Sunday, January 27, 2019

கட்டுநாயக்காவில் விநியோகிக்கப்படும் யுத்த தளபாடங்களை சோதனையிடுவதற்கு இலங்கைக்கு முற்றாகத் தடை

இந்து சமுத்திரத்திலுள்ள அமெரிக்க யுத்தக் கப்பல்களுக்கு யுத்த உபகரணங்களை விநியோகிக்கும் நடவடிக்கையை அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கைக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் அமெரிக்கா பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 25 ஆம் திகதி யுத்த தளபாடங்களை ஏற்றிவந்த அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இவ்வாறு அமெரிக்க விமானத்தில் இருந்து வரும் யுத்த தளபாடங்களை சோதனையிடுவதற்கு இலங்கை சுங்கத்துக்கோ, இராணுவத்துக்கோ, பொலிஸுக்கோ அனுமதி வழங்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு கொண்டு வரப்படும் உபகரணங்கள் இந்து சமுத்திரத்தில் காணப்படும் ஜோன் ஸ்டென்னிஸ் எனும் பெயரிலான அணுசக்தியில் செயற்படும் பாரிய விமானங்கள் கொண்டு செல்லும் கப்பலுக்கு மாற்றப்படுகின்றன. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னர் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அமெரிக்க விமானங்களுக்கு சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவுக்கு வர அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த அமெரிக்க இராணுவ நடவடிக்கை நாளை வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த விடயத்தை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் வெளிப்படுத்தியுள்ள போதிலும், அரசாங்கம் எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்த வில்லையெனவும் இன்று வெளியாகிய சகோதார மொழி தேசிய வார இதழொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com