Tuesday, August 13, 2013

அமெரிக்காவின் புலனாய்வுக் குழுவை ஆய்வு செய்ய வெளி நிபுணர்கள் குழு அமைக்க அதிபர் ஒபாமா ஒப்புதல்

அமெரிக்காவின் புலனாய்வுத் துறையில் பணி புரிந்த எட்வர்ட் ஸ்னோடென், அமெரிக்கா மற்ற நாடுகளை கண்காணிப்பதை ஆதாரங்களுடன் வெளியுலகிற்கு தெரியப்படுத்தினார். இது அமெரிக்கா மீது மற்ற நாடுகளின் நம்பகத்தன்மையைக் குறைக்கும் நிலையை உருவாக்கியது. பொதுமக்களிடமும் இந்த செயல் விமர்சனத்திற்கு உள்ளானது.

எனவே, நாட்டின் புலனாய்வுத்துறை மாறும் தகவல் தொழில்நுட்பத் துறையில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் வெளியார் நிபுணர்கள் குழு ஒன்றினை அமைத்து நிலைமையை ஆராயும்படி புலனாய்வுத்துறை இயக்குனருக்கு அதிபர் பாரக் ஒபாமா உத்தரவிட்டுள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட அதிபரின் கையெழுத்திடப்பட்ட குறிப்பாணை ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை பாதிக்கும் விதத்தில் தகவல்கள் வெளிவருகின்றன. இந்த நேரத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாப்பது குறித்த வழிமுறைகளை ஆய்வு செய்யுமாறு உளவுத்துறை ஜேம்ஸ் கிளாப்பருக்கு அதிபர் இந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகள் குறித்த ஒரு இடைக்கால அறிக்கையினை 60 நாட்களுக்குள்ளும், இறுதி அறிக்கை மற்றும் பரிந்துரைகளை டிசம்பர் மாதத்தின் இரண்டு வாரங்களுக்குள்ளும் அளிக்குமாறு அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதிபர் தனது விடுமுறையை குடும்பத்தினருடன் மார்த்தாவில் கழிக்கும் இந்த வேளையில் அவரது ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com