போர் குற்றம் பற்றி விசாரிக்க ஐ.நா.சபை விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும். AI
இலங்கையில் இராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி ஐக்கிய நாடுகள் சபை சுதந்திரமான விசாரணைக்குழு ஒன்றை நியமித்து உண்மைநிலையை வெளிப்படுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை கேட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது நடந்த மனித உரிமை மீறல்களையும் உண்மைகளையும் ஐக்கிய நாடுகள் சபை வெளிப்படுத்த தவறிவிட்டதாக அனைத்துலக மன்னிப்புச்சபையின் ஆசிய பிராந்திய பிரதி பணிப்பாளர் மது மல்கோத்திரா குற்றம் சாட்டியுள்ளார்.
வன்னியில் இறுதி யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பங்கள் ஒரு வருடம் கடந்து விட்டபோதிலும் அவை வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை என தெரிவித்த அவர் யுத்தம் நடைபெற்ற காலத்தில் போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் உட்பட சுதந்திரமான கண்காணிப்பாளர்களை அங்கு செல்வதற்கு இலங்கை அரசாங்கம் தடைசெய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வருடகாலமாகியும் உரிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் சுமார் 80ஆயிரம் பொதுமக்கள் இன்னமும் இலங்கை அரசின் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆசிய பிராந்திய பிரதி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்நாயகம் பான் கீ மூனை சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலளர் கிளொடியோ கோர்டான் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். யுத்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
கடந்த ஒரு வருடகாலமாக பொதுமக்களை தடுப்பு முகாம்களிலும் போராளிகளை சிறையிலும் அடைத்து வைத்திருக்கும் இலங்கை அரசு இவர்கள் பற்றிய விபரங்களையும் வெளியிட மறுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
0 comments :
Post a Comment