Sunday, January 6, 2019

பால்மா விலை அதிகரிக்கப்படாவிட்டால், இறக்குமதி நிறுத்தப்படும் - பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்.

பால்மாவின் விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படாவிட்டால், பால்மா இறக்குமதியை நிறுத்துவோம் என, பால்மா இறக்குமதியாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக சந்தையில் தற்போது பால்மாவின் விலை அதிகரித்துக் கொண்டே செல்வதாக அந்த சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் தற்போது பால்மா விற்பனையின் போது, 30 தொடக்கம் 40 சதவீத நட்டம் ஏற்படுவதாகவும் பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு கிலோ பால்மாவிற்கு 170 ரூபாய் வரி செலுத்தப்படுவதுடன், இலங்கையில் பால்மாவின் வரியை நூற்றுக்கு 40 சதவீதத்தால் குறைத்துள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக பால்மா இறக்குமதியில் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அந்த சங்கம், பால்மா விலையை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மாறாக அனுமதி மறுக்கப்பட்டால், தாம் பால்மா இறக்குமதியை நிறுத்தப் போவதாக, பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com