Sunday, January 27, 2019

இன்றும் கொழும்பு போக்குவரத்தில் தடைகள் - மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவிப்பு

எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள இலங்கையின் 71 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒத்திகைகளினால், கொழும்பு – காலி முகத்திடலை அண்மித்த பகுதிகளில் இன்றும் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் முன்னெடுக்கப்படுவதாக போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு தொடர்பிலான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம், எதிர்வரும் 31 ஆம் திகதி மற்றும் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை இந்த ஒத்திகைகள் இடம்பெறவுள்ளன. இன்று காலை 7 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை காலி முகத்திடலின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி முச்சந்தி முதல் பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரையான வீதியின் ஒரு பகுதி, லோட்டஸ் வீதியின் செரமிக் சந்தி ஆகியன குறித்த காலப்பகுதியில் மூடப்படவுள்ளன.

இதனால், காலி வீதியூடாக புறக்கோட்டை நோக்கி செல்லும் வாகனங்கள், லிபர்ட்டி சுற்றுவட்டம், பித்தளை வீதி, சேர் ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, அக்பார் வீதி, மலே வீதி, சிற்றம்பலம் கார்டனர் வீதியூடாக கொழும்பு புறக்கோட்டையை சென்றடைய முடியும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு , புறக்கோட்டையிலிருந்து காலி வீதிக்கு செல்லும் வாகனங்கள் சிற்றம்பலம் கார்டனர் வீதி,ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை ஊடாக காலி வீதியை சென்றடைய முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com