Thursday, January 23, 2014

யுத்தகாலத்தில் சில குழுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீள பெற்றுவிட்டோம்: கோட்டாபய


நமக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாம் பேசித் தீர்த்துக் கொள்வோம் வெளிநாட்டுக்கு சென்று தீர்வை பெற்றுக்கொள்ள முடியாது என்பதுடன் நமது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்துக்கு யாராவது குந்தகம் செய்வதற்கு முனைந்தால் அது தாய் நாட்டுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த கால கட்டத்தில் சில குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன என்பதுடன் அவ்வாறு வழங்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் பேச்சுவார்த்தையினூடாக மீள பெறப்பட்டுவிட்டன' என்றும் மட்டக்களப்பு, ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் மதத் தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிற்கிடையிலான சந்திப்பின் போதே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில் கிழக்கு மாகாணம் ஏனைய மாகாணங்களை விட வித்தியாசமான ஒரு மாகாணமாகும் இங்கு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்வர்கள், பறங்கியர்கள் என பல்லின மக்களும் பல மொழிகளைகளைப் பேசுகின்றவர்களும் வாழ்கின்றனர் என்பதுடன் இந்த மாவட்டத்தில் ஒன்றுபட்ட அபிவிருத்தியும் நல்லிணக்கமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஜனாதிபதி 2005ஆம் ஆண்டு இந்த நாட்டை பொறுப்பேற்றதிலிருந்து குறுகிய காலத்துக்குள் மக்களுக்கான சுபீட்சமும் அபிவிருத்தியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதுடன் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்தை தொடர்ந்தும் நிலை நாட்ட ஒவ்வொரு பிரஜையும் பாடுபட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இந்த அரசாங்கம் கடந்த 4 வருட குறுகிய காலத்துக்குள் யுத்தத்தை முடித்து வட மாகாணத்தில் மூன்று இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை குடியமர்த்தி, புனர்வாழ்வளித்து அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளது என்பதுடன் பல இராணுவ முகாம்களும் இன்று அகற்றப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த பொலிசார் நியமிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் எந்தவொரு கெடுபிடியுமின்றி சுதந்திரமாக எங்கும் சென்று வரக் கூடிய சூழல் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த தேர்தல்களை பார்க்கும் போது வட மாகாண மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் 5 வீதமும், பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் 12 வீதமும், அதன் பின்னர் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் 45 வீதமும், கடைசியாக நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் 72 வீதமும் வாக்களித்துள்ள நிலைமையை உற்று நோக்கும் போது தற்போது அச்சமின்றி வாக்களிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது எனக்குறிப்பிட்டார்.

மேலும் யுத்தம் ஒன்றின் போது உயிரிழப்புக்களும், பொருளாதார இழப்புக்களும் ஏற்படுவது சாதாரணமாகும் எனினும் இந்த நாடு குறுகிய காலத்திறகுள் கட்டியெழுப்பபட்டுள்ளது எனவே பல தியாகங்களுக்கு மத்தியில் தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள சமாதானத்தை நாம் நிலையான சமாதானமாக நிலைபெறச் செய்ய வேண்டும் என்பதுடன் சமாதானத்திற்கு அநீதி இழைக்க முற்படுவதானது பாரதூரமான குற்றமாகும் என்றும் தெரிவித்தார்.

இதனை விட கடந்த '30 வருட கால யுத்தத்திற்கு பின்பு இந்த நாட்டில் வீதி அபிவிருத்தி, மின்சார அபிவிருத்தி, என பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதுடன் இந்த நாட்டில் சிங்களவர்கள், தமிழர்கள் முஸ்லிம்கள் பறங்கியர்கள் அனைவரும் ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனைக்கு அமைவாக சுபீட்சமாக வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

'அண்மையில் என்னை சந்தித்த அமெரிக்க பிரஜையொருவர் நாட்டை எவ்வாறு கொண்டு செல்கிறீர்கள் என என்னிடம் கேட்டபோது எங்களுக்கு புத்தி செல்லத்தேவையில்லை, எங்களது நாட்டில் புத்திஜீவிகள் இருக்கின்றனர் எனவே எங்களது பிரச்சினைகளை நாங்கள் தீர்த்துக்கொள்வோம் என கூறினேன்.

45 வருட அரசியல் அனுபவம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குண்டு அதே போன்று ராஜபக்ச குடும்பத்திற்கு 75 வருட அரசியல் ஈடுபாடு உண்டு எனவே இந்த அனுபவங்களை கொண்டு இந்த நாட்டை கொண்டு செல்கின்றோம்.

எனவே எமது தூர நோக்கு சிந்தனையே மஹிந்த சிந்தனையாகும் எனவே இந்த நாட்டின் கௌரவத்துக்கு கரி பூசி நாட்டிற்கு அபகீர்த்தியை கொண்டு வர சிலர் முயற்சிக்கின்றனர் என்பதுடன் இலங்கையில் முஸ்லிம்கள் தமது மத கடமைகளை செய்வதற்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ள என பிரசாரம் செய்யப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இங்கு அனைவரும் தமது மதது கடமைகளை மேற் கொள்வதற்கான அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளன என்பதுடன் கொழும்பில் சேரிப்பகுதியில் வாழ்ந்த மக்களுக்காக 20,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 500 வீடுகள் அமைக்கப்பட்டு கூடுதலான வீடுகள் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன் மூன்றாவதாக தான் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன என்பதுடன் கொழும்பிலிருந்து முஸ்லிம்களையோ, தமிழர்களையோ நாம் துரத்தவில்லை.

இதனைவிட கிழக்கு மாகாணத்தில் அனைத்து வளங்களுமுண்டு என்பதால் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை உட்பட அனைத்து அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com