Thursday, May 10, 2012

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் தூக்கம் இளம் யுவதிக்கு மீளா துயிலை தந்தது

மோட்டார் சைக்கிளை கவனயீனமாக செலுத்தி இளம் யுவதி ஒருவர் மீது மோதி, அந்த இளம் யுவதி மரணமான சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நபரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் 7 ஆயிரத்து 500 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அண்டிருப்பு, ரணவிரு மாவத்தையை சேர்ந்த ஜயசேகர முதலிகே இரேசா மதுசானி (19வயது)என்ற யுவதியேமோட்டார் சைக்கிள் மோதி பரிதாபகரமாக மரணத்தை தழுவியவராவார்.

இவர் க.பொ.த உயர்தரத்தில் (விஞ்ஞான பிரிவில்) சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்வதற்காக இருந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக டயர் விற்பனை நிலையம் ஒன்றில் தொழிலுக்காக சென்றுள்ளார்.

பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பிரபல நட்சத்திர பிரபல நட்சத்திர ஹோட்டல் குழுமத்தை சேர்ந்த ஹோட்டல் ஒன்றின் பிரதேச முகாமையாளராவார்.

குறித்த யுவதி கடந்த 30 ஆம் திகதி (30.4.12) வேலை முடிந்து வீடு செல்வதற்காக (மாலை5.30 மணியளவில்) ஜா-எல தடுகம் பாலம் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் நின்றிருந்த போதே சந்தேக நபர் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி மீது மோதி இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மரணமான யுவதியின் இறுதிச்சடங்கு கடந்த வெள்ளிக்கிழமை (4) இடம்பெற்ற அன்றே சந்தேக நபர் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டார்.

யுவதியின் இறுதிச்சடங்கிற்காக சந்தேக நபரான மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் இரண்டு இலட்சம் ரூபாவை வழங்கியதுடன் யுவதியின் மரயத்திற்கு நஸ்டயீடு வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் மன்றில் தெரிவித்தார்.

வாகனத்தை செலுத்தி வரும் போது திடீரென்று தூக்கம் ஏற்பட்டதன் காரணமாக விபத்து நடந்ததாக சந்தேக நபர் பொலிசாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.

ஜா-எல பொலிஸார் சந்தேக நபருக்கு எதிரான மன்றில் முறைப்பாட்டை தாக்கல் செய்துள்ளனர் இந்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம்த திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com