Thursday, February 20, 2020

விக்கி பேசுவது உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பானதாம்.. தாங்கள் குதிரையின் ஆட்கள் இல்லையாம்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறும் உண்மைக்கும் நேர்மைக்கும் புறம்பான கருத்தை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது போராட்டத்தை ஆதாரம் இல்லாது கொச்சைப்படுத்தினால் அவருக்கு எதிராகவும் போராடுவோம் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (19) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பின் யாழ். இணைப்பாளர் சுகந்தி ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பிரித்தாழ்வதாக சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் கூறியதனூடாக எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் அமைப்பு மீது கட்சி சாயம் பூசி இலங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்குள் (OMP) முடக்க எத்தணிக்கிறாரா?

தமிழர்களை, காணாமலாக்கிய ஒட்டுக் குழுக்களை ஒன்றாக்கி ஒட்டுக் குழுக்களின் கூட்டணி அமைத்திருக்கும் விக்னேஸ்வரனுக்கு எம்மையும் எமது போராட்டத்தையும் எப்படிப் புரிந்து கொள்ளமுடியும்.

சி.வி.விக்னேஸ்வரன் நீதியரசர் என்ற பெயரை வைத்துக்கொண்டு நீதிக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் எதிரான கருத்தை வெளிக்கொண்டு வருவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எமது போராட்டத்தை கஜேந்திரகுமார் பிரித்தாழ்கின்றார் என்றால் அதற்கான ஆதாரங்களை விக்னேஸ்வரன் வெளிப்படுத்த வேண்டும். எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணையை வலியுறுத்தி நீதி வேண்டிப் போராடி வருகின்றது. அத்துடன் OMPயை வெளியேறக்கோரி தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறோம்.

எமது அமைப்பு கடந்த பெப்ரவரி 4ஆம் திகதியன்று இலங்கை சுதந்திர தினத்திற்கு எதிராக கருப்புக் கொடிகளைத் தாங்கி போராடி எமது எதிர்ப்பை வெளியிட்டோம். இவ்வாறு தூய்மையான போராட்ட அமைப்பின் மீது அரசியல் சாயத்தைப் பூசி அதை இல்லாமல் ஒழிக்க விக்னேஸ்வரன் முயற்சிக்கிறாரா?

இதேவேளை, இனிவரும் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடுதலை வேண்டி, உறவுகளின் வலி சுமந்த போராட்டத்தில் கலந்துகொள்ள முடிந்தால் வரலாம். இல்லையேல் எமது போராட்டம் பற்றி வாய் திறக்கக்கூடாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

எது எவ்வாறாயின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என்ற பெயரில் இயங்கிவரும் மேற்படி குழுவினர் அரசியல் எடுபிடிகள் என்பது அவர்களது செயற்பாடுகள் ஊடாக நிரூபனமாகியுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com