Thursday, July 23, 2009

கருணாவிற்கு கெடு! ஒரு மாதகாலத்திற்குள் திருந்த மறுத்தால், சகல ஊழல்களும் அம்பலப்படுத்தப்படும் என்கிறார் கருணாவின் மனைவி.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து, தனது சொந்தக் சுயலாபங்களுக்காக அவ்வியக்கத்தில் இருந்து வெளியேறி, இன்று தமிழ் மக்களின் பெயரால் அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டுள்ள, கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் திருந்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதாகவும், அவ்வாறு திருந்த மறுத்தால், அவரது சகல ஊழல்களையும் மக்களுக்கு அம்பலப்படுத்த பின்நிற்கப் போவதில்லை எனவும் கருணாவின் மனைவி தெரிவித்துள்ளார்.

தனது சுயலாப நோக்கங்களுக்காக அரசாங்கத்தின் வளங்களை தவறாக பயன்படுத்தும் கருணாவின் செயற்பாடுகள் மேலுமோர் பிரிவினைவாதத்திற்கு தூபமிடலாம் என தெரிவித்துள்ள கருணாவின் மனைவி, கருணா தற்போது தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கருணாவின் மனைவியும் மூன்று குழந்தைகளும் சில வருடங்களுக்கு முன்னர் இங்கிலாந்தில் வசித்து வந்தனர்.

தற்போது ஸ்கொட்லாந்தில் வசித்து வருகின்றனர்.

ஊடக தர்மத்தின் அடிப்படையில் அவரது மனைவி வழங்கிய நான்கு மணி நேர செவ்வியையும் பிரசூரிக்க முடியாது என பிரபல ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்களின் தலைவராக கருணா எவ்வாறு மாறினார் என்ற அடிப்படையை அடியோடு மறந்து விட்டார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

குடும்ப விவகாரங்களைக் கூட கதைக்க முடியாத அளவிற்கு அவர் குழப்பமான சூழ்நிலையில் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கருணாவின் மனைவி தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் சிரேஸ்ட உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com