Friday, January 17, 2014

வடமாகாண கல்வி அமைச்சரை ஒதுக்கும் வவுனியா பாடசாலைகள்

வவுனியா மாவட்ட பாடசாலைகளில் நடைபெறுகின்ற பல நிகழ்வுகளுக்கு வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் அழைக்கப்படுவதில்லை என தெரியவருகிறது.

வடமாகாணசபைத் தேர்தல் இடம்பெற்ற பின்னர் இன்று பல நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாலையும் கையுமாக திரியும் நிலையில், வவுனியா மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் நேற்றைய தினம் (16) இடம்பெற்ற பல நிகழ்வுகளுக்கு வடமாகாண கல்வி அமைச்சர் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர்கள் அப் பாடசாலைகளால் அழைக்கப்படவில்லை. அந்த வகையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற மாவட்ட மட்ட கால்கோள் விழா, வவுனியா பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழா, வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலய நூலக திறப்புவிழா, வவுனியா தரணிக்குளம் ஆரம்ப பாடசாலை திறப்பு விழா ஆகிய நிகழ்வுகளுக்கு கல்வி அமைச்சர் அழைக்கப்படவில்லை. அத்துடன் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்படவில்லை.

இந் நிகழ்வுகளுக்கு வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் அவர்களே கலந்து கொண்டார். இது தொடர்பில் பாடசாலை அதிபர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், நாம் எமது பாடசாலையின் அபிவிருத்தியை நோக்காக கொண்டு செயல்படுகின்றோம். அபிவிருத்தியை கல்வி அமைச்சின் செயலாளர் ஆளுனருடன் இணைந்து செய்யலாம். மாறாக கல்வி அமைச்சரோ அல்லது மாகாணசபை உறுப்பினர்களோ வந்து வீரவசனம் பேசி எமது மாணவர்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டுச் செல்வார்கள். எமது மாணவர்களின் நலன் கருதியே அவர்களை தற்போது அழைக்கவில்லை என்கிறார் குறித்த அதிபர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com