அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமை தொடர்பாக, ஏன் டக்ளஸ் மௌனம் காத்தார்? – தலதா அத்துகோரள.
தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 1994 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த அரசாங்கத்திடம், ஏன் கேள்வி எழுப்பாது மௌனம் காத்தார் என, நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் வைத்து 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற விசாரணைக்கு என்ன நடந்தது என? கேள்வியெழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் வழங்கிய போதே, நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது, கடந்த வருடம் குறிப்பாக, இலங்கையில் அரசியல் நெருக்கடி இடம்பெற்ற தருணத்தில் தான் இடம்பெற்றது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி, இந்த நாட்டில் அரசாங்கம் என்ற ஒன்றே இருக்கவில்லை.
இது தொடர்பில் எமக்கு தெரிய வந்தவுடன் இரண்டு ஆணைக்குழுக்களை ஸ்தாபித்துள்ளோம். தற்போது ஒரு ஆணைக்குழுவின் அறிக்கை எமது கைகளுக்குக் கிடைத்துள்ளது. அத்துடன் அடுத்த அறிக்கையும் வந்தவுடன் நாம் தெரியப்படுத்துவோம்.
ஆனால், டக்ளஸ் தேவானந்தா கடந்த 1983 ஆம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார்.
எவ்வாறாயினும் அதற்குப் பின்னர் 1994 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அப்போதே இந்த விசாரணைகளை முன்னெடுத்திருக்கலாம் என்று, நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment