Saturday, October 8, 2011

இந்திய அகதி முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்களின் அவலக்குரல்.

இலங்கையிலிருந்து இந்தியாவிடம் தஞ்சம்கோரிச் சென்ற தமிழ் மக்கள் அங்கு முகாம்களில் அடைக்கப்பட்டனர். கடந்த 21 வருடங்களாக இம்முகாம்களில் உள்ள மக்களின் நிலைமைகள் குறித்து திரும்பிப்பார்பதற்கு எவரும் அற்ற நிலை யில் அம்மக்கள்படும் வேதனைகள் ஏராளமானவை.

இலங்கையிலிருந்து இந்திய ராணுவம் வாபஸ் பெற்றுச் சென்றபோது, இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழ் குழுக்களைச் சேர்ந்தோர் புலிகளின் அச்சுறுத்தல் காரணமாகவும், பின்னர் இலங்கை பின்னர் ஏற்பட்ட நிலைமைகள் காரணமாகவும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்றோரே இவ்வாறு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களாகும்.

இவ்வாறான தடும்பு முகாம்களில் ஒன்றான தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சம்பட்டி ஈழத்தமிழர்கள் அகதி முகாமுக்கு அண்மையில் ஊடகம் ஒன்று விஜயம் செய்திருந்தது.

மதுரையில் உள்ள மூன்று முகாம்களிலேயே பெரிய முகாமாக இது காணப்படுகின்றது. இங்கு 600 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாக உள்ளனர். இவர்கள் அனைவரும் 1990 ஆம் ஆண்டே தமிழகத்துக்கு அகதியாக வந்தவர்கள்...

ஆனால் சாக்கடை ஓடும் இடத்துக்கு அருகில் உள்ள சின்னம் சிறு ஓலைக் குடிசைகளில் தான் கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

முகாம் வாசலில் தமிழக விசேட பொலிஸ் பிரிவான கியூ பிரிவு பொலிசாரின் அலுவலகம் காணப்படுகின்றது.

அதற்கு வலது பக்கமாக கொஞ்சம் தள்ளி ஈழத் தமிழ் அகதி ஒருவரினால் நடத்தப்படும் தேநீர், சிற்றுண்டிக் கடை ஒன்றும் காணப்படுகின்றது.

தேநீர்கடைக்கு சென்ற ஊடகவியலாளர்கள் அங்கு வந்திருந்த முகாமைச் சேர்ந்த வயதானவர் ஒருவருடன் பேசியுள்ளனர்.

ஐயா இலங்கையில எந்த இடம்? 'நான் தம்பி வவுனியா... 90 இல அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்தனாங்கள்... இப்ப வரை இங்க தான் இருக்கிறோம்... என்றார்.

அடுத்ததாக ஐயாவிடம் அம்மா புதுசா அறிவிச்ச திட்டங்கள் உதவிகள் கிடைச்சுதோ? முகாமில எப்படி வசதிகள் இருக்கு..?? என்று கேட்டோம்..

'இல்லை தம்பி... ஈழத் தமிழர்களுக்கு உதவிய கடவுள் தங்கத் தாரகை எங்கள் அம்மா என்று எல்லாம் பேப்பரில பக்கம் பக்கமாக விளம்பரங்கள் வந்து நான்கு மாசத்துக்கு மேல ஆகுது... ஆனா கூடுதலாக எந்த உதவிகளும் கிடைக்கல... முகாமில எங்களுக்கு நாத்தத்துக்க இருந்து பழகிப் போச்சு... இப்பவும் கொட்டில் வீட்டில தான் வாழுறோம்...முகாம் பொறுப்பதிகாரி வரும் நாட்களில் முகாமிலிருந்து யாரும் வெளியில் செல்ல முடியாது... '

தம்பி இப்ப கொஞ்சத்தில வந்திடுவாங்கள் கியூ பிராஞ்... அவங்கள் உங்களை யார் என்று கேட்டு எங்களை நோண்டி எடுப்பார்கள்... அதுக்கு முதலில வெளிக்கிடுங்கோ என்று அவசரம் காட்டினார் அந்த பெரியவர்..

அவரின் கோரிக்கையை ஏற்று அங்கு இன்னும் சிறிது நேரம் நின்றால் எங்களுக்கும் ஆப்பு தான் என்ற நிலையில் திரும்பினோம்...

முகாமில் ஒருவரைச் சந்திக்கச் சென்றால் கியூ பிராஞ்சுக்கு அவரின் பூர்வீகம், தொழில், விசா, பாஸ்போர்ட் போன்ற தனிப்பட்ட விடயங்களை துளாவும் அருகதை இல்லையே.... தனி மனித சுதந்திரத்தை மீறிய செயலாகவே இது பார்க்கப்படுகின்றது.

சில பொலிஸ்காரர்கள் பிச்சை எடுக்கும் பெருமாளிடம் பிடுங்கித் தின்னும் அனுமார் கணக்காக அவர்களிடம் உள்ள காசையும் பிடுங்குகிறார்கள்..

உண்மையில் திறந்த வெளிச் சிறைச்சாலையாக தான் தமிழக அகதி முகாம்கள் உள்ளன என்பது நிதர்சனமானது...


அங்கு வெளியாட்கள் பெரிதாக போக முடியாது.. அதுவும் பத்திரிகை, மீடியாக்களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக அனுமதி இல்லை... அங்கு புகைப்படங்கள் எடுக்க முடியாது... இப்படியாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் தனித் தீவாக முகாம்கள் மாற்றப்படுள்ளன.

அங்குள்ள சிறுவர்களின் எதிர்காலம் தான் உண்மையில் கவலை கொள்ள வைக்கின்றது.

நம்மூர்களில் ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தரவை வெளியில் உள்ள சுடுகாடுகளைப் போன்று காணப்படுகின்றன தமிழக முகாம்கள்.. முகாம்களைச் சுற்றி காடு போல் பற்றைகள் வளர்ந்து காணப்படுகின்றன....



முகாம்களுக்கு இடையில் சிற்றாறு போல குறுக்கு மறுக்காக கழிவு நீர் பாய்ந்து செல்கின்றது.. சில இடங்களில் தேங்கியும் உள்ளது...

இவை நாளடைவில் பாரிய சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை...

இவ்வாறு பல்வேறு உளவியல், உடலியல் தாக்கங்களுக்கு மக்கள் உள்ளாகின்றனர்.

மெக்கானிக் வேலையிலிருந்து இந்திய எஜமானார்களின் கக்கூசு கழுவுகிற வேலைகள் வரை கஸ்ரமான பொருளாதார நிலை காரணமாக முகாமில் வாழும் ஈழத்தமிழ் மக்கள் செய்து வருகின்றார்கள்.

இந்தியாவில் இருந்து கொண்டு தமிழீழம் கிடைக்க அரும்பாடுபட்டு வரும் வெத்து வேட்டுக் கட்சிகள் கொஞ்சம் உங்களை நம்பி வந்தவர்களின் கொட்டில்களையும் அவர்களின் சீரழிந்த வாழ்க்கையையும் போய் பார்க்கலாமே... கடைசி அவர்களுக்காவது உதவலாமே..

தமிழக முகாம்களோடு ஒப்பிடுகையில் வன்னி முகாம்கள் எவ்வளவோ மேல் எனத் தோன்றுகிறது...

தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதி முகாம் ஒன்றுக்குள் வெளியாட்கள் நுழைவது என்பது மிகக் கொடுமையானது.

அதையும் மீறிய நுழைவு என்பது பல கட்ட பலத்த பாதுகாப்புக்கும் மனதை புண்படுத்தும் விசாரணைகளுக்கும் உட்பட்டது.

இவற்றையும் தாண்டி முகாம்களுக்குள் நுழைந்தால் முகாமில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடம் நான்கு கேள்வி கேட்க பழக முடியாது... புகைப்படம் எடுக்க முடியாது....



இப்படியாக நவீனத்துவமான வதை முகாம்கள் தான் தமிழகத்திலுள்ள ஈழத்தமிழர் அகதி முகாம்கள்.

தன்னிடம் தஞ்சம்கோரி வந்தவர்களை இவ்வாறான இழிவான அவல நிலையில் வைத்திருக்கும் இந்திய அரசு இலங்கையிலுள்ள அகதி முகாம்கள் தொடர்பாவும் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் பேசுகின்றது. 21 வருடங்களாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை வெளிக்காற்று படவிடாமல் குழந்தைகள் , பெண்கள் , வயோதிபர் என்ற எந்த பாகுபாடுமின்றி மிருகங்களைப்போல் அடைத்து வைத்துள்ளனர்.

இதில் வியப்புக்குரிய விடயம் யா தெனில் கடந்தவாரம் இலங்கை வந்திருந்த தென்கிழக்காசிய நாடுகளுக்காக அரமெ ரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் இலங்கையிலுள்ள தமிழர்களை இந்தியா கவனிக்க வேண்டும் என்று வேற வேண்டு கோள் விடுத்துச் சென்றாராம்.

இலங்கையில் உள்ள தமிழர்களை இந்தியா கவனிக்கவேண்டும் என்ற வேண்டுதலுக்கு முன்னர் இந்தியாவிலுள்ள இலங்கைத் தமிழர்களை ஐ.நா வினால் அறிவுறுத்தப்பட்டுள்ள அகதிகளுக்கான அடிப்படை உரிமைகளை இந்தியா முதலில் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கவேண்டும் எனவும் அவர்களை மனிதர்கள் போல் நடாத்தவேண்டுமெனவும் தெரிவித்திருப்பாராக இருந்திருந்தால் அவருக்கு தமிழ் மக்கள் மீதுள்ள அக்கறையை ஓரளவு கணிப்பிட்டிருக்கலாம்.

1 comments :

Anonymous ,  October 8, 2011 at 9:30 AM  

தமிழ் ஈழத்தை விட்டுது , சிமான் ( கோமாளி ) இவர்களுக்காக குரல் கொடுத்தல் அவகளுக்கு உதவியாக இருக்கும் என நினைகேன்றன்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com