Saturday, March 16, 2013

யாழ். மாநகரசபை எல்லை தெரியாத ரீஎன்ஏ மாநகரசபை உறுப்பினர்.

தான் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாண மாநகர சபையின் எல்லை எது என்று தெரியாமல் ஊடக அறிக்கைவிட்டு யாழ். மாநகர சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் விந்தன் என அழைக்கப்படும் கார்த்திகேசு நடராசா கனகரத்தினம் சாதனை படைத்துள்ளார்.

பத்திரிகையில் தனது பெயர் வரவேண்டும் என்பதற்காகவே மாநகர சபையில் உரையாற்றும் வழக்கத்தைக் கொண்டுள்ள விந்தன் கடந்த 13ம் திகதி இரவு செம்மணி பாலத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தையும் விட்டுவைக்கவில்லை. அவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்செய்தியை கேள்வியுற்ற விந்தன் வழமைபோலவே தனது முந்திரிகொட்டைத் தனத்தை வெளிக்காட்டி இவ்விபத்திற்கும் மரணங்களிற்கும் யாழ். மாநகர சபையே பொறுப்பேற்க வேண்டும் என சுடச்சுட ஊடக அறிக்கை விட்டார். பத்திரிகைகளில் இவ்வறிக்கை வெளிவருமுன்னமே இணையத்தளங்கள் அச்செய்திகளை வெளியிட்டு விட்டன.

அந்தோ பாவம் விந்தனுக்கு தெரியவில்லை விபத்து இடம்பெற்ற பிரதேசம் தான் அங்கம் வகிக்கும் ரீஎன்ஏ ஆட்சியிலுள்ள நல்லூர் பிரதேச சபை என்பது. செய்தியை அறிந்த யாழ். மாநகரசபை முதல்வர் அதற்கு உடனடியாகவே பதிலளித்துள்ளார். இந்நிலையில் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்த விந்தன் ஒருவாறாக தனது ஊடக அறிக்கையை உள்ளுர் பத்திரிகைகளில் வெளிவராமல் செய்துவிட்டார். ஆயினும் என்ன பிரயோசனம். உலகெங்கும் இணையத்தளங்களில் விந்தனின் ஊடக அறிக்கை பிரகாசிக்கின்றது.

விந்தனின் ஊடக அறிக்கைக்கு யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா வழங்கியுள்ள பதில் கீழே தரப்பட்டுள்ளது.

அறிவிலி விந்தனின் செயல் வேடிக்கையானது

தழிழ் தேசிய கூட்டமைப்பினர் என்று தன்னை கௌரவமாக அழைத்துகொள்ளும் மாநகர சபை உறுப்பினர் விந்தன் மாநகரத்தின் அபிவிருத்தியை சகிக்க முடியாத நிலைமையில் செய்திகளை வெளியிடுவது மிகக் கவலைக்கிடமாக உள்ளது. ஏனெனில் நேற்றைய தினம் “செம்மணி வீதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்கு மாநகர சபை பொறுப்பேற்க வேண்டும்’’ என்றும் கூறுவது வேடிக்கையான செயலாகும். மாநகர சபையின் எல்லை எது என்று தெரியமால் “யாழ் நகரத்தை சுடுகாடகாக மாற்றியுள்ள மாநகர சபை’’ என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாநகர சபையை குற்றம் சாட்டியமை தமிழ் மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விடயம் ஆகும். செம்மணி வீதியில் விபத்து இடம்பெற்ற பகுதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கைப்பற்றியுள்ள நல்லுர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதி என்று தெரியாமல் மக்கள் பிரதிநிதியாக இருப்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இவர் உண்மையில் யாழ் மாநகர சபை எல்லையை பிறப்பிடமாக கொண்டவராக இருந்திருந்தால் இவ்வாறு கூறியிருக்கமாட்டார். தன் குற்றத்தை மறுப்பதற்காகவே இவ்வாறு கூறியுள்ளார் என்பது வெள்ளிடை மலையாகும். மக்கள் மத்தியில் செய்து வரும் அபிவிருத்தியை கொச்சை படுத்தியமை தமிழ் மக்களின் மனதை வருத்திய செயல் ஆகும். தான் அங்கம் வகிக்கும் மாநகர சபையின் எல்லையையே தெரியமால் பேசும் இவர் தமிழ் மக்களின் பிரச்சினையையா? தீர்க்கப்போகின்றார் என்பது எமது உறவுகள் சிந்திக்க வேண்டிய விடயம் ஆகும். எனவே இவர் பதவி துறந்து வீதியில் திரிவது தான் மக்கள் கொடுக்கும் தீர்ப்பாக அமைய வேண்டும். நாய்க்கு எங்கு கல்லு பட்டாலும் காலை தூக்குவது போன்று எங்கு தவறு நடந்தாலும் அமைச்சர்களையும் எம்மையும் குறை கூறுவது இவருடைய வாடிக்கையான விடயமாகும்.

இதே வேளை அந்த இளம் குழந்தைகளின் இழப்பு மிகவும் மனம் வருந்தக் கூடியாதகும் அந்த குழந்தைகளை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை யாழ் மாநகர சபை ஆளும் கட்சி சார்பாகவும், எமது கட்சி சார்பாகவும் தெரிவித்துக்கொள்கின்றோம். எனவே இழப்பில் அரசியல் இலாபம் தேடும் விந்தனின் செயற்பாடு கண்டிக்கதக்க விடயமாகும்.

நன்றி.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com