Monday, October 12, 2009

மீள்குடியேற்றம் பூர்த்தியடைந்ததும் வடக்கில் மாகாணசபைத் தேர்தல்

வடக்கில் பனையும் தெற்கில் தென்னையும் இணையும் காலம் விரைவில் - ஜனாதிபதி

வடக்கில் மக்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டதும் ஏனைய மாகாணங்களைப் போன்று அங்கும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைக்கு ஐ.ம.சு.மு. சார்பில் தெரிவான உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் இது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

இடம்பெயர்ந்திருக்கின்ற மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். அவர்களும் சொந்த இடம் செல்ல மிகுந்த விருப்பதுடன் இருக்கிறார்கள் என சுட்டிக்காட்டினார்.

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுவதற்கு முன்னர், அப்பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகளை அகற்ற வேண்டும். அதற்குத் தேவையான பெருமளவிலான இயந்திரங்களை நாம் வரவழைத்துள்ளோம். இவையனைத்தையும் நாம் பணம் கொடுத்தே பெற்றுக் கொண்டுள்ளோம்.

கண்டபடி குரலெழுப்பும் சர்வதேச சமூகத்திற்கு ஏன் இவற்றைப் பெற்றுக் கொடுக்க முடியாது? எனது மக்களுக்கு அநியாயம் இடம்பெறக் கூடாது. அவர்களை பாதுகாப்பது எனது பொறுப்பு மட்டுமல்லாமல் கடமையும் கூட. வடக்கிலிருந்து இடம் பெயர்ந்துள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்காக பல்வேறுபட்ட நடவடிக்கைகளை நாம் துரிதகதியில் முன்னெடுத்து வருகின்றோம்.

இதேவேளை, அவர்களது வாழ்வாதார தொழில்களை அபிவிருத்தி செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில்,

உங்களுடைய யாழ்ப்பாணம் மாநகர சபையானது இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. யாழ். மக்கள் பல ஆண்டுகளாக இம்மாநகர சபையினூடாக பல்வேறுபட்ட சேவைகளைப் பெற்றுள்ளனர்.

யாழ். மாநகர சபையின் வாசிகசாலையானது தெற்காசியவிலேயே சிறந்த வாசிகசாலையாக பெயர் பெற்றது. மிகவும் அரிதான பல நூல்கள் அதில் இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சியினர் அதனை எரியூட்டினர். இது எதிர்கால பரம்பரையினருக்கே இழைக்கப்பட்ட மிகப் பெரிய அநியாயமாகும்.

கடந்த 30 வருடகாலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக யாழ். மக்கள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகினர். எல். ரி. ரி. ஈ.யினரால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளை எல்லோரும் அறிவர். யாழ்ப்பாண மேயராகவிருந்த அல்பிரட் துரையப்பா புலிகளால் கொலை செய்யப்பட்டார். அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், இன்று எமது மக்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லை.

இன்று எமது நாட்டு மக்கள் எந்தவொரு பயமோ சந்தேகமோயின்றி சுதந்திரமாக வாழ முடியும். யுத்தம் முடிவடைந்ததும் நாம் யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நகர சபைக்கான தேர்தலை நடத்தினோம்.

வடக்கைச் சேர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டதும் யாழ்ப்பாணத்திலும் ஏனைய மாகாணங்களில் போன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம்.

ஜனநாயகம் மீளவும் நிலை நாட்டப்பட வேண்டும். இடம்பெயர்ந்திருக்கும் மக்களை மீளக்குடியமர்த்தி வருகின்றோம். அவர்களும் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல மிகுந்த விருப்பத்துடன் இருக்கிறார்கள்.

அன்று தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் யாழ்ப்பாணத்தில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். யாழ். தேவி ரயில் ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாணத்திற்கு சென்று வந்தது.

நாமும் அந்தக் காலத்தில் யாழ். தேவியில் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளோம். எமது தமிழ் நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக இருந்துள்ளோம்.

யாழ். தேவி மீண்டும் தொடர்ச்சியான சேவையில் ஈடுபடுவதைப் பார்ப்பதற்காக வடக்கு மற்றும் தெற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

வடக்கின் பனை மரமும் தெற்கின் தென்னை மரமும் எப்படியாவது மீண்டும் ஒன்றிணையும். யாழ். மாநகர சபையின் உறுப்பினர்களாகிய நீங்கள் உங்களது பிரதேசங்களில் அபிவிருத்திகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்.

துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தலைதூக்காத வகையில் பொதுமக்களுக்கு சேவை வழங்கப்பட வேண்டும்.

வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரையில் பெரும் எண்ணிக்கையிலான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி, விவசாயம், மீன்பிடி அபிவிருத்தி, சுகாதாரம், குடிநீர் வழங்கல், போக்குவரத்து உள்ளிட்ட பல அடிப்படை வசதிகள் நாளுக்கு நாள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகி ன்றன.

இளைஞர்களுக்கு நாளை வேலைத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கல்வி மற்றும் விளையாட்டுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வடக்கின் வசந்தம் வேலைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு உங்கள் அனைவரதும் ஒத்துழைப்பு அவசியம்.

வடக்கே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த லோகேந்திரன் ஸ்ரீகாசன் எனும் மாணவன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெற்று இரண்டாவதாக வந்துள்ளார். அம் மாணவனுக்கு எனது வாழ்த்துக்கள். ஜாதி, இன, மத, குல பேதமின்றி நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் போல ஒற்றுமையாக வாழ வேண்டும்.

தென் மாகாண சபைத் தேர்தலில் நாம் 2/3 பெரும்பான்மையைப் பெற்றுள்ளோம்.

நாம் மக்களுக்கு சேவையாற்றுவதற்காகவே இந்த பதவிகளை பெற்றுக் கொண்டுள்ளோம் என்பதை நாம் ஒரு போதும் மறந்து விடக் கூடாது.

யாழ்ப்பாண மக்களுக்காக சேவையாற்றுவதற்கு உங்களனைவருக்கும் திறமையும் சக்தியையும் கிடைக்கப்பெற வேண்டுமென நான் இறைவனை வேண்டுகிறேன் எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.


யாழ். மேயர்


பல தசாப்தங்களாக சோகத்தில் வாழ்ந்து வந்த எமது மக்களுக்கு இன்று சுதந்திரம் கிடைத்துள்ளது. ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு மக்களுக்காக சேவையாற்ற நாம் தயாரென்றும் ஜனாதிபதி முன்னிலையில் யாழ். மாநகர சபையின் 23வது மேயராக நேற்று பதவியேற்றுக் கொண்ட பற்குணராஜா யோகேஸ்வரி தெரிவித்தார்.

நன்றி தினகரன்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com