முதலாளிமார் சம்மேளனத்தின் செயலாளர் லலித் ஒபேசேகர, அறிக்கை ஒன்றின் ஊடாக இதனை கூறியுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, புதிய சம்பளத் தொகையை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும், தற்போது செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ளவில்லை என, அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையில், பெருந்தோட்ட தொழிலாளர்களின் எதிர்ப்புக்களையும் தாண்டி, கடந்த மாதம் 28 ஆம் திகதி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதில் 700 ரூபாய் அடிப்படை சம்பளத்துடன், 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவையும் சேர்த்து மொத்த சம்பளமாக 750 ரூபாய் வழங்கப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

எனினும் இந்த தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென தெரிவித்து, தொடர்ந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெருந்தோட்டத் துறையினருக்கு புதிய சம்பளத் தொகையை வழங்குவதற்கான எந்த நடவடிக்கைகளையும் தற்போது செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் மேற்கொள்ள இயலாது என, லலித் ஒபேசேகர தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com