Tuesday, August 23, 2011

அதிகாரப் பகிர்வு அத்தியாவசியமாகும் - திஸ்ஸவித்தாரன

இலங்கையில் காணப்படுகின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு, அதிகாரப் பகிர்வு அத்தியாவசியமானது என வலியுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் திஸ்ஸ வித்தாரன இதனை நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

நாட்டின் பிற்போக்கு தன்மை இல்லாது செய்யப்பட்டு, சரியான அபிவிருத்திக்கான முன்னோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த பயணத்தை முன்னெடுப்பதற்கு, அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டியது அத்தியாவசியமாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளாது, அபிவிருத்தியை செய்து மாத்திரம் தேசிய பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும் என்ற கருத்து தொடர்பில் தாம் கவலை அடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்திகள் அவசியம் எனினும், அதனை மாத்திரம் முன்னெடுத்து, அதிகாரப் பகிர்வு வழங்காமல், இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு, அனைத்துக் கட்சிகள் குழுவுடனும் பேச வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த குழுவுக்கு கால வரையறை ஒன்றை தீர்மானித்துக் கொள்வது உகந்தது என தெரிவித்த அவர், ஆறு மாதங்களுக்குள் ஒரு ஒன்றிணைந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com