Showing posts with label இவ்வாரப் பார்வை. Show all posts
Showing posts with label இவ்வாரப் பார்வை. Show all posts

Friday, July 18, 2014

அளுத்கம சம்பவம்: யார்தான் உண்மையைச் சொன்னார்கள்? -தமிழில்: கலைமகன் பைரூஸ்

தர்காநகரில் முஸ்லிம் - சிங்கள கலவரம் நிகழ்ந்த முறைபற்றி தற்போது அனைவரும் நன்கறிவர். அது தொடர்பிலான காணொளிகளை இணையத் தின் மூலம் கண்டுகொள்ளலாம். பௌத்த மாநாடு முடிவடைந்து அனைவரும் பாதையில் அமைதி யாக கலைந்துசெல்லும் வேளை, முஸ்லிம் பள்ளிவாயலில் கூடியிருந்தவர்கள் மேலிருந்து கற்களை எறிந்த முறையை காணொளிகளில் தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. கற்களை எறிந்த பின்னர்தான் அவர்களைப் பொலிஸார் தாக்குகின்றனர். பொலிஸார் வன்செயலில் ஈடுபட்டவர்களைத் தாக்கியதனால், பத்திராஜகொடவில் உள்ள வீடுகளைத் தீப்ப்பற்ற வைத்து அதற்குப் பதிலடி கொடுக்கின்றனர் முஸ்லிம்கள். பொலிஸாருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை, பத்திராஜகொட கிராமம் தீப்பற்றி புகை கிளம்பிக் கொண்டிருப்பதை காணொளிகளில் காணக்கூடியதாகவுள்ளது. பௌத்த துறவிகளும், பௌத்த மாநாட்டுக்கு வந்திருந்தோரும் அமைதியாக கலைந்துசெல்லும் நிலையில் அவர்களுக்கு கற்களால் எறிந்ததற்குப் பிறகும், பத்திராஜகொட கிராமம் தீப்பற்றிய பின்னருமே முஸ்லிம்களின் கடைகள் தகர்க்கப்படுகின்றன. இதுபற்றி மிகத தெளிவாகச் சொல்வதாயின், பொசன் பௌர்ணமி தினத்தன்று இளம் பௌத்த துறவி தாக்குதலுக்குள்ளான நிகழ்வோடு இன்னும் இரண்டு நிகழ்வுகளுக்குப் பின்னரே முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப்பட்டன. இது இவ்வாறிருக்க வேறு விதமாகவே உலகம் இதனைக் காண்கிறது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் உள்ளிட்ட தலைவர்கள் இது தொடர்பில், “கலவரமொன்று நடப்பதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிந்தபோதும் அரசாங்கம் பொதுபல சேனாவினரின் குறித்த மாநாட்டைத் தடைசெய்யவில்லை” என குற்றம் சுமத்துகின்றனர். அந்த அறிக்கை தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் வெட்கப்பட வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் டென்மார்க் பத்திரிகையொன்றில் கேலிச் சித்திரம் ஒன்று வரையப்பட்டிருந்தது தொடர்பில் இலங்கையில் ஹர்த்தால் செய்வதற்கு ஹக்கீமுக்கு முடியும். தற்போது பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள சல்மான் ருஷ்டி எழுதிய “சாத்தானிய வேதங்கள்” நூலினால் மார்க்கத்திற்கு இழுக்குண்டாகின்றது எனக் கூறி கொழும்பில் கிளர்ந்தெழ ஹக்கீமுக்கு முடியும். அதேபோல, தஸ்லிமா நஸ் ரீன் பங்களாதேசத்தில் “லஜ்ஜா” எனும் புத்தகத்தை எழுதி இஸ்லாத்திற்கு இழுக்குச் சேர்த்துள்ளார் எனக் கூறி கொழும்பில் எதிர்ப்பு ஊர்வலம் செல்ல அவரால் இயலும். ஆயினும், பொசன் பௌர்ணமி தினத்தன்று ஒரு இளம் பௌத்த துறவி தாக்கப்பட்டது தொடர்பில் அளுத்கமவில் பௌத்தர்கள் தங்களது எதிர்ப்பைக் காட்டவியலாது.

ஆவேசப்பட்டிருக்கின்ற பௌத்தர்களை சமாதானப்படுத்தலாம் எனும் நன்னோக்கிலேயே பொலிஸார் அந்தக் கூட்டத்தை நடாத்த இடமளித்தனர். அந்தக் கூட்டத்தில் எந்தவிதப் பிரச்சினைகளும் எழாது என்றும், தமது தலைமைத்துவத்தில் நம்பிக்கை வைக்குமாறும் கூறினர். நிகழ்வின்போது எந்தவொரு முஸ்லிமையும் தாக்குவதற்கு அநுமதியளிக்கப்படவில்லை. ஞானசார தேரர்கூட, “இதற்குப் பின்னர் எந்தவொரு பௌத்த துறவியை மட்டுமன்றி எந்தவொரு சிங்களவனையாவது தாக்கினால் நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்றே கூறினார். பொலிஸார் எதிர்பார்த்த வண்ணம் ஆவேசப்பட்டிருந்தவர்களை சாந்தப்படுத்தும் வண்ணம் பௌத்த மாநாடு இருந்தது. நிகழ்வின் இறுதியில் எந்தவொரு முஸ்லிமும் தாக்கப்படவில்லை.. எந்தவொரு உடைமைக்கும் சேதம் ஏற்படுத்தப்படவில்லை. பிரச்சினை எவ்வாறு தோற்றம் பெறுகின்றது எனில், கலைந்துசென்றவர்களுக்கு முஸ்லிம்கள் கற்களை எறிந்ததனாலேயே… பிரச்சினை மேலெழக் காரணம் முஸ்லிம்களால் தாக்கப்பட்ட இளம் பௌத்த துறவி இறந்துவிட்டார் என்ற செய்தி காட்டுத் தீபோல் பரவியமையே…

கலவரம் நடைபெற்று அடுத்த நாள் அதிகாலையிலேயே நான் அப்பிரதேசத்திற்குச் சென்றேன். களுத்துறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் கலந்துகொண்டேன். விடயங்கள் பற்றித் தெரிந்துகொண்டு, அன்று பிற்பகல் 3 மணிக்கு ஜாத்திக ஹெல உறுமய ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தேன். அவ்வூடகவியலாளர் சந்திப்பில் உள்ளதை உள்ளவாறே சொன்னேன். என்றாலும் துரதிர்ஷ்டவசமாக அந்தச் சந்திப்பு ஊடகத் தணிக்கை செய்யப்பட்டது. அதனால் இலங்கை மட்டுமன்றி சர்வதேசமே உண்மையைத் தெரிந்துகொள்ள இயலாமற் போயிற்று. அதேபோல உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர் சந்திப்பின் மூலமாக அரசியலில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் அடிப்படைவாதத் தலைவர்கள் முழு உலகின் பார்வையையும் திசைதிருப்பினார்கள்.

இனவாதப் பூசல் மேலெழும் எனக் கருதி, உண்மையை உள்ளவாறு சொல்லமல் இருப்பதற்காக அரசாங்கம் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை தணிக்கை செய்வதற்கு ஆலோசனை வழங்கியதாக ஊடகங்கள் தெரிவித்தன. உண்மையிலேயே அந்தத் தீர்மானது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். வெசாக் பௌர்ணமி தினத்தன்று தமிழீழப் பயங்கரவாதிகளால் ஸ்ரீமாபோதி தாக்குதலுக்குள்ளானபோது கூட சிங்களவர்கள் தமிழர்களைத் தாக்கவில்லை. அதேபோல அரந்தலாவில் பௌத்த பிக்குமார் 31 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டபோதுகூட பௌத்தர்கள் தமிழர்களைத் தாக்கவில்லை. தமிழர்கள் அல்லது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற எந்தவொரு பகுதியிலிருந்தும் ஒருபோதும் ஒரு சிங்கள உறுப்பினர் தெரிவாகவில்லை. என்றாலும் பாக்கிர் மாக்கார், ஏ.ஸீ.எஸ். ஹமீத், எம்.எச். மொஹமட், மொஹமட் அபூஸாலி, ஏ.எச்.எம். பௌஸி போன்றோரை சிங்களவர்களின் வாக்குகளே தெரிவுசெய்தன. அவ்வாறான பின்னணி இருக்கும்போது உண்மையை உள்ளவாறு சொன்னால் பௌத்தர்கள் சீற்றமடைவார்கள் என சிந்திப்பதன் உள்நோக்கம்தான் என்ன?

அரசாங்கம் உண்மையை மறைத்துக்கொள்ளும்போதுதான் மக்கள் கோபப்படுகின்றார்கள். அரசாங்கம் உண்மையை மறைத்துக் கொள்ளும்போது பொய் சிறகு விரித்து விண்ணில் பறக்கும். அந்த வாய்ப்பேச்சின்படி மூன்று பௌத்த துறவிகள் பள்ளியினுள்ளே இழுத்துச் செல்லப்பட்டு, அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி கொலைசெய்யப்பட்டுள்ளனர். அதேபோல மூன்று பள்ளிகள் தீக்கிரையாகியுள்ளன. 11 முஸ்லிம் இளைஞர்கள் பலவாறு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இறந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 18. இவ்வாறான வாய்ப்பேச்சுகள் பரவுவதற்குக் காரணம் அரசாங்கம் உண்மையை மூடிமறைத்ததனாலேயே. அரசாங்கம் உண்மையைச் சொல்லாமல் இருந்தது மட்டுமன்றி, ஊடகத் தணிக்கை செய்து உண்மையை உலகம் அறிந்து கொள்ளமுடியாமல் செய்து விட்டது.

இந்த ஊடகத் தணிக்கை மூலம் நன்மைபெற்றவர்கள் தமிழ்ப் பிரிவினைவாதிகளும் அடிப்படைவாத முஸ்லிம்களுமே. தமிழ் - சிங்களப் பிரச்சினையின் போது தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கு அரசாங்கத்தின் சொற்ப அநுதாபம் கிடைக்கும்போது, பெரும்பாலானோர் ஆட்சியாளர்களின் கதையை நிராகரித்தனர்.

விசேடமாக தமிழ் மக்களுக்கு சிங்களவர்களால் ஏற்படும் இன்னல்கள் பற்றி சர்வதேசம் கருத்திற் கொள்ளாதிருந்த்தற்குக் காரணம் தமிழர்களில் பெரும்பான்மையானோர் சிங்களவர்களுடனேயே வாழ்ந்துவந்தமையாகும். அதனால் சிங்களவர்களுக்கு தமிழர்களுடனும், முஸ்லிம்களுடனும் வாழ முடியாது எனச் சொல்வதன் மூலம் தமிழ்ப் போலிகளுக்கும் பெறுமதி வழங்கப்படுகின்றது. தமிழ்ப் பிரிவினைவாதிகள் 30 ஆண்டுகள் கட்டியெழுப்பிய சிறந்த சர்வதேச ஊடக வலையமைப்பொன்று உள்ளது. அவர்கள் அந்த வலையமைப்பை தர்காநகர் மூலம் இலங்கையின் புகழுக்கு இழுக்கு உண்டாக்கப் பயன்படுத்தினர். தமிழ்ப் பிரிவினைவாதிகளுக்கும், முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கும் சளைக்காத ஊடக வலையமைப்பொன்று உள்ளது. அதன் மூலம் அவர்கள் தங்களுக்கு நன்மை பயக்கக்கூடிய முறையில் கதையை மாற்றியமைத்துச் சொன்னார்கள். அதற்கேற்ப, இளம் பௌத்த துறவியொருவர் முஸ்லிம்களால் தாக்கப்பட்டதனால் அதற்கு மாற்றீடாக பௌத்தர்கள் முஸ்லிம்களைத் தாக்கி நால்வர் இறந்ததாளகக் குறிப்பிட்டனர். இவ்வாறான கதை சோடிக்கப்பட்டிருந்தபோதும் உண்மையில் இரு முஸ்லிம்கள் மாத்திரமே கொலை செய்யப்பட்டனர்.

ஊடக தணிக்கையின் அடிப்படையில் பௌத்தத் தலைவர்களும் சர்வதேச ஊடகங்கள் சொன்னவற்றையே நம்பினர். அதனால் அரசாங்க, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும், சில பௌத்த மதத் தலைவர்களும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் வெட்டிய பாதை வழியே சென்று பொதுபல சேனாவுக்கும், பௌத்தர்களுக்கும் குற்றம் சொல்லலாயினர்.

இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால், அரசாங்கத்திற்கு அபகீர்த்தி சேர்த்தவர்கள் வேறுயாருமல்லர். ஊடக தணிக்கையைச் செய்த அரசாங்கத்திலுள்ள அதிகாரம்மிக்கவர்களே. ஒரு புறம் அவர்கள் இலங்கையின் புகழுக்கு இழுக்குச் சேர்த்தனர். மறுபுறம் 1983 இற்குப் பிறகு புலிப் பயங்கரவாதிகள் கூட்டுப் படுகொலைகள் நூற்றுக்கு மேற்பட்ட முறைகள் செய்தபோது அப்பாவித் தமிழ் மக்களுக்கு அநியாயம் செய்யாத சிங்களவர்களைச் சந்தேகிப்பதால் அவர்களை அவமானப்படுத்தியிருக்கின்றனர். அதனால் இந்தத் தீர்மானம் எடுத்த அதிகாரம்மிக்கவர்களை இனங்காண்பது நன்மை பயக்கும்.

தர்காநகரில் ஏற்பட்ட கலவரத்திற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் திட்டமிட்டு சிங்களவர்களைத் தாக்கியமை என்பது தெளிவாகின்றது. ஆயினும், பௌத்த மாநாடு நடைபெறும் அத்தினம் 2000 இற்கும் மேற்பட்ட மக்களை ஒன்றுதிரட்டியவர் யார்? இவர்கள் செயற்படுவதற்கு பள்ளிவாயலை தாரை வார்த்துக் கொடுத்தவர் யார்? இவர்களில் யார்தான் உண்மையாகத் தாக்கினார்கள்? போன்ற வினாக்களுக்கு விடை தேட வேண்டும். அதேபோல இந்தக் கலவரத்தை திரிபுபடுத்தி பொய்ப் புள்ளிவிபரங்கள் வழங்கி, தேசத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராக தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இந்நடவடிக்கை ஆறிச் செல்கின்ற புண்ணை மீண்டும் காயப்படுத்த முனைவதாக சிலர் தர்க்கிக்கலாம். ஆயினும் புண்ணொன்று இருக்கும்போது நாங்கள் செய்ய வேண்டியது ஏதேனும் ஒன்றினால் கட்டி அதனை மறைத்துக் கொண்டு இப்போது புண் வெளியில் காண்பதில்லையே என்று சந்தோசிப்பதல்ல. அவ்வாறு செய்தால் அந்தப் புண்ணிலிருந்து சீழ் ஓடி அது பெருத்துவிடும். இல்லாவிட்டால் வேறொரு இடத்தில் அது மீண்டும் தோன்றும். புண் ஆற வேண்டுமென்றால் எவ்வளவுதான் வலி ஏற்பட்டாலும், அதனைச் சுத்தம் செய்து தொற்றுக் கிருமிகளை முழுமையாக அழித்து மருந்து கட்ட வேண்டும். தர்காநகரில் ஏற்பட்ட கலவரம் மீண்டும் தொடராதிருக்க வேண்டுமென்றால் எவ்வளவுதான் வலி ஏற்பட்டாலும் தொற்றுநோய்க் கிருமிகளை அழித்தொழிக்க வேண்டும்.

நன்றி - லங்காதீப (ලංකාදීප)

Read more...

Friday, July 4, 2014

நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலுள்ள சவால்! - தமிழில் : கலைமகன் பைரூஸ்

குருணாகலை, ரம்பொடகல்ல ஸ்ரீ ஸ்வர்ணகிரி ரஜமகா விகாரையின் விகாராதிபதியாகவிருந்த அம்பேபூஸ்ஸே சுமங்கள தேரரின் மரணம், அப்பிரதேசத்து சிங்களவர்களினதும் ஏனைய இனத்தவர்களினதும் பெரும் கவலைக்குரிய செய்தியாக இருந்தது. அன்னாரின் இறுதிக் கிரியைகள் ரம்பொடகொல்ல மகா வித்தியாலய விளையாட்டுத் திடலில் சில நாட்களுக்கு முன்னர்தான் நிகழ்ந்தது. பொதுவாக பௌத்த துறவியொருவர் மரணமடைந்தால் அவருக்காக இல்லற வாழ்க்கையோடு ஒட்டியவர்கள் அழுது அங்கலாய்ப்பது மிகக் குறைவாகவே இருக்கும். ஆயினும், சுமங்கள தேரரின் இறுதிக் கிரியைகள் நடைபெற்ற நாளின் அந்திப்பொழுது எல்லோரினதும் பார்வைகள் குத்தி நின்ற நிகழ்வொன்றும் இடம்பெற்றது. தற்போதைய சூழ்நிலையில் அது சிறப்பிற்குரியதாகும். அரிதானதும் அபூர்வமானதுமாகும். கட்டப்பட்டுள்ள மனிதாபிமானச் சங்கிலியை பிரிப்பதற்கு இலகுவான காரியமாகவே அது இருந்தது. அழுது துயர்ப்படும் உற்ற உறவினர்கள், விகாரைக்கு ஒத்தாசை புரிபவர்கள், இனத்தினரின் நடுவே அப்துல் பாயிஸ் உள்ளிட்ட முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அந்நிகழ்வில் கண்ணீர் மல்க ஒப்பாரிவிட்டு அழுத காட்சி அது. வேறுவிதமாகச் சொல்வதாயின் முஸ்லிம்களின் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பாய்ந்த காட்சி அது. இளம் பௌத்த துறவியாக நின்று ஏனைய இனங்களுடன் புரிந்துணர்வுடன், ஒற்றுமையுடன், சகோதரவாஞ்சையுடன் வாழ்ந்துவந்துள்ளமை வேறு விடயம். இன, மத பேதமின்றி சாதாரண மனித சுபாவம் இதிலிருந்து வெளியாகியிருப்பது இதன் இன்னொரு பார்வையாகும்.

இந்நாட்டிலுள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் தங்களுக்கிடையே மட்டுமன்றி பௌத்த மதகுருமார்களுடன் எந்தளவு நெருக்கமான உறவினைப் பேணுகிறார்கள் என்பதற்கு ரம்படகல இறுதிக் கிரியை நிகழ்வு ஒரு பதச்சோறாகும். கலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்படும் வேளை, வட்டரெக்க விஜித்த தேரர் சிறைப்படுத்தப்பட்டுள்ள போது, அம்பேபூஸ்ஸ சுமங்கள தேரர் இனங்களிடையே ஒற்றுமையை விதைத்து, இனவாதத் தீயை அணைத்துவிட்டு இவ்வுலக வாழ்வை நீத்திருக்கின்றார். மேலும், மனிதாபிமானத்தை விதைத்துச் சென்றுள்ளார்.

அவ்வாறாயின் இந்த இனவாத, மதவாத தீச்சுடரை பற்றி எரியச் செய்பவர்கள் யார் என்பது நன்கு புரியும். அங்கு மதவாதம், அடிப்படைவாதம், அரசியல் மூன்றும் இருக்கின்றது. இருந்திருந்து முஸ்லிம் சிங்கள வீடுகள் தீப்பற்றி எரிவதும், பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த சிலர் அதனைப் பார்த்துக் கொண்டிருப்பதும், இந்த நாசகார, படுபயங்கர சக்தி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து செயற்படுவதனாலாகும்.

எதிர்க்கட்சி என்றும்போல் அனைத்தையும் ஆளும் கட்சியின் கணக்கில் வரவு வைப்பதில் முனைப்புடன் இருக்கின்றது. தற்போதைய ஆளும் கட்சியினர் 1983 களில் எதிர்க்கட்சியில் இருந்தபோதும் இதனையே செய்தனர். இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்களை சிறைவைத்து அன்றைய அரசாங்கமும் முட்டாள்தன வேலையே செய்தது.

உண்மையான பகைவர்கள் யார் என்பதைக் கண்டுகொள்ள முடியாத அன்று ஆட்சி பீடத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசு, 1983 கறுப்பு ஜூலையையும் தன் கணக்கில் வரவு வைத்தது எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் உண்மையாகும். இப்போதாவது அந்தக் குற்றத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஏற்றுக் கொள்வதற்கு முன்வர வேண்டும். தற்போதைய பிரச்சினை பற்றி, இதன் சூழ்ச்சி பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிந்திருக்கின்றார் போலும்.

“ஏதோ ஒருவகையில் முஸ்லிம்களை எங்களிலிருந்து தூர ஒதுக்குவதற்கான நடவடிக்கையில் அவர்கள் மிகவும் சூட்சுமமான முறையில் நடந்து கொண்டார்கள். இன்று நான் முஸ்லிம்களைச் சந்திக்கச் சென்றேன். வீடுகள் உடைக்கப்பட்டிருக்கின்றனவே எனச் சொன்னபோது அவர்கள் அவர்கள் சொன்னார்கள், “இது இப்பிரதேசத்தவர்களின் வேலை அல்ல சார் என. வேறு பிரதேசங்களிலிருந்து வந்துதான் இதனைச் செய்தார்கள்” என்றார்கள்.

பேருவலையில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான பட்டறையின்போது, ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் ஊரில் இருந்திருந்தால் இந்த அசம்பாவிதங்கள் பற்றிய தெளிவு அவர்களுக்கு வந்திருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

“இந்நிகழ்வு நடைபெறும்போது அவ்விடத்திற்குச் சென்று ஒருங்கிணைத்தவர் யார்? இது தொடர்பில் நாங்கள் தெளிவாக இருக்க வேண்டும். நாங்கள் கிராம மக்களுடன் சேர்ந்திருந்தால் இது எங்களுக்குப் புரியும். நாங்கள் தெரிந்துகொள்ளாத பக்கம் இது என நான் நினைக்கிறேன்.”
(ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ)

“எதிர்க்கட்சியினர் கையில் அகப்படும் எந்தக் கல்லினாலும் அரசாங்கத்திற்கு அடிக்கும் கைங்காரியத்தையே செய்கின்றது. ஆளும் கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் சிற்சில வேளைகளில் பிழையான தீர்மானங்கள் எடுப்பதும், சட்டத்தை சரிவர அமுல்படுத்தாமையும் இதில் தாக்கம் செலுத்தியுள்ளது.”
(தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார - 2014.07.02 லங்காதீப)

அளுத்கம மற்றும் பேருவலையின் அழிவுக்குள்ளான அனைத்தும் துரித கதியில் மீளக் கட்டியெழுப்பப்பட்டாலும், நொந்துபோயுள்ள உள்ளங்களை பழையபடி கொண்டுவருவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என கடல் மற்றும் நீர்வள அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார். அந்தக் கதையிலும் ஒரு உண்மை இருக்கத்தான் செய்கிறது. அதற்குக் காரணம் அந்த அசம்பாவிதங்கள் நிகழ்கையில் அனைத்தையும் அவர்கள் சிறுகச் சிறுக கண்களால் கண்டிருக்கின்றார்கள். அவர்களின் மனக்கண் முன் அந்நிகழ்வு நிழலாடுகின்றது. அதனால் உடைந்த உள்ளங்களை அமைதிப்படுத்துவதற்கு கீழ்த்தரமான அரசியலனால் அன்றி, மறைந்தும் மறையாதுள்ள அம்பேபூஸ்ஸ சுமங்கள தேரர் போன்ற போதகர்களின் செயல்ரீதியான மனிதாபிமான வழியினால் மட்டுமே ஆகும் என்பது தெளிவு.

இந்த அரசியல் இழுபறிக் களத்தில் மீண்டும் வழமைபோல் ஒருவருக்கு ஒருவர் விரல் நீட்டுவதுதான் நடக்கிறது. ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் “வாழ்க்கை வரலாறு” போல, நிகழ்கால அரசியலில் ஈடுபடுகின்றவர்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்படவுள்ள எதிர்காலத்தில் ஒருநாள் இதிலுள்ள உண்மை நிலை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும். அன்றைக்கு நவீன சிரில் மெதிவ் போன்றவர்கள் வெளிச்சத்துக்கு வருவார்களோ என்று சொல்லத் தெரியவில்லை. அதேபோல, இந்த அரசியல் நாற்றம் வீசக்கூடிய சாப்பாட்டைச் சாப்பிடாமல் தூர விலகி நிற்கக் கூடிய இவ்விடயம் தொடர்பில் ஒருபக்கம் சாயாமல் சிந்திக்கின்ற, நொந்துபோயுள்ள உள்ளங்களை சமாதானப்படுத்துவதற்காக வேண்டி செயற்றிட்டங்களை மேற்கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ள ஒரு இளம் அரசியல்வாதி எங்கள் பார்வையில் படுகின்றார். இது இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் காதுகுளிரக் கேட்கக்கூடிய நற்செய்தியாகும். அன்று பேருவலை, அளுத்கமை போன்ற இடங்களில் இடம்பெற்ற நிகழ்வுகள் பற்றி இவர் அறிந்தவேளை, இவரது உள்ளத்தை அந்நிகழ்வு நசுக்கியது. நாட்டில் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவது பற்றிய புதிய செயற்றிட்டமொன்றை கட்டியெழுப்புவதற்கு அன்றுதான் ஆரம்ப அடி வைத்தார்.

“அண்ணா, எங்களுக்கு சரியான மரண சடங்கை செய்வதற்கும் விடமாட்டார்கள் போல் தெரிகிறது. மையித்தைக் கொண்டு போகும் போதும் துப்பாக்கிகளால் சுடுகிறார்கள். நாங்கள் பெரும் பயத்துடன் இருக்கிறோம். முடியுமாயின் இதுபற்றி தேடிப்பாருங்கள். இதுபற்றி உங்களிடம் அல்லாமல் சொல்வதற்கு வேறு யாரும் எனக்கில்லை.”

நீலப் படையணியின் அங்கத்துவரான இளம் தம்பி ஒருவரின் இந்த எதிர்பாராத அழைப்பினால் இந்த இளம் பாராளுமன்ற உறுப்பினரான அண்ணன் ஆடிப்போனான். இது அவருக்கு புதிய அனுபவமாகவும் இருந்த்து. உண்மை இதுவாயின், நாங்கள் செய்கின்ற அரசியலின் பொருள்தான் என்ன என அவரது உள்ளத்திற்குத் தெரிந்தது. அந்த இளம் தம்பியின் தொலைபேசி அழைப்பு அவர் நீலப் படையணியில் கடமைபுரிவதற்காக எங்கும் பேசப்படவில்லை. அந்தத் தம்பி தனது தொலைபேசி இலக்கத்தை தன்வயம் வைத்துக்கொள்வாரோ என அவர் நினைத்ததாகவும் கூறப்படுகின்றது. அவர் அவசரமாக செயலில் இறங்கி பொறுப்புச் சொல்லவேண்டியவர்களுடன் கதைத்து உடனடியாக நிலைமையை சுமுக நிலைக்குக் கொணர்வதற்கு ஆவன செய்து வெற்றி கண்டார். அவர் யார் தெரியமா? ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ.

கேள்விக்கு ஏற்ப தேவையை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு அதிலிருந்து விலகிவிடுவதே பொதுவாக அரசியல்வாதிகளின் செயலாக இருக்கின்றது. அதற்குக் காரணம் அவ்வாறான தேவைகள் பல தம்மை நோக்கி வருவதனாலாகும். ஆயினும் நாமல் ராஜபக்ஷ அவ்வாறான சில்லறைக்கடை முகாமையாளர்களைக் கொண்ட அரசியலிலிருந்து விலகி தூர நோக்கோடு சிந்திப்பவர் என்பது தெளிவாகின்றது. அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் “நம்பிக்கை”யை குறிக்கோளாகக் கொண்டு, அனைத்துமத ஒருமைப்பாட்டு மாநாடு அதனது பிரதிபலிப்பாகத் தோன்றுகின்றது. நேற்று முன்தினம் ஹம்பாந்தோட்டையிலிருந்து ஆரம்பித்த இந்த “நம்பிக்கையின் மத மாநாடு” வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் ஆரம்பிப்பதற்கு அவர் திடசங்கற்பம் பூண்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மாகம்புர மகிந்த ராஜபக்ஷ சர்வதேச கருத்தரங்கு மண்டபத்தில் மக்கள் நிறைந்திருந்து “நம்பிக்கையின் மாநாடு” முழு நாட்டுக்கும் தேசிய ஒற்றுமைக்கான புதியதொரு கருத்தியலை கொண்டுவருவதற்கு ஆரம்ப படிக்கல்லாக அமைந்திருந்தது.

“இன்று நாங்கள் ஏற்படுத்திக் கொள்கின்ற நம்பிக்கையினால் எதிர்காலத்தைக் பாதுகாப்பதற்கு முயற்சிக்கிறோம். கலாச்சார ரீதியாக சிந்தித்தாலும், சம்பிரதாயபூர்வமாக சிந்தித்தாலும் இந்த அனைத்து மத சம்பிரதாயங்களிலும் ஏதோ ஒருவகையில் ஒருமைப்பாடும், நம்பிக்கையும் கலந்த யதார்த்தம் உள்ளது. இன்றைய தேவையாக உள்ள இந்த நம்பிக்கையை கைக்கொண்டு நாங்கள் எதிர்காலத்தை பாதுகாப்பதாக நினைவிற் கொள்கிறேன்.”
(பா.உ. நாமல் ராஜபக்ஷ 2014.06.28 லங்காதீப)

புதுமையான முறையில் சிந்திக்கின்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வரலாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உள்ளது. 1970 - 77 காலப் பிரிவு இதற்கு நல்ல உதாரணமாகும். 1970 ஐக்கிய முன்னணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு வருகைதந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் மெச்சத் தக்கவர்களும் எங்கள் பார்வையில் படுகின்றார்கள். இரத்தினபுரி நந்த எல்லாவல, பெலிஅத்தை மகிந்த ராஜபக்ஷ, திஸ்ஸமகாராமை டெனிஸன் எதிரிசூரிய, கெக்கிராவ யூ.பி.வை ஜினதாச என்போர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாக இருக்க, சரத் முத்தெட்டுவேகம, வாசுதேவ நாணயக்கார போன்ற இடதுசாரிகளும் அதில் உள்ளடங்கினர். அவர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்களை விடவும் மக்களுடன் நெருக்கமாகி செயற்பட்டமை அப்பிரிவில் இருந்த அனைவரும் நன்கறிந்த விடயம். இவர்களே திருமதி பண்டாரநாயக்க அரசியலில் தோற்றம் பெறுவதற்கும் வாய்ப்பளித்தார்கள் என்பது தெளிவாகிறது.

தற்காலத்தில் அவ்வாறான இளம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அவ்வாறானவர்கள் தோன்றுவதாகத் தெரியவில்லை. சிற்சில நிகழ்வுகளின் பின்னர் அவ்வாறான ஒன்று இரண்டு பேர் தோற்றம் பெற்றாலும் காலக்கிரமத்தில் அவர்கள் முகவரியிழந்தவர்களாக மாறிவிடுகிறார்கள். தற்போதை இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆயினும், 1970 - 77 காலப்பகுதியை முன்மாதிரியாகக் கொண்டிருந்தால் பேருவலை, அளுத்கம போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைச் செயற்பாடுகள் அவ்வாறு ஏற்படாதிருக்கவும், இந்த அரசாங்கத்தை மேலும் உன்னதநிலைக்குக் கொண்டுசெல்வதற்கும் வழிவகுத்திருக்கும்.

நாமல் ராஜபக்ஷ அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக முயற்சி செய்கின்றாரோ தெரியவில்லை.

சிங்களத்தில் - வசந்தபிரிய ராமநாயக்க (වසන්තප්‍රිය රාමනායක)
தமிழில் - கலைமகன் பைரூஸ்

Read more...

Friday, June 27, 2014

கறுப்பு ஜூலையின் மறுபிறப்பு! தமிழில்: - (இரண்டாம் இணைப்பு) கலைமகன் பைரூஸ்

“முதலில் மனிதன் தன் உயிரைப் பாதுகாப்பதற்கே போரிட்டான். அதன் பின்னர் தனது குழுவை, தனது இனத்தை, நீதியை பாதுகாப்பதற்காகப் போரிட்டான். அத்தோடு மதத் தலைவர்கள் தங்களது மதத்தைப் பாதுகாப்பதற்காக போரிட்டார்கள். ஆயினும், இன்று இனங்களிடையே பரஸ்பர நல்லுறவையும், சமாதானத்தைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் போரிட வேண்டியுள்ளது”

“இங்கு நாங்கள் வாழ்வதுடன் மற்றவர்களும் வாழ்வதற்கு இடங்கொடுக்க வேண்டும். இது அவ்வாறானதொரு காலகட்டமாகும். ஒருவருக்கு ஒருவர் குரோதம் நினைக்க எங்களால் முடியாது.”

மேற்கூறப்பட்ட எடுத்துக்காட்டுக்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிதா என்று அழைக்கப்படுகின்ற முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க 1956 இல் மக்கள் பலத்துடன் ஆட்சி அதிகாரத்தைக் கைக்கொண்டதன் பின், ஐக்கிய நாடுகள் பேரவையில் உரையாற்றிய உரையின் ஒரு சிறு பகுதியாகும். அன்றும் நாட்டிலே வர்க்கவாத வேற்றுமை சிறிது தலை தூக்கியே இருந்தது.

தற்போதைய இலங்கை கூட, எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க நிர்மாணித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்துடன் கூடிய அரசினாலேயே ஆளப்படுகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேருவலை, அளுத்கம பகுதிகளில் நடந்த சிங்கள - முஸ்லிம்களுக்கிடையேயான தகராறு கூட இவ்வரச நிருவாகத்தின் கீழேயே நடைபெற்றது. தங்கள் கட்சியை நிர்மாணித்தவரின் கூற்றை யார்தான் மறந்தாலும், அக்கட்சியை சேர்ந்தவர்கள் நிச்சயம் மறக்க மாட்டார்கள் என்பது உறுதி.

எஸ்.டப்ளியூ.ஆர்.டீ. பண்டாரநாயக்க அன்று அவ்வாறு சொன்னது ஒருபுறமிருக்க, கொழும்பு பற்றி எழுதியுள்ள இந்திய தூதுவர் ஒருவர் வேறொரு வகையில் குறிப்பிடுகிறார்.

“சமாதானத்திற்காக பாடுபடுபவர்களும், சமாதானத்திற்கான அனைத்து விடயங்களும் ஆசிர்வாதிக்கப்படுவர், ஆசிர்வாதிக்கப்படும் என அனைத்து மத நூல்களும் கூறுகின்றன. ஆயினும் 1986 இல் ஸ்ரீலங்காவில் சமாதானத்திற்காக செயற்படுவது படுபயங்கரமான செயலாக இருந்தது.”

“விஜய குமாரத்துங்க அவருள் இருந்த சமாதானத்திற்கான விருப்பு மற்றும் சிந்தனைகளுக்காக அவ்வாண்டின் சில மாதங்களுக்கு பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிர் நீத்தார். ”

1980 களில் சமாதானத்திற்காக பாடுபட்டவர்களின் நிலை இவ்வாறாகத்தான் இருந்தது. இது 30 ஆண்டு கடும் யுத்தத்தின் பின்னர்தான் இராணுவத்தினரின் பலத்தினால் முடிவுக்கு வருகின்றது. அன்றிலிருந்து ஐந்து வருடங்கள் உருண்டோடியுள்ள போதும், சமாதனம் மற்றும் இனங்களிடையே புரிந்துணர்வு பற்றிப் பேசுவது மீண்டும் பிரச்சினைக்குரிய செயற்பாடாக உள்ளது. சிலர் அப்படித்தான் நினைக்கிறார்கள். அது “மும்மணிகளின் ஆசிர்வாதம்” (துன் சரண) என்பதற்குப் பதிலாக “நாங்கள் சரணம்” (அப சரண) முளைத்தெழுந்ததுடன் ஆரம்பமானதோ என்று கூறத் தெரியவில்லை. ஒரு சிறு கல் பேருவலையைத் தீப்பற்றி எரியச் செய்தது. அதற்கு முன் சாம்பலுக்குள் தீப் பொறிகள் ஆங்காங்கே இருந்திருக்கலாம். ஆயினும் சிங்கள - முஸ்லிம்கள் அதிகமானோருக்கு அவர்கள் இருந்த இடங்கள், உடைமைகள் அனைத்தும் இல்லாதொழித்தே தீயணைந்தது.

இலங்கையின் முதலாவது சுதந்திரம் முன்னாள் பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்கவின் தலைமையிலேயே பெற்றுக் கொள்ளப்படுகின்றது. அது பூர்த்தியான சுதந்திரம் அல்ல என சிலர் குறிப்பிடுகின்றனர். அதற்கான காரணம் - இனங்களிடையே புரிந்துணர்வைக் கட்டியெழுப்பி “இலங்கையர்” என்ற தன்மையை ஏற்படுத்த முடியாமற் போனமையே அதற்குக் காரணம். இதனால் அடிக்கடி ஏற்பட்ட குழுவாத பிளவுகள் பின்னர் இனவாதப் பிளவாக உருமாறி 30 ஆண்டு சிவில் யுத்தத்திற்கு அடிகோலியது. அதனால் மீண்டும் நாங்கள் இரண்டாவது சுதந்திரத்தைப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்காக தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கினார். இதனால் முதலாவது சுதந்திரத்திற்காக தேசபிதாவையும் இரண்டாவது சுதந்திரத்திற்காக தற்போதைய ஜனாதிபதியையும் நினைவுகூருகிறோம்.

இரண்டாவது சுதந்திரத்தின் தேனிலவையும் வீணாகக் கழித்துள்ள நாங்கள் மீண்டும் வர்க்கவாத பிளவினைக் கட்டியெழுப்பியுள்ளதாகவே எண்ணவேண்டியுள்ளது. தமிழ் மக்களுடனான பிரச்சினை இன்னும் இருக்க, தற்போது முஸ்லிம்களுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்களே என யாரேனும் ஒருவர் குறிப்பிடுவாராயின், அது பொய்யே அல்ல என்று சொல்லும் அளவுக்கு விடயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

“அதற்குக் காரணம் முஸ்லிம் அடிப்படைவாதம்தானே?”

எனவும் ஒருவருக்கு தர்க்கிக்க முடியும். அதற்கு உதாரணமாக “ஜிஹாத்”, “தலிபான்”, “அல்-கைதா” அமைப்புக்கள் சிலவற்றை காட்ட முடியும். எல்.ரீ.ரீ.யின் அனைத்து இரகசியங்களையும் வெளிக்கொணர்ந்த எங்கள் அதிதிறமைமிகு புலனாய்வுப் பிரிவினருக்கு முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றி கண்டுபிடிப்பதற்கு சிரமமே இருக்காது என்று ஒருவர் சிந்திப்பதில் எவ்வித்த் தவறும் கிடையாது.

“முஸ்லிம் சமூகத்தினுள்ளும் அடிப்படைவாதக் குழு இருக்கின்றது. பௌத்த தலிபான்களும் உள்ளனர். அவர்களுக்கு நோர்வேயிலிருந்து உதவித் தொகை வருகின்றது. என்றாலும் இந்நாட்டை இரத்த ஆறாக மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு நடைபெற்றால் அதற்குப் பலியாவது இளைஞர்களே, அவ்வாறு பலியானால் இந்நாடு சுடுகாடாக மாறிவிடும்.”
-அமைச்சர் விமல் வீரவங்ச (25.06.2014 லங்காதீப)

இவ்வாறு சென்றால், இலங்கை என்ற நாடு எவ்வாறு வெளியே வருவது?

அமைச்சர் விமல் வீரவங்ச மேற்சொன்ன உண்மையைத்தான் தெளிவுறுத்துகின்றார். எந்நாளும் யுத்தம் செய்துகொண்டே இருக்கலாம். அவ்வாறாயின் நாங்கள் செய்ய வேண்டியது என்ன? கடந்த காலங்களில் நாங்கள் பெற்ற படிப்பினைகளை கருத்திற் கொண்டு, இப்போதாவது விடயங்களில் தெளிவு கண்டு, இனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதற்கு சிறந்ததொரு அரசியலை நாடுவதே அதற்கான வழி. கடந்த கால படிப்பினைகள் யாவை என்பதைக் கருத்திற்கொண்டு நிகழ்காலத்திற்கு ஏற்ப அதனைச் செயற்படுத்துவதே தேவையாக இருக்கின்றது.

“முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் ஏதோவொரு அசமந்த நிலையினால் 1983 ஜூலைக் கலவரம் பெரும் வடுவை ஏற்படுத்தியது. கலவரம் ஏற்பட்டவுடனேயே ஊரடங்குச் சட்டத்தை அறிவிக்கவில்லை என ஜனாதிபதிமீது குற்றம் சுமத்தினர். உண்மையான நிலை என்னவென்றால், ஊரடங்குச் சட்டம் பின்னர் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கூட, இராணுவத்தினரும் பொலிஸாரும் அதனை நடைமுறைப்படுத்த விருப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.”

“1983 கலவரம் 1958 கலவரத்துடன் வேறுபடுவது எவ்வாறெனின், பாதுகாப்புப் பிரிவினரின் நாடகத்தினாலேயே. கலவரத்தின் ஆரம்ப நாட்களில், என்றும் இல்லாதவாறு சட்ட நடவடிக்கைகள் மந்தநிலையிலேயே இருந்தன.”

“தான் அவ்விடத்திற்கு சென்று உயிர்களையும், உடைமைகளையும் பாதுகாப்பதற்காக சென்ற வேளையிலும் அவர்கள் அவ்விடத்தில் பங்களிப்புச் செய்யாமல் கவனத்திற் கொள்ளாதிருந்தனர். சட்டமும் நீதியும் முழுமையாக செயலிழந்திருந்தன.”
(ஜே.ஆர். ஜயவர்த்தன வாழ்க்கை வரலாற்றிலிருந்து..)

பிற்காலத்தில் ஜே.ஆர். ஜயவர்த்தனவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பேராசிரியர் கே.எம்.த. சில்வா தெளிவுறுத்தும் இவ்விடயத்துடன் தொடர்பான காரணிகளை அன்று எதிர்க்கட்சியில் இருந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் வலது சாரிக் கட்சிகள் அரசாங்கத்திற்கு தெளிவுறுத்தியபோதும், தேவையான விசாரணைகளை மேற்கொள்வதற்கு இயலாது போயுள்ளது. இதனால் 1983 கறுப்பு ஜூலைக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய நிலைக்கு ஜே.ஆர். ஆட்சி தள்ளப்பட்டது. பிற்காலத்தில் இவ்வனைத்து விடயங்களையும் தனது ஞானத்தினால் தெரிந்துகொண்ட ஜே.ஆர்., சிரில் என்ற அரசியல் அபிமானம்மிக்க தனது உற்ற உறவினரைக்கூட அரசாங்கத்திலிருந்து தூக்கிவிட்டார். ஜே.ஆரின் நெருக்கமான உறவினர் ஒருவரே அதற்குக் காரணமாக இருந்தவர் என்பது தெளிவாகியது. என்றாலும், அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மிகத் துரிதமாக செயற்பட்டிருந்தன.

1983 கறுப்பு ஜூலையின் படிப்பினைகள் தற்போதைய அரசுக்கும் தேவைப்பாடானது. அளுத்கம, பேருவலை கலவரம் தொடர்பில் இன்று ஐக்கிய தேசியக் கட்சி ஆளும் கட்சிக்கு விரல் நீட்டிக் கொண்டிருக்கின்றது. இதில் அரசியல் கலந்துள்ளது என்பது உண்மை. அன்று எதிர்க்கட்சியும் இவ்வாறுதான் நடந்துகொண்டது. அது பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவினால் நடாத்தப்படுகின்றது. மங்கள சமரவீர பாரதூரமான குற்றச்சாட்டினைச் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற வரப்பிரசாதங்களுக்கு அடங்கிப்போய் தான் இந்தக் குற்றச்சாட்டுக்களை வெளிக்கொணர்வதில்லை எனச் சொல்வது மேலும் பாரதூரமானது.

“இது எங்கள் நாட்டுடன் வெளிநாட்டு உறவை இல்லாதொழிக்கும் சூழ்ச்சியாகும்.”

“சிங்கள ராவய, பொதுபல சேனா அமைப்புக்களின் பின்னணியில் பாதுகாப்புப் பிரிவினர் இருக்கின்றர்”

“அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கையில் வியாபார நிலையங்கள், வீடுகள் தீவைக்கப்படும்போது பாதுகாப்புப் பிரிவினர் எங்குதான் நின்றிருந்தார்கள்?”

இது மங்கள சமரவீர முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களில் ஒருசில மட்டுமே. இது மங்களவின் தனிப்பட்ட செயற்றிட்டமாக இருக்க முடியாது. அத்தோடு அவர் நாட்டு புலனாய்வுப் பிரிவினருக்கு எதிராக குற்றம் சுமத்துவதற்கு பின்வாங்கவுமில்லை. மிலேனியம் சிட்டியை எதிர்பார்த்து அரசியல் செய்வதை விடவும் இதைத் தெரிந்து கொள்வது முக்கியமானது. “ஆம், நான் குற்றம் சுமத்துகிறேன்.. என்னைக் கைதுசெய்து விசாரணை மேற்கொள்ளுங்கள்” என வேறுவிதமாகவும் சொல்லியிருக்கிறார். இது அவர் முஸ்லிம்களைக் கருத்திற் கொண்டுதான் சொல்கிறார் எனவும் கொள்ளமுடியாது. அதற்கப்பாற் பட்டது. இது பச்சைப் பொய் என வைத்துக் கொள்வோம். என்றாலும் தர்க்கிக்க வேண்டியதாகின்றது. மறுபுறத்தில் எதிர்க்கட்சி இவ்வாறான குற்றச்சாட்டைச் சுமத்தும்போது, அரசாங்கம் வாய்பொத்தி மௌனியாக நின்றிருக்குமாயின் 1983 ஜே.ஆர். ஜெயவர்த்தன சாப்பிட்டதையே சாப்பிட வேண்டிவரும்.

இவை அனைத்தும் சர்வதேச காலஅட்டவணைக்கு ஏற்ப நடக்கிறதோ என சந்தேகம் எழுகின்றது. இலங்கையில் பேருவல, அளுத்கம தீப்பற்றி எரிவது ஜோர்தான் இளவரசர் அஸ்ஸெய்யித் ராட் அஸ்ஸெய்யித் அல் - ஹுஸைன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு ஆணையாளராக பதவியேற்றதன் காலகட்டத்திலேயே. எங்கிருந்தோ வேலை நடக்கின்றது என்றிருந்தால் அது சரிவர நடக்கின்றது என்பது தெளிவாகின்றது.

அவ்வாறாயின், அரசாங்கத்திலுள்ள பாதுகாப்புப் பிரிவில் உள்ள சிலர் அரசாங்கத்திற்கு குழி பறிக்கும் செயலில் ஈடுபடுகின்றனரா? அதற்கு உதவியாக இருக்கின்றனரா? பார்த்தபார்வையில் அதற்கு இடமில்லை எனத் துணியலாம். ஆயினும், 1983 இல் அவ்வாறான நிகழ்வு நடைபெற்றிருப்பது பிற்காலத்தில்தான் தெரியவந்துள்ளது. அதனால் இதுதொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணை மேற்கொள்வதே உசிதமானது. அது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்வில் புதியதொரு பாதையில் செல்வதற்கும் வழிவகுக்கலாம்.

வர்க்கவாதம் மற்றும் பிளவுகள் வளர்ந்துவந்தபோதும், அவற்றை வெற்றி கொண்ட நாடுகளையும் நாங்கள் தற்காலத்தில் காண்கிறோம். அதற்குச் சிறந்த உதாரணமாக தென்னாபிரிக்காவை எடுத்துக் காட்டலாம். ஒரு காலத்தில் பயங்கரவாதி என்று பெயர்பெற்று, பின்னர் நோபல் பரிசுக்குரியவராக மாறியவர் நெல்சன் மண்டேலா. இன்று இறந்தும் இறவாதவராக அவர் மக்கள் மனதில் இடம்பெறக் காரணம் செயற்கரிய செய்ததனாலாகும்.

ஒருமுறை அரசியலில் பெரும்பங்கு கிடைத்தாலும் சிறுபான்மையினருக்கான உரிமைகள் மீறப்படுமோ என்ற வாதம் நிலவியபோது, ஆபிரிக்காவின் வெள்ளையரான தலைவர்களுக்கு அவ்வாறு நடக்காது என நெல்சன் மண்டேலா குறிப்பிட்ட கூற்றானது எங்கள் நாடும் அவ்வாறானதொரு பாதையில் செல்லும்போது முக்கியத்தும் பெறும்.

மேலும், “ஆபிரிக்கா அங்கு வாழும் கறுப்பர் வெள்ளையர் அனைவருக்கும் சொந்தமானது. வெள்ளையரும் ஆபிரிக்கர்கள்தாம். எதிர்கால நிருவாகத்தின்போது பெரும்பான்மையினருக்கு சிறுபான்மையினர் தேவைப்படுவர். அவர்களை கடலில் தள்ளிவிட வேண்டிய அவசியமில்லை என நான் சொன்னேன்.”
(நெல்சன் மண்டேலாவும் சுதந்திரம் தேடிச் சென்ற பாதையும்”)

மண்டேலாவின் கூற்றை தேவ வாக்காகக் கொண்டு, அதனை அரசியல் யாப்பிலும் சேர்த்து அதற்கேற்ப செயற்பட்டனர். அழகியல் அம்சம்மிக்க கதையாக மட்டும் கொள்ளவில்லை. எங்களுக்கான தேவைப்பாடும் அதுவே என்று புதிதாகச் சொல்ல வேண்டிய தேவையில்லை.

சிங்களத்தில் - வசந்தபிரிய ராமநாயக்க (වසන්තප්‍රිය රාමනායක)
தமிழில் - கலைமகன் பைரூஸ்

Read more...

Friday, June 20, 2014

அடிப்படைவாதத் தீ ! -தமிழில்: கலைமகன் பைரூஸ்

“தாய் முன்னிலையில் மகளை வல்லுறவுக்குட்படுத்திய கள்ளக் காதலன் கைது”
“இளம் யுவதியொருத்தியை கெடுத்த பிரதேச சபை உறுப்பினருக்கு இருபது ஆண்டுச் சிறை”
“மூன்று வயது சிறுமியைக் கொடுவினை செய்த தேரரைச் சாத்தினாள் தாய்”
“மித்தெனிய விடயம் கண்டு இளம் பௌத்த துறவி கைது”
“9ஆம் தர மாணவி 3 மாத கர்ப்பிணியாய்” - “திருமணம் முடித்த உறவினர் ஒருவரின் வேலையாம்”
“வயோதிபர்களை காதலித்த மாணவியர் 27 பேர் கற்பழிக்கப்பட்டனர்”
சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் அறிக்கை

இவை யாவும் சென்ற சில தினங்களாக ஊடகங்களில் வெளியான உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டிய, மிகவும் கீழ்த்தரமான செயல்களாகும். அளுத்கம பத்திராஜகொட பிரதேசத்தில் வீதிப் போக்குவரத்துக்கு இடைஞ்சல் அல்லது “ட்ரபிக்” பிரச்சினையும் ஒழுக்க்க் கெட்ட இளம் பௌத்த துறவியொருவர் நையப்புடைக்கப்பட்டதும் இக்கால கட்டத்திலாகும். இந்த விடயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அளுத்கமவில் இடம்பெற்ற “ட்ரபிக்” மேற்சொன்ன தீயவிடயங்களுடன் ஒப்பிட்டு நோக்கும் போது குறைவானது என்றே சொல்ல வேண்டும். என்றாலும், தண்டனைக்குரிய குற்றமாகும். அளுத்கம விடயத்துடன் தொடர்புடைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களை மகா சங்கத்தினரிடம் அனுப்பி மன்னிப்புக் கோர வைத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிர்வரும் 25 ஆம் திகதிவரை தடுப்புக் காவலில் வைப்பதற்கு ஆவன செய்யபட்டுள்ள போதும், அதனைக் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் பற்றி புதிதாகச் சொல்லத் தேவையில்லை.

இளம் பௌத்த துறவி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானது தொடர்பில் மூன்று முஸ்லிம் வாலிபர்களே இனங்காணப்பட்டுள்ளனர். முன் சொன்ன அனைத்து இழிந்த செயல்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் சிங்களவர்களாக இருக்கின்றார்கள். அளுத்கம முஸ்லிம் வியாபார நிலையமொன்றுக்கு தாயுடன் சென்றிருந்த சிறுமியின் மறைவிடத்தை ஒருவர் தடவினார் என்ற செய்தியே அளுத்கம, பேருவலை தாக்குதலுக்கு வழிவகுத்துள்ளது என்ற செய்தியும் அறியக் கிடக்கின்றது.

இங்கு கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் மக்களை அச்சமடையும் வண்ணம் தாக்குவதும், கொலை செய்துகொள்வதும் ஏன்? ஏனைய பகுதிகளில் அவ்வாறானதொரு விடயம் இடம்பெறாமலும் அனைத்தும் சட்டரீதியாக அமைந்துள்ள போதும் குறித்த குற்றம் தொடர்பில் சட்டத்தின் உதவியை மட்டும் நாடுவது ஏன்? நாங்கள் சிந்திக்க வேண்டிய ஆயினும் இதுவரை சிந்திக்காத பிரச்சினை இங்குதான் உள்ளது. அதற்குக் காரணம் நாங்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஒருபக்கச் சார்புடைய சிந்தனையுடையவர்களாக இருப்பதற்கே எங்களை பழக்கிக் கொண்டுள்ளோம்.

இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட 30 ஆண்டுகள் பிரிவினைவாத யுத்தத்தின் பின்னர்கூட வர்க்கவாத மனோநிலையிலிருந்து விலக முடியாதுள்ளது. அதற்காக உடனடியாக விரல் நீட்டப்படுவது இந்நாட்டிலுள்ள அரசியல்வாதிகளுக்கும், சில மதகுருமார்களுக்குமே. நாடு சுதந்திரமடைந்து 67 ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட, இன்னும் எங்களில் “இலங்கையர்” என்ற கோட்பாட்டை உடையவர்களாக இருக்க முடியாதுள்ளது. 2009 மே மாதம் 19 ஆம் திகதிக்குப் பின்னர் (எல்.ரீ.ரீ.ஈ தோல்விக்குப் பின்னர்) கூட அதனை நிலைநாட்ட சந்தரப்ப சூழ்நிலை கிடைத்துள்ள போதும், நாங்கள் பல்வேறு வேண்டத்தகாத விடயங்களில் எங்களை ஈடுபடுத்தி வீணர்களாக இருக்கின்றோம். அது தொடர்பில் எதிர்காலச் சந்ததியினர் எங்களைச் சாபமிடக்கூடிய வாய்ப்பு உள்ளது.

ஸ்ரீலங்கா சிங்கள பௌத்தர்கள் உள்ள பெரும்பான்மையினர் வாழும் நாடு என்பதை புதிதாகச் சொல்ல வேண்டிய தேவை இல்லை. சில பௌத்த மதகுருமார் உபதேசிக்கும்போது, விஷ்ணுவின் மூலம் புத்தபெருமானைக் கொண்டு, இலங்கை பௌத்தர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதில் உண்மை எந்தளவு இருக்கின்றது என்பது தெரியாதவிடத்தும், அனைத்து உயிரினங்களுக்கும் நன்மையை நாடுகின்ற, நல்லன போதிக்கின்ற விடயங்கள் பற்றி சிலர் கவனத்திற் கொள்ளாத போதும், இலங்கை வாழ் பெரும்பான்மையான பொதுமக்கள் அதன்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் “அனைத்து உயிரினங்களும் துன்ப துயரமின்ற வாழ்வதாக” எனக் கூறுவது தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒதுக்கித் தள்ளி அல்ல. என்றாலும் சிலர் தமது மதத்தைச் துச்சமாக மதித்து, இழிந்த அரசியலுக்குள் பிரவேசிக்கின்ற தன்மையைக் கண்கூடாகக் காண்கிறோம். பிரச்சினை இங்குதான் உள்ளது. தேரவாத பௌத்தம் நிர்மலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற நாட்டிலுள்ள பெரும்பான்மைச் சமூகம், அதனைக் கருத்திற் கொள்ளாது தீய அடாவடித்தனங்களுடன் மிகக் கொடிய இனவாதக் குரோதத்தோடு வாழ்வதற்கு இடமில்லை.

அதற்கு ஏனைய இனங்களின் அடிப்படைவாதமும் இணையுமல்லவா? என்று ஒருவர் விவாதிக்க முடியும்.

அதில் ஓர் உண்மை உள்ளது. பொது பல சேனாவிலிருந்து வந்தாலும், ராவண பலயவிலிருந்து வந்தாலும், தௌஹீத் ஜமாஅத்திலிருந்து வந்தாலும், தலிபான், ஜிஹாத், அல்கைதாவிலிருந்து வந்தாலும் அதனை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். முஸ்லிம் அடிப்படைவாததின் காரணமாக இஸ்லாமிய நாடான ஈராக் இன்று மிகவும் பயங்கரவிளைவைச் சந்தித்துள்ளது. அவ்வாறான ஒரு நிலை இலங்கையில் இல்லை. 2500 ஆண்டுகட்கு மேல் பாதுகாக்கப்பட்டுள்ள சிங்கள பௌத்த அடிப்படைவாதமல்லாத சூழல் அதற்கு வரலாற்றுச் சான்றாக உள்ளது. எந்தவொரு இனமும் தங்களுக்குள் எந்தவொரு சிந்தனையையும் கொண்டிருப்பதற்குத் தடையில்லை. அதற்காக அமைப்புக்களை உருவாக்கிக் கொள்வதற்குத் தடை இருப்பதாகவும் தெரியவில்லை. தவறு இருப்பது அந்த இடத்தில் அல்ல. அந்த இனக்குழு இனவாதக் குழுவாக தம்மை மாற்றிக் கொள்வதில்தான் பிரச்சினை உள்ளது. தேசாபிமான சால்வை போர்த்திக் கொண்டுள்ள பொது பல சேனா மட்டுமன்றி, “அல்துகீ” (இவர் தௌஹீத் இயக்கத்தைச் சொல்வதாக நினைக்கிறேன்) “ஜிஹாத்” போன்ற அமைப்புக்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாக இருப்பதாக நினைப்பதற்குக் காரணம் இதே பின்னணியில் இருப்பதனால்தான்.

“தேசாபிமானம் எங்களின் கடைசி ஆன்மீகத்தின் இருப்பாக இருக்கக் கூடாது. எனது கடைசி இருப்பிடமாக மனிதாபிமானமே இருக்க வேண்டும். நான் வாழும் மட்டும் தேசாபிமானத்திற்காக மனிதாபிமானத்தை நசுக்க இடமளிக்க மாட்டேன்.”

என மகாகவி ரவீந்தரநாத் தாகூர் சொன்னார். பல்வேறு இனவாத முருகல்கள் இருந்தபோதும், இன்று இந்தியா உலகின் பலம்பொருந்திய நாடாக இருப்பதற்குக் காரணம் அந்நாடு சிறந்த தூரப் பார்வையுடன் இருப்பதனாலாகும். அவை எல்லாவற்றையும் விட முன்னே சென்று ஒரு தூதுவராகக் கருதப்படுகின்ற புத்த பெருமானின் (சித்தார்த்தரின்) விசுவாசிகள் பெரும்பான்மையாக வாழ்கின்ற இலங்கையில் இன்னும் இழிந்த இனவாதம் தலைதூக்கிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன என சிந்திக்கக் கடமையாக இருக்கின்றது.

“ஆம் நாங்கள் இனவாதிகள் தாம்
நாங்கள் மதவாதிகள் தாம்
என்ன சொல்கிறீர்கள்
எங்களுக்கு கைநீட்டினால் அவ்வளவுதான்”

பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய அமைப்பொன்றின் மதகுருமார்களில் ஒருவர் இப்படிச் சொல்லும்போது, அந்தப் பேச்சு ஊடகங்கள் வாயிலாக முழு உலகிற்கும் செல்லும்போது, அதனோடு சேர்த்து பற்றி எரிகின்ற வியாபார நிலையங்களின், வீடுகளின், அநாதையான மக்களின் படங்கள் இணையத்தில் காட்சிப்படுத்தப்படும்போது. உருவாகின்ற படமானது புத்திதெளிந்த எந்தவொரு நபருக்கும் நன்கு விளங்கும். தொழில்நுட்பம் வீறுநடைபோடுகின்ற காலகட்டத்தில் இதனை எதனாலும் மறைக்கவியலாது. அதேபோல, நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனத்திற்கு “நாங்கள் கைவிடப்பட்டவர்களாக இருக்கின்றோம்” என்ற எண்ணப்பாடு உள்ளத்து எழுவதற்குரிய சாத்தியக் கூறுகள் உள. இது முளையிலேயே நாட்டுக்கு கெடுதியானது. தெரிந்தோ தெரியாமலோ இந்த அடிப்படைவாதமானது எங்களை கழுமரத்தில் ஏற்றக் காத்திருக்கும் சர்வதேசத்திற்கு உதவி செய்துள்ளது. இவர்களது எல்லாம் தெரியும் என்ற நிலைப்பாடு இவ்வாறு அழிவுப்பாதைக்கு வழிவகுத்துள்ளது. அவ்வாறன்றி, அடிக்கடி எருமை மாட்டுக் கதைகள் கதைக்கும் அரசியல்வாதிகளால் அல்ல.

அளுத்கம பத்திராஜகொடவிலிருந்து தர்மோபதேசத்திற்காக முச்சக்கர வண்டியொன்றில் சென்றிருந்த இளம் பௌத்த துறவியொருவர், இடையில் தாக்கப்படுவாராயின் அது குற்றமாகும். அவ்வாறான அசிங்கமான செயலைப் புரிவது எந்த இனத்திற்குரியவராக இருந்தாலும் தண்டனைக்குரியவரே. அந்தத் தண்டனையில் இனவாதமில்லை. இவ்வாறான அசட்டுத்தனமான காரியங்களைச் செய்யக்கூடியவர்கள் எல்லா இனங்களிலும் இருக்கத்தான் செய்கின்றனர். இது தொடர்பில் அளுத்கம பொலிஸார் உச்சகட்ட சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். அது தெளிவு. என்றாலும் அதற்குப் பின்னர் நடந்தவை தெளிவற்றவை. இப்பிரதேசத்தின் சுற்றுச் சூழல் பற்றி பொலிஸாருக்கு புதிதாகச் சொல்லத் தேவையில்லை. அது தெரியாத பால்குடிப் பாலகர்கள் பொலிஸில் இருப்பதாகத் தெரியவில்லை. கைகலப்பு தொடர்பில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, சிறைவைப்பதற்கு ஆவன செய்யப்பட்டதன் பின்னர், பௌத்த பிரச்சாரக் கூட்டமொன்றை அங்கு வைப்பதற்கு அனுமதி கொடுத்திருந்தமையே இன்றைய பிரச்சினைக்கு அடிகோலியுள்ளது. அது அவ்வாறு நடந்தால் இவ்வாறான பின்விளைவுகள் ஏற்படலாம் என பொலிஸாரிடம் முஸ்லிம்கள் பலமுறை எடுத்துச் சொன்னபோதும், களுத்துறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குமார வெல்கமவின் பேச்சையும் கேட்காமல், அதற்கு அனுமதி வழங்கியிருப்பது பின்னர் ஏற்பட்ட அனைத்து அழிவுகளுக்கும் காரணமாகியுள்ளது. இறுதியில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட, பதில் கூறவேண்டிய கடமையில் உள்ள அமைச்சர்களும் மந்திரிமார்களும் உடனடியாக அங்கு சென்றதனாலேயே பிரச்சினை கொஞ்சமாகவேனும் தணிந்தது எனலாம். அவ்வாறு இல்லாதிருந்தால் அதன் பிரதிபலிப்பு, இவ்வளவுதான் என்று கூறுவதற்கும் இடமளிக்காது இருந்திருக்கும்.

மாவனல்லைக்கும், பதுள்ளைக்கும் வழங்காத உத்தரவு அன்று அளுத்கமவுக்கும் வழங்கப்படாதிருந்திருந்தால் இந்த சேதங்கள் ஏற்படாதிருந்திருக்கலாம். அத்தோடு அந்தத் தாக்குதலுக்கு வெளியிடங்களிலிருந்து குண்டர்கள் அழைத்து வரப்பட்டிருக்கின்றமை தெட்டத் தெளிவாகியுள்ளது. ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்த வேளையிலும் அதனை அறியாதவர்களாக பொலிஸார் இருந்திருக்க நியாயமில்லை. மத மாநாட்டுக்கு உத்தரவு வழங்கியதும், அதன்பின்னர் பயணித்த வாகன ஊர்வலத்திற்கு முஸ்லிம் பள்ளியிலிருந்து கற்கள் எறியப்பட்டதும், அதன்பின்னர் வேறு இடங்களிலிருந்து குண்டர்கள் வந்து குறித்த அசம்பாவிதங்கள் இடம்பெற உதவியதும், மேலதிக விசாரணைகளுக்கு உதவியாக அமையும். அது சமாதானத்தை விரும்புகின்ற நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி, இந்த அரசாங்கத்தின் அரசியல் எதிர்காலத்திற்கும் பயனளிக்கும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருக்கின்ற சிறுபான்மை இன வாக்களித்தல் முறையை இல்லாதொழிப்பதற்கு ஆவன செய்யப்பட்டுக் கொண்டே வருகின்றது. அரசாங்கம் அந்த முடிவுக்கு வருவதற்கு, ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் உதவியிருக்கக்கூடும் என்ற சந்தேகம் பரவலாக இருக்கின்றது. அவ்வாறு உடந்தையாக இருந்திருந்தால், அது வேறொரு அரசியல் நாடகமாக இருப்பது தெளிவு. இன்று அதன் நன்மையை எதிர்க்கட்சியே அடைந்துள்ளது. அரசாங்கம்தான் இதனைச் செய்வதாயின், கூடுதலாக அபிவிருத்தி பற்றிப் பேசிப்பேசி, பல்வேறு கனவுகளை விதைப்பதால் பெரும்பான்மையானோர் இதனைக் கண்டுகொள்ளாதிருக்கக் கூடும். சுட்டிக் காட்டினாலும் ஏற்றுக்கொள்ளாத மனோநிலையில் உள்ளோரும் உளர். அரசாங்கம் தனக்கே தான் பந்துக்கு “கோல்” போட்டுக் கொள்ளுமா? என்றுதான் சிலர் சிந்திக்கின்றனர். அதனோடு தொடர்புடைய மற்றொரு வாதமாக இருப்பது என்னவென்றால், வெற்றிக்கு சிங்கள பௌத்தர்களின் வாக்குகள் மட்டும் போதுமானது என்பது. அவ்வாறாயின், தற்போது நடைமுறையில் உள்ள அடிப்படைவாதத்தின் கீழ் அந்த வாக்களிப்பு முறையை தட்டத்தான் முடியுமா? என்று வெள்ளோட்டம் பார்க்கின்றது போலும்.

அரசாங்கத்திற்கு மூளை இருக்குமானால், இவை யாவும் நடைபெறுவது ஒரே இடத்திலிருந்து தானா? என்பதை தேடிப்பார்க்க வேண்டும்.

சிங்களத்தில்: வசந்தபிரிய ராமநாயக்க (වසන්තප්‍රිය රාමනායක)
தமிழில்: கலைமகன் பைரூஸ்

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com