Tuesday, July 22, 2014

பெற்ற மகளை கற்பழித்து தாய்மையடைய செய்த தந்தைக்கு 20 வருட கடூழிய சிறை............

தனது சொந்த மகளைப் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி (கற்பழித்து) கர்ப்பமுற வைத்து பெண் பிள்ளை ஒன்றுக்கு தாயாக்கிய தந்தை ஒருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் 20 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் தண்டமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் இத்தீர்ப்பினை வழங்கினார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாவக்கொடிச்சேனை எனும் பின்தங்கிய பிரதேசத்தைச் சேர்ந்த முத்துலிங்கம் பாலசுந்தரம் எனும் 47 வயது நபருக்கு எதிராகத் தொடரப்பட்ட விசேட குற்றம் புரிந்த மேற்படி வழக்கில் எதிரியான மேற்படி நபர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதையடுத்தே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

எதிரியான முத்துலிங்கம் பாலசுந்தரம் தனது மனைவி கூலி வேலைக்கு சென்ற பின்னர் தமது பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையான பாலசுந்தரம் சுவேந்தினி எனும் 17 வயது பெண் பிள்ளையை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியமையால் அவர் கர்ப்பம் தரித்துள்ளார். குறித்த சொந்த மகளை 6 மாதக் கர்ப்பிணியாக விருக்கும் போது சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையுடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த தந்தைக்கு எதிராக வழக்குத்தொடரப்பட்டு பின்னர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் மேல்நீதிமன்ற நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் முன்னிலையில் இறுதியாக விசாரணை நடைபெற்ற போது எதிரி முத்துலிங்கம் பாலசுந்தரம் தம் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து நீதிபதி சந்திரமணி விஸ்வலிங்கம் எதிரிக்கு இருபது வருட கடூழிய சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா தண்டமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டம் 50 ஆயிரம் ரூபா செலுத்த தவறினால் மேலும் இரு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com