Friday, January 17, 2014

யாழில் ஆவாகுழு தொடர்ந்தும் மிரட்டல்! பொலிசாருக்கே சோதனையா?

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்களின் மிரட்டல்கள் யாழில் தொடர்வதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆவா குழுவினர் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்த நிலையில் அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற பெண் ஊடகவியலாளர் உட்பட ஐந்து ஊடகவியலாளருக்கு ஆவா குழுவின் ஆதரவானவர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆவா குழு தொடர்பான செய்திகள், படங்கள் என்பவற்றை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்றே அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஊடகவியலாளரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழில் கைதான ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதோடு 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழில் நடைபெற்ற வாள் வெட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய, ஆவா எனும் குழுவைச் சேர்ந்த 13 பேரை கடந்த 6 ம் திகதி கோப்பாய் பொலிசார் கைது செய்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் இன்று நீதவான் நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டன. இன்றைய விசாரணைகளின் போது ஒருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறியதை அடுத்து அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

ஏனைய 12 பேரையும் எதிர்வரும் 31ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் ஆவா குழுவை சார்ந்த ஏனையவர்களையும் பொலிசார் தொடர்ந்தும் தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com