Tuesday, March 2, 2010

இலங்கை-இந்திய தம்பதியினர் மீது அவுஸ்திரேலியாவில் இனவெறித் தாக்குதல்.

ஆஸ்ட்ரேலியாவில் இந்தியப் பெண் மற்றும் இலங்கை நாட்டவரான அவரது கணவர் ஆகியோர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கையைச் சேர்ந்தவரான சகஷ்ரனாமன் (60) என்பவர் கடந்த 19 ஆண்டுகளாக ஆஸ்ட்ரேலியாவில் வசித்து வருகிறார்.இவரது மனைவி அகல்யா இந்தியாவைச் சேர்ந்தவர்.

இந்நிலையில் மெல்பர்னில் வசித்து வரும் இவர்களது வீட்டினுள், நேற்றுமுன்தினம் காலை ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த சுமார் 25 பேர் கொண்ட கும்பல் புகுந்துள்ளது. மது அருந்திய நிலையில் காணப்பட்ட அக்கும்பல், அவர்களை இனவெறி அடிப்படையில் அவதூறாக பேசி, தாக்கியுள்ளனர்.மேலும் நாட்டைவிட்டு வெளியேறுமாறும் குரல் எழுப்பியுள்ளனர்.

இருப்பினும் சகஷ்ரனாமன், கையில் இரும்புக் கம்பி ஒன்றை வைத்துக்கொண்டு அவர்களை சமாளித்தபடியே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து காவல் துறையினர், அதிர்ஷ்டவசமாக அங்கு விரைந்து வந்தனர்.

காவல்துறையினரைக் கண்டதும்,அக்கும்பல் தப்பி ஓடியது.இருப்பினும் அக்கும்பலில் ஒருவர் மட்டும் பிடிபட்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com