Tuesday, September 18, 2018

முஸ்லிம்கள் மீது தமிழர்களுக்கு காழ்ப்புணர்ச்சியாம்! கூறுகிறார் முன்னாள் எம். பி பியசேன

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் மக்கள் ஒன்றித்து நிற்பதால் மஹிந்த யுகம் மீண்டும் வெகுவிரைவில் நிச்சயம் மலரும் என்பதை இந்தியா அடையாளம் கண்டு உள்ளது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பொடியப்பு பியசேன தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாட்டை காரைதீவில் வலுப்படுத்துவது தொடர்பான கூட்டம் நேற்று இக்கட்சியின் காரைதீவு பிரதேச அமைப்பாளர் பி. ரி. தர்மலிங்கம் தலைமையில் இவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

காரைதீவில் உள்ள வட்டாரங்களுக்கு அமைப்பாளர்கள் இதன்போது நியமிக்கப்பட்டதுடன் புதிய அங்கத்தவர்களும் இணைத்து கொள்ளப்பட்டனர்.

இங்கு விசேட உரை ஆற்றியபோது பொடியப்பு பியசேன மேலும் தெரிவித்தவை வருமாறு:-

எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு சென்று இருந்தார். அங்கு அவருக்கு மிக மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது. மஹிந்த யுகம் மீண்டும் வெகுவிரைவில் நிச்சயம் மலரும் என்கிற மகிழ்ச்சியான செய்தி எமக்கு இதன் மூலம் வெளிப்பட்டு நிற்கின்றது. இன்னொரு வகையில் சொல்வதானால் மக்கள் மஹிந்த ராஜபக்ஸவுடன் ஒன்றித்து நிற்பதால் மஹிந்த யுகம் வெகுவிரைவில் மீண்டும் மலர்வது நிச்சயம் என்பதை இந்தியா அடையாளம் கண்டு உள்ளது. அதாவது அவரின் கைகளை முறிக்க முடியாது என்பதை உணர்ந்து அவற்றை முத்தமிடுகின்றது. இதே நிலைப்பாட்டுக்குதான் உலக நாடுகள் அனைத்தும் வந்து உள்ளன.

சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்ஸவுக்கு பின்னால் அணி திரண்டு நிற்கின்றனர். தமிழ் மக்களுக்கு உண்மையான தலைவர்கள் யாரும் இது வரையில் கிடைக்கவே இல்லை. தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்று கொடுக்கவில்லை. மாறாக தமிழ் மக்களை மாறாத துன்ப சாகரத்துக்குள் தள்ளி இருக்கின்றார்கள். எனவே இந்நாட்டின் உன்னத தலைவரான மஹிந்த ராஜபக்ஸவை தமிழ் மக்களின் தலைவராக தமிழர்கள் ஏற்று அங்கீகரிக்க வேண்டும். ஒரு இனத்தின் உண்மையான தலைவன் இன்னொரு இனத்துக்கு எதிரானவனாக இருக்க மாட்டான். காந்திஜி இலங்கை தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்து இருக்கவில்லை. ஆனால் அவரை நாமும் மகாத்மா என்று கொண்டாடுகின்றோம். அப்படியாயின் மஹிந்த ராஜபக்ஸ எத்தனையோ நன்மைகளை தமிழ் மக்களுக்கு பெற்று கொடுத்திருக்கின்றபோது ஏன் நாம் அவரை தமிழ் மக்களின் தலைவராக ஏற்று கொள்ள முடியாது என்று நான் வினவுகின்றேன்.

அரசியலையும், அபிவிருத்தியையும் முஸ்லிம் சகோதர இனத்தவர்களிடம் இருந்து தமிழர்கள் கற்க வேண்டி உள்ளது. இரண்டையும் அவர்கள் ஒன்றாகவே முன்னெடுக்கின்றனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரையில் அரசியலோடு சேர்ந்த அபிவிருத்தியையும், அபிவிருத்தியோடு இணைந்த அரசியலையும் ஒருசேர முன்னெடுப்பதன் மூலமே இம்மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் முஸ்லிம் பிரதேசங்களை போல முன்னேற்றங்களை அடைதல் கை கூடும். நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பொதுவாக அம்பாறை மாவட்டத்தை குறிப்பாக காரைதீவை சேர்ந்த பாடசாலைகள், கோவில்கள் போன்றவற்றுக்கு பல இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடுகள் செய்து கொடுத்திருக்கின்றேன். ஆனால் நல்லாட்சியில் அபிவிருத்தி எதுவும் இடம்பெறுவதாக தெரியவில்லை. நான் மீண்டும் அதிகாரத்துக்கு வருகின்றபோது அபரமித அபிவிருத்தியை எனது மக்களுக்கு பெற்று கொடுப்பேன்..

இதே நேரத்தில் தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கு இடையில் வேற்றுமையில் ஒற்றுமை அத்தியாவசியமாக உள்ளது. இம்மாவட்டத்தில் பல்லாயிர கணக்கான தமிழ் இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டு வருகின்றனர். ஆயினும் இதற்கு எதிராக தமிழர் தரப்பில் குரல் கொடுக்கப்படுவது இல்லை என்றே கூறலாம். ஆனால் எவரேனும் இந்து ஒருவர் இஸ்லாமியராக மாறி விட்டால் போதும். வரிந்து கட்டி கொண்டு வலிந்து சண்டை போடுகின்றார்கள். இதற்கு முஸ்லிம்கள் மீது இருக்க கூடிய காழ்ப்புணர்ச்சிதான் ஒரேயொரு காரணம் ஆகுமே ஒழிய இந்து சமயம் மீதான அக்கறை அல்ல என்பதையும் இவ்விடத்தில் சொல்லி வைக்கின்றேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com