Friday, October 19, 2018

சிறுபாண்மையினர் கோட்டாவை ஏன் வெறுக்கவேண்டுமாம்?

இலங்கையிலுள்ள சிறுபாண்மை மக்கள் தன்னை வெறுப்பதற்கான காரணங்கள் ஏதும் இல்லை என்றும் அவர்களை பயங்கரவாதத்திலிருந்து மீட்பதற்காகவே தாங்கள் புலிகளுடன் போரிட்டதாகவும், அவ்வாறு போரிட்டு அவர்களை மீட்டெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலர் கோத்தபாய ராஜபக்ச.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இன்று விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகிய பின்னர், நீதிமன்ற வாசலில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது நீங்கள் ஜனாதிபதி வேட்பாளராக குதிக்கவுள்ளதாக பேசப்படுகின்றது, ஆனாலும் உங்களுக்கு சிறுபாண்மை மக்களின் விருப்பு உள்ளதாக தெரியவில்லையே என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில் :

ஜனநாயகத்தை நிலைநாட்டக்கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்றும் சிலர் பேசுகின்றனர். இந்த நாட்டிலே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கே இராணுவம் தியாகங்களை செய்துள்ளது. மக்களால் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசை காப்பதே அதன் கடமை. யாரும் வேறுவழிகளில் புரட்சி செய்து ஆட்சியை கைப்பற்ற நினைக்கின்றபோது, இராணுவமே அங்கு தலையிட்டு ஜனநாயகத்தை காக்கின்றது. அவ்வாறானதோர் இராணுவத்தில் 20 வருடங்கள் கடமையாற்றியவன் என்ற வகையிலும், பாதுகாப்பு விடயங்களை கையாளுகின்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றியவன் என்ற வகையிலும் அக்கடமையை என்னால் செய்யமுடியும்.

மேலும் காலம் கனிந்துவரும்போது, தான் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com