Tuesday, March 25, 2014

அரச தலைவர் தவறிழைத்தாலும் விரல் நீட்டுபவர்கள் நாங்களே! - பஷீர் சேகு தாவூத்

“அரசாங்கத்தினுள் இருந்து கொண்டு கையாலாகாதவர்களாக நாங்கள் இருப்பதில்லை. யார் தவறு செய்தாலும் அத்தவறை உடனுக்குடன் சுட்டிக் காட்டுவதும், அதற்கெதிராக அகிம்சை வழியில் போர்க்கொடி தூக்குவதும் முஸ்லிம் காங்கிரஸே” எனக் குறிப்பிட்டார் முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் அமைச்சர் பஷீர் சேகு தாவூத்.சற்றுமுன் வெலிகம - மதுராப்புரவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் -

'இந்நாடெங்கிலும் இன்று முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டுள்ளார்கள். வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் 32 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களைச் சந்தித்தார்கள்… சொல்லொணாத் துன்பத்தில் மூழ்கினார்கள்…. தமிழ் பேசும் ஏனைய சமூகத்தினரின் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்கள்…

பயங்கரவாதப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டார்கள். அவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்கள் இன்றும் விழுப்புண்களோடு புத்தளம், அநுராதபுரம்.. போன்ற பகுதிகளில் வாழ்ந்துவருகிறார்கள்.. பலர் அநாதைகளாக இருக்கின்றார்கள்… தங்களது சொத்துக்களை எல்லாம் இழந்து வெறும் கோவணத்துடன் சென்றவர்களும் ஏராளம்.. ஏராளம்…!

அந்த மக்களுக்காக யாரும் குரல் கொடுக்க முன்வராத போதும் அவர்களுக்காக உரத்துக் குரல் கொடுத்த்து முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே! வடக்கு - கிழக்கில் முஸ்லிம்கள் உரிமைகள் இழந்து அடிமைகளாக இருந்த போது அவர்களுக்காக குரல் கொடுத்த்து முஸ்லிம் காங்கிரஸே.

இறைவனை வழிபட்டுக் கொண்டிருந்த அப்பாவி அல்லாஹ்வின் அடிமைகளை துப்பாக்கிகளால் ஈவிரக்கமின்றி எல்ரீரீஈயினர் கொன்று குவித்தபோது அவர்களுக்காக துப்பாக்கி ஏந்தியது… அவர்களுக்காக குரல் கொடுத்தது… அந்நிகழ்வு பற்றி சர்வதேசத்தின் பார்வையில் படச் செய்தது முஸ்லிம் காங்கிரஸே.

வயிற்றில் இருந்த சிசுவை வெளியே எடுத்து கொலை செய்த போது யார்தான் குரல் கொடுத்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள்தான் குரல் கொடுத்தார்கள். அநீதிக்கெதிராக உரத்துப் பேசினார்கள்…

நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், ஏனையோர்களாக இருந்தாலும் நாங்கள் அநீதிக்கெதிராக என்றும் எழுந்து நின்றிருக்கிறோம். தொடர்ந்து அவ்வாறே இருப்போம்..

நாங்கள் பட்டவர்கள்.. எங்களுக்கு ஆவன பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கிறது. ஆபத்துக்கள் வராமல் இருக்க வேண்டுமென்றால் முஸ்லிம் காங்கிரஸை வெற்றி கொள்ளச் செய்யுங்கள்…

தென் மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஒரு வேட்பாளரேனும் வெற்றி பெறாதுவிட்டால் முஸ்லிம்கள் முகவரியற்றவர்கள் என்ற நிலை ஏற்படும் என்பதில் கிஞ்சித்தேனும் ஐயமில்லை. எனவே தென் மாகாண சபைக்கு ஒருவரேனும் செல்வதற்காக ஆவன செய்யுங்கள்” எனக் குறிப்பிட்டார்.

இக்கூட்டத்தில் மாத்தறை மாவட்டத்திலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்ற ஜனாப் ஹில்மி, தம்முல்லே அஜித் ஐயா (அஜித் பிரேமச்சந்திர விதான ஆரச்சி) ஆகியோரும் உரையாற்றினர்.

(கலைமகன் பைரூஸ்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com