Thursday, January 24, 2019

பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கமே காரணம் - கொந்தளிக்கிறார் விமல்

பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கமே திட்டம் தீட்டிக் கொடுத்துள்ளதாக, விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தினார். பிரித்தானிய நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கர பெர்னான்டோவை கைது செய்ய பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பில், வெளிவிவகார அமைச்சு எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது? என்பது குறித்து எமக்கு இதுவரை தெரியாது.

ஆனால், இலங்கை இராணுவத்தினரை கைது செய்யுமாறு வெளிநாட்டு நீதிமன்றமொன்றில் இதற்கு முன்னர் ஒரு தடவையேனும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதில்லை. தற்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு அரசாங்கமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதேபோல், காணாமற்போனோர் தொடர்பிலான சட்டமூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச நாடு ஒன்றிலிருந்து இராணுவத்தினருக்கு எதிரான பிடியாணை பிறப்பிக்கும்போது, குறித்த நபரை அந்நாட்டுக்கு ஒப்படைப்பதற்கான வழிவகைகளும் திறந்து தான் காணப்படுகின்றன.

ஆனால் அரசாங்கமோ, சர்வதேசத்திடம் இராணுவத்தினரை விட்டுக்கொடுக்க மாட்டோம் எனக் கூறிக்கொண்டிருந்தாலும், அரசாங்கத்தின் கடந்த கால செயற்பாடுகளால், நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்பட வேண்டிய நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பில் நாம் முன்பே வலியுறுத்தி இருந்தோம். அப்போது அனைவரும் எங்களை ஏளனம் செய்தார்கள். இப்போது, பிரித்தானிய நாடாளுமன்றம் இலங்கை இராணுவத்தினருக்கு பிடியாணை பிறப்பித்துள்ளது. இப்படியான ஒரு அரசாங்கத்தை இனியும் ஆட்சி பீடத்தில் நீடித்திருக்க நாம் இடமளிக்கக்கூடாது என்று மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com