ஆளும் கட்சியிலிருந்து விலகாது முஸ்லிம் காங்கிரஸ்!
யார் என்ன சொன்னாலும் தாங்கள் ஆளுங்கட்சியிலிருந்து விலகிச்செல்ல வேண்டாம் என ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஏதேனும் ஒரு காரணத்திற்காக ஆளுங்கட்சியிலிருந்து விலகிச் செல்ல முனைந்தாலும், இத்தருணத்தில் அவ்வாறு விலகிச் செல்வது இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்விளைவை ஏற்படுத்தும் என்பதால், தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீமை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுதொடர்பில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருவர் கருத்துத் தெரிவிக்கும்போது, முஸ்லிம் காங்கிரஸ் ஆளுங் கட்சியிலிருந்து விலகுவதற்காக இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.
அண்மையில் பாணந்துறைப் பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி கலந்துகொண்ட கூட்டமொன்றின்போது பேச்சுவார்த்தை சற்று சூடேற, ஜனாதிபதி தனக்கு கடுங்கோபத்தை வெளிக்காட்டினார் எனவும், அது சாதாரண நிகழ்வே எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருகை தந்தபோது, அவரிடம் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான சதிகளும், சவால்களும் பற்றிய அறிக்கையை ரவூப் ஹக்கீம் கையளித்திருந்தார். இதுதொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஹக்கீமிடம் வினவியுள்ளார். அவ்வமயம் ஜனாதிபதி, உங்களால் ஆளுங்கட்சியில் இருக்க முடியுமென்றால் இருங்கள் இல்லாவிட்டால் விலகிச் செல்லுங்கள் என ஹக்கீமிடம் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடிப்படையாக வைத்து, முஸ்லிம் காங்கிரஸ் ஆளுங்கட்சியிலிருந்து விலகிச் செல்லும் என்ற கதை காட்டுத் தீபோல பரவியிருந்தது. இதுதொடர்பில் உடனடியாக செயற்பட்ட ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்து, ஆளுங்கட்சியுடன் தொடர்ந்து இருக்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment