Wednesday, February 27, 2019

இந்திய பாகிஸ்தான் மோதல் குறித்து இலங்கை கவலை

அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் இந்திய - பாகிஸ்தான் தாக்குதல் குறித்து உலக நாடுகள் பெரும் கவலை அடைந்துள்ளன. இந்த நிலையில், குறித்த நாடுகளுக்கு இடையிலான தாக்குதல் குறித்து இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.

ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதிசெய்யக்கூடிய முறையில் செயற்படுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

காஷ்மீர் - புல்வாமா பகுதியில் இந்திய பாதுகாப்பு அணி (CRPF) மீது நடத்தப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் முரண்பாடுகள் தொடர்பாக இலங்கை கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு இன்றைய தினம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இலங்கையானது, சுமார் மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்ற வகையில், புல்வாமாவில் இடம்பெற்ற இந்த தீவிரவாத தாக்குதலை தெளிவாக கண்டிப்பதுடன், தீவிரவாதத்திற்கு எதிரான அதன் எல்லா தோற்றங்கள் மற்றும் வடிவங்களுக்கு எதிராக உறுதியுடன் நிற்கின்றது.

தெற்காசிய பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை கட்டியெழுப்பவும், கலந்துரையாடல் மற்றும் நம்பிக்கை கட்டியெழுப்பல் ஆகியவற்றின் ஊடாக இரு தரப்பு பிரச்சினைகளை தீர்த்தல் உட்பட, பதற்றத்தை தணித்தல் தொடர்பாக அனைத்து முயற்சிகளுக்கும் இலங்கை வலுவான ஆதரவை தெரிவிக்கின்றது.

இந்த சூழ்நிலையில், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பு, சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை உறுதி செய்யக்கூடிய முறையிலும் செயற்படுமாறு, இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம இலங்கை வேண்டுகோள் விடுக்கின்றது என, குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com