Sunday, November 24, 2013

ஒற்றுகேட்டல் செயலை ஒட்டி USA-AUSTRALIA “மூலோபாய கூட்டு” பாதிக்கப்படலாம் என இந்தோனேசிய ஜனாதிபதி அச்சுறுத்தியுள்ளார்.

By Patrick O’Connor :

இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பாங் யுதோயோனோ, நேற்று ட்விட்டர் மூலம் தொடர்ச்சியான அறிக்கைகளை வெளியிட்டு, ஆஸ்திரேலியா அவருடைய மற்றும் அவருடைய மனைவியின் கைபேசியை ஒற்றுக்கேட்டது குறித்த தகவலுக்கும், ஜாகர்த்தாவில் எட்டு மூத்த அரசியல்வாதிகளையும் ஒற்றுக்கேட்டதற்கும் வாஷிங்டனையும் கான்பர்ராவையும் கண்டித்துள்ளார். ஒரு ட்வீட்டில் யுதோயோனோ: “இந்த அமெரிக்க, ஆஸ்திரேலிய நடவடிக்கைகள் இந்தோனேசியாவுடனான மூலோபாய பங்காளித்தனத்தை நிச்சயமாக சேதப்படுத்தியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

ஜாகர்த்தாவின் விடையிறுப்பு, அமெரிக்க தேசியப் பாதுகாப்பு அமைப்பின் (NSA) முன்னாள் ஒப்பந்தக்காரரான எட்வார்ட் ஸ்னோவ்டென், கசியவிட்ட சமீபத்திய ஆவணங்கள் நீண்டகால பூகோள-அரசியல் மூலோபாய தாக்கங்களை சுட்டிக்காட்டுகிறது; இவை கார்டியன் மற்றும் ஆஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனத்தால் (ABC) வெளியிடப்பட்டன.

ஒபாமா நிர்வாகத்தால், அதன் ஆசியாவில் “முன்னிலை” என்பதின் ஒரு பகுதியாக, பெரிதும் நாடப்படும் பல கிழக்கு-ஆசிய நாடுகளில் இந்தோனேசியா ஒன்றாகும்; இம்முன்னிலை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிராந்திய மேலாதிக்கத்தை இராஜதந்திர முறையில் சீனாவை தனிமைப்படுத்தி இராணுவ வகையில் அதைச் சூழ்ந்து, தக்க வைத்துக்கொள்ளும் நிலைப்பாடாகும். இதில் குறிப்பாக இந்தோனேசியா முக்கியமானது, அதன் பரந்த இயற்கை வளம், மக்கள் எண்ணிக்கை என்பதால் மட்டும் இல்லாமல், முக்கிய கடல் பாதைகளை அது வைத்துள்ளதினால்; இந்தோனேசியா, சீனாவின் எரிசக்தி விநியோகத்தையும், அளிப்புக்களையும் பிற இறக்குமதிகளையும் ஒருவேளை அமெரிக்க சீனப் போர் ஏற்பட்டால் “நெரிக்கும் இடங்கள்” என்னும் துண்டிக்கும் சாத்தியங்களை கொண்டுள்ள இடமாக வாஷிங்டனால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

யுதோயோனோ, முன்னாள் சுகார்ட்டோ சகாப்த தளபதி, அமெரிக்காவுடனும் ஆஸ்திரேலியாவுடனும் நெருக்கமான உறவுகளை வளர்த்துள்ளார்; அதே நேரத்தில் முக்கிய வணிக, முதலீட்டு பிணைப்புக்களை சீனாவுடன் கொண்டுள்ளார்; இரண்டு போட்டி சக்திகளுக்கு இடையே தந்திரமாகத் தப்பிக்கிறார். வாடிக்கையான இராஜதந்திர வழிவகைகளை புறக்கணித்து, வாஷிங்டனுக்கும் கான்பர்ராவிற்கும், சமூகச் செய்தி ஊடகத்தின் மூலம் வெளிப்படையாக சாடியிருப்பது, ஒற்றுக்கேட்டல் விவகாரம் பற்றி இந்தோனேசியாவிற்குள் மகத்தான விரோதப்போக்கு இருப்பதைப் பிரதிபலிக்கிறது. 2009ல் ஆஸ்திரேலிய சமிக்ஞைகள் இயக்குனரகம் (Australian Signals Directorate ASD) மூத்த அரசியல்வாதிகள் அவர்களுடைய மனைவியருடைய தொலைபேசிகளை கண்காணித்தது என்னும் செய்தி, முந்தைய வெளிப்பாடுகளான ஜாகர்த்தா இன்னும் பிற ஆசிய தலைநகரங்களில் இருந்து ஆஸ்திரேலிய தூதரகம் மூலம் ஒற்றுக்கேட்டல் வேலை நடத்தியது என்பதைத் தொடர்கிறது.

இந்தோனேசிய செய்தி ஊகத்தின் கடுமையான விளைவை கார்டியன் குறிப்பிடுகிறது. மக்களிடையே அதிகம் படிக்கப்படும் KOMPASS அதன் முதல் பக்கத்தில் இதை “ஆஸ்திரேலிய நல்ல அண்டை நாடல்ல” என்னும் தலைப்பைக் கொடுத்து, பாராளுமன்ற வெளியுறவு குழு உறுப்பினர் ஒருவர், ஜாகர்த்தாவில் இருக்கும் ஆஸ்திரேலிய தூதர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரியதாக மேற்கோளிட்டுள்ளது. Rakyat Medeka அதன் முதல்பக்கத் தலைப்பாக “ஆஸ்திரேலியா ஆபத்தான அண்டை நாடாக மாறிவிட்டது” என்று எழுதியுள்ளது. Media Indonesia நாளேட்டில் ஒரு தலையங்கம் அரசாங்கம் “ஒரு நல்ல உறவைக் காட்டிக் கொடுத்த கங்காரு நாட்டுடன் உறுதியாக இருக்க வேண்டும்” என்று கோரியுள்ளது.

யுதோயூனோவின் ட்வீட்டுக்கள், சொந்தமாக அவருடைய முன்னெழுத்துக்கள் SBY என்று கையெழுத்திடப்பட்டு, ஆங்கிலத்திலும் இந்தோனேசிய மொழியிலும் வந்தவை மேலும் கூறுகிறது: “இந்தோனேசியா உட்பட பல நாடுகளை அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஒற்றுக் கேட்கிறது என்னும் தகவல்கள் வந்ததில் இருந்து, நாம் நம் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம்.”, “வெளியுறவு மந்திரியும் அரசாங்க அதிகாரிகளும் திறமையான இராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்; அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிடம் இருந்து விளக்கம் கோரியுள்ளனர்”, மேலும் “ஆஸ்திரேலிய பிரதம மந்திரி எந்தவித உளைச்சலும் இன்றி, இந்தோனேசியா மீதும் ஒற்றுக் கேட்டது குறித்த அறிக்கை பற்றி வருந்துகிறேன்.”

இந்தோனேசிய அராங்கம் இராஜதந்திர உறவுகளை நிறுத்தி வைத்து, கான்பர்ராவில் இருந்து அதன் தூதரை திருப்பி அழைத்துள்ளது. வெளியுறவு மந்திரி மார்ட்டி நடேலேகவா அனைத்து ஆஸ்திரேலிய இந்தோனேசிய உறவுகளும் பரிசீலிக்கப்படும், “அதையொட்டி வழக்கம் போல் நிகழ்வுகள் என்பது இராது என்பது உறுதி, நாம் நம் அவர்களுடனான உறவை குறைமதிப்பிற்கு உட்படுத்துவோம்.” என்றார். நேற்று இரவு யுதோயோனோ, குறைந்தது மூன்று அராங்க மந்திரிகளை சந்தித்தார் என்றும் அவர்களுடைய அமைச்சரகங்கள் ஆஸ்திரேலிய பொருளாதார, மூலோபாய நலன்களை பாதிக்கும் என்றும் ABC கூறியுள்ளது. வெளியுறவு மந்திரி, விவசாய மந்திரி, (மாட்டு இறைச்சி இறக்குமதியை மேற்பார்வையிடுபவர்), மற்றும் ஒத்துழைப்பு தஞ்சம் நாடுவோரிடையே என்னும் துறைக்கு ஒருங்கிணைக்கும் மந்திரி ஆகியோரே அவர்கள். ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் “ஆஸ்திரேலியாவுடனான பல உடன்பாடுகள் இப்பொது பாதிப்பில் உள்ளன” என்றார்.

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி டோனி அபோட் நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் நெருக்கடி பற்றி அறிக்கை ஒன்றைக் கொடுத்து, சட்டவிரோதக் கண்காணிப்புச் செயற்பாடுகளை வலுவாகப் பாதுகாத்தார். அரசாங்கம் மன்னிப்பு கோரவேண்டும் என்னும் அழைப்புக்களை அவர் நிராகரித்து, ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலுக்கு எதிராக NSA தொலைபேசி ஒற்றுக்கேட்டல் வந்த போது, ஜனாதிபதி பாரக் ஒபாமா அளித்த உறுதிமொழியைப்போன்று அத்தகைய ஒற்றுக்கேட்டல் இனி நடக்காது என உறுதிமொழி கொடுக்கவும் மறுத்துவிட்டார்.

“ஒவ்வொரு அரசாங்கத்தின் முதல் கடமையும் நாட்டைப் பாதுகாத்து அதன் தேசிய நலன்களை முன்னேற்றுவித்தல்” என அபோட் ஆரம்பித்தார். “ஆஸ்திரேலியா இப்பொழுதோ அல்லது கடந்த காலத்திலோ நம் நாட்டை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகளுக்கு மன்னிப்புக் கோர வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது, இதே போல் பிற அராங்கங்களும் நடவடிக்கை எடுத்திருந்தால் எப்படி மன்னிப்பு கோரக்கூடாதோ அப்படித்தான்....” முக்கியமாக ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை, நாம் தகவல் உட்பட நம் வளங்கள் அனைத்தையும் நம் நண்பர்களுக்கும் நட்பு நாடுகளுக்கும் உதவ பயன்படுத்துகிறோம், அவர்களுக்கு தீமை செய்ய அல்ல.” இந்தோனேசிய அரசியல் தலைமைக்கு கான்பர்ரா அவர்களுடைய நலனுக்காக ஒற்றுக்கேட்கிறது என்று கூறியபின், அபோட் தான் “நேர்மையாக சமீபத்திய செய்தி ஊடகத் தகவல்கள் அவருக்கு [யுதோயோனோவிற்கு] சங்கடம் கொடுத்திருந்தால் வருந்துவதாக” கூறினார்.

இந்த ஆத்திரமூட்டும் அறிக்கை ஜாகர்த்தாவில் சீற்றத்தைத்தான் எரியூட்டியது. வெளியுறவு மந்திரி நடாலேகவா, ஜாகர்த்தா போஸ்ட்டிடம், யுதோயோனோவிற்கு சங்கடம் என அபோட் கூறியிருப்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியில்லை என்றார். “இந்தோனேசிய ஜனாதிபதி எதற்காக சங்கடப்பட வேண்டும்? சங்கடம் என்பது ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்குத்தான் பொருந்தும். அவர்கள்தான், ஆஸ்திரேலியாவில் உள்ள உளவுத்துறைப்பிரிவுகள்தான் ஏற்கமுடியாத வழிவகைகளை கையாண்டுள்ளனர்.”

நெருக்கடி அதிகரித்த பின் ஆஸ்திரேலிய செய்தி ஊடகம், அரசியல் நடைமுறையின் பிரிவுகள் அபோட் மன்னிப்புக் கோரி சேதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தின. எதிர்த்தரப்பு தொழிற் கட்சி தலைவர் பில் ஷார்ட்டன் நேற்று இப்போக்கை ஆலோசனையாக கூறினார்; அதேநேரத்தில் பாராளுமன்றத்தில் தான் “பிரதம மந்திரி தேசியப் பாதுகாப்பிற்கு கொண்டுள்ள உறுதிப்பாட்டை ஆதரிப்பதாகவும்” கூறினார். ஷார்ட்டனின் நிலைப்பாடு முற்றிலும் பாசாங்குத்தனமானது; அதுவும் முந்தைய தொழிற் கட்சி அரசாங்கம் பதவியில் இருக்கும்போது அது ஒற்றுக்கேட்டல் செயல்களை மேற்பார்வையிட்டது; ஆனால் இதில் எவ்வளவு பாதிப்பு உள்ளது என்பது அடிக்கோடிடப்படுகிறது. இராஜதந்திர நெருக்கடிகள், வசதியான வணிக முதலீட்டு உறவுகளை அச்சுறுத்துவது மட்டுமின்றி, பயங்கரவாத செயற்பாடுகள் என்பதில் ஒத்துழைப்பையும் பாதிக்கும். அதேபோல் அகதிகள் ஆஸ்திரேலியாவில் தங்கள் தஞ்சம் கோரும் உரிமையை செயல்படுத்துவதையும் தடுக்கும்; ஜாகர்த்தா மற்றும் வாஷிங்டனின் பரந்த மூலோபாய உறவுகளையும் பாதிக்கும்.

ஆனால் அபோட் பிரச்சினையில் இருந்து பின்வாங்கத் தயாராக இல்லை. சமீபத்திய NSA கசிவு பனிமூட்டத்தின் உச்சிமட்டுந்தான். ஒரு ஒப்புக் கொள்ளல் மற்றும் மனிப்புக் கோரலும் இன்னும் பல கோரிக்கைகளுக்கு வழிவகுக்கும். அமெரிக்கத் தலைமையிலான “ஐந்து கண்கள்” உளவுத்துறை வலை அமைப்பின் உறுப்பினர் என்னும் முறையில் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம், வாஷிங்டனின் அனைத்து ஒற்றுக்கேட்டல் வேலைகளிலும் கிழக்கு ஆசிய கறுப்பு நடவடிக்கைகளிலும் ஆழமாக உடந்தையாக செயல்பட்டிருக்கின்றது.

பைன் காப் (Pine Gap) உட்பட, ஆஸ்திரேலிய சமிக்ஞைகள் கண்காணிப்பு வசதிகள், அமெரிக்க உலக ஒற்றுகேட்டல் வலை அமைப்பில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் உளவுத்துறைப்பிரிவுகள் திறமையுடன் அமெரிக்க பிரிவுகளுக்கு துணை நிறுவனங்களாக செயல்படுகின்றன. தைரியமாக எட்வார்ட் ஸ்னோவ்டெனால் சேகரிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் சிறிய பகுதிதான், இப்போது பொது மக்கள் பார்வைக்கு உள்ளது, லிபரல் மற்றும் லேபர் அரசாங்கங்களின் கீழான கான்பெர்ராவின் அழுக்கான ஆசியத் தந்திரங்கள் பற்றிய கூடுதல் தகவல் இன்னும் வெளியிடப்பட உள்ளன.

அமெரிக்கா, பிரித்தானியா போன்றே ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கமும் ஸ்னோவ்டெனை கண்டித்து, அவர் வெளிவிட்ட ஆவணங்களையும் பிரசுரித்ததற்காக செய்தி ஊடகங்களையும் கண்டித்துள்ளது. மர்டோக் செய்தி ஊடகம், NSA செய்தி வெளிவிட்டவருக்கு எதிரான அவதூறைப் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்துகிறது; அதேநேரத்தில் ABC இன் நிர்வாக இயக்குனர் மார்க் ஸ்காட் நேற்று லிபரல் செனட்டர்களால் செனட் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் எதிர்கொள்ளப்பட்டார். “உயர்மட்ட இரகசியம்” எனக் குறிக்கப்பட்ட ஆவணங்களை வெளியிடுவது “பொருத்தமா” என அவர் கேட்கப்பட்டார்; ஆவணங்களை செப்டம்பர் 7 கூட்டாட்சித் தேர்தலில் தேசியக் கூட்டணி வெற்றிபெறும் வரை ABC வெளியிடாமல் வைத்திருந்ததா என்றும் கேட்கப்பட்டார். பிந்தைய குற்றச்சாட்டை ஸ்காட் மறுத்தார்; அடிபணிந்த முறையில் தான் ஆவணங்கள் குறித்து பெயரிடப்படாத அதிகாரிகளின் ஒப்புதல் பெற்றதாகக் கூறினார். அவர்களுடைய ஆலோசனையின் பேரில் ABC பெற்றிருந்த சில Power Point slide களை வெளியிடவில்லை என்றார்.

ஹோவர்ட் அரசாங்கத்தின் முன்னாள் வெளியுறவு மந்திரி அலெக்சாந்தர் டௌனர் நேற்று ஆஸ்திரேலிய தலையங்க எதிர்ப்புறக் கட்டுரை ஒன்றில் கார்டியனை கண்டித்து, அது “வெட்கம் கெட்டதனமாக இந்த ஆவணங்களை மேற்கு கூட்டிற்கு வேதனை, சங்கடம் அதிகளவு தரும் வகையில் வெளியிட்டுள்ளது” என்றார். பிரித்தானியாவின் M16 இன் தலைவர், அல்குவேடா ஸ்னோவ்டெனின் அம்பலப்படுத்தல்களை பற்றி எடுத்துக் கொள்ளவதாக தெரிவித்தார் என டௌனர் மேற்கோளிட்டுள்ளார். ABC மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பிற செய்தி ஊடகங்களுக்கு இது அதிக மறைப்பு இல்லாத அச்சுறுத்தலாகும், பிரித்தானியாவில் கார்டியன் எதிர்கொண்டுள்ளதுபோல, அவை பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் என்பதின் கீழ் உத்தியோகபூர்வ விசாரணையையும் குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளக்கூடும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com