Friday, January 30, 2015

ஶ்ரீசுக உறுப்பினர்கள் பலருக்கு வேட்பு மனு இல்லை!யாழில் வெற்றிலையா? வீணையா!

எதிர்வரும் ஏப்ரல் 24ம் திகதி பாராளுமன்று கலைக்கப்பட்டு புதிய பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இத்தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் கட்சிகள் இறங்கியுள்ளது. நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் சகல கட்சிகளிலுருந்தும் பலருக்கு வாய்ப்புக்கள் அற்றுப்போகும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

இவ்வாய்புக்கள் அற்றுப்போகும் அபாயத்தை எதிர்நோக்கும் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே உள்ளனர். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, நிஷாந்த முத்துஹெட்டிகம, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, அருந்திக்க பெர்ணான்டோ, கருணா அம்மான், துமிந்த சில்வா, ரோஹித்த அபேகுணவர்தன, சரண குணவர்தன ஆகியோர் முக்கியமான நபர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இவர்களுக்கு எதிராக ஊழல், மோசடிகள் உட்பட ஏனைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட மாட்டாது என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

இதேநேரம் எதிர்வரும் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் வெற்றிலை சின்னத்தில் ஈபிடிபி போட்டியிட முடியாது செல்லலாம் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஈபிடிபியை இணைத்துக்கொள்ளக்கூடாது என அழுத்தம் கொடுப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள்ளும் இவ்விடயத்தில் குத்துக்குடையல்கள் ஆரம்பமாகியுள்ளது. தமிழரசுக் கட்சியினர் அதிக பட்சமான ஆசனங்களை நிரப்ப முயற்சிகளை மேற்கொள்வதாகவும் பங்காளிக்கட்சிகள் நாம் தனித்து போட்டியிடுவோம் என்ற மிரட்டலுக்கு ஆரம்பமாகியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதேநேரம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தன்னிடம் உறுதியளித்திருப்பதாக அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த மோசடி பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு பெறுவதற்காக அமைச்சர் ராஜித சேனாரத்னவை பின் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com