Monday, July 20, 2009

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆவணக் காப்பகம் இராணுவத்தினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகளினால் பாதுகாக்கப்பட்டுவந்த மிகவும் முக்கியமான அரிய ஆவணங்கள் இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினரை அதிர்ச்சியடைச் செய்துள்ளதாக தெரியவருகின்றது. கடந்த 6 நாட்களாக வன்னியில் மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதலின் போது மூன்று பிளாஸ்டிக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

பல அரியவகை ஆங்கில நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு, அவையும் விடுதலைப் புலிகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைத் திணைக்களத்தின் உயரதிகாரியான அநுரா சேனநாயக்க, சிங்கள நாளிதழொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பல அரியவகை ஆங்கில நூல்கள் மற்றும் இராணுவ ஆராய்ச்சிப் புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் 270 ஆங்கில நூல்கள், கட்டுரைகள் மற்றும் புலனாய்வுத் தகவல்கள் என்பன சீராகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களும் இவற்றில் காணப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனைத் தவிர, இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படை பலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு, அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளை அணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவ உத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் எளிமையான தமிழிலில் அச்சிடப்பட்ட ஆவணங்களும் இவற்றில் இருப்பதாக அறியப்படுகின்றது.

இவை மட்டுமன்றி வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, மின்கலன்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது, மின்கலன்களையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரி பாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டு வெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம் வராதபடிக்கு சிற்றுண்டிப் பெட்டியில் (டிபன்பொக்ஸ்), டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும் முறைகளும் இந்த ஆவணங்களில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இலங்கை ராணுவத்தின் நடமாட்டங்கள், அவர்களின் உத்திகள், அவர்களுடைய படை பலத்தில் ஏற்படும் மாற்றங்கள், அவர்களுடைய தகவல் தொடர்பு அமைப்புகள் போன்றவற்றை விடுதலைப்புலிகள் தொடர்ந்து கண்காணித்து, தகவல்களைத் தொகுத்து அவற்றை விடுதலைப் புலிகளின் தலைவருக்கு அனுப்பிக் கொண்டே இருந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவற்றைக் கொண்டு, எதிர் உத்திகளை வகுத்து தனது படைப்பிரிவினருக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டே இருந்தமை தொடர்பாகவும் இந்த ஆவணங்களின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளமுள்ளிவாய்க்காலில் 3 பெரிய பிளாஸ்டிக் கொல்கலன்களில் ஏராளமான ஆவணங்களை விடுதலைப் புலிகள் ஆவணப்படுத்தி வைத்துள்ளதாகவும், இவற்றை தற்போது இராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மண்ணில் விடுதலைப் புலிகளினால் புதைத்திருந்த ஆயுதங்களையும் இதர தளவாடங்களையும் இராணுவத்தினரும் காவல்துறையினரும் தற்போது கண்டெடுத்துவருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த ஆவணங்களுடன், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இயக்க வீரர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் போன்றவையும் அடங்குகின்றனர். வெளிநாடுகளில் கொள்வனவு செய்த ஆயுதங்கள் பற்றிய தகவல்களும் அவை கொள்வனவு செய்யப்பட்ட நாடுகளின் பட்டியலும், அவை ஈழப்பகுதிக்குக் கொண்டுவரப் பயன்படுத்தப்பட்ட வழிகளும், நேரமும், அதற்குண்டான வாகனங்கள் பற்றிய தகவல்களும்கூட கோர்வையாக எழுதப்பட்ட ஆவணங்களும் இதில் அடங்கியுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கை விமானப்படையிடம் இருந்த விமானங்களின் ரகம், அவற்றின் பயன்பாடு, அவற்றின் திறன், அவற்றின் நடமாட்டம் போன்ற பலவற்றைத் தொடர்ந்து கண்காணித்து அவை தனி ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. விமானங்களைச் சுட்டு வீழ்த்தக்கூடிய பீரங்கிக்கான உதிரி பாகங்கள், 120 மி.மீ., 130 மி.மீ., 152 மி.மீ. குறுக்களவு கொண்ட பீரங்கிகளின் உதிரி பாகங்களையும் விடுதலைப் புலிகள் கொள்வனவு செய்துள்ளமை இதன்மூலம் தெரியவந்துள்ளது. இவற்றின் சில பாகங்களும் குறித்த கொள்கலனிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது.

அனுராதபுரம் விமான நிலையத்தைத் தாக்கிய விடுதலைப் புலிகளின் வான்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவருடன் பெருமிதத்துடன் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இந்த ஆவணங்களுடன் இருந்துள்ளதாக தெரியவருகின்றது.

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய சீருடை, தற்கொலைப்படை வீரராகச் செயல்பட்ட ஒரு உறுப்பினரின் சொந்தப் பொருள்கள், கரும் புலிகள் என்று அழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவினர் நடத்திய தாக்குதல்கள் பற்றிய விவரங்கள் விரிவாக தொகுக்கப்பட்ட ஆவணங்களும் இவற்றில் அடங்குகின்றன.

இந்த கொள்கலன்களிலிருந்து கடந்த 30 வருடப் போராட்டத்தின் பல முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை இராணுவத்துக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் தொடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தன்னுடைய இயக்கத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மிகச் சிறந்த ராணுவக் கல்வியை அளித்துள்ளதாக இதன்மூலம் தெரியவருவதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com