Wednesday, August 4, 2010

விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய இலங்கை அதிகாரிகளின் பெயர் பட்டியல் தயாரிப்பு.

இலங்கை தொடர்பாக ஐ.நா. செயலாளர் பான் கி மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, அதன் அறிக்கையை தயாரிப்பதற்கு இலங்கையிலிருந்து சாட்சியங்களை பெறக் கூடிய அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயாரித்து வருவதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவின் பெயரும் பட்டியலில் இடம்பெறுகிறதா என்று கேட்கப்பட்டதற்கு பதிலளிக்க மறுத்த ஐ.நா. வட்டாரம், பொன்சேகா நிபுணர்கள் குழுவை சந்திக்க தயாராக இருப்பதாக பகிரங்கமாக அறிவித்த பின்னர், அவரது பெயரையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தது.

குழு உறுப்பினர்கள் அவர்களது பணியை செய்வதற்கு இலங்கை வர விசா வழங்கப்பட மாட்டாது என்று இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்த போதிலும், தொலைபேசி மூலம் அவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கான சாத்தியம் உண்டு என்று தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் தகவல்கள் திரட்டப்படவுள்ளன.

இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவிடமும் தகவல்கள் திரட்டப்படலாம் என ஐ.நா.பேச்சாளர் பர்ஹன் ஹக் தெரிவித்துள்ளார். ஆலோசனைக்குழுவிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ளத் தயார் என பொன்சேகா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com