Monday, October 1, 2018

நல்லாட்சி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுதாம். அழுகிறார் செல்வம் அடைக்கலநாதன்.

எங்களால் கொண்டுவரப்பட்ட இன்றைய நல்லாட்சி அரசாங்கம் வெள்ளை வேன்கள் இன்றி, காணாமல் ஆக்குதல்களை மேற்கொள்ளாமல் எமது காணிகளை அபகரித்து, இராணுவ ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுகின்றதோர் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது எனத் தெரிவித்துள்ளார் செல்வம் அடைக்கலநாதன்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய மாநாடு என்ற பெயர் கொண்ட விழா நேற்று 30ம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்றபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், நல்லாட்சி அரசாங்கமானது வன்முறையில்லாத இனப்பிரச்சினையினை தூண்டுகின்ற, இனப்பிரச்சினைக்கு வித்திடுகின்ற, எமது மக்களை மூன்றாம் தரப்பாக பார்க்கின்ற அரசாங்கமாகவே இருந்துவருகின்றதே தவிர மக்கள் நலன் தொடர்பில் செயற்படவில்லை.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாத நிலையிலும் நாங்கள் அவர்களை தொடர்ந்தும் ஆதரித்து வருகின்றோம்.
தென்னிலங்கையில் இந்த அரசாங்கம் தொடர்பில் விமர்சனங்கள் வருகின்றதோ இல்லையோ, வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினைத் தான் வசைபாடுகின்றனர்.

இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதனையும் செய்யாது என்பதற்கான வலுவான காரணங்களை நாங்கள் கொண்டிருக்கின்றோம்.

மேற்கண்டவாறு தெரிவித்துள்ள, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்றில் வகிக்கின்ற பிரதி சபாநாயகர் பதவியை ராஜனாமா செய்வது தொடர்பில் இதுவரை எதுவும் பேசவில்லை என்பது அரசியல் அவதானிகளது விமர்சனமாக காணப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com