Friday, March 4, 2011

கிபீர் ஓட்டிய விமானிக்கு மார்படைப்பு என்கிறது மரண அறிக்கை! நம்ப முடியாதாம்.

விமானப்படையினரின் 60ம் ஆண்டு நிறைவையொட்டிய சாகசங்களுக்கான ஒத்திகையில் ஈடுபட்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி அதில் மரணமடைந்த ஸ்குவாட்ரன் லீடர் லெப்டினன் மொனத் பெரேராவிற்கு விபத்து இடம்பெறும் போது மாரடைப்பு ஏற்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட மரண பரிசோதனை அறிக்கையை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்த விமானியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் காலி கிதுலம்பிட்டிய பிரதேசத்திற்கு விமானப்படை தளபதி நேற்று சென்றிருந்தார்.

இதன்போது உயிரிழந்த விமானியின் குடும்பத்தினரை விமானப்படை தளபதி சந்தித்து உரையாடும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

விமானப் படையிலுள்ள ஒவ்வொரு வீரரையும் தாம் தொடர்ச்சியாக வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதாக தெரிவித்த அவர், ஸ்குவாட்ரன் லீடர் லெப்டினன் மொனத் பெரேராவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னரே வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு இடம்பெற்ற வைத்திய பரிசோதனையில் மொனத் பெரேராவிற்கு எவ்வித நோய் அறிகுறிகளும் இருக்கவில்லை என விமானப்படை தளபதி கூறியுள்ளார்.

அத்துடன், குறைந்தது 5 வருட பயிற்சியின் பின்னரே கிபீர் விமானங்களை செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்படும் என தெரிவித்த அவர், இது ஒரு திடீர் விபத்து எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கிபீர் விமான விபத்தில் உயிரிழந்த விமானியான ஸ்குவாட்ரன் லீடர் லெப்டினன் மொனத் பெரேராவின் இறுதிச் சடங்குகள் காலி சமனல மைதானத்தில் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com