Saturday, January 30, 2016

இலங்கைக்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுக்கள் இல்லை. ஜனாதிபதி.

புலிகள் பயங்கரவாதிகள் அவா்கள் யுத்தம் தொடர்பான சட்டதிட்டங்களை கடைப்பிடிக்கவில்லை! ஜனாதிபதி குற்றச்சாட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவில்லை என்றும் மனித உரிமைகள் மீறப்பட்டமை குறித்தே குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அல்​ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைக் கூறியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

எனினும் எமது நாட்டின் சுயாதீனத் தன்மைக்கு அமைவாகவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இதற்காக விஷேடமாக வௌிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொள்ள முடியும், என்றாலும் வௌிநாட்டு நபர்களை இந்நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கான தேவை இருக்காது.

எமது நாட்டில் பக்கச்சார்பற்று சுயாதீனமாக செயற்படும் நீதிமன்றம் இருக்கின்றது. அதேபோல் பக்கச்சார்பற்று செயற்படும் வேறு நிறுவனங்களும் இருக்கின்றன.

எங்களுக்கு தேவையாக இருப்பது நாட்டுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டில் இருந்து விடுபடுவதே.

ஆகவே அந்த விசாரணை நடவடிக்கைகளை தௌிவாகவும் சுயாதீனமானதாகவும் நியாயமான முறையிலும் முன்னெடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

நாம் நீதிமன்றத்தை சுயாதீனப்படுத்தியுள்ளோம். அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் சுதந்திரமாக செயற்படும் நிலமையயை ஏற்படுத்தியுள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அத்துடன் தான் ஒருபோதும் திருடர்களையும் மோசடிக்காரர்களையும் பாதுகாக்க கூடியவன் அல்ல என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் யுத்தத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் ஒருபோதும் செயற்படவில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்கள் மற்றும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை இராணுவம் இந்த நியமங்களை மதித்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் நேர்மையாக செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், இராணுவத்தினரைச் சேர்ந்த எவரேனும் ஒருவர் இந்த நடவடிக்கைகளை மீறி தவறிழைக்கப்பட்டிருந்தால், அது தொடர்பில் விசாரணைப் பொறிமுறைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, தவறிழைத்தமை கண்டறியப்படுமாயின், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தாம் இதற்கு முன்னரும் தெளிவாக கூறியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com