Tuesday, September 24, 2013

பிள்ளையின் அறிக்கையை சரிசெய்யுமாறு இதுவரை எழுத்துமூலம் இல்லை....!

இலங்கை உத்தியோகபூர்வ சுற்றுலா மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அவரது சுற்றுலாவின் போது, கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் உள்ள டீ.எஸ். சேனாநாயக்காவின் உருவச் சிலையை அகற்றுமாறு குறிப்பிட்ட அறிக்கையை சரிசெய்யுமாறு கோரி ஐக்கிய நாடுகள் அமையகத்தின் மனித உரிமைகள் ஆணையாளர் காரியாலயம் இலங்கை அரசுக்கு இதுவரை எழுத்து மூலம் எந்தவொரு அறிவித்தலும் வழங்கவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு குறிப்பிடுகிறது.

குறித்த அறிக்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமையகத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழுக் காரியாலயத்திலிருந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு இதுவரை எழுத்து மூலம் எந்தவொரு அறிவித்தலும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிகச் செயலாளர் ரொட்னி பெரேரா குறிப்பிட்டார்.

நவநீதன் பிள்ளை அவ்வாறானதொரு கருத்தைத் தெரிவிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளதுடன் அதனை உடனடியாக சரிசெய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சென்ற வாரம் கடிதமொன்றின் மூலம் அறிவுறுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் ஊடகப் பேச்சாளர் மார்டின் நெசர்னி தெரிவித்திருந்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கைப் பயணத்தின் போது, டீ.எஸ். சேனாநாயக்காவின் உருவச் சிலையையும் பௌத்த கொடியையும் அகற்றுவது தொடர்பில் எந்தவித கருத்துக்களும் தெரிவிக்கப்படவில்லை என ஆணையாளரின் அலுவலகம் தெரிவித்திருந்தது. அந்த அறிக்கை தொடர்பில் வெளியான தகவல்களில் எவ்வித நம்பகத் தன்மையும் இல்லை எனவும், அதனை அவசரமாக சரி செய்யுமாறும் சென்ற 12 ஆம் திகதி இலங்கை அரசுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலகம் சென்ற வாரம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com