Tuesday, March 2, 2010

இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: யார் வென்றாலும் ரணில் பிரதமர்?

இலங்கையில் பொதுத் தேர்தலுக்கு பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்று உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, தேர்தலுக்குப் பின்னர் எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் இணைந்து ஆட்சி அமைக்கும் என கூறப்படுகின்றது.இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் மேற்கூறிய திட்டத்தின் அடிப்படையிலேயே அண்மையில் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே சந்திப்பு நடைபெற்ற பெற்றதாக கூறப்படுகிறது.

சரத் பொன்சேகா சுதந்திரமாக செயற்படும் பட்சத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்க் கட்சிகளின் பிரதான தலைவர் என்ற அந்தஸ்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் அமையும். பொன்சேகா குறுகிய காலத்தில் புகழ்பெற்றதன் அடிப்படையில், எதிர்க்கட்சிகளின் பல உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவாக செயற்பட முன்வந்துள்ளதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

எனினும் பொன்சேகாவை தமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அண்மைக் காலமாக ரணில் விக்கிரமசிங்க முயற்சி மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. எனவே பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாகவோ அல்லது தடுத்து வைக்கும் அடிப்படையிலோ ரணில் அக்கறை காட்டிக்கொள்வதில்லை.

இந்நிலையில் அண்மையில் ராஜபக்சவுடன் மேற்கொள்ளப்பட்ட சந்திப்பின்போது, பொன்சேகாவை விடுவிக்க, தேசிய அரசாங்கம் அமைப்பது நிபந்தனையாக முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.இதற்கு ரணில் விக்கிரமசிங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com