Thursday, February 13, 2014

மட்டக்களப்பில் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்! - கைதான இந்துக்களை விடுவிக்குமாறு மறியல் போராட்டம்!

மட்டக்களப்பு சந்திவெளியிலுள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தின் பேரில் ஏறாவூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுதலை செய்யக்கோரி, மறியல் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை 7 மணிக்கு பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டமானது, இரவு 9 மணி வரை நீடித்திருந்தது. வீதியை மறித்துத் தடைகள் போடப்பட்டதனால் போக்குவரத்துத் தடை செய்யப்பட்டிருந்தது.

இதன்போது கலகத்தைத் தடுக்க இராணுவத்தினரும் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கடந்த செவ்வாய்க் கிழமையன்று மேற்படி பிரதேசத்தில் கிறிஸ்தவ மதத்தவர்களால் புதிதாக ஓலை மற்றும் தடிகளால் அமைக்கப்பட்டிருந்த வணக்கஸ்தலத்தை அகற்றும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளை செவிமடுக்காததனாலேயே மதக் கலவரம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமுற்ற இந்து மதத்தவர்கள் தேவாலயத்தினை அகற்றியதுடன் இவர்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பில் மதபோதகர் உட்பட நால்வர் தாக்குதலுக்குட்பட்டு காயமுற்ற நிலையில் செங்கலடி ஆதார வைத்தியசாலையில் அநுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது சந்தேகத்தின் பேரில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களை விடுதலை செய்யக்கோரியே இவ்வார்ப்பாட்டம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது. இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பா.உ சீ. யோகேஸ்வரன், பொதுமக்கள், பொலிஸார், இராணுவ உயர் அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதன்போது கைது செ்ய்யப்பட்டவர்கள் இன்று வியாழக்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுவர் எனவும், நீதிமன்றத்தீர்ப்பின் பிரகாரமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com